புதன், 21 அக்டோபர், 2020

ரோக நிதானம் - குஷ்ட ரோகம்

            இந்நோயில் உடல் பளபளப்பு, நிறமாற்றம், தோல் தடித்து கடினமடைதல் , தோலில் தினவு வியர்வை, எரிச்சல், மயிர்க்கூச்சம், கொஞ்சம் காயம் பட்டாலும் அது உலராமல் பெரிதாதல், அதில் கறுத்த உதிரம் வடிதல், அதிக ரணம், குழி ரணம் முதலிய குணங்களைப் பெற்றிருக்கும். இதற்குக் குறைநோய், தொழுநோய், பெரும்வியாதி என வேறு பெயர்களுமுண்டு. இது 18 வகைப்படும்.


பெருநோய் உண்டாகக் காரணங்கள் :
            இந்நோய் அழுகிய மீன், நண்டு, நத்தை, சிப்பி இவற்றை தொடர்ந்து அதிகமாக உண்ணுதல், சரியாக வேகாத பொருட்களை உண்ணுதல், மந்தமான பொருட்களை உண்ணுதல், வயிறு நிறைய உண்டவுடன் யோக நிலைகளில் இருத்தல், இந்நோய் கொண்டவர்களுடன் நெருங்கி இருத்தல், அவர்கள் படுக்கையில் படுத்தல், அதிக உஷ்ணம், அதிக குளிர்,அழற்சி, வாந்தி, தகாத பெண்களுடன் உறவு கொள்ளுதல், தாய் தந்தையர் வழியில் வருதல் எனும் காரணங்களால் உண்டாகிறது.

பெருநோயின் பொதுக் குணங்கள் :
            இந்நோயில் முகம், கை, கால்கள், மார்பு, தொடை, காது, மூக்கு பகுதிகள் மினுமினுத்துக் காணும். நாட்கள் செல்லச் செல்ல தோல் கடினப்பட்டு, தோலின் நிறம் மாறுபாடு அடைந்து, மயிர்க்கால்களின் இடைவெளி அகன்று அதிக வியர்வை காணும். பின் தோல் உருண்டு திரண்டு கறுத்து அல்லது சிவந்து காணும். அந்த இடங்களின் தினவு காணும். மேலும் தோலில் திமிருடன் அல்லது உணர்ச்சியற்று காணும். கைகால்களில் அடிபட்ட புண்கள் உலராது பெரிதாகிக்கொண்டே வரும்.

பெருநோயின் வகைகள் :
1. கபால (மண்டை) குஷ்டம் :
கபாலத்தைப்போல் வெளுத்த கொப்புளங்களும் இரணங்களும் உண்டாகி பின்னர் குழிவிழுந்து சினைத்தண்ணீர் ஒழுகுதல் காணும்.

2. அத்திக்காய் குஷ்டம் :
அத்திப்பழம் போன்ற கொப்புளங்களும் இரணங்களையும் உடையது. இரணத்தில் இரத்தம் வடிதலும், புழு ஊருவதும், தினவும், உடல் உளைச்சல், மயக்கம் காணும்.

3. மண்டல (வளைய) குஷ்டம் :
இதில் கொப்புளங்கள் பலவித நிறம் கொண்டு மினுமினுத்து பின் உடைந்து ஒன்றாகச் சேர்ந்து வளைவான இரணத்தை உண்டாகும். அதில் புழுக்களும் சீழும் ஒழுகும். இரணத்தை சுற்றி மஞ்சள் நிறமான தோல் உண்டாகும். தலையிலும், உடலிலும் இரணங்கள் தடித்து கறுத்து இரத்தம் வடிதல் எனும் குணங்கள் காணும்.

4. சொறி குஷ்டம் :
இதில் கொப்புளங்கள் கறுப்பு நிறமாயும் பின்பு உடைந்து விரணமாகி அவைகளில் சினைநீர் ஒழுகுதல், அதிக ஊரல், எண்ணைய் தடவியது போல இருத்தல், வெளிறல், எரிச்சல், வேதனை, சிவந்த தடிப்பு காணும்.

5. முள் குஷ்டம் :
கொப்புளங்கள் முள்ளைப்போல் மெல்லியதாய் நீண்டும் பிசுபிசுத்தும் சுறசுறத்தும் உள்ளில் கறுத்தும் முனையில் சிவந்தும் நெருக்கமாக எழும்பி விரணங்களாகி அவைகளில் புழுக்களும் எரிச்சலும் உண்டாகும்.

6. தோல் குஷ்டம் :
தோலானது மஞ்சள் நிறமாயும் சிவந்த நிறமாயும் மீன்களின் செதிலைப் போல சுறசுறத்து தடித்து கிள்ளினாலும் காயம்பட்டாலும் உணர்ச்சியற்று இருக்கும். தோல் தடித்தல், சீழ்வடிதல், சொறியுண்டாதல், எரிச்சல், துண்டு துண்டான தடிப்பு எனும் குணங்கள் காணும். இதனை மேகப்படை திமிர்படை என்றும் கூறுவர்.

7. யானைத்தோல் குஷ்டம் :
உடலின் தோல் முழுதும் யானையின் துதிக்கைபோல் தடித்து பார்வைக்கு விகாரமாயிருக்கும். உடல் முழுதும் தோல் உரிந்து சிவத்தல், வறவறப்பு, சொறி, தினவு, திமிர், கால் விரல்கள் கனத்தல் உடலில் வீக்கம் எனும் குணங்கள் காணும்.

8. பன்றித்தோல் குஷ்டம் :
இதில் தோலின் நிறம் பச்சை நிறத்தில் பன்றியின் தோல் போல தடித்து, தினவும், சொறியும் உண்டாகும். அதில் அதிக நமைச்சல், தடித்தல், அடிக்கடி சிவந்த நிறத்தில் சிறுநீர் இறங்கல், தேகத்தில் சினைநீர் வடிதல், தாங்க முடியாத துர்நாற்றம் எனும் குணங்கள் காணும்.

9. நாக்கு குஷ்டம் :
இதில் உடல் சுரைப்பூ நிறத்தில் வெண்மையாகி பின் பசுமஞ்சள் நிறத்தில் தோற்றமளிக்கும். உடல் முழுதும் திமிருடன் தடித்தல், மஞ்சள் நிறம், அதில் ரத்தம் கசிதல்,தாங்க முடியாத திமிர், மறதி எனும் குணங்கள் காணும்.

10. அலச குஷ்டம் :
இதில் இரத்த நிறமான சிறு கூழாங்கற்களைப்போல் கொப்புளங்கள் பெரிதாக உண்டாகி உடைந்து இரணங்களாகி அதில் அதிக நமைச்சல் உண்டாகும்.

11. செங்குஷ்டம் :
கால்களிலும் கைகளிலும் சிவந்த கடினமான கொப்புளங்களாகி இரணங்களாகும். தேகத்தில் வெடித்தலுடன் தாங்க முடியாத அருவருப்பு, கை, கால், கண், கழுத்து இவைகளில் வெடிப்புடன் வீக்கம் பாம்பைப் போன்ற மணம் எனும் குணங்கள் காணும்.

12. தடிப்பு குஷ்டம் :
முதலில் வளைந்த கொப்புளங்கள் எழும்பி பிறகு கலங்கி கறுப்பு அகத்திப்பூ நிறங்களைப் போல் இரணங்களாகும். உடலில் சிவந்த தடிப்பு, ஊறலுடன் திமிர் எனும் குணங்கள் காணும்.

13. புரைக்குஷ்டம் :
சிவந்தும் கறுத்தும் அடி அகன்றும் அதிக கொப்புளங்கள் உண்டாகி உடல் முழுதும் இரணங்களாகி அதில் எரிச்சல், வலி, புழு ஊறுதல், மூக்கு, கண், காது, கன்னம் இவைகளில் தடிப்பு காணும்.

14. படர்தாமரை குஷ்டம் :
கொப்புளங்கள் மிக உயர்ந்து முனையில் சிவந்தும், நடுவில் வெளுத்தும், பின்னர் தாமரைப்பூ நிறத்திலும் இரணங்களாகி, எரிச்சல், நமைச்சல், சினைநீர் வடிதல் எனும் குணங்கள் காணும்.

15. கொப்புள குஷ்டம் :
கொப்புளங்கள் சிவந்தும் வெளுத்தும் பெரிதாக எழும்பி இரணமாகி தினவு, எரிச்சல், தோல் மிருதுவாக இருத்தல், விஷ எரிச்சல், எனும் குணங்கள் காணும்.

16. சிரங்கு குஷ்டம் :
கொப்புளங்கள் சிவந்தும் கறுத்தும் பருத்தும் நெருக்கமாக இரண்டு முனையிலும் முழங்காலிலும் தொண்டையிலும் இரணங்களாகி அதில் வறவறப்பும், தினவும், சினைத்தண்ணீர் கசியும், தோல் விரிந்து வீக்கம் கால் கை குறைதல் எனும் குணங்கள் காணும்.

17. தோல் வெடிப்பு குஷ்டம் :
கொப்புளங்கள் தோன்றும் இடங்களில் சிவந்து, அதிக தினவு, குத்தல், எரிச்சல், உண்டாகும். உடலில் கீற்று கீற்றாக வெடித்தல், தாங்க முடியாத வேதனை, இரத்தம் வடிதல், வயிற்றுவலி எனும் குணங்கள் காணும்.

18. காகச குஷ்டம் :
கொப்புளங்கள் சிவந்த நிறத்துடன் உண்டாகி பிறகு கறுகி கிராம்பு மொக்கின் உருவத்தை பெற்று உடைந்து விரணங்களாகி அவைகளில் அதிக எரிச்சல் நோய் முதலிய குணங்களும் உண்டாகும்.

19. கர்ண குஷ்டம் :
உடலில் பச்சை வண்ணத்துடன் பொரி பொரியாக வெடித்தல், உடல் பருத்து திமிருடன் காணும். காதுகளின் விளிம்புகள் காக்கட்டான் பூபோல கறுத்த நீல நிறத்தில் காணும்.

20. கருங்குஷ்டம் :
உடல் முழுதும் கறுத்து தோலில் திமிருடன் நாற்றம் வீசுதல், உடலில் சூடும் வலியும் காணும். இடுப்பு புறங்கால், தலை பகுதியில் இந்நோய் உண்டாகும்.

21. அபரிச குஷ்டம் :
உடல் முழுவதும் கறுத்த ரத்தம் வடிதல், வீக்கம், வெடிப்பு எனும் குணங்கள் காணும்.

வியாழன், 15 அக்டோபர், 2020

ரோக நிதானம் - கீல்வாயு

            இதில் கீல்களில் வீக்கம், குத்தல், குடைச்சல், வலி, நீட்டவும் மடக்கவும் இயலாமை எனும் குணங்கள் காணும். இது கீல்களில் வாதம் மிகுந்து உண்டாவதால் “கீல்வாயு” என்றும், மூட்டுகளில் உண்டாவதால் “மூட்டுவாதம்” என்றும், மேக நோயுடன் தொடர்புடையதால் “மேகசூலை“ என்றும், மூட்டுகளை முடக்குவதால் “முடக்கு வாதம்” என்றும், வயிற்றில் மந்தத்தை உண்டாக்கி புளித்து கபத்தை பெருக்குவதால் “ஆமவாதம்” என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும். இது 10 வகைப்படும்.

கீல்வாயு வரக் காரணங்கள் :
            வாதத்தை பெருக்கக்கூடிய  உணவுகளை உண்பதாலும், மழையில் நனைதல், குளிர்ந்த காற்றில் இருத்தல், பனியில் படுத்தல், உயர்ந்த மலையில் படுத்தல், தகாத பெண்களின் சேர்க்கையால், பரம்பரையாக என்று பல்வேறு வழிகளில் உண்டாகும்.

கீல்வாயு நோயின் பொதுக் குணங்கள் :
            இந்நோய் வருமுன் மூக்கு அடைப்பு, மூக்கில் நீர் பாய்தல், தொண்டை கட்டல், இலேசான சுரம், கைகால்களில் வலி, குத்தல், குடைச்சல், நீட்டவும் மடக்கவும் இயலாமை எனும் குணங்கள் காணும்.

கீல்வாயு நோயின் வகைகள் :
1) வாத கீல்வாயு :
இந்நோயில் பொதுக் குணங்களோடு கீல்கள் சிவந்து வீங்கி, நாளுக்கு நாள் வீக்கம் பெருத்து காணும். ஒருபகுதியில் உள்ள கீழ்களின் வலி குறைந்தால் மற்ற பகுதிகளில் உள்ள கீல்களில் வலி உண்டாகும்.

2) பித்த கீல்வாயு :
இந்நோயில் பொதுக் குணங்களோடு கீழ்களின் பசை வறண்டு கீல்கள் அசையும்போது எல்லாம் நட்டை உடைவதும், “கலுக்” என்ற சத்தமும் காணும்.

3) ஐய கீல்வாயு :
இந்நோயில் பொதுக் குணங்களோடு கீல்களில் வீக்கமடைந்து சீழ் பிடித்து எலும்பைத் துளைத்து அழுகச் செய்யும்.

4) வாத பித்த கீல்வாயு :
இந்நோயில் பொதுக் குணங்களோடு முறையே வாத, பித்த கீல்வாயு நோய்களின் குணங்கள் காணும்.

5) வாத ஐய கீல்வாயு :
இந்நோயில் பொதுக் குணங்களோடு முறையே வாத, ஐய கீல்வாயு நோய்களின் குணங்கள் காணும்.

6) பித்த வாத கீல்வாயு :
இந்நோயில் பொதுக் குணங்களோடு முறையே பித்த, வாத கீல்வாயு நோய்களின் குணங்கள் காணும்.

7) பித்த ஐய கீல்வாயு :
இந்நோயில் பொதுக் குணங்களோடு முறையே பித்த, ஐய கீல்வாயு நோய்களின் குணங்கள் காணும்.

8) ஐய வாத கீல்வாயு :
இந்நோயில் பொதுக் குணங்களோடு முறையே ஐய, வாத கீல்வாயு நோய்களின் குணங்கள் காணும்.

9) ஐய பித்த கீல்வாயு :
இந்நோயில் பொதுக் குணங்களோடு முறையே ஐய, பித்த கீல்வாயு நோய்களின் குணங்கள் காணும்.

10) முக்குற்ற கீல்வாயு :
இந்நோயில் வாத, பித்த, ஐய கீல்வாயு நோய்களின் குணங்கள் அனைத்தும் காணும்.

ரோக நிதானம் - பக்கவாதம் (பாரிச வாயு)

            இது உடலின் ஒரு பக்கத்தை உணர்ச்சியற்று போகச் செய்யும் அல்லது கை, கால், விரல்கள், நாக்கு, வாய், கண் முதலியவற்றை கேடடையச் செய்யும் நோயாகும்.

பக்கவாத நோய் வரக் காரணங்கள் :
இது வாதத்தை பெருக்கும் உணவுகளை அதிகமாக உண்ணுதல், கள் சாராயம் முதலியவற்றை அதிகமாக குடித்தல், மேக நோய் மற்றும் தமரக நோயின் துணை நோயாக உண்டாகும்.

பக்கவாத நோயின் குணங்கள் :
இந்நோயில் வாதம் மிகுந்து உடலின் ஒருபக்கத்தில் மட்டும் வலிப்பு கண்டு பின் அந்த பக்கம் முழுதும் செயலிழந்து போகும். மேலும் உடல் வியர்த்து வெளுக்கும், உடல் மெலியும், கால்கள் அசைக்க முடியாமலும், கைகள் எதையும் பிடிக்கும் வலிமை இல்லாமலும் போகும், வாய் கோணி உமிழ்நீர் தானாகவே வடியும் எனும் குணங்கள் காணும்.

ரோக நிதானம் - வலிப்பு நோய் (இசிவு)

            இது அறிவு குன்றித் தன்நிலை கெட்டு, தன்னை அறியாமல் கையும், காலும் வலித்து இழுத்தல்,வாயில் நுரைத் தள்ளல், வாய்க் கோணிக் கொள்ளுதல், கண்பார்வை ஒருபுறமாக இழுத்துக் கொள்ளுதல், எனும் குணங்களைக் கொண்டது. இது 21 வகைப்படும்.

வலிப்பு நோய் வரக் காரணங்கள் :
            உடல்நிலை மற்றும் மனநிலை கெடுவதாலும், ஐயம் அதிகரிப்பதாலும், அதிக பென்போகத்தாலும், பரம்பரையாகவும் உண்டாகிறது.

வலிப்பு நோயின் பொதுக் குணங்கள் :
            வலிப்பு வருவதற்கு முன்பு அதிக கோபம், மயக்கம், மனச்சோர்வு, சோம்பல், அதிக பசி, வெருண்ட பார்வை எனும் குணங்கள் காணும். மேலும் அடிக்கடி தும்முதல், கொட்டாவி, சதை துடித்தல், வாயில் நுரையும்  இரத்தமும் தள்ளல், கைகால் விரல்கள் கொருக்குவலி போல மடங்கி துடித்தல், தலையும் கண்ணும் ஒருபுறமாக இழுத்தல், அறிவு குறைந்து மயங்குதல், உடலை வளைத்து கூக்குரலிடுதல், வாய் கோணி பற்களைக் கடித்தல், மூச்சு திணறல், தொண்டைக் கட்டி உடல் கறுத்தல் எனும் குணங்களும் காணும்.

வலிப்புநோயின் வகைகள் :
1) குமரக்கண்ட வலிப்பு :
இந்நோயில் நாக்கும் முகமும் கோணும். கழுத்தும்,தோளும் விம்மும். காதுகள், கண்கள், தாடை, உதடு இவைகள் ஒருபக்கமாக சாய்ந்து நிற்கும். மயக்கமும் வயிற்றில் வலியும் காணும்.

2) அமரக்கண்ட (குதிரை) வலிப்பு :
இந்நோயில் வலிப்பு வருமுன் உடலில் தினவு கண்டு, கைகள் அடித்தது போல குத்தல் குடைச்சலுடன் மயக்கம் காணும். பிறகு வலிப்பு வந்து பல் இளிக்கும், கழுத்து - தோள் - முகம் - தலை பகுதிகளில் அதிக வியர்வை, நாவும் முகமும் ஒருபுறமாக இழுத்துக் கொள்ளும். வலிப்பு நின்ற பிறகு தொண்டை - தோள் - முதுகு பகுதிகளில் வீக்கமும் எரிச்சலும் வலியும் காணும்.

3) பிரமகண்ட (குரங்கு) வலி :
இந்நோயில் கைகால்கள் நீட்டியபடியே உதறுதல், கண்களை சிமிட்டாது மேல்நோக்கியே பார்த்துக் கொள்ளுதல்,பற்களை கடித்தல், உடல் முழுதும் வலி எனும் குணங்கள் காணும்.

4) காக்கை வலி :
இந்நோயில் கண்கள் மேல்நோக்கி மலரமலர விழித்தல்,தொடை மடக்க முடியாமல் விரித்துக் கொள்ளல், தொண்டையும் நாவும் உலர்தல், தொண்டையில் கோழை கட்டிக்கொண்டு கக்குதல், அதிக மலமும் சிறுநீரும் வெளியாதல்,வியர்வை உண்டாதல் எனும் குணங்கள் காணும்.

5) முயல் வலி :
இந்நோய் தலையில் நீரைக் கொட்டினாலும், உடலில் நெருப்பு பட்டாலும் வலித்து இழுக்கும். பிறகு வயிற்றில் வலி, வாயில் நுரைத் தள்ளல், கைகால், கண் இவைகள் விறைத்துக் கொள்ளுதல் எனும் குணங்கள் காணும்.

6) திமிர் வலிப்பு :
இந்நோயில் அதிக கொட்டாவி, படுக்கை பொருந்தாமை, உடல் குளிரல், நரம்புகள் நோதல், தூக்கமின்மை எனும் குணங்கள் காணும்.

7) கோணு வலிப்பு :
இந்நோயில் உடலில் சொரியும் கட்டிகளும் தோன்றும், மூக்கில் மணம் அரிய இயலாமை, தொண்டை கம்மல், பேச்சொலி குன்றல், அறிவு தடுமாறல், சுரம் எனும் குணங்கள் காணும்.

8) சண்டாள வலிப்பு :
இந்நோயில் உடல் பதைபதைத்து முறுக்கி வலி தோன்றும்,திமிருடன் பெருமூச்சுவிடும், சிணுக்கு இருமல், வாந்தி, விக்கல், மேல்மூச்சு, நரம்புகள் வலிமையற்று போதல், கழுத்து நோதல் எனும் குணங்கள் காணும்.

9) மரண வலிப்பு :
இந்நோய் ஒருவர் மரணிக்கும் தருவாயில் வரும். இதில் தொண்டை கம்மல், நரம்புகள் அசைந்து துடித்தல், உடல் நடுக்கம், வாந்தி, கைகால்கள் முடக்கி வலித்து உயிர் பிரிதல் எனும் குணங்கள் காணும்.

10) மனோ வலிப்பு :
இந்நோய் தாங்க இயலாத துன்பத்தின் காரணமாக கண்களில் நீர் வடிதல், கண்டவாறு பேசல், அழுதல் எனும் குணங்களுடன் வலிப்பு உண்டாகும்.

11) நஞ்சு வலிப்பு :
இந்நோய்நஞ்சுத்தன்மையுள்ள ஈடுமருந்து, எட்டி, நாபி போன்றவற்றை உண்பதால் கண்கள் மிரண்டு, சித்தம் கலங்கி, நரம்புகளை இழுத்து வலிப்பு காணும்.

12) முக்குற்ற வலிப்பு :
இந்நோய் வாத - பித்த - ஐயம் எனும் முக்குற்றங்களின் கேட்டால் விளையும்.

13) ஐய வலிப்பு :
இந்நோயில் விலா புறத்தில் குத்தல், இருமல், கண்ணிமை கோணி பார்வை கெடுதல், காதுகேளாமை, உடல் வியர்த்தல், மயக்கம், அறிவு கலங்கல் எனும் குணங்களைக் காட்டி வலிப்பு காணும்.

14) தனுர் வலிப்பு :
இந்நோயில் உடலை வில்போல வளையச் செய்யும். இதில் உடல் முன்புறமாக வளைவது முன்இசிவு என்றும், பின்புறமாக வளைவது, பின்இசிவு என்றும், பக்கவாட்டில் வளைவது பக்கஇசிவு என்றும் அழைக்கப்படும்.

15) சுர வலிப்பு :
இந்நோய் அதிகளவு சுரத்தின் காரணமாக உண்டாகிறது.

16) விக்கல் வலிப்பு :
இந்நோயில் விக்கலுடன் வலிப்பு காணும்.

17) தலை வலிப்பு :
இந்நோயில் தலையில் நீர்க் கோர்த்து ஐயம் அதிகமாகி, பேச இயலாமல், தலை இடித்து நோதல், மூட்டுகளில் வலி, பிடரி வலித்து நோதல், ஈட்டியால் குத்துவது போல குத்தல் காணும்.

18) கோழை வலிப்பு :
இந்நோயில் வாதம் மிகுந்து மார்பில் கோழைக் கட்டல், வாய் பிதற்றல், மூச்சடைத்தல், குறட்டைவிடல், வாந்தியாதல், கோழைக் கக்கல் எனும் குணங்களுடன் வலிப்பு காணும்.

19) ஓடு வலிப்பு :
இந்நோயில் அதிக சுரம், தொண்டையில் ஓய்ச்சல், நா உலர்தல், வியர்த்தல், கால்கள் வலிமையற்று போதல், மிகுதியாக நுரையுடன் கழிதல், கண்கள் நோதல், விரல் திமிர்தல் எனும் குணங்கள் காணும்.

20) மார்பு வலிப்பு :
இந்நோயில் தொண்டையில் கோழைக் கட்டல், இடைவிடாத சுரம், இருமல், கோழையோடு கூடிய வாந்தி, உடலி முறுக்கி வலிப்பு காணும்.

21) தமரக வலிப்பு :
இந்நோயில் அடிக்கடி திடுக்கிடல், மார்பில் கோழை கட்டல் எனும் குணங்களுடன் வலிப்பு காணும்.

ரோக நிதானம் - மயக்க நோய் (மூர்ச்சை)

            இது திடீரென கண்கள் இருண்டு, சுரணையற்று, அறிவழிந்து, மூச்சடைத்து, மயக்கமுற்று, மரம் போல விழச் செய்யும் இயல்புடைய நோய். இது 5 வகைப்படும்.

மூர்ச்சை உண்டாகக் காரணங்கள் :
            செரிக்கக்கூடாத உணவுகளை உண்ணுதல், உடல் வலிமை கேட்டு குருதி குறைதல், நாடி நரம்புகள் தளர்தல், குருதியை பார்த்தல், காற்றில்லாத இடத்தில் அடைத்து வைத்தல் எனும் காரணங்களால் மூர்ச்சை உண்டாகும்.

மூர்ச்சை நோயின் பொதுக் குணங்கள் :
            இதில் தலைசுற்றல், வாய் குமட்டல், வாய் நீரூறல், வாயில் நுரை தள்ளல், கொட்டாவி விடல், கைகால்கள் சோர்வடைதல், கைகால்கள் விதிர்விதிர்த்தல், தன்னை மறந்து அறிவழிதல், இதயம் அதிகமாக துடித்தல் எனும் குணங்கள் காணும்.

மயக்க நோயின் வகைகள் :
1. வாத மூர்ச்சை :
இந்நோயில் பொதுக் குணங்களுடன் மயக்கம், தலை சுற்றல், பார்ப்பவை அனைத்தும் கறுப்பு,  சிவப்பு அல்லது நீல நிறத்தில் தோன்றி உடல் கறுக்கும். சிறிது நேரத்தில் தெளியும்.

2. பித்த மூர்ச்சை :
இந்நோயில் பொதுக் குணங்களுடன் பார்ப்பவை அனைத்தும் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் தோன்றி, உடல் மஞ்சள் மற்றும் கருமை நிறத்தில் மாறும். மூர்ச்சையானது உடனே தெளியும்.

3. ஐய மூர்ச்சை :
இந்நோயில் பொதுக் குணங்களுடன் மயக்கமடைந்து வாய் கோணும், பற்கள் கடிக்கும், உடல் வியர்க்கும், பலநாழிகை சென்று தெளிவடையும்.

4. முக்குற்ற மூர்ச்சை :
இந்நோயில் முன்சொன்ன மூன்றின் குணங்களும் சேர்ந்து காணும்.

5. குருதி மூர்ச்சை :
இந்நோயில் குருதியை பார்த்தாலும் அல்லது முகர்ந்தாலும் வாய் குமட்டி, தலை சுற்றி, கண்ணிருண்டு, மயங்கி, அறிவழிந்து மரம்போல சாய்ந்து விழுவர். சிலருக்கு உடலில் குருதியின் எடை, நிறை, நிறம் குறைந்த போது மயக்கம் காணும்.

6. நஞ்சு (மருந்தீடு) மூர்ச்சை :
அதிக நாட்கள் மூடியிருந்த வீட்டில் நுழைதல் அல்லது மக்கள் அதிகமுள்ள அறையில் புகுதல், நஞ்சுத்தன்மையுள்ள காற்று பொருள்களை முகர்தல் அல்லது உண்ணுதல், மருந்தீடின் காரணமாகவும், நஞ்சு கடியாலும், அபினி, கஞ்சா, ஊமத்தை முதலிய தாவர நஞ்சை உண்பதாலும் இந்நோய் உண்டாகும்.

7. பெருமூர்ச்சை :
இந்நோயில் முன்சொன்ன நோய்கள் ஏதேனும் ஒன்றில் பலநாட்கள் தொடர்ந்து வருந்தியவருக்கு உடல்நிலை கெட்டு முக்குற்றங்களும் நிலை தவறி பிறழச் செய்து பிணம் போல விழச் செய்யும்.

ரோக நிதானம் - பைத்தியம் (வெறிநோய், உன்மத்தம்)

            இது மனநிலை மாறி, அறிவழிந்து, கண்டது கண்டவாறாக பேசுதல், ஆடல், பாடல், அடாவடி செய்தல், அடித்தல், திட்டல், துணிகளைக் கிழித்தல் முதலிய இயற்கைக்கு மாறான செய்கைகளை கொண்டது. இது ஆறு வகைப்படும்.

வெறிநோய் வரக் காரணங்கள் :
            உடல் நிலையும் மனநிலையும் கெடுவதாலும், பொருளின் மீது அளவுகடந்த இச்சை வைத்தல்,அளவுகடந்த இன்பம் அல்லது துன்பம் அனுபவித்தல், வாதம் மீறுதல், பெற்றோர் வழியில் வருதல், யோக நிலையில் ஆதாரங்களைக் கடந்து துரிய நிலையை அடையும்போதும் இந்நோய் உண்டாகும்.

வெறிநோயின் பொதுக் குணங்கள் :
            இதில் மனநிலை குன்றல், எதற்கும் அஞ்சுதல் அல்லது துணிச்சல் கொள்ளுதல், பெண்களின் மேல் விருப்பம் அல்லது வெறுப்பு, மெலிந்து பேசுதல் அல்லது உரத்துப் பேசுதல்,முணுமுணுத்தல், செயல் பேச்சு இவைகளில் இயற்கைக்கு மாறாக இருத்தல்.

வெறிநோயின் வகைகள் :
1. வாத வெறி :
இந்நோயில் உணவில் வெறுப்பு அல்லது குளிர்ந்து ஆறிய உணவு, தாழ்ந்த வகை உணவில் விருப்பம், ஆடுதல், பாடுதல், அழுதல், வாயைக் கோணி பேசுதல், இயற்கை நடைமாறி நடத்தல், கைகளை தட்டுதல், நகைத்தல், ஒருவனை பிடிக்க எழுந்திருத்தல் எனும் குணங்கள் காணும்.

2. பித்த வெறி :
இந்நோயில் பரபரப்புடன் ஓடுதல், பொறுமையின்மை, துணியை அவிழ்த்தெறிந்து உலாவல், கடிந்து பேசுதல், யாவரையும் பயப்படுத்தல்,  சீதள உணவில் விருப்பம் எனும் குணங்கள் காணும்.

3. ஐயவெறி :
இந்நோயில் பெண்கள் மேலும் விருப்பம், அடிக்கடி தூக்கம், வாயின் சுவை கெடுதல், வாய்நீர் ஊறி எச்சில் வடிதல் என்னும் குணங்களை உண்டாக்கும்.

4. முக்குற்ற வெறி :
இந்நோயில் முன்சொன்ன மூன்று நோய்களின் குணங்களும் காணும்.

5. சோக வெறி :
இந்நோய் பணத்தை இழந்த துன்பத்திலும், மனைவியை இழந்த துக்கத்திலும், இன்னும் பற்பல மனவியாதிகளாலும், பயம் போன்ற காரணங்களால் உடல் வெளுத்து, காரணமில்லாமல் அழுதல், அடிக்கடி சிரித்தல், மனதிலுள்ளதை வெளிப்படையாக கூறிவிடுதல், ஆச்சரியப்படுதல், உறக்கமின்மை எனும் குணங்கள் காணும்.

6. நச்சு வெறி :
இந்நோய் இடுமருந்து, மூளையை கெடுக்கக்கூடிய நஞ்சு வகைகளை உண்ணுதல் முதலியவைகளினால் உண்டாகி முகம் கறுத்தல், உடல் ஒளி, நிறம், ஐம்புலன்களின் செயல்கள் குறைதல், உடல் கறுத்தல், கண்கள் சிவத்தல் எனும் குணங்கள் காணும்.

ரோக நிதானம் - செருக்கு நோய் (மதநோய்)

            இது குடியின் காரணமாக கண்டவாறு பேசுதல், சீறி விழுதல், சினம் கொள்ளுதல், காரணமின்றி மகிழ்ச்சி அடைதல் எனும் குணங்களை உண்டாக்கும். இது ஏழுவகைப்படும்.

மதநோய் வரக் காரணங்கள் :
            அதிக குடியின் காரணமாக இந்நோய் உண்டாகிறது.

மதநோயின் பொதுக் குணங்கள் :
            குடியின் கேட்டால் அறிவு மங்கி, உடல் வலிமை குறைந்து,உடல் இளைத்தல், சுவை அறியும் திறம் குறைதல், நீர் வேட்கை, உடல் எப்போதும் சூடாக இருத்தல், மார்பு துடித்தல் எனும் குணங்கள் காணும்.

மதநோயின் வகைகள் :
1. வாதமதம் :
இந்நோயில் உடல் வலிமை குறைந்து, உடல் கறுத்து, தோல் சுருங்கி,முகம் வறண்டு, விக்கல், மேல்மூச்சு, நாடி தளறல், கை கால் தலை நடுங்குதல், தூக்கமின்மை, உடல் குத்தல், பக்கசூலை, குரல் கம்மல், வாய் பிதற்றல் எனும் குணங்கள் காணும்.

2. பித்தமதம் :
இந்நோயில் நாவறட்சி, உடல் சூடாக இருத்தல், வியர்த்தல், தலை சுற்றல், கிறுகிறுத்தல், சுரம், தாகம், மயக்கம், கழிச்சல், உடல் மஞ்சள் அல்லது சிகப்பாக மாறுதல் எனும் குணங்கள் காணும்.

3. ஐயமதம் :
இதில் உடல் பருத்தல், பளுவாக தோன்றுதல்,உடல் சில்லிட்டு இருத்தல், வாந்தி, நாக்கு சுவை அறியாமை, மார்பு துடித்தல், சோம்பல், அதிக தூக்கம் எனும் குணங்கள் காணும்.

4. தொந்தமதம் :
இந்நோயில் முன்சொன்ன மூன்று மதநோயின் குணங்களும் சேர்ந்து காணும்.

5. இரத்தமதம் :
இந்நோயில் குடிவெறியின் காரணமாக குருதி கொதிப்படைந்து பெருகிக் கண்கள் சிவந்து, பித்தமத நோயின் குணங்களும் சேர்ந்து கொள்ளும்.

6. மத்தியபான மதம் :
உடலில் பலவித கெடுதி, முகத்தில் ஒளி நீங்குதல், குரல்கம்மல், எவரிடத்தும் விருப்பமின்மை என்னும் குணங்களுடையது.

7. விஷமதம் :
இந்நோயில் மற்ற மதநோயின் குணங்களை விட அதிகமான கெடுதல்களை உடையது. உடல் நடுக்கல், மிக அதிக தூக்கம் எனும் குணங்கள் காணும்.

ரோக நிதானம் - குடிவெறி நோய்

            இது கள், சாராயம், புளிப்பேறிய பழச்சாறுகள் முதலியவற்றை அளவுக்கு மிஞ்சி பருகுவதால் அறிவு குன்றி பலவிதமாக பேசச்செய்யும் இயல்புடையது.


குடி வகைகளின் பண்பும், செயலும் :
குடி வகையின் பண்புகள் :
            வெப்பு, வறட்சி, புளிப்பு அல்லது காரம், பரவும் தன்மை ஆகியவை குடிக்கும் கள், சாராயம் முதலியவற்றின் பண்புகளாகும்.

குடி வகையின் செயல்கள் :
            உண்டபின்பு உடலுக்குள் ஒருவித அனலை எழுப்பி, மனதைத் தூண்டி, ஒருவித களிப்பைத் தந்து இனிமையாகவும்,கடுமையாகவும் பேசச் செய்து, பின்பு அறிவையும், உடல் நிலையையும் குறையச் செய்யும்.

குடிவெறியின் பொதுக் குணங்கள் :
            இந்நோயின் ஆரம்பத்தில் ஒருவித மகிழ்ச்சி, உற்சாகம், உடல் வன்மை பெருகியது போன்ற உணர்வுகள் தோன்றி, பின் அறிவு மங்கி, மயக்கம், கைகால்கள் தளறல், உதறல், நாவறட்சி, நீர்வேட்கை, கண்கள் இருளல், தலைசுற்றல், நெஞ்சு படபடத்தல், மனம் தடுமாறல், புலம்பல், ஆடல் - பாடல், வாயில் நீர்வடிதல், வாந்தி, வியர்த்தல், நாடி தளறல், கைகால்கள் துவளல், மூச்சுத்திணறல் எனும் குணங்களை உண்டாக்கும். குடிவெறியின் குணங்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

குடிவெறியின் குணங்கள் :
முதல் நிலை :
மனதிற்கு கிளர்ச்சி, ஊக்கம், மகிழ்ச்சி, புத்திகூர்மை அடைந்து மறந்ததை நினைவுபடுத்தல், உடல் வெப்பமடைந்து வலிமை அடைந்தது போன்ற உணர்வு, உணவு எளிதில் செரிக்கும்.

இரண்டாம் நிலை :
உடல் வலிமையும், மன மகிழ்ச்சியும், அறிவும் குறையும், வெறி பிடித்தவன் போல பிறரை இடித்தல், உதைத்தல், திட்டல் எனும் செய்கைகள், அதிக தூக்கம் உண்டாகும்.

மூன்றாம் நிலை :
யாரையும் மதித்து நடக்காத தன்மை, தான் செய்வது இன்னதென்று அறியாத தன்மை, மனதிலுள்ளதை அப்படியே வெளியில் செய்தல் எனும் குணங்கள் உண்டாகும்.

நான்காம் நிலை :
மனநிலை - உடல்நிலை அழியும், கைகால்கள் தளர்ந்து நடை தடுமாறி மரம் போல கீழே விழுவான், நாடிநடை தளர்ந்து,உடல் வியர்த்து, கைகால்கள் சில்லிட்டு உயிர் பிரியும்.

செவ்வாய், 13 அக்டோபர், 2020

ரோக நிதானம் - வெள்ளை வெட்டை (பிரமியம்)

            சிறுநீர் இறங்குவதற்கு முன்போ அல்லது பின்போ வெண்ணிற சீழ் போன்ற திரவம் இறங்குதல். சிறுநீர்த்தாரையில் எரிச்சலுடன்  கடுப்பு உண்டாதல் என்பதை வெள்ளை வெட்டை என்பர். இது 21 வகைப்படும்.

வெள்ளை வெட்டை உண்டாகக் காரணங்கள் :
            அதிக புணர்ச்சி, இந்நோய் கண்டவருடன் கூடுதல், யோகத்தில் நிலைத்து மூலக்கனலை எழுப்பும்போதும் இந்நோய் உண்டாகும்.

வெள்ளை வெட்டை நோயின் பொதுக் குணங்கள் :
            கலவி செய்த ஒருசில தினங்களுக்குள் குறியில் நமைச்சல், நீர்த்தாரையில் எரிச்சல்,சிறுநீர் இறங்கும்போது அதனுடன் சீழ் கலந்து வெளியாதல், நூல் தொங்குவதுபோலும், வெண்டைக்காய் கழுவிய நீர் போலும் வெளியாதல் எனும் குணங்கள் காணும்.

வெள்ளை வெட்டை நோயின் வகைகள் :
1. வாதப் பிரமியம் :
இந்நோயில் பசுமூத்திரம் போல் நீரிறங்கல், தண்டின் அடியில் வலி, வெளுத்து கட்டியாக சீழ்வடிதல், அடிவயிற்று மற்றும் அதன் இரு பக்கத்தில் பரபரத்த வேதனை, கனகனப்பு, வயிற்றில் இசிவு, உடல் வற்றல் எனும் குணங்கள் காணும்.

2. பித்த பிரமியம் :
இந்நோயில் உடல் கறுத்தல், தயக்கம், கீல்களில் வலி, எரிச்சல், ஆசனவாய் மற்றும் குறியில் கடுப்பு, மஞ்சள் நிறமான சீழ்வடிதல், கைகால் ஓய்ச்சல் எனும் குணங்களை உண்டாக்கும்.

3. ஐய பிரமியம் :
இந்நோயில் குறியில் கடுப்பு, அடிக்கடி வெண்மையாக நீர் இறங்கல், நீர்த்தாரையில் எரிச்சல், தேகத்தில் வெளுத்த நிறம் எனும் குணங்கள் காணும்.

4. வாத பித்த பிரமியம் :
இந்நோயில் சர்வாங்கத்திலும் நோய், குறியில் அடைத்தது போல் இருத்தல், மாவைக் கரைத்ததுப் போல் சுருக்குடன் நீரிறங்கல், வயிற்றில் கட்டி எழும்புவதுப்போல் இருத்தல், மலமிறுகல் எனும் குணங்கள் காணும்.

 5. பித்த ஐய பிரமியம் :
இந்நோயில் வாய் கசத்தல், அடிவயிற்றில் பொருமலுடன் இசிவு, கோசம் சுருங்குதல், மஞ்சளாயும் வெண்மையாயும் நீரிறங்கல், கீல்களிலே வலி, பகல் நித்திரை, பசிஇன்மை, சரீரம் ஊதல் எனும் குணங்கள் காணும்.

6. தொந்தப் பிரமியம் :
இந்நோயில் உடலில் புழுக்கள் ஊருதல் போல் இருத்தல், அடிக்கடி கடுத்து நீரிறங்கல், வெள்ளை பலநிறமாகதல் எனும் குணங்கள் காணும்.

7. கட்டிப் பிரமியம் :
இந்நோயில் உடல் முழுதும் கட்டிகள் தோன்றி உடல் வற்றும், தண்டில் சொறியுடன் தினவு, பருக்கைப்போல் சீழ் வடிதல், குறியில் நீர் கசிதல் எனும் குணங்கள் காணும்.

8. நீர்ப் பிரமியம் :
இந்நோயில் வாந்தி, மயக்கம், சிறுநீருடன் வெளுத்த நீரிறங்குதல், அடிவயிற்றில் வலி, மலத்தில் சீதம் விழுதல், இடுப்பில் கட்டிகள் தோன்றுதல் எனும் குணங்கள் காணும்.

9. தந்திப் பிரமியம் :
இந்நோயில் அடிவயிற்று புண்போல் நோதல், குறியின் அடியில் விருவிருப்பு விம்மல், நீர் இறங்கியவுடன் கம்பிபோல் வெள்ளை விழுதல், எப்போதும் வெள்ளை கசிந்து உள்ளாடை நனைதல், கைகால் எறிவு எனும் குணங்கள் காணும்.

10. ரத்த பிரமியம் :
இந்நோயில் முயல் ரத்தம் போல சிவந்த சுருக்குடன் அடிக்கடி வேதனையுடன் நீர் இறங்குதல், அடிக்கடி நீர் சிவந்து இரங்கல், பேய்போல் அலைதல் எனும் குணங்கள் காணும்.

11. கீழ்ப் பிரமியம் :
இந்நோயில் குறியின் துவாரத்தில் கடுப்புடன் வெள்ளைக் காணல், இடுப்பில் கட்டி, பவுத்திரம், நாபியில் புண், கணுக்காலில் குடைச்சல், அடிக்கடி நீர் இறங்குதல், அதிக குளிரோடு சுரம், மயக்கம், வேதனை எனும் குணங்கள் காணும்.

12. ஒழுக்கு பிரமியம் :
இந்நோயில் இது குறியின் துவாரத்திலிருந்து சீழும் ரத்தமும் கலந்து சிறுநீர் இறங்குதல், உடல் முழுதும் கருமையுள்ள கட்டிகள் உண்டாகி உடைந்து புண்ணாதல், குடைச்சல், எரிச்சல் எனும் குணங்கள் காணும்.

13. மஞ்சள் பிரமியம் :
இந்நோயில் மஞ்சள் நிறமான வெள்ளை காணும், சூடாக நீர் இறங்க, அந்த இடத்தில் நெருப்பைக் கொளுத்தினது போல் எரிச்சலுடன் கூடிய கடுப்பு, விருவிருப்பு, அதிக உஷ்ணம், முகத்தில் மஞ்சள் நிறம், நாவில் கசப்பு, மனது திடுக்கிடல் எனும் குணங்கள் காணும்.

14. நீர்ச்சுருக்கு பிரமியம் :
இந்நோயில் குத்தலுடன் மஞ்சள் நிறத்தில் கடுப்புடன் நீர் இறங்கல்,  சிறுநீர்க்கட்டு, உறக்கமின்மை, உஅன்வில் வெறுப்பு, மனசஞ்சலம், உடல் உளைச்சல் எனும் குணங்கள் காணும்.

15. கரப்பான் பிரமியம் :
இந்நோயில் வயிற்றில் உளைச்சல், சீதத்துடன் மலம் இறங்கல், நீரானது உஷ்ணமாக கடுப்புடன் இறங்கி நீர்துவாரத்தைப் புண்ணாக்கி, சுண்ணாம்புக் கல்லைக் கரைத்த சலம்போல் குத்தலுடன் இறங்கல், கைகால் உளைச்சல், உடம்பெல்லாம் வெப்பத்தால் பொங்கி எழும் புண்கள் கரப்பான் நோய் போல உடல் முழுதும் பரவும்.

16. கல் பிரமியம் :
இந்நோயில் குறியில் கள்ளைப்போல் வெள்ளை கசிதல், உடலில் கற்றாழை நாற்றம் வீசுதல், சிறுசிறு கற்கள் நீர்ப்புழையை அடைத்துக் கொண்டு வயிறு விம்மும், வயிறு முதல் விலா வரையில் விறுவிறுத்து நோதல் எனும் குணங்கள் காணும்.

17. தந்துப்பிரமியம் :
இந்நோயில் குறியில் சிலந்தி நூலைப்போல வெள்ளை இறங்கும், குறி விம்மி வலி கண்டு குருதி காணும், விலாவில் குத்தல், சிறுநீர் துளி துளியாக விழுதல் எனும் குணங்கள் காணும்.

18. நீச்சுப் பிரமியம் :
இந்நோயில் கள்ளை ஒத்த சிறுநீருடன் வெளுத்த சீழ் வடிதல், குறியின் தண்டு வீங்கி விம்மும்போது குத்தல், விருவிருப்பு, நரம்பு சுருங்குதல், அடிவயிற்றில் சூலை, குளிர் எனும் குணங்கள் காணும்.

19. வலி பிரமியம் :
இந்நோயில் குறியின் அடிநரம்பு, பிட்டம் ஆகியவை குத்தலுடன் வலித்தல், உடல் வற்றி மயக்கம், நாவு கசத்தல், புறங்காலில் திமிர், வெள்ளை காணுதல், குறித்தண்டு வீங்கி நீர் இறங்கும்போது இற்றுப்போன சதைத் துணுக்குகள் சேர்ந்து இறங்குதல் எனும் குணங்கள் காணும்.

20. மதுப் பிரமியம் :
இந்நோயில் ஆண்குறி நொந்து தேன் போல் வண்டலாய் நீரிறங்கல், அதில் எறும்பு மொய்த்தல், நீர்த்தாரை புண்ணாகி நீர் இறங்கும் போது ஒருவித நாற்றம், நா வறட்சி, சுவையின்மை, மயக்கம் எனும் குணங்கள் காணும்.

21. விரண பிரமியம் :
இந்நோயில் உடல் முழுதும் பொங்கி புண்ணாகி குறி வீங்கி சிறுநீருடன் குருதியும் கலந்து இறங்குதல், முட்டிக்கீல்கள் நொந்து கறடு கட்டியது போல நீட்டவும் முடியாமல், மடக்கவும் முடியாமல் இருத்தல், கீல்களில் அதிகவலி, உடல் வெதும்பல், விறுவிறுத்தல் எனும் குணங்கள் காணும்.

ரோக நிதானம் - எருவாய் நோய் (மூலம்)

            ஆசன வளையங்களில் கிழங்கு முளைகளைப்போலும், வேர்களைப் போலும், மாமிச முளைகளை உண்டாக்கி வலி, கடுப்பு, எரிச்சல், நமைச்சல், அரிப்பு, வீக்கம், மலம் தீய்தல், மலம் கட்டுதல், இரத்தம் வழிதல் எனும் குணங்களை உண்டாக்கும் காரணத்தினால் மூல நோயென பெயர் பெற்றது. இந்நோய் 21 வகைப்படும்.

மூலநோய் உண்டாகக் காரணங்கள் :
            அதிகபுணர்ச்சி, நீண்ட நேரம் அமர்ந்து இருத்தல், உடல் இளைப்பு, அபானவாயு, மலம், சிறுநீர் இவற்றை அடக்குதல், குடலில் அதிக மலம் சேருதல் போன்றவற்றாலும், குன்மம், அதிசாரம், சோகை, பாண்டு, கிராணி முதலிய நோய்களாலும் இந்நோய் உண்டாகும்.

மூல நோயின் பொதுக் குணங்கள் :
            உடல் இளைத்து நிறம் மாறல், கணுக்கால், அடித்தொடை பகுதிகளில் வலி, தலை, முதுகு, மார்பு இவைகளில் வலி, பசியின்மை, வயிறு உப்புசம்,  கண்களில் வீக்கம், முகம் மாறுதல், மலச்சிக்கல், அடிவயிற்றில் இரைச்சலும் கடுப்பும் உண்டாதல், சோம்பல், தலைசுற்றல், உற்சாகமின்மை, ஆசனத்தில் வலி, கடுப்பு, நமைச்சல், அரிப்பு, எரிச்சல் எனும் குணங்கள் காணும்.

மூலநோயின் வகைகள் :
1. நீர் மூலம் :
இந்நோயில் வயிற்றை சுற்றி சுருட்டி வலித்தல், கீழ்வயிறு பொருமல், மலம் வெளியேறாமல் காற்று மட்டும் பிரிதல், மலம் வருவது போன்ற உணர்வு தோன்றி மலம் வெளியேறாமல் நுரையுடன் கூடிய நீர் வெளியேறல் எனும் குணங்கள் காணும்.

2. செண்டு மூலம் :
இந்நோயில் மூலமுளை கருணைக்கிழங்கு போல தோன்றி அடிசிவந்து , பருத்து வெளித்தள்ளி, வறண்டு, கடினப்பட்டு, கன்றி அதிக வலியுடன் குருதியும், நிணமும் வெளிப்பட்டு, தினவெடுக்கும்.

3. பெருமூலம் :
இந்நோயில் மூலமுளை மஞ்சள் கிழங்கு போல தோன்றி கடுத்து, தடித்து, எரிச்சலை உண்டாக்கி அடிவயிறு கல்போலாகும். வயிற்றில் காற்று கூடி இரைச்சல், ஏப்பம் உண்டாகும். மலம் தீய்ந்து குருதியுடன் வெளியேறும்.

4. சிறுமூலம் :
இந்நோயில் எருவாயில் சிறு முளைகள் உண்டாகி  எரிச்சலுடன் குருதியும் வெளிப்படும். வயிற்றில் குத்தல், வயிறு இழுத்து நோதல், வயிறு ஊதல் எனும் குணங்கள் காணும்.

5. வரள் மூலம் :
இந்நோயில் பித்தம் அதிகமாகி, குடல் வறண்டும், மலம் உலர்ந்து இறுகி வெளியாகாமல் தடைபடும். உடல் வெளுத்து, வலிமை குறைந்து, மலத்துடன் இரத்தம் வெளியேறும்.

6. இரத்த மூலம் :
இந்நோயில் தொப்புளில் வலித்து மலத்துடன் குருதியும் பீறிட்டு பாயும். மேலும் கைகால் உளைச்சல், மயக்கம், மார்பு நோய், தலைவலி, கண்கள் மஞ்சளாதல் எனும் குணங்கள் காணும்.

7. சீழ் மூலம் :
இந்நோயில் ஆசனவாயை சுற்றிலும் கடுப்பும் எரிச்சலும் உண்டாகி, மலம் கழியும்போது சதை இற்று அதனுடன் சீழும் நீரும் கலந்து, இறங்கும். சிறுநீர் மஞ்சள் நிறத்தில் கழியும்.

8. ஆழி மூலம் :
இந்நோயில் மூலமுளை வள்ளிக்கிழங்கை போல பருத்து நீண்டு, குருதியும் நிணமும் வழியும். மலம் இறங்காது. 

9. தமரக மூலம் :
இந்நோயில் மூலமுளை வெளித்தள்ளி உலக்கை பூண் அல்லது தாமரை பூப்போல காணும். மேலும் தினவும், நமைச்சலும் உண்டாகி, உடல் மெலிந்து, மலத்துடன் குருதியும் சேர்ந்து கழியும்.

10. வாத மூலம் :
இந்நோயில் மூலமுளை கோவை பழம் போல சிவந்து, பின் கறுத்து மெலிந்து,கடுப்பு, நமைச்சல், குத்தல், குடைச்சல், திமிர்தல் உண்டாகி, மலம் கறுத்து இறங்கும். மேலும் தலையிலும் குடலிலும் வலி உண்டாகும்.

11. பித்த மூலம் :
இந்நோயில் மூலமுளை பருத்திக்கொட்டை அல்லது நெல்லின் அளவில் தோன்றி, கடுப்பு, எரிச்சல், தாகம், மயக்கம், சோர்வு, மலத்துடன் சீழும்,, குருதியும் கலந்து வெளியேறுதல் எனும் குணங்களை உண்டாக்கும். மேலும் இதில் மலம் வறண்டு, திரிதிரியாய் வெளியேறும்.

12. ஐய  மூலம் :
இந்நோயில் மூலமுளை வெண்ணிறத்தில் தோன்றி, எரிச்சல், தினவு, கடுப்பு, மலத்துடன் சீழும் குருதியும் கலந்து இறங்கும். மேலும் உடல் வெளுத்து, வலிமை குறையும்.

13. தொந்த மூலம் :
இந்நோயில் மூலமுளை கோழிக்கொண்டையை போல தோன்றி நடக்க இயலாமல் செய்யும்.

14. வினை மூலம் :
இந்நோயில் உணவு செரியாமை, புளியேப்பம், அடிவயிறு குத்தல், வயிறு இரைதல், நரம்பு இசிவு, கடுப்பு, உடல் காந்தல் எனும் குணங்கள் காணும்.

15. மேக மூலம் :
இந்நோயில் மூலமுளையில் இருந்து குருதி கொட்டும், ஆண்குறியில் இருந்து வெள்ளை வடியும். வயிறு இரைந்து பேதியாகும். சிறிநீர் எரிந்து இறங்கும். தலையில் வலியும், உடலில் திமிரும், சிறுநீர் இனிப்பு தன்மையோடும் இருக்கும்.

16. பவுத்திர மூலம் :
இந்நோயில் மூலமுளைக்கு அருகில் கட்டி தோன்றி உடைந்து உலராது துளையுடன் சீழ் வடியும். கைகால்கள் வீங்கும். ஆசனமும், குறியும் வீங்கும்.

17. கிரந்தி மூலம் :
இந்நோயில் குறியில் புண் உண்டாகி அது மூலமுளை வரையில் பரவி சீழும் குருதியும் வடியும். ஆசனவாய் வெடித்து, மலம் வறண்டு இறங்கும்.

18. குதமூலம் :
இந்நோயில் மூங்கில் குருத்து போல அடிக்குடல் வெளித்தள்ளும். மூலமுளையில் இருந்து சீழும் குருதியும் வடியும். நா வறண்டு தாகம் உண்டாகும்.

19. புறமூலம் :
இந்நோயில் ஆசனவாயின் வெளிப்புறத்தில் சிறு பருக்களைப் போல முளைகள் தோன்றி கடுத்து சீழ் இறங்கி, கடுப்பு, நமைச்சல், தினவு உண்டாகும். உடலில் சிறுசிறு சிரங்கு, சொறி உண்டாகும்.

20. சுருக்கு மூலம் :
இந்நோயில் ஆசனவாய் சுருங்கி தடிக்கும், பெருங்குடல் வலியுடன் உப்பும், மலத்துடன் சீழும் குருதியும் இறங்கும்.

21. சவ்வு மூலம் :
இந்நோயில் மூலமுளையானது குழகுழத்து நீண்டு சவ்வு போல தொங்கி, சீழும் குருதியும் வடியும்.

ரோக நிதானம் - ஊழி நோய் (வாந்தி பேதி)

            உண்ட உணவு செரிக்காமல் அதிக வாந்தி, கழிச்சல், நீர்வேட்கை, கண் பஞ்சடைத்தல், கெண்டை சதை வலித்தல், கைகால்கள் சில்லிடல், பேச்சொலி குறைதல் எனும் எனும் இயல்பை இந்நோய் கொண்டிருக்கும்.

ஊழி நோய் உண்டாகக் காரணங்கள் :
            பூமியின் தட்பவெப்ப மாறுதலாலும், அருந்தும் நீரில் உள்ள நுண் கிருமியாலும், உடலில் பித்தம் திடீரென குறைந்து ஐயம் அதிகரிப்பதாலும் இந்நோய் உண்டாகிறது. இது 3 வகைப்படும்.

ஊழி நோயின் பொதுக் குணங்கள் :
            உண்ட உணவு செரியாமல் மந்தமாகி, வயிறு இறைந்து, ஏப்பம், விக்கல், குரல் கம்மல், வயிறு ஊதல்,மேல் மூச்சு, நாடிநடை தளறல், பிசுபிசுத்த வியர்வை எனும் குணங்களுடன் வாந்தியும், பேதியும் அன்னம் வடித்த கஞ்சி போல இருக்கும். உடல், நாவு, மூச்சு வாழை தண்டு போல சில்லிடும். கண்கள் குழி விழுந்து உடலும், முகமும் வாடும். விரல் சிறுத்து, வாய், உதடு, உடல் நீலமாகும். வயிற்றிலும், சதைகளிலும் வலி எடுக்கும். சிறுநீர் சுத்தமாக இறங்காது. அதிக தாகம் எடுக்கும்.


ஊழி நோயின் வகைகள் :
1. வாத ஊழிநோய் :
வயிற்றில் இரைச்சல், பேதி, உடல் கறுத்தல், விழி மூடாது இருத்தல், மனக்கலக்கம், சுரம், குடல் குமுறி புரட்டல் எனும் குணங்கள் காணும்.

2. பித்த ஊழிநோய் :
பேதி, உடல் சூம்பல், விக்கல், பிதற்றல், வாந்தி, மயக்கத்துடன் அரட்டல் புரட்டல் எனும் குணங்கள் காணும்.

3. ஐய ஊழிநோய் :
நாடி விரைவில் அடங்கி, குறுக்கில் வலி, மேல்பார்வை, நடக்க இயலாமை, புரளல், உடல் வெளுப்பு எனும் குணங்கள் காணும்.

ரோக நிதானம் - கடுப்புக்கழிச்சல் / சீதபேதி

            வயிறு கடுத்து அடிக்கடி சிறிதாகவோ அல்லது கடுப்பு அதிகமின்றி அதிகமாகவோ சீதமும் (சளியும்), இரத்தமும் கலந்து கழியும்.

சீதபேதி உண்டாகக் காரணங்கள் :
  1. அதிக காரம், புளிப்பு சேர்ந்த உணவுகளை உண்ணல்
  2. எளிதில் செரிக்காத உணவை உண்ணல்
  3. கடும் வெயிலில் அலைதல்
  4. அதிக குளிரில் அலைதல்
  5. இரவில் கண் விழித்தல்

சீதபேதியின் பொதுக் குணங்கள் :
இந்நோயில் தலைவலி, வாந்தி, குமட்டல், வயிறு கடுத்து இரைந்து புரட்டல் எனும் குணங்கள் காணும்.

ரோக நிதானம் - குடல் பிடிப்பு நோய்

            இந்நோய் வயிற்றை இழுத்துப் பிடித்துக் கொண்டு வலிக்கும் நோய். மேலும் இதில் வயிற்று இரைச்சல், வயிற்றுவலி, வயிறு புரட்டல், மலக்கட்டு, பெருமூச்சு, சுரம் எனும் குணங்களை உண்டாக்கி வயிற்றை இழுத்துப் பிடித்துக் கொண்டு நிமிர முடியாதவாறு வலிக்கும். இது அட்டிலம், பிரதி அட்டிலம், துநி, பிரதிதுநி என 4 வகைப்படும்.

குடல் பிடிப்பு நோய் உருவாகக் காரணங்கள் :
  1. அதிக உழைப்பு
  2. விரைவாக ஓடுதல்
  3. வயிற்றில் அடிபடல்
  4. அதிக பட்டினி மற்றும் அதிக உணவு
  5. எளிதில் செரிக்காத உணவுகளை உண்ணுதல்

குடல் பிடிப்பு நோயின் பொதுக் குணங்கள் :
            இந்நோயில் ஆரம்பத்தில் வயிறு இரைந்துபோகும். பின் வயிறு ஊதி, வயிற்றில் தாங்க முடியாத வலி, குடல் புரட்டல், மூச்சுவிட இயலாமை, வயிற்றை இழுத்துப் பிடித்து நிமிர இயலாமல் செய்தல், வாந்தி, ஏப்பம், சுரம், மலம் தடைபடுதல்.

ரோக நிதானம் - ஊதல் (சோபை) நோய்

            உடலில் இரத்தம் கெட்டு நீர்க் கோர்த்து உடல் வெளுத்து வீங்கி ஊதுதல் சோபை எனப்படும். இந்நோய் 4 வகைப்படும்.

சோபை நோய் உண்டாகக் காரணங்கள் :
  1. நஞ்சை உண்ணுதல்
  2. வெளுப்பு நோயின் தாக்கம்
  3. மலைகள், நீர்நிலைகளின் கரைகளில் வசித்தல்
  4. சாம்பல், மண், தவிடு போன்றவற்றை அதிகமாக உண்ணுதல்

சோபை நோயின் பொதுக் குணங்கள் :
இந்நோயில் உடல் வெளுத்து வலிமை குறைந்து, நடந்தால் கணுக்காலில் வீக்கம், சோர்வு, இளைப்பு, தலை சுற்றல், மயக்கம் உண்டாகி, பின் உடல் நாளுக்கு நாள் வீங்கும்.

சோபை நோயின் குணங்கள் :
1) வாத சோபை :
இந்நோயில் பொதுக் குணங்களோடு செரியாமை, மயிர் சிவந்து, தூக்கம் கெடும்.

2) பித்த சோபை :
இந்நோயில் பொதுக் குணங்களோடு வாந்தி, மயக்கம், நீர்வேட்கை, இளைப்பு, சோர்வு, உடல் மஞ்சள் நிறத்தில் அல்லது சிவந்து காணும்.

3) ஐய சோபை :
இந்நோயில் பொதுக் குணங்களோடு தோலில் தினவெடுத்து, மயிர்க்கால்கள் வெளுத்து, குரல் கம்மல், கண் எரிச்சல் எனும் குணங்கள் காணும்.

4) முக்குற்ற சோபை :
இந்நோயில் பொதுக் குணங்களோடு முன்சொன்ன மூன்று குணங்களும் கலந்து காணும்.

ரோக நிதானம் - கல்லீரல் (வலப்பாட்டீரல்) நோய்

            கல்லீரல் தன அளவில் நிற்காமல் பெருத்துக் கொண்டே வந்து தன் இயற்கை தொழிலை இழத்தல் அல்லது சிறுத்துக் கொண்டே வந்து பல நோய்களை உண்டாக்கும் இயல்பைக் கொண்டிருப்பது. இது 3 வகைப்படும்.

கல்லீரல் நோய் வரக் காரணங்கள் :
  1. அதிக உணவு அல்லது உடலுக்கு ஒவ்வாத உணவை உண்ணல்
  2. குழந்தைகளுக்குப் பால் உணவின் மாறுபாட்டால் வருவது
  3. பாலியல் நோய் மற்றும் சுரத்தின் கூட்டால் வருவது
  4. கள், சாராயம் அதிகமாகக் குடித்தல்

கல்லீரல் நோயின் பொதுக் குணங்கள் :
            இந்நோயில் வாய் கசத்தல், சுவையின்மை, வாய்நீர் ஊறல், பசியின்மை, பித்த வாந்தி, முகம் சுருங்கி எலும்புகள் எடுத்துக் காட்டல், கைகால் சூம்பல், வயிறு பெருத்தல், அடிக்கடி சுரம், உடல் இளைத்துக் கறுத்தல்.

கல்லீரல் நோயின் வகைகள் :
1) வாத கல்லீரல் நோய் :
இந்நோயில் பொதுக் குணங்களோடு நிணநீர் குழாய்களின் முடிச்சுகள் கனத்தல்,  உடலில் குருதியின் அளவு குறைந்து வெளுத்தல் எனும் குணங்கள் காணும்.

2) பித்த கல்லீரல் நோய் :
இந்நோயில் பொதுக் குணங்களோடு பித்தநீர் உடல் முழுதும் கலந்து மஞ்சள் நிறத்தில் காணும்.

3) ஐய கல்லீரல் நோய் :
இந்நோயில் பொதுக் குணங்களோடு சிறுநீர் அளவில் குறைந்தும், சிவந்தும் காணும்.

ரோக நிதானம் - மண்ணீரல் (இடப்பாட்டீரல்) நோய்

            மண்ணீரல் தன் அளவில் இருக்காமல் நாளுக்குநாள் பெருத்துக் கொண்டே வந்து உடலின் இரத்த அளவைக் குறைப்பது மண்ணீரல் நோய் எனப்படும். இது 4 வகைப்படும்.

மண்ணீரல் நோய் வரக் காரணங்கள் :
  1. உணவில் பால், நெய், எண்ணெய் இவைகளை அளவுக்கதிகமாக உண்ணுதல்
  2. வயிறு நிறைய உண்டவுடன் ஆடல், பாடல், குதித்தல், நீந்துதல்
  3. உடலுக்கு ஆகாத குருதியை கெடுக்கும் உணவை உண்ணுதல்
  4. குளிர்க் காய்ச்சல், பாண்டு, சுரம் போன்ற நோய்களின் தாக்கம்
  5. கழிச்சல் மருத்துகளை அடிக்கடி எடுத்தல்
  6. உண்டவுடன் உறங்குதல்

மண்ணீரல் நோயின் பொதுக்குணங்கள் :
            இந்நோயில் வாயில் சுவையறிய இயலாமை, குமட்டல், உணவில் வெறுப்பு, வாந்தி, வயிறு பொருமல், உடல் சூடு அதிகரித்தல், வயிறு பெருத்து உடல் இளைத்துக் கொண்டே வருதல், மேலும் உடல் கறுத்துக் காணுதல், மண்ணீரல் பெருத்துக் கொண்டே வருதல், வயிற்றில் பளு மற்றும் வலி, உணவு செரியாமை, வயிற்றில் நீர் கோர்த்து கொள்ளுதல்.

மண்ணீரல் நோயின் வகைகள் :
1) வாத மண்ணீரல் நோய் :
இந்நோயில் பொதுக் குணங்களோடு வயிற்றின் மேல் குருதிக் குழல்கள் புடைத்துப் பச்சை நிறத்தில் காணுதல், கைகால் சோம்பல், மலம் சிறுநீர் சுருங்குதல் எனும் குணங்கள் காணும்.

2) பித்த மண்ணீரல் நோய் :
இந்நோயில் பொதுக் குணங்களோடு வாந்தி, குமட்டல், மயக்கம், தலை சுற்றல், கழிச்சல் போன்ற குணங்கள் காணும்.

3) ஐய மண்ணீரல் நோய் :
இந்நோயில் பொதுக் குணங்களோடு உடல் வலிமை குறைந்து நிணநீர் குழாய்களின் முடிச்சுகள் வீங்கித் திரண்டு கட்டிகளைப் போலக் காணும்.

4) முக்குற்ற மண்ணீரல் நோய் :
இந்நோயில் முன்சொன்ன மூன்று குணங்களும் கலந்து தோன்றும்.

திங்கள், 28 செப்டம்பர், 2020

ரோக நிதானம் - மாந்தம் (அலசகம்)

            உண்ட உணவு செரிக்காமலும், வாந்தியாகாமலும், பேதியாகமலும் வயிற்றிலேயே நின்று தங்கி இரைதல், ஏப்பம் - வாந்தி ஆகாமை எனும் துன்பங்களை விளைவிக்கும் நோய் மாந்தநோய்  ஆகும்.  இந்நோய் மூன்று வகைப்படும்.

மாந்த நோய் உண்டாகக் காரணங்கள் :
            மாமிசம், ஆட்டுப்பால்,  மாவுப்பொருட்கள், சோறு முதலியவற்றை அளவுக்கு அதிகமாக உண்பதாலும், சரியாக பக்குவம் செய்யாத உணவுகளை உண்பதாலும், உணவுண்ணாமல் அதிக பட்டினி கிடப்பதாலும், நோயால் உடல் மெலிந்தவர்களும் அதிக உணவை உண்பதால் முக்குற்றங்களும் கேடடைந்து இந்நோய் உண்டாகும்.

மாந்த நோயின் பொதுக்குணங்கள் :
            உணவு வயிற்றில் தங்கி புளித்து வாய் குமட்டல், வாய்நீர் ஊறல், ஏப்பம் வராமை, வயிறு இரைந்து நோதல், புரட்டல், தலை சுற்றல், உடல் நடுக்கல், நாவறட்சி, அதிக தாகம், மயக்கம் எனும் குணங்கள் காணும்.

மாந்த நோயின் வகைகள் :
1. ஐய (சீதக்கட்டு) மாந்தம் :
இந்நோயில் உடலுக்கு வேண்டிய அளவு உணவு உண்ணாமல் இருத்தல், அளவுக்கு அதிகமாக உணவு உண்ணல், வேளைதவறி உண்ணுதல் போன்ற காரணங்களால்உணவானது வாந்தியாகாமலும், பேதியாகாமலும், செரிக்காமலும் சீதத்துடன் (ஐயம்/கபம்) பிசறிக்கொண்டு வயிறு ஊதல், வயிறு புரட்டல், வயிற்றில் வலி, மூச்சு விடஇயலாமை, வாய்நீர் ஊறல், நாவறட்சி, அதிக தாகம் எனும் குணங்கள் காணும்.

2. கோல் மாந்தம் :
இந்நோயில் உண்ட உணவு செரிக்காமல் வயிற்றை ஊதச் செய்து, வயிற்றில் இரைச்சல், புரட்டல், வலி முதலிய குணங்கள் உண்டாகி, தாங்க முடியாத வயிற்றுவலியுடன் புரளச் செய்யும். மேலும் அதிக தாகம், உடல் சிலிர்த்தல், கைகால் சில்லிடல், பிசுபிசுத்த வியர்வை,உடல் நிறமாறல், உடல் கோல் (கம்பு) போல வளைக்கவும், நிமிரவும் இயலாத நிலை போன்ற குணங்கள் காணும்.

3. நஞ்சு மாந்தம் :
இந்நோயில் நாட்பட்ட பழைய உணவுகளை உண்ணுதல், ஊசிப்போன - அழுகிய - பூஞ்சைபடிந்த உணவுகளை உண்பதால் வாயில் சுவை மாறி, வாய்நீர் ஊறல், குமட்டல், மயக்கம், வயிற்றுவலி, வாந்தி, குடல் புரட்டல், கழிச்சல், தாங்க முடியாத வயிற்றுவலி, வியர்வை, கைகால் சில்லிடல் எனும் குணங்கள் காணும்.



ரோக நிதானம் - வாந்தி / சத்தி

            உண்ட உணவும் - நீரும் செரித்தும் செரிக்காமலும் விரைவாக வாய் வழியாக வெளியேறுதல் வாந்தி எனப்படும். இதற்கு சர்த்திரோகமென்றும், வமனரோகமென்றும் பெயர். இது 11 வகைப்படும்.

வாந்தி நோய் வரக் காரணங்கள் :

            எளிதில் செரிக்காத உணவுகளையும், நஞ்சு வகைகளையும், குன்மம் முதலிய நோய்களாலும் உண்ட உணவு வயிற்றிலேயே தங்கி புளித்து வாந்தியை உண்டாக்கும். மேலும் பெண்கள் கருவுற்ற காலத்திலும், பித்தம் அதிகரிப்பதாலும், சுற்றிச் சுழன்று ஓடுவதாலும், கப்பல் பிரயாணம் முதலியவற்றாலும், வயிற்றில் உண்டாகும் கட்டிகளாலும், ஊழி எனும் நோயிலும் வாந்தி உண்டாகும்.

வாந்தி நோயின் பொதுக்குணங்கள் :

            இந்நோயில் வாயில் நீர் ஊறுதல், வாய் குமட்டல், சுவை மாறல், ஒக்காளம், நாவு தடுமாறல், வயிறு இரைந்து நோதல், குடல் புரட்டல், தாகம், ஏப்பம், விக்கல், களைப்பு, சோர்வு, வியர்வை, கைகால் சில்லிடல், மார்பு படபடத்தல், தலை கிருகிறுத்தல், மயக்கம் எனும் குணங்கள் காணும்.

வாந்தி நோயின் வகைகள் :

1. வாத வாந்தி :
இந்நோயில் வாய் வரளல், மார்பிலும் தலையிலும் நோவு, குரற் கம்மல், இருமல், இளைப்பு, கண்டத்தில் வேதனையுடன் சத்தம், கருத்த - துவர்ப்பான - நுரையுடன் கூடிய வாந்தி எனும் குணங்கள் காணும்.

2. பித்த வாந்தி :
இந்நோயில் உப்புநீர் - புகைநிற நீர் - பச்சை மஞ்சள் நிற நீர் போல குருதியுடன் கலந்து புளிப்பு - காரம் - கசப்பு சுவையிலும்  கடுமையாகவும் வாந்தி, தாகம், உடல் எரிச்சல், தலைசுழலல், மயக்கம் எனும் குணங்கள் காணும்.

3. சிலேத்தும வாந்தி :
இந்நோயில் வழுவழுப்புடன் கோழையாக - நூல்போல - இனிப்பு உவர்ப்பு சுவையுடன் வாந்தி, மயிர்சிலிர்ப்பு, முகத்தில் கொஞ்சம் அதப்பு, சோர்வு, வாயில் இனிப்பு, மார்பு துடித்தல், இருமல் எனும் குணங்கள் கொண்டது.

4. முக்குற்ற வாந்தி :
இந்நோயில் மார்பு - கண்டம் - தலையில் நோய், இருபக்கத்திலும் இசிவு, கண்கள் பிதுங்குவது போல இருத்தல், உடல் எரிச்சல், அதிக தாகம், பிரமை, மயக்கம், நடுக்கல் எனும் குணங்கள் காணும்.

5. செரியா வாந்தி :
இந்நோய் எளிதில் செரிக்காத உணவுகளை உண்பதால் அவை செரிப்பதற்கு கடினமாகி, கடினமான வயிற்றுவலியுடன் வாந்தியாகும்.

6. நீர்வேட்கை வாந்தி :
இந்நோயில் தாகம் உண்டாகும்போது அதை தணிக்காமல் விட்டால் பித்தம் மீறி வெண்மை - மஞ்சள் நிறத்தில் வாந்தியாகும்.

7. கருப்ப வாந்தி :
இந்நோயில் வாய் நீர் ஊறி, கசப்பு அல்லது வேறு சுவைகளில் வாந்தியாதல், புளிப்பு சுவையுள்ள பொருள்களை விரும்புதல் எனும் குணங்கள் காணும்.

8. திருஷ்டி வாந்தி :
இந்நோயில் வாந்தியில் அசுதி, துர்நாற்றம் இருக்கும். இதற்கு கண்ணேறு வாந்தி என்று பெயர்.

9. புழு வாந்தி :
இந்நோயில் வாந்தியுடன் புழுக்கள் விழும். வயிற்றில் வலி, உடல் நடுக்கல், மார்பு துடித்தல் எனும் குணங்கள் காணும்.

10) மல வாந்தி :
இந்நோயில் நோயாளியை அதிகமாக வருந்தி தலைவலி, வயிற்றுநோய், மிகுந்த சுரம், உளமாந்தை, களைப்பு,மலம் அதிக துர்நாற்றத்துடன் இருத்தல் எனும் குணங்கள் காணும்.

11) வெறுப்பு வாந்தி :
இந்நோயில் அருவருக்கத்தக்க பொருள்களை பார்ப்பதாலும், நினைப்பதாலும், இவை பற்றி அடுத்தவர் கூறக் கேட்பதாலும் உண்டாகும் வெறுப்பால் உணவில் விருப்பம் இல்லாமல் வாந்தியாகும்.

ரோக நிதானம் - செரியாமை / அசீரணம்

            உண்ட உணவானது செரிக்காமல் வயிற்றில் தங்கி பேதி, ஏப்பம், வயிறு ஊதல், வாந்தி, விக்கல் எனும் குணங்களைக் காட்டுவது செரியாமை எனப்படும். இது 9 வகைப்படும்.

செரியாமை நோய் வரக் காரணங்கள் :

எளிதில் செரிக்காத உணவுகளாகிய கொழுப்பு, இறைச்சி, மீன், கிழங்கு, கடலை, மொச்சை இவற்றை அளவுக்கு மிஞ்சி உண்பதாலும், ஊசிய உணவு வகைகள் மற்றும் பழைய உணவுகளை அதிகமாக உண்பதால் வயிற்றில் புளிப்பு மிகுந்து உணவை செரிக்கும் அமிலம் தன்வலிமை இழந்து உணவு செரிமானம் ஆகாமல் போகும். மேலும் நிலம் குளிர்ச்சியடைவதல் அல்லது குளிர்ந்த பகுதிகளில் இருப்பவர்களுக்கு உண்டாகும் மந்தம், தூக்கமின்மை, மனக்கலக்கம், பேராசை, பயம் முதலிய காரணங்களாலும் இந்நோய் உண்டாகும்.

செரியாமை நோயின் பொதுக்குணங்கள் :

            வயிறு உப்புதல், வயிறு இரைதல், தொடர் ஏப்பம், அடிக்கடி விக்கல், தொண்டையில் உப்பு கரித்தல், வயிற்றிலுள்ள நீர் எதிரெடுத்தல்

செரியாமை நோயின் வகைகள் :

1. வாத அசீரணம் :
இந்நோயில் உடல் இளைத்தல், தாகம், வயிற்றில் பசிமந்தம் எனும் குணங்கள் காணும்.

2. பித்த அசீரணம் :
இந்நோயில் உடல்சூடு அதிகரித்தல், தாகம், சோர்வு, புளித்த ஏப்பம் என்னும் குணங்கள் காணும்.

3. ஐய அசீரணம் :
இந்நோயில் வாயில் நீர் ஊறல், வயிற்றில் வலியுடன் சிரமம், உடல் கனத்து வலி, கண்கள் - தாடை இவற்றில் அதைப்பு, அடிக்கடி ஏப்பம் எனும் குணங்கள் காணும்.

4. பித்த - ஐய அசீரணம் :
இந்நோயில் உண்ணும் உணவு வாந்தியாதல், உடலும் நாவும் வறளல், ஏப்பம், உடல் எரிச்சல், கழுத்தில் வியர்த்தல், உடல் திடீரென்று குளிரல் எனும் குணங்கள் காணும்.

5. வாத - பித்த அசீரணம் :
இந்நோயில் புளித்த ஏப்பம், உணவு வாந்தியாதல், வயிறு உப்பல், வயிறு இரைந்து புளித்த பேதி, முகம் கருத்தல், உடல் வாடல், மயக்கம், தாகம் எனும் குணங்கள் காணும்.

6. கப - வாத அசீரணம் :
இந்நோயில் உடல் முழுதும் நோதல், கோழை உண்டாதல், உடலும் கண்களும் வெளுத்தல், நுரையாக பேதியாதல், வெளுத்த வாந்தி, இருமல், பொய்ப்பசி எனும் குணங்கள் காணும்.

7. நாட்பட்ட அசீரணம் :
இந்நோயில் உண்ட உணவு வயிற்றிலேயே தங்கி கனத்து நாள்பட்ட மந்தமாக இருக்கும்.

8. விருப்ப அசீரணம் :
இந்நோயில் உண்ணும் உணவு செரிக்காமல் புளித்த ஏப்பம்,  வயிற்றில் இரைச்சல், வயிறு பொருமல், வயிற்றில் வலி எனும் குணங்கள் காணும்.

9. வல்லுணவு அசீரணம் :
இந்நோயில் வாந்தி, மயக்கம், நினைவு அழிதல், நாக்கு - கண் - மூக்கு - உடல் எனும் இவைகள் கருத்தல், உடல் உலர்தல், உணவு மற்றும் நீரின் மீது வெறுப்பு, மலம் வெளுப்பு மற்றும் கறுத்த நிறத்தில் பேதியாதல் எனும் குணங்கள் காணும்.

சனி, 26 செப்டம்பர், 2020

ரோக நிதானம் - தமரக (மார்பு) நோய்

            இந்நோய் மார்பு வலி, பெருமூச்சு,மூச்சடைப்பு,இளைப்பு, சோர்வு, கால் வீக்கம் முதலிய குணங்களைக் காட்டி உயிரைக் கொல்லும். இந்த மார்பு நோயானது 5 வகைப்படும்.

தமரக நோய் உண்டாகக் காரணங்கள் :
  1. அதிக கோபத்தால் பித்தம் மிகுந்து தமரக நோய் உண்டாகும்
  2. புளிப்பு, கசப்பு, துவர்ப்பு உணவை அதிகமாக உண்ணுதல்
  3. அதிக சூடுள்ள உணவை அதிகமாக உண்ணுதல்
  4. உடலை அதிகமாக வருத்தி வேலை செய்யுதல்
  5. அதிகமாக உண்ணுதல்
  6. மார்பில் அடிபடுதல்
  7. மலசலம் அடக்குதல்
  8. உடல் வற்றல்

தமரக நோயின் பொதுக்குணங்கள் :

            சிறிது தூரம் நடந்தாலும், ஓடினாலும் பெருமூச்சு வாங்குதல், மார்பு துடித்தல், மார்பில் வலி, தலை சுற்றல், மயக்கம், கண்கள் இருளல், உதடு - முகம் சிலசமயம் நீலநிறமாதல், தூக்கமின்மை, வாய் பிதற்றல், மார்பில் புகைச்சலுடன் இருமல் போன்ற குணங்கள் காணும்.

தமரக நோயின் வகைகள் :
1) வாத மார்பு நோய் :
இந்நோயில் மார்பு வறண்டு வெடிப்பது போலவும், குத்துவது போலவும் காணும். மேலும் முகம் வெளுத்தல், மார்பு கனத்து நொந்து படபடக்கும், வயிறு கடுத்து நெஞ்சு பாரமாக இருக்கும், அதிக சத்தத்தை தாங்க இயலாமை, அற்ப உறக்கம், உடல் வலி, மயக்கம், பயம், உடல் கருமை நிறம் அடைதல், மூச்சு பிடிப்பது போன்ற உணர்வு எனும் குணங்கள் காணும்.

2) பித்த மார்பு நோய் :
இந்நோய் அதிகமாக ஆடல், பாடல் செய்வதால் திடீரென மார்பு நொந்து, உடல் துடித்து, உயிர் போய்விடும் என்ற பயத்தை உண்டாகும். மேலும் தலை கிறுகிறுத்து மயக்கம், நாவறட்சி அல்லது வாயில் அதிகமாக நீர் ஊறல், உடல் அழற்சி, தொண்டை அடைப்பது போன்ற உணர்வு, வியர்வை எனும் குணங்கள் காணும்.

3) ஐய மார்பு நோய் :
இந்நோயில் மார்பை கெட்டியாக இழுத்து பிடித்தது போலும், மூச்சு பிடித்தது போலவும், பாறாங்கல்லை வைத்தது போலவும் இருக்கும். மேலும் இருமல், மார்பில் தாங்க முடியாத வலி, இடது மார்பிலிருந்து, தோள்பட்டை, கை, புஜம், கை விரல்கள் போன்ற பகுதிகளில் வேதனை, இந்த பகுதிகளில் சில்லிடல் மற்றும் மரத்து போதல், முக வாட்டம், மூச்சு திணறல் போன்ற குணங்கள் காணும்.

4) முக்குற்ற மார்பு நோய் :
இந்நோயில்மார்பில் குத்துவது போன்ற வலி எரிச்சல், மார்பு பளுவாக இருத்தல், நீர் வேட்கை, மயக்கம், கீல்களில் வீக்கம், சுரம், தலைவலி போன்ற குணங்கள் காணும்.

5) கிருமி மார்பு நோய் :
இந்நோய் வயிற்றில் உண்டாகும் கிருமிகள் சிலவேளைகளில் மார்பு வரையில் வந்து உலவுவதால் உண்டாகும். இதில் மார்பில் துடிதுடித்து அதறல், வீக்கம், அதிக நமைச்சல், அதிர்ச்சி,கண்கள் பஞ்சடைதல், இருமல், கோழை, மூச்சு தடுமாறல், முகமும் கண்களும் கறுத்தல் போன்ற குணங்கள் காணும்.

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

ரோக நிதானம் - குருதி அழல் / இரத்த பித்தம்

            இந்நோய் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிப்பதாலும், இரத்தத்தில் பித்தத்தின் அளவு அதிகரித்து இரத்தம் கெடுவதாலும் உண்டாகிறது. இந்நோயில் இரத்தம் கண், காது, மூக்கு, வாய், ஆசனவாய், நீர்த்தாரை, யோனி ஆகிய வழிகளில் வெளியேறும். இந்நோய் 8 வகைப்படும்.

குருதி அழல் நோய் உண்டாகக் காரணங்கள் :
  1. உள்ளுறுப்புகள் சீர்குலைந்து, வறண்டு, வெதும்பி இரத்தம் கெடுதல்
  2. அதிக வியர்வையால் உடல் வலிமை குறைந்து பித்தம் அதிகரித்தல்
  3. அதிக காரம், உப்பு, புளிப்பு உணவுகளை உண்ணுதல்
  4. உஷ்ணம் / குளிர்ந்த உணவுகளை அதிகமாக உண்ணுதல்
  5. வெயிலில் அதிகமாக அலைந்து திரிதல்
  6. அதிக நடை, அதிக புணர்ச்சி

குருதி அழல் நோயின் பொதுக்குணங்கள் :

            இருமல், குளிர்ச்சியும் புளிப்பும் கலந்த உணவில் விருப்பம், வாந்தி, தலைபாரம், வாய் சிவத்தல், பித்த வாந்தி அல்லது இரத்த வாந்தி, உடல் நலிவடைதல், இருமல், வாந்தி, இரைப்பு, செரியாமை, உடல் எரிச்சல், உடல் வெளுத்தல், உணவில் வெறுப்பு, பெருமூச்சு, அதிக தாகம், விக்கல், கை கால் முகம் வீங்குதல், நடுக்கம், இருமும்போதும் வாந்தியின்போதும் இரத்தம் வருதல், கண், காது, மூக்கு, வாய், ஆசனவாய், யோனி, நீர்த்தாரையில் இரத்தம் வருதல் போன்ற குணங்கள் உண்டாகும்.

குருதி அழல் நோயின் வகைகள் :
1) வாத குருதி அழல் :
இந்நோயில் நுரையுடன் இரத்தம் கறுத்து வெளியாதல், உடலில் வலி, மலம் கட்டுதல், மலம் கழிக்கும்போது வலியுடனும், குருதி கலந்தும் வெளிப்படும்.

2) பித்த குருதி அழல் :
இந்நோயில் இரத்தம் சருகு ஊறிய நீரின் நிறத்தில் வெளியாகும். உடல் வெளுத்து மஞ்சள் நிறத்தில் இருக்கும். கண், நாக்கு, தோல் ஆகியவை பசுமை கலந்த மஞ்சள் நிறத்திலும் காணும்.

3) ஐய குருதி அழல் :
இந்நோயில் இரத்தம் வெளுத்து, கோழையுடன் சேர்ந்தும், நாற்றத்துடனும் வெளிப்படும். மேலும் ஓயாத இருமல், அற்பசுரம், மூக்கில் நீர் வடிதல் எனும் குணங்கள் காணும்.

4) வாதபித்த  குருதி அழல் :
இந்நோய் வாத மற்றும் பித்த குருதி அழலின் குணங்களைக் கொண்டது.

5) வாதகப குருதி அழல் :
இந்நோய் வாத மற்றும் ஐய குருதி அழலின் குணங்களைக் கொண்டது.

6) கபவாத குருதி அழல் :
இந்நோய் ஐய மற்றும் வாத குருதி அழலின் குணங்களைக் கொண்டது.

7) கபபித்த குருதி அழல் :
இந்நோய் ஐய மற்றும் பித்த குருதி அழலின் குணங்களைக் கொண்டது.

8) முக்குற்ற குருதி அழல் :
இந்நோய் வாத - பித்த - ஐய குருதி அழலின் குணங்களைக் கொண்டது.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

ரோக நிதானம் - மூக்கடைப்பு / பீனிசம் (Sinusitis)

            இந்நோயில் மூக்கின் உள்பகுதி சிவந்து, தும்மல், கண் சிவத்தல், மூக்கிலும், கண்ணிலும் நீர் வடிதல், தலைவலி, அடிக்கடி மூக்கைச் சிந்திச் சளி சீழ் அல்லது இரத்தம் வெளியாதல் எனும் குணங்கள் தோன்றும். இந்நோய் 6 வகைப்படும் என்றும், 9 வகைப்படும் என்றும் கூறினாலும், ஒருசில நூல்களில் வேறுசில வகைகளும் கூறப்படுகிறது.

பீனிசம் வரக் காரணங்கள் :
  1. குளிர்ந்த நீரினை பருகுதல்
  2. குளிர்ந்த உணவுகளை உண்ணுதல்
  3. பனி - குளிர்ந்த காற்றில் திரிதல்
  4. புகை அல்லது புழுதி படிந்த காற்றை சுவாசித்தல்
  5. உடலில் வெப்பம் அதிகரித்த நிலையில் தலை முழுகல்
  6. யோகப் பயிற்சிகளால் மூலச்சூடு அதிகரித்து மூளை வரை சென்று பரவுதல்

மூக்கடைப்பு நோயின் வகைகள் :

1) வாத பீனிசம் :
இந்நோயில் மூக்கு, நெற்றி, புருவம், கண், காது, வாய் இவற்றில் ஏதோ புழு ஊறுவது போன்ற உணர்வு, நமைச்சல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தும்மல், மூக்கும், வாயும் உலர்தல் போன்ற குணங்கள் காணும்.

2) பித்த பீனிசம் :
இந்நோயில் மூக்கில் எரிச்சல், தலை சுற்றல், மூக்கும், அதன் உட்புறமும் சிவந்து காணுதல், மூக்கில் மணம் அறிய இயலாமை, நீர் வேட்கை, மூக்கடைப்பு, மனக்கலக்கம்மூக்கில் கொப்புளம், புண், மஞ்சள் நிற சளி வெளியேறல் எனும் குணங்கள் காணும்.

3) சிலேஷ்ம பீனிசம் :
இந்நோயில் மூக்கிலும் கண்ணிலும் நீர் வடிதல், வெண்ணிற சளி, சளி முற்றி நாற்றத்துடன் கட்டியாக வெளியேறல், காதடைப்பு, மூக்கில் எரிச்சல், நமைச்சல் போன்ற குணங்கள் காணும்.

4) திரிதோஷ பீனிசம் :
வாத பித்த கப பீநசங்களின் குணங்கள் ஒரேநேரத்தில் உண்டாகும். இக்குணங்கள் காரணமின்றி அதிகரிப்பதும், குறைவதுமாய் இருக்கும்.

5) ரத்த பீனிசம் :
இந்நோயில் மூக்கில் நமைச்சலுடன் திமிர், சிவந்த சளியும் ரத்தமும் ஒழுகுதல், கண்ணிலும் காதிலும் தினவு, சருமம் கண் முதலியவைகள் சிவத்தல், ருசி தெரியாமை எனும் குணங்களை உண்டாக்கும்.

6) துஷ்ட பீனிசம் :
மேற்கூறிய ஐவகை பீனிச ரோகங்களை நிவர்த்தி செய்யாவிடில் இந்நோய் உண்டாகி அவைகளைவிட அதிக பாதிப்பை உண்டாக்கும்.

7) நீர் பீனிசம் :
இந்நோயில் மூக்கிலிருந்து நீர் தெளிவாக இருக்கும். தலை நோய், சிறு சுரம், சோம்பல், கைக்கால்கள் நோதல் எனும் குணங்கள் காணும்.

8) அதிதும்மல் பீனிசம் :
சுவாசத்தை நிறுத்திக் கும்பகம் செய்தல், சூரியனை சிமிட்டாது பார்த்தல், மூக்குத்தண்டின் எலும்பில் அடிபடுவதாலும், வாயுவானது அதிகரித்து நாசி, வாய், கண், செவி ஆகிய இடத்து நரம்பின் துவாரங்களை அடைத்து எந்நேரமும் தும்மலை உண்டாக்கும்.

9) நாசிகா சோஷம் :
இந்நோய் வாயு அதிகரித்து மூக்கில் சேரும்போது நாசி துவாரங்கள் வரளல், அத்துவாரத்தின் பக்கத்து தண்டுகளில் முள்ளால் குத்துவது போலிருத்தல், அதிக கபம், மூச்சு விடச் சிரமம் எனும் குணங்கள் உண்டாகும்.

10) நாசிகா நாகம் :
இந்நோய் கபமானது அதிகரித்து வாயுவை எழுப்பி நாசி துவாரங்களை அடைத்து மூக்கடைப்பு, மூச்சு திணறல் முதலிய குணங்களை உண்டாக்கும்.

11) கிராண பாகம் :
இந்நோய் பித்தத்தை கொண்டு நுனிமூக்கு பக்கங்களின் உட்புறத்தை வெந்தது போல் செய்து, அவ்விடத்தின் தோலிலும், மாமிசத்திலும் எரிச்சலுடன் காணும்.

12) நாசிகா சிராவம் :
இந்நோயில் கபம் அதிகரித்து மூக்கிலிருந்து கலங்கல் இல்லாத தெளிந்த சுத்த நீரை மிகவும் வடியச் செய்யும்.

13) அபிநசம் :
இந்நோயில் கபம் அதிகரித்து மூக்கின் நரம்புகளை அடைத்து முன்பு சொன்ன பீனிசங்களை விட அதிக உபத்திரவம் செய்யும்.

14) நாசிகா தீபிகை :
இந்நோயில் மூக்கில் நெருப்பில் பட்டது போலவும், இரத்தம் குழப்பியது போலவும் சிவந்து உட்புறமும், வெளியிலும் தொடக்கூடாத வேதனையுடன், மூச்சானது புகையைப் போல் வெப்பமாய் வருதல் எனும் குணங்கள் உண்டாகும்.

15) பூதி நாசிகம் :
இந்நோய் வாத பித்த கபங்களானவை தாடையில் மூலத்தைப் பற்றி நாசியில் சலம் வடிதல் மற்றும் துர்நாற்றம் எனும் குணங்கள் உண்டாகும்.

16) பூயாசிர நாசிகம் :
இந்நோய் திரிதோஷத்தினால் உண்டாகி நாசியில் சீழானது ரத்த நிறமாக விழுதலும், சிரசில் நோயுடன் எரிச்சலும் உண்டாகும்.

17) நாசிகா புடகம் :
இந்நோய் பித்த கபங்களினால் நாசியில் உண்டாகி சளி வறண்டு கட்டியாக விழுந்து, மூக்கில் கொப்புளமும் உண்டாக்கும்.

18) நாசா ரசம் :
இந்நோய் நாசியின் மூலத்தில் முளைபோல் கெட்டமாமிசத்தை வளர்பதுடன் வாத கப பீனிசக் குணங்களையும் உண்டாக்கும்.

19) நாசிகா அற்புதம் :
நாசியில் வீக்கத்துடன் பித்த கப பீனிசக் குறிகளையும் உண்டாக்கும்.

ரோக நிதானம் - குரல் கம்மல் நோய்

            இந்நோயில் பேசும்போது குரலொலி இயற்கையாய் இல்லாமல் தாழ்ந்தும், சில நேரங்களில் சத்தமில்லாமலும், கீச்சுக்குரலாகவும் இருக்கும். மேலும் தொண்டையில் ஏதோ பூசியது போலத் தொண்டை உலர்ந்து, இருமித் தொண்டை இறுக்கியது போல இருக்கும். இதன் காரணமாக இந்நோய் குரல் கம்மல் நோய் என்று அழைக்கப்படுகிறது. இது 6 வகைப்படும்.

குரல் கம்மல் நோய் வரக் காரணங்கள் :
  1. அதிக குளிரான காற்றில் இருத்தல்
  2. குளிர்ச்சியான பொருட்களை உண்ணுதல்
  3. தொண்டை புண்ணாகும் அளவில் சூடான நீரை பருகல்
  4. இளைப்பு நோயினால் தொண்டையில் புண்ணாதல்
  5. குரல்வளையில் உள்ள கொழுப்பு மற்றும் சதை வீங்குதல்
  6. மிகவும் சத்தமாகப் பேசுதல் - பாடுதல்
  7. கழுத்தில் அடிபடுதல்
  8. நச்சுப்பொருட்களை உண்ணுதல்

குரல் கம்மல் நோயின் வகைகள் :

1. வாதக் குரல் கம்மல் :
இந்நோயில் வறட்சியான - வழுவழுப்பான பொருட்களை உண்ணுதல், கடும் வெயிலில் திரிதல் போன்ற காரணங்களால் குரல்வளை வறண்டு முள்சொருகியது போல் வேதனையை உண்டாக்கி, குரலில் நடுக்கம் காணப்படும்.

2. பித்த குரல் கம்மல் :
இந்நோய் பித்தத்தை பெருக்கக்கூடிய உணவு வகைகளை உண்பதால் குரல்வளை சிவந்து புண்ணாகி, தொண்டை நொந்து, குரல் சிறுத்து குரல் வளையில் எரிச்சலுடன், வரட்டல், பேச முடியாமை, கம்மிய பேச்சு என்னுங் குணங்களுடையது

3. கப குரல் கம்மல் :
இந்நோய் பனிக்காற்று, குளிர்ந்த பொருட்களை உண்ணுதல் போன்ற காரணங்களால் தொண்டையில் கோழை கட்டி, புண்பட்டு, இருமலுடன் குரல் ஒலியை மங்கச் செய்யும்.

4. திரிதோஷ குரல் கம்மல் :
இந்நோய் நாட்பட்ட நோய்கள் குணமாகும் வேளையில் வாத - பித்த - கப தோஷங்களின் கேடினால் உண்டாவதால் எளிதில் குணமாகாது. இந்நோயில் தொண்டையை இறுக்கிப் பிடித்தது போலப் பேச இயலா நிலை உண்டாகும்.

5. இளைப்பு குரல் கம்மல் :
இந்நோய் இளைப்பு நோயின் தாக்கத்தால் உன் உண்டாகும்.

6. நிணக் குரல் கம்மல் :
இந்நோய் தொண்டையில் சதை வளர்ச்சி அடைவதால் உண்டாகும்.


குரல் கம்மல் நோய் சாத்திய அசாத்தியங்கள் :
வாதம், பித்தம், சிலேஷ்ம, கஷயரோம குரற்கம்மல்கள் சாத்தியம். திரிதோஷமேதோகுரற் கம்மல்கள் அசாத்தியம்.

ரோக நிதானம் - அம்மை / வைசூரி

            “அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது” எனும் கொள்கைக்கு ஏற்ப சீதோஷ்ண நிலையின்  மாறுபாட்டால், நமது உடலின் தட்பவெட்ப மாறுதலால் இந்நோய் உண்டாகிறது. அது எவ்வாறெனில் கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கத்தால் உடல் அதிக சூடாகி பித்தம் மாறுபாடு அடைகிறது. அந்நேரத்தில் கோடைமழையின் போது கபமும் சேர்ந்து கேட்டு உடலில் மாறுபாடு அடைந்த “பித்தகபத்தால்” இந்நோய் உண்டாகிறது. அதேபோல மழைக்காலத்தில் வெப்பம் அதிகமானால் முதலில் கபம் கேடடைந்து பின் பித்தமும் பாதித்து “கபபித்த” மாறுதலால் இந்நோய் உண்டாகிறது. இது 14 வகைப்படும். இவை தவிர வேறு சில வகைகளும் நடைமுறையில் உள்ளது.

அம்மை நோயின் பொதுக்குணங்கள் :

திடீர் சுரம், உடல்வலி, தலைவலி, இடுப்பில் உளைச்சல், தலைபாரம், உடலில் எரிச்சல் தும்மல், வாந்தி, மூக்கில் நீர் வடிதல் எனும் குணங்கள் தோன்றி முத்துகள் போல சிறிதும், பெரிதுமாக கட்டிகள் எழும்பி உடல் முழுதும் பரவும். பிறகு மலம் கட்டுதல் அல்லது பேதி, தொண்டைவலி, அறிவு தடுமாறல், பிதற்றல், மயக்கம், உணவுண்ண இயலாமை, எனும் குணங்களுடன் இந்தக் கட்டிகள் பெருத்து நீர் கொண்டு, கொப்புளமாகி, வெளுத்து, உடைந்து, பக்கு வைத்து ஆறி இயல்பு நிலைக்கு வரும். அப்போது வாயுலரல், கீல்களில் தளர்ச்சி, உடல்சோர்வு, மயிர்க்கூச்சம், கொப்புளங்கள் ஒன்பது நாள் இருக்கும்.

அம்மை நோயின் வகைகள் :

1) வாயம்மை :
இந்நோயில் வாயில் சிறு கொப்புளங்கள் உண்டாகி உணவு உண்ண முடியாத நிலை ஏற்படும்.

2) கோணியம்மை :
இந்நோய் கோணியில் உறங்கும்போது உடல் முழுவதும் சிவந்து உண்டாகும்.

3) பனைமுகரியம்மை :
இந்நோயில் மிதமான சுரம் காய்ந்து உடல் கடுக்கும். கண் சிவந்து எரிச்சல், கழுத்து வீங்கும், சன்னி, பிதற்றல், பெண்களுக்கு பெரும்பாடும் தோன்றும்.

4) பாலம்மை :
இந்நோயில் கடும் சுரமுடன் மூன்று நாளில் தலையில் கட்டிகள் தோன்றி, உடல் கடுக்கும். 7-ம் நாளில் நீர் கோர்த்து,9-ம் நாளில் இறங்கும். 15-ம் நாளில் தலை முழுகலாம்.

5) வரகுதரியம்மை :
இந்நோயில் அதிக சுரமுடன் 3-ம் நாளில் தலையில் கட்டைகள் தோன்றும். வாயிலும், நீர்த்தாரையிலும் குருதி கண்டு, 7-ம் நாளில் நீர் கட்டி, 11-ம் நாளில் இறங்கும்.

6) கொள்ளம்மை :
இந்நோயில் சுரம், சன்னி, பிதற்றல், வலிப்பு கண்டு, 3-ம் நாளில் தலையில் கட்டிகள் தோன்றி, 13-ம் நாளில் இறங்கும்.

7) கல்லுதரியம்மை :
இந்நோயில் கடும் சுரம், வாந்தி, பேதி கண்டு 3ம் நாளில்தலையில் கட்டி தோன்றி, 7ம் நாளில் சங்கம்பழம் போல நீர் கட்டி, 10ம் நாளில் இறங்கும். 11ம் நாளில் தலை முழுகலாம்.

8) கடுகம்மை :
இந்நோயில் சுரமடித்த 3-ம் நாளில் தலையில் கடுகு போல கட்டிகள் தோன்றி உடலெங்கும் பரவி, வீக்கம், பேதி, சிறுநீர் சுருங்கல், சிறுநீருடன் குருதி வெளியாதல், குரல்கம்மல் எனும் குணங்கள் தோன்றி, 13ம் நாளில் குணமாகும்.

9) மிளகம்மை :
இந்நோயில் சிறுசுரமாக தோன்றி உடல் வீங்கி கடுக்கும், இடுப்பு விளங்காது, கீல்களில் வீக்கம் மற்றும் வலி, உடல் வலிமை குறைதல் எனும் குணங்கள் உண்டாகி 7ம் நாளில் கட்டிகள் தோன்றும்.

10) உப்புதரியம்மை :
இந்நோயில் சுரம் கண்டு 3ம் நாளில் தலையில் கட்டிகள் தோன்றி உடல் முழுதும் உப்பு போலிருக்கும். 5ம் நாளில் நீர் கட்டி 7ம் நாளில் வடியும். 11ம் நாளில் தலை முழுகலாம்.

11) கரும்பனசையம்மை :
இந்நோயில் சுரம் கண்ட 4ம் நாளில் தலையில் கட்டிகள் தோன்றி, உடல் முழுதும் குத்திக் கருகும். பேதி, மயக்கம், மலம் கட்டி 13ம் நாளில் வடியும், உடல்முழுதும் விரிந்து, இரணமாகி கிருமி உண்டாகும். நினைவின்றி, மேல்மூச்சு வாங்கும். 21 நாளில் குணமாகும்.

12) வெந்தய அம்மை :
இந்நோயில் சுரம் கண்ட 3ம் நாளில் தலையில் கட்டி தோன்றி, 7ம் நாளில் நீர் கட்டி, 9ம் நாளில் வடியும். 15ம் நாளில் தலை முழுகலாம்.

13) பாசிப்பயற்றம்மை :
இந்நோயில் சுரமும், பிதற்றலும் கண்டு, 3 நாளில்  தலையில் கட்டிகள்தோன்றி, 7ம் நாளில் நீர் கட்டி, 9ம் நாளில் வடியும். 17ம் நாளில் தலை முழுகலாம்.

14) விச்சிரிப்பு அம்மை :
இந்நோயில் சுரம், கண் சிவத்தல், வாந்தி, பேதி காணும். 3ம் நாளில் தலையில் கட்டிகள் தோன்றி, உடல் முழுதும் உமி போல வாரியிட்டு மறையும், வயிறு உளையும். 7ம் நாளில் தலை முழுகலாம்.

15) நீர்க்குளுவன் அம்மை :
இந்நோயில் சுரம் கண்டு 3ம் நாளில் சங்கம்பழம் போல தோன்றி, 7ம் நாளில் இறங்கும். 9ம் நாளில் தலை முழுகலாம்.

16) தவளையம்மை :
இந்நோயில் சுரம் கண்டு நடக்க முடியாமல் சூலை போல வலிக்கும். உணவு செல்லாது. 3ம் நாளில் தலையில் கட்டிகள் தோன்றி, 9ம் நாளில் இறங்கும். 11ம் நாளில்  தலை முழுகலாம்.

17) பெரியம்மை :
இந்நோயில் அதிக சுரம் கண்டு, மூக்கில் நீர் வடிதல், தும்மல், தலைவலி, கீல்களில் வலி, முதுகு வலி, வாந்தி, கண் சிவத்தல் எனும் குணங்கள் தோன்றி, 3ம் நாளில் கட்டிகள் தோன்றி, 7ம் நாளில் குளிர்சுரமும், தாகமும் உண்டாகும். இந்நோய் 15 அல்லது 16 நாட்களில் குணமடையாவிட்டால் நோயின் தாக்கத்தால் பித்தம் கேடடைந்து இரத்தத்தை கெடுத்து மரணத்தை விளைவிக்கும்.

18) சிறியம்மை :
இந்நோயில் தலைவலி, சிறுசுரம், சோம்பல், முதுகுவலி போன்ற குணங்கள் தோன்றி, 3ம் நாளில் கழுத்து , மார்பு பகுதிகளில் கட்டிகள் தோன்றி, நீர் கட்டி, ஒரு வாரத்திற்குள் இறங்கும்.

19) தட்டம்மை :
இந்நோயில் தும்மல், இருமல், கண் சிவத்தல், கண் எரிச்சல், மூக்கில் நீர் வடிதல், கண் ரெப்பை வீங்குதல், வாய் சிவந்து புன்னாதல், உணவருந்த இயலாமை, நீர் பேதி, உடல் இளைத்தல், சுரம் எனும் குணங்கள் தோன்றி, 3ம் நாளில் கட்டிகள் தோன்றும். 10 நாட்களுக்குள் இறங்கும்.

20) பூட்டுத்தாளம்மை (புட்டாளம்மை) :
இந்நோயில் சுரம் காய்ந்து தாடை (தாள்) மற்றும் கீல்களில் (பூட்டு) பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்நோயில் சுரம் காய்ந்து தாடையின் பூட்டுகள் மற்றும் கழுத்தின் பக்கவாட்டில் கட்டிபோல வீங்கி சிவந்து காணும். இதனால் வாயை திறக்க முடியாத நிலை உண்டாகும். மேலும் சிலருக்கு விரையும் சேர்ந்து வீங்கும். பெண்களுக்கு முலைகள் வீங்கும்.

சனி, 12 செப்டம்பர், 2020

ரோக நிதானம் - சந்நிபாதம் / சன்னி (Convulsion)

            ஏதேனும் ஒரு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு வாத, பித்த, கபம் எனும் மூன்று நாடிகளும் ஒருசேர தன்னளவில் அதிகரித்து பல்வேறு பாதிப்புகளைச் செய்தால் அதைச் சந்நிபாதம் அல்லது சன்னி என்று கூறுவார். பொதுவாகச் சன்னி நோய்களின் வகைகள் 13 என்று கூறினாலும் பல்வேறு நூல்களை ஆராயும்போது நமக்கு 20க்கும் மேற்பட்ட சன்னி வகைகள்பற்றிய விவரங்கள் கிடைக்கிறது.

சந்நிபாதம் பொதுக்குணங்கள் :
  1. கண்கள் சிவத்தல் அல்லது பசுமை நிறத்தில் இருத்தல்
  2. கழுத்து - நெற்றி - மார்பு பகுதிகளில் வியர்த்தல்
  3. உடல் வலி - எரிச்சல் - மயிர்க்கூச்சம்
  4. தயக்கம் - இருமல் - வீக்கம்
  5. சுரம் - பிரமை - பிதற்றல்

சந்நிபாத நோய் உண்டாகக் காரணங்கள் :
  1. வாத - பித்த - கப குற்றத்தை அதிகரிக்கும் உணவுகளைத் தொடர்ந்து உண்ணுதல்
  2. மற்ற நோய்களால் பாதிக்கப்பட்ட காலத்தில் பத்திய மீறல்
  3. அகால நேரத்தில் எண்ணெய் தேய்த்து தலை முழுகுதல்
  4. ஆண் - பெண் தகாத உறவு
  5. கட்டி, தீப்புண், பலத்த காயம்
  6. பிரசவ காலத்தில் ஏற்படும் சுரம்

சந்நிபாத நோயின் வகைகள் :

1) வாத சன்னி :
இந்நோயில் வாதம் அதிகரிப்பதால் தலை நடுக்கல், பற்களைக் கடித்தல், சீறிவிழுதல், இருமல், கைகால்களை தூக்கிப் போடல், முகம் மற்றும் கண்கள் மினுமினுத்தல், மார்பு துடித்தல், நாவறட்சி, விடாத சுரம், பிரமை, உடல் தளர்ச்சி, உளைச்சல், நடுக்கம், தாகம், வாயில் கசப்பு தோன்றல், நா கறுத்தல், மூக்கில் நாற்றம், பெருமூச்சு, கழிச்சல், பெருமூச்சு, வயிறு நொந்து உளைதல் எனும் குணங்கள் காணும்.

2) பித்த சன்னி :
இந்நோயில் பித்தம் அதிகரிப்பதால் உடல் குளிர்தல், மயக்கம், பேசாது இருத்தல், சோர்வு, தளர்வு, கண் - தலை - செவி மந்தமடைதல், தாகம், அதிக சுரம், கழிச்சல், விக்கல், வாந்தி, வியர்வை, மேல்மூச்சு போன்ற குணங்கள் காணும்.

3) கப சன்னி :
இந்நோயில் கபம் அதிகரிப்பதால் கைகால்கள் சில்லிடல், உடல் தளர்தல், சோர்வு, உடல் வலி, அறிவு குலைதல், நாடுகள், மேல்மூச்சு, கண்கள் விரித்து நிலை குத்திப் பார்த்தல், நாடியில் தளர்வு, மயிர் சிலிர்த்தல் எனும் குணங்கள் காணும்.

4) கீல்வாத சன்னி :
இந்நோயில் வாத - கபம் மீறுவதால் கீல்களில் வலி, வீக்கம், கைகால்களை நீட்டவும், மடக்கவும் இயலாமை, மயக்கம், இருமல், பெருமூச்சு, தொண்டையில் கோழை, வயிற்றுவலி, குளிர், அதிசுரம், மயக்கம் எனும் குணங்கள் காணும்.

5) அந்தக சன்னி :
இந்நோயில் அதிக சோர்வு, மந்தம், விக்கல், வயிறு உப்புசம், உடல் நடுக்கம், தலை சுற்றல், நாடியில் தளர்வடைந்து உயிர் பிரியும். (அந்தகன் - எமன்).

6) உடல்கடுப்பு சன்னி :
இந்நோயில் உடல் முழுதும் கடுத்து, எரிச்சலுடன் சோர்வு, தூக்கமின்மை, உதடு உலர்தல், பேதி, நெற்றியில் வியர்த்தல் எனும் குணங்கள் காணும்.

7) சித்தவிப்பிரம சன்னி :
இந்நோயில் சித்தம் மயங்கி, பயத்துடன் விழித்தல், நினைவு மாறுதல், வாதபித்த தோஷங்கள் அதிகரித்து உயிர் பிரியும்.

8) சீதள சன்னி :
இந்நோயில் உடல் முழுதும் குளிர்ந்து, உடல் வலி, குரல் கம்மல், பேதி, ஒக்காளம், விக்கல், மூர்ச்சை, நடுக்கல், புலம்பல் எனும் குணங்கள் காணும்.

9) தாந்திரீக சன்னி :
இந்நோயில் உடலின் பலம் குறைந்து பெருமூச்சு, புகைந்து இருமல், பிதற்றல், தொண்டையில் தினவு, நாமுள், வயிறு உளைந்து கழித்தல் எனும் குணங்கள் காணும்.

10) கண்ட குருக்கல் சன்னி :
இந்நோயில் காதுவலி, கழுத்தில் முள் சொருகியது போல வலி, தலை வளைதல், பயம், திடுக்கிடல், விக்கல், வாந்தி, இருமல் எனும் குணங்கள் காணும்.

11) செவிமூல சன்னி :
இந்நோயில் காதில் வலி, வீக்கம், காதுகேளாமை, வாய்ப்புண், நாகறுத்தல், தலை கனத்து அரற்றல் எனும் குணங்கள் காணும்.

12) கண்ணிடுக்கு சன்னி :
இந்நோயில் கண்கலங்கி, சிவந்து இடுக்குதல், கண் இமைகள் ஒட்டிக் கொள்ளுதல், தொடை, கீல்கள், எலும்புகளில் அதிக வலி, வாத இழுப்பு எனும் குணங்கள் காணும்.

13) இரத்த வாந்தி :
இந்நோயில் வாந்தியில் கோழையுடன் இரத்தம் கலந்து வெளியேறும்.

14) பிரலாப சன்னி :
இந்நோயில் உடல் எரிச்சல், வலி, மயக்கம், பிதற்றல், மயிர்க்கூச்சம் எனும் குணங்கள் காணும். (பிரலாபம் - பிதற்றல்)

15) நாவாத சன்னி :
இந்நோயில் நா கறுத்து, வறண்டு, முள்போல் இருக்கும்.

16) முப்பிணி சன்னி :
இந்நோயில் வாத - பித்த - கப தோஷங்கள் மூன்றும் ஒருசேர அதிகரித்து ஐம்புலன்களையும் தாக்கி 15 நாட்களுக்குள் கொல்லும்.

17) நிப சன்னி :
இந்நோயில் அறிவு  முற்றிலும் மங்கிப் போயிருக்கும்.

18) சோக சன்னி :
இந்நோயில் பெண்களுக்கு நாபியிலும், மூலத்திலும் நின்று நாதம் தீய்ந்து, பெண்ணுறுப்பை  வீங்கச் செய்யும்.

19) மோகன சன்னி :
இந்நோயில் சன்னியின் பொதுக்குணங்களோடு உடல் நைந்து போய், உயிர் பிரியும்வரை தெளிவுடன் இருப்பதைப் போன்ற குணத்தை உண்டாக்கும்.

20) நஞ்சு சன்னி :
இந்நோய் பாம்பின் விஷம்போல உடலில் பரவித் தீவிரமாகும்.

21) தீச்சன்னி :
இந்நோயில் கண்கள் சிவத்தல், அதிக சுரம், மூச்சு குறைதல்,  நாவறட்சி, விழிசுழலல், வார்த்தை தடுமாறல் எனும் குணங்கள் காணும்.

22) மந்த சன்னி :
இந்நோயில் சன்னியின் பொதுக்குணங்களோடு பசிமந்தம், செரியாமை, புளியேப்பம், வயிறு பொருமல் எனும் குணங்கள் காணும்.

23) சண்ட சன்னி :
இந்நோயில் சன்னியின் பொதுக்குணங்கள் தோன்றி நோய் நீங்குவது போலக் காண்பித்து உயிரைப் பறிக்கும்.

24) இயற்கை இரணசன்னி :
இந்நோய் உடலில் தோன்றும் வெம்மையால் பருக்கள் தோன்றி, உடைந்து காய்ந்து, அதன் சீழ் உடலில் ஊறி சன்னியை உண்டாக்கும்.

25) செயற்கை இரணசன்னி :
இந்நோய் வலி பொருந்திய காயத்தினால் புண் உண்டாகி, மருந்துகளால் குணமாகாமல், சீழ் பிடித்துப் புரையோடி, அதிக வேதனையோடு சன்னி சுரத்தை உண்டாக்கும்.

26) சுக சன்னி :
இந்நோய் வயிறு மந்தமாக இருக்கும்போது எண்ணெய் தேய்த்துத் தலை முழுகியபின், தயிரும் சோறும் சேர்ந்து உண்ட பிறகு, பெண்ணுடன் சேர்வதால் வாயு அதிகரித்து சன்னி உண்டாகும்.

27) பிரசவ சன்னி :
இந்நோய் பிரசவ காலத்தில் உண்டாகும் சுரத்தால் உண்டாகும்.

28) சூதக சன்னி :
இந்நோய் மாதவிலக்கு காலத்தில் பெண்களுக்கு உண்டாகும்.

29) தாகபூர்வ சன்னி :
இந்நோயில் பித்தம் மிகுந்து அதிக எரிச்சலுடன் சுரம் உண்டாகி, பின் வாத - கபத்தின் இயல்பால் சீதளம் (குளிர்) கண்டு சன்னி காணும். (தாகம் - எரிச்சல்).

30) சீதபூர்வ சன்னி :
இந்நோயில் வாத மற்றும் கபத்தின் மிகுதியால் சீதளம் உண்டாகி பிறகு பித்தத்தின் இயல்பால் எரிச்சலுடன் சுரமுண்டாகும்.

வியாழன், 10 செப்டம்பர், 2020

ரோக நிதானம் - விக்கல் (Hiccup) நோய்

        கபத்தால் உண்டாகும் நோய்களில் விக்கல் நோயும் ஒன்றாகும். இது “விக்” எனும் ஒலியுடன் எழுவதால் விக்கல் என்றும், “இக்” எனும் ஒலியுடன் எழுவதால் இக்மா என்றும் அறியப்படுகிறது. விக்கல் நோய் மொத்தம் 5 வகைப்படும். இருப்பினும் சில நூல்களில் வேறு விதமாகவும் கூறப்பட்டுள்ளது.

விக்கல் நோய் உண்டாகக் காரணங்கள் :
  1. அதிக இனிப்பு, புளிப்பு, கசப்பு மற்றும் காரமான பொருட்களை உண்பதால்
  2. நாட்பட்ட உணவுகளை உண்பதால் வயிற்றில் புளித்து காற்றை பெருக்குவதால்
  3. வாயுவைப் பெருக்கும் உணவுகளை அதிகமாக உண்பதாலும்
  4. மூச்சை அதிகமாக அடக்கி யோகப் பயிற்சிகள் செய்வதால் வயிற்றில் கபம் மிகுந்து வாயுவைப் பெருக்கியும்
  5. சன்னி, அதிக தாகம், அதிக பசியில் வாடுதல், நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் உடையவருக்கும்
  6. அதிக உணவு அல்லது நீரால் இரைப்பை விரிவடைதல்
  7. சாராயம், கள் முதலியவைகளை அதிகமாகக் குடித்தல்
  8. குடலில் அடைப்பு ஏற்படுதல்
  9. வயிற்றில் கட்டி அல்லது புற்று
  10. மார்பில் கட்டி, சோபை முதலியவற்றால்
  11. உணவுக்குழாயில் கட்டி
  12. தொண்டையில் சுருக்கம்
  13. மூளையின் மேல்சவ்வில் ஈளை நோயால் உண்டாகும் சோபை
  14. மூளை பாதிப்பு அல்லது கட்டிகள்
  15. கால்கை வலிப்பு
  16. மூளையின் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு
  17. நீரடைப்பு
  18. உடல் மற்றும் வயிற்றில் அமில ஆதிக்கம்
  19. மூச்சடைப்பு
  20. தொற்றுநோய்களின் தீவிர நிலை

விக்கல் நோயின் வகைகள் :
1) அன்ன தோஷ விக்கல் :
அதிக காரம், அதிக சூடு, எளிதில் சீரணமாகாத உணவை உண்ணுதல் போன்ற காரணங்களால் உண்டாகும். இது செரியா விக்கல் அல்லது சூத்திர விக்கல்  என்றும் அறியப்படும்.

2) அற்ப விக்கல் :
இது சாப்பிடும்போதும், பசிக் களைப்பிலும் அதிகரித்த வாயுவினால் உண்டாகும்.

3) அடுக்கு விக்கல் :
உணவு செரிக்கும்போது சற்று நேரம் பொறுத்து பொறுத்து இலேசான அடுக்கடுக்கான விக்கல், வயிறு உப்புசம், வாந்தி, பேதி, கண்கலங்கல், கொட்டாவி என்னும் குணங்கள் உடையது.

4) மகா விக்கல் :
அதிக விக்கலினால் இரண்டு கண்புருவம், நெற்றிகள் தெறித்து விழுவது போலிருத்தல், கண்ணில் நீர்வடிதல், கண்கலங்கல், உடல் மரத்தல், நினைவு மாறல், உணவு தொண்டையில் அடைபடுதல், கால்களில் நோய், நெஞ்சு உலரல் என்னும் குணங்கள் உடையது. இது மிகவும் கொடியது.

5) நீட்டொலி விக்கல் :
நாபி அல்லது விலா பகுதியில் பிறந்த மேற்கூறிய குணங்களுடன் கொட்டாவி, தேகமுறுக்கல், அதிக சத்தத்துடன் நீண்டு வரும் விக்கல் என்னும் குணங்கள் உடையது.

6) வளி விக்கல் :
அதிக மகிழ்ச்சி, அதிக ஓட்டம், வெயிலில் திரிதல், உடலில் நீர்சத்து வறண்ட பிறகு நீரை பருகுதல் போன்ற காரணங்களால் உண்டாகும்.

7) அழல் விக்கல் :
அதிக பசி, இளைப்பு, கவலை, பித்தத்தை அதிகரிக்கும் உணவு வகைளை உண்பது போன்ற செயல்களால் விக்கல் உண்டாகி, உடல் கன்றிப்போதல், கொட்டாவி, அறிவு மங்கல், அடிக்கடி சினம் என்னும் குணங்களைக் கொண்டிருக்கும்.

8) ஐய விக்கல் :
கபத்தை பெருக்கும் உணவுகளை உண்ணுவதால் மார்பில் கோழை கட்டி விக்கலை உண்டாக்கும். இதனால் மூக்கும், கண்ணும் வெளுத்து, நொந்து தெறிப்பது போன்ற உணர்வும், கண்கலங்கி, உணவு விழுங்க இயலாமை, உணவில் வெறுப்பு, நெஞ்சு உலர்தல் என்னும் குணங்கள் உண்டாகும்.

9) சன்னி  விக்கல் :
நாட்பட்ட நோய்களால் உடல் வலிமை குறைந்து வாத - பித்த - கப தோஷங்கள் ஒருங்கிணைந்து மூச்சுத்திணறல், சோர்வு, உடல் ஓய்ச்சல் முதலிய குணங்களுடன் இந்நோய் உண்டாகும்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

ரோக நிதானம் - இருமல் /இரைப்பு (Cough)

            இது கபம் அதிகரித்தல், அசீரணபேதி, வாந்தி, விஷப்பாண்டு, விடாது சுரம், புகை, காற்று, தானியச்சுனை, அதிசீதள கபம் முதலிய காரணங்களால் உண்டாகும். இதனால் அற்ப சுவாசம், மார்பிலும் விலாப்பக்கங்களிலும் குத்தல், திணறித் திணறி மூச்சு வாங்கல், வயிறு உப்புசம்  எனும் குணங்கள் உண்டாகும். இது ஐந்து வகைப்படும்.

இருமல் நோயின் வகைகள் :
1) சுர இருமல் :
இந்நோயில் நாட்பட்ட சுரத்தால் உடல் வற்றி வெளுத்து, கடும் இருமல், தோல் சுருங்கல், மூச்சுத் திணறல், கண் நரம்புகள் பச்சை நிறமாதல் எனும் குணங்கள் காணும்.

2) மது இருமல் :
இந்நோய் மது அருந்துவதால் உண்டாகும். இந்நோயில் நெஞ்சு உலர்தல், தொண்டை வற்றல், உடலில் திணவு, நாபியில் ரணம், ஈரல்கள் வீங்கி வெதும்பல், தலையில் தாக்கிப் பிரமித்தல் எனும் குணங்கள் காணும்.

3) மருந்தீடு இருமல் :
இந்நோய் ஈடு மருந்தால் உண்டாகும். இந்நோயில் உடல் இளைத்தல், உடல் சூடு அதிகரித்தல், உணவில் வெறுப்பு, அடிக்கடி பயப்படுதல், புலம்பல், மயக்கம், வறட்டு இருமல், இரைப்பு, வாயில் புலால் மனம் வீசுதல், நா வழவழப்பு, ஒரே நினைவில் இருத்தல் எனும் குணங்கள் உண்டாகும்.

4) கஞ்சா இருமல் :
இந்நோய் அபின், கஞ்சா, புகையிலை போன்றவற்றை பயன்படுத்துவதால் உண்டாகும். இந்நோயில் உடலில் ஒளி குறைதல், தொடர் இருமல், பிரமித்தல் எனும் குணங்கள் காணும்.

5) இரத்த இருமல் :
இந்நோயில் காயங்களின் குருதிப் பெருக்கை கண்டு மனம் அஞ்சி, நுரையீரல் மற்றும் இருதயத்தின் செல்கள்  மாறுபட்டு, உடல் தீப்போல எரிந்து, வறட்டு இருமல் காணும்.

ரோக நிதானம் - ஈளை / சுவாசகாசம் (Asthma)

            இந்நோய் கபத்தின் குற்றத்தால் உண்டாகும் நோய்களில் ஒன்றாகும். இந்நோயில் மார்பிலும், தொண்டையிலும் சேர்ந்த கோழையானது வெளியேறும்போது ஓசையுடன் வெளியேறுவதை இருமல் அல்லது ஈளை என்று சித்த மருத்துவ நூல்கள் கூறுகிறது. இந்நோய் 13 வகைப்படும்.

ஈளை நோய் வரக் காரணங்கள் :

  1. குளிர் காற்று - அதிக வெயிலில் இருத்தல்
  2. அதிக சூடான - குளிர்ச்சியான பொருளை உண்ணுதல்
  3. சத்தமாகக் கத்துதல் - பாடுதல்
  4. புழுதி, சுண்ணம், பூநீறு, புகை, அதிக காரம், நறுமணம், துர்நாற்றம் உள்ள பொருட்களை முகர்தல்
  5. இளைப்பு, இரைப்பு, நுரையீரல் புற்று, இதயம் சார்ந்த நோய்களின் தாக்கம்
  6. புகைப்பிடித்தல், கஞ்சா, மதுப்பழக்கம்
  7. நாக்குப்பூச்சி முதலிய கிருமித் தொற்று

ஈளை நோயின் வகைகள் :

1) வாத ஈளை :

இந்நோயில் தொண்டையில் புண்பட்டதுபோலச் சிவத்தல், காதுநோய், காதடைப்பு, மார்புநோய், மூச்சு வாங்கவும் - விடவும் முடியாமை, தொண்டையை அடித்ததுபோல வலி, பெருமூச்சுவிடல், விலாவில் வலி, வாய் ஓயாத இருமல், நுரையுடன் கறுநிறத்தில் கோழையை உமிழச் செய்தல், வாந்தி எனும் குணங்கள் தோன்றும்.

2) பித்த ஈளை :

இந்நோயில் ளிர்ந்த பொருட்களை உண்பதால் இருமல் உண்டாகி, தலைவலி, உடல்வலி, சுரம், தாகம், இருமி இரத்தம் கக்கல், உடல் வறண்டு இளைத்தல், உணவில் வெறுப்பு, மயக்கம், புளியேப்பம், மனம் தடுமாறல் எனும் குணங்கள் தோன்றும்.

3) கப ஈளை :

இந்நோயில் முகம் ஊதல், மூக்கில் நீர் வடிதல், தொண்டையில் புண், வாய் ஓயாது இருமல், மார்பு நொந்து இருமல், கோழை வெளுத்துச் சீழ் போல வெளியேறுதல், பெருமூச்சு, அடிவயிறு நோதல், வயிற்றில் காற்று நிரம்பல், சுரம், மனக் கலக்கம், உடல் இளைத்தல், வாந்தி, உடல்வலி, அடிவயிறு நோதல் எனும் குணங்கள் தோன்றும்.

4) வாதபித்த ஈளை :

இந்நோயில் தொண்டை உலர்ந்து புண், வாய் ஓயாது இருமி இரத்தம் வெளியாதல், காதடைப்பு, காதிரைச்சல், செரியாமை, பேதி, வயிறு உப்பல், மார்பு நோய், மார்பு எலும்பு - முதுகுத்தண்டில் வலி, மூச்சு படபடத்தல் எனும் குணங்கள் தோன்றும்.

5) பக்கமந்தார ஈளை :

இந்நோயில் இடுப்புவலி, மூக்கில் நீர் வடிதல், தொண்டை கம்மல், வயிறு பொருமல் எனும் குணங்கள் தோன்றும்.

6) சுடர் ஈளை :

இது பிள்ளை பெற்ற பின் தாய்க்கு வரும் நோய். இந்நோயில் தொண்டை - மார்பு - மூக்கில் குத்தல், மூக்கில் நீர் வடிதல், நீர்வேட்கை, சுரம், இடைவிடாத இருமல், இழுப்பு, பெருமூச்சு, கண்கள் சிவந்து முட்டுதல் எனும் குணங்கள் தோன்றும்.

7) இழுப்பு ஈளை :

இந்நோயில் மூக்கிலிருந்து வெளியாகும் காற்றில் அனல் வீசும், தொண்டை கட்டி மூச்சு எலி கத்துவது போல இருத்தல், மார்பில் கோழை கட்டி இருமல், வயிறு உப்பல், உணவு செரியாமை, நோய் முற்றிய நிலையில் மூச்சு பாம்பு சீறுவது போல இருத்தல் எனும் குணங்கள் தோன்றும்.

8) இரத்த ஈளை :

இந்நோயில் தொண்டையில் வலி, குரல் கம்மல், வாந்தியில் கோழையும், குருதியும் கலந்து வருதல், வயிறு நோதல், கைகால் ஓய்ச்சல், மார்பிலும் விலாவிலும் ஊசியால் குத்துவது போல வலி, தாகம், குரல் மாற்றம், நெஞ்சில் குறுகுறு சத்தம், பெருமூச்சு எனும் குணங்கள் தோன்றும்.

9) பீனிச ஈளை  :

இந்நோயில் கோழை கோழி இறைச்சி நாற்றத்துடன் வெளியேறுதல், சோர்வு, இரைப்பு, உடல் இளைத்தல், மலமும் சிறுநீரும் கருநிறம் அடைதல், உணவு செல்லாமை, வயிறு பொருமலுடன் வலி, மூக்கில் நீர் வடிதல், உடல் குளிர்தல் எனும் குணங்கள் தோன்றும்.

10) மருந்தீடு ஈளை :

இந்நோய் ஈடு மருந்தால் உண்டாகும். இந்நோயில் உடல் மெலியும், தொண்டை புண், வாய் ஓயாத இருமல், வாய் நாற்றம், தலை கிறுகிறுப்பு, மயக்கம், அதிகபசி எனும் குணங்கள் தோன்றும்.

11) கஞ்சா ஈளை :

இந்நோய் கஞ்சா, அபின், புகையிலை முதலிய பொருட்களைப் பயன்படுத்துவதால் தொண்டை, மூச்சுக்குழாய், நுரையீரல் எனும் உறுப்புகள் வெதும்பி உண்டாகிறது. இந்நோயில் உடல் மெலிந்து, இருமல் தீராமல் நிலைத்து இருக்கும். நாட்கள் செல்லச் செல்ல இருமலும், கோழையும் அதிகமாகி, கோழையானது கறுத்து கெட்டியாக வெளியாகும்.

12) மது ஈளை :

இந்நோய் கள், சாராயம் ஆகியவற்றை அதிகமாக அருந்துவதால் உண்டாகிறது. இந்நோயில் உடல் வலிமை குறைந்து, தொண்டை, ஈரல் முதலியன வெதும்பி இருமல் உண்டாகும். மேலும் இடைவிடாது இருமல், மேல்மூச்சு, சோர்வு, இளைப்பு எனும் குணங்கள் தோன்றும்.

13) சுர ஈளை  :

இந்நோய் நாட்பட்ட சுரத்தால் உடல் மெலிந்த நிலையில் உண்டாகிறது.

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - இளைப்பு நோய் (Consumption) & உளமாந்தை

சயம் / ஈளை / இளைப்பு நோய் :

            கபத்தால் விளையும் நோய்களில் மிகவும் முக்கியமானது சயம் என்னும்  இளைப்பு நோயாகும். “கொல்லவரும் நோய்களில் தொல்லை தரும் சயம்” என்று கூறுவதிலிருந்து இதன் கொடுமையை உணரலாம். இந்நோயானது உடலின் வலிமையை குறைத்து, உடலின் 7 தாதுக்கள் மற்றும் அபானன், உதானன் என்னும் வாயுக்களையும் கேடு அடையச் செய்யும். ஈளை அல்லது சயம் என்னும் இளைப்பு நோய் 12 வகைப்படும்.

            மேலும் இந்த 12 வகையான இளைப்பு நோய்களைத் தவிர்த்து உளமாந்தை என்ற குடல் இளைப்பு நோயும் இளைப்பு நோயின் ஒரு பிரிவாக அதற்குரிய குணங்களோடு அறியபடுகிறது. இது 4 வகைப்படும். ஆக இளைப்பு மற்றும் உளமாந்தை நோய்கள் மொத்தம் 16 வகைப்படும்.

இளைப்பு நோய் உண்டாகக் காரணங்கள் :
  1. அடிக்கடி பட்டினி இருத்தல்
  2. இரவில் விழித்து இருத்தல்
  3. அதிக உழைப்பு
  4. நாட்பட்ட நோய்கள்
  5. மன அழுத்தம்
  6. உடலுக்கு ஊட்டம் இல்லாத உணவை உண்ணுதல்
  7. காற்றோட்டம் இல்லாத இடத்தில் இருத்தல்
  8. கஞ்சா, புகைக்பழக்கம் மற்றும் மருந்தீடு
  9. உப்பு, காரம் உணவில் அதிகம் சேர்த்தல்
  10. அதிக வெப்பமுள்ள இடத்தில் வேலை செய்தல்

இளைப்பு நோயின் வகைகள் :
1) பிரம்மசயம் :
இந்நோயில் உடல் இளைத்தல், இருமல், புண்ணிலிருந்து வடியும் நீர் சளியுடன் காணுதல், கோழையோடு இரத்தம் வருதல், உடல் எரிச்சல், காய்ச்சல், சுவையின்மை, மனக்கலக்கம், வாந்தி எனும் குணங்கள் காணும்.

2) இராசசயம் :
இந்நோயில் தலை - மார்பு நோதல், மஞ்சள் நிறத்தில் கோழை வெளியாதல், மூச்சுக்குழலில் வலி, உடல் வலித்து அனலாகக் கொதித்தல், இருமல், வாந்தி, குரல் மாற்றம் எனும் குணங்கள் காணும்.

3) வைசியசயம் :
இந்நோயில் கைகால் சோர்வு, அதிக வியர்வை, சுரம், வெயிலை தாங்க முடியாமை, வெளுப்பு, மலச்சிக்கல்,  இருமல், கோழை, பசியின்மை, உடல் நடுக்கம், வேதனை, கொட்டாவி எனும் குணங்கள் காணும்.

4) சூத்திரசயம் :
இந்நோயில் கண்ணில் அழற்சி, இருமல், சுவாசக்குழல் புண்ணாதல், மயக்கம், மயிர்க்கூச்செறிதல், அதிகாலையில் குளிர், வலி, வியர்வை, வாந்தி, கோழை, கழுத்தில் கோழை அடைத்தல், குத்தல், எரிச்சல், கொட்டாவி, மலச்சிக்கல் எனும் குணங்கள் காணும்.

5) வாதசயம் :
இந்நோயில் உடல் இளைத்தல், தலைவலி, விக்கல், விலா - நடுமுதுகு - கழுத்து - தோள்பட்டை - கை - கால் வலி, வாந்தி, கோழை, சுரம், தாகம், அதிசாரம், இருமல், உறக்கமின்மை, மார்பு குத்தல், நாவில் கசப்பு எனும் குணங்கள் காணும்.

6) பித்தசயம் :
இந்நோயில் இரைப்பு, விலாவும் கழுத்தும் சுருங்குதல், இரத்த வாந்தி, வெளுப்பு, உணவு செரியாமை, மூத்திரம் மஞ்சள் நிறத்தில் வெளியாதல்,, மயக்கம், குரல் கம்மல், இருமல், கோழை, சுரம், குளிர், வியர்வை, தசையில் வலி, வேதனை, அதிக சீதளம் எனும் குணங்கள் காணும்.

7) கபசயம் :
இந்நோயில் இருமல், வாந்தி, கோழை, ஏப்பம், சுவையின்மை, அதிசாரம், குரல் கம்மல், அசதி, உடல் வெளுத்தல், மூக்கில் நீர் வடிதல், வயிறு கல்லைப் போல இருத்தல், எரிச்சல், செரியாமை, வேதனை எனும் குணங்கள் காணும்.

8) வாதபித்தசயம் :
இந்நோயில் உடலில் கடுப்பு, குத்தல், எரிச்சல், சுரம், தாகம், இருமல், அதிக வாயு, சுவையின்மை, கோழை, மயக்கம், உடல் கறுத்தல், இரைப்பு, தும்மல், வயிறு குத்தல், கண்ணில் நீர் வடிதல், புளித்தல், நெஞ்சு உலர்தல், அதிக குளிர்ச்சி, சிறுநீர் தடைபடுதல் எனும் குணங்கள் காணும்.

9) வாதகபசயம் :
இந்நோயில் குரல் கம்மல், தொண்டை கம்மல், சுரம், இருமல், கோழை, உடலில் கடுப்பு,  உடல் வெளுத்தல், பலவீனம், கைகால் வற்றல், நாடி படபடத்தல், தண்டின் அடியில் திணவு எனும் குணங்கள் காணும்.

10) பித்தகபசயம் :
இந்நோயில் அதிக தூக்கம், அதிக சோம்பல், சுரம், வாந்தி, பேதி, இருமல், கோழையுடன் இரத்தம், கோழை அதிக நாற்றத்துடன் காணுதல், தலைசுற்றல், பிரமை, தாகம், மூக்கடைப்பு, குளிர், நெஞ்சில் சளி கட்டல், மூக்கு வறளல் எனும் குணங்கள் காணும்.

11) விகாரசயம் :
இந்நோயில் காதில் இரைச்சல், கண்கள் வெளுத்தல், உடல் வலிமை குறைதல், உடல் இளைத்தல், புண்கள் உண்டாதல், பிரமேகம், மயக்கம், விலாவில் வலி, வாந்தியில் இரத்தம் காணுதல், மூச்சோடு சேர்ந்து வாய் நாற்றம்,பசி, எரிச்சல், கைகால் குளிர்தல், உள்நாக்கில் பசபசப்பு - திணவு எனும் குணங்கள் காணும்.

12) தொந்தசயம் :
இந்நோயில் குரல் மாறுதல், சுரம், இருமல், கோழையுடன் இரத்தம் காணுதல், நடுக்கல், பேதி, நாக்கு கறுத்தல், வாய் நாற்றம், புலம்புதல், மலம் - சிறுநீர் கட்டுதல், வாந்தி, மேல்மூச்சு, வாயில் கசப்பு எனும் குணங்கள் காணும்.

உளமாந்தை ரோக நிதானம்

            சயத்தின் பிரிவாகிய இந்த நோய் குடலில் உள்ள கபம் குறைவாக  உள்ளபோது உண்ணுவதால் அந்த உணவு செரிக்காமல், வயிறு ஊதல், கழிச்சல், உடல் இளைத்தல், இருமல், வாந்தி எனும் குணங்களை உண்டாக்கும்.

உளமாந்தை நோய் வரக் காரணங்கள் :
  1. பசி எடுக்கும்போது உண்ணாமல், பசி மந்தமானவுடன் உண்ணுதல்
  2. பகலில் உறங்கி, இரவில் கண் விழித்து வேலை செய்தல்
  3. அதிகமாக மாமிச உணவை உண்ணுதல்
  4. புணர்ச்சிக்கு பின் மயங்கி விழுதல்
  5. சாராயம், கள் முதலியவற்றை அதிகமாகக் குடித்தல்
  6. அதிக ஓட்டம்

1) வாத உளமாந்தை :
இந்நோயில் மார்பிலும் - விலாவிலும் நோயை உண்டாக்கி, நினைவு தடுமாறல், இருமல், உள்சுரம், கழிச்சலில் சீழ் கலந்து வெளியாதல், வயிற்றில் கட்டிபோலத் திரண்டு இருத்தல், உடல் இளைத்தல், உணவில் விருப்பமின்மை, செரியாமை, கழித்தல், கைகால் மெலிதல் எனும் குணங்களைக் கொண்டிருக்கும்.

2) பித்த உளமாந்தை :
இந்நோயில் அடிவயிற்றில் தாங்க முடியாத வலி, வயிறு கட்டிபோல வீங்கிப் பெருத்து குத்தல் உண்டாகும். அக்கட்டி உருண்டு, திரண்டு வயிறு கனத்து சுரம், இருமல் உண்டாகும். கட்டி முதிர்ந்து பழுத்து உடையும்போது வாந்தி, மயக்கம், சன்னி எனும் குணங்களை உண்டாக்கும்.

 3) சிலேஷ்ம உளமாந்தை :
இந்நோயில் உடல் மெலிந்து, புண்போல நொந்து, அடிக்கடி வாந்தியாகும். மேலும் வாந்தியில் சீழ் கலந்து காணும். மனக்கலக்கம், மயக்கம், உடல் நடுக்கம், உள்சுரம், உடல் வெளுத்தல் எனும் குணங்கள் உண்டாகும்.

4) தொந்த உளமாந்தை :
இந்நோயில் உணவு உண்ணும்போது தொண்டையை அடைப்பது போல் வலி, உணவில் விருப்பமின்மை, நெஞ்சில் குத்தல், மனச்சோர்வு, உடல் வன்மை குறைதல், அதிக தூக்கம், உடல் முழுதும் திணவு, இருமல், அதிக நாற்றத்துடன் கோழை வெளியாதல் எனும் குணங்களைக் கொண்டிருக்கும்.

ரோக நிதானம் - கப / ஐய (Phlegmatic Diseases)

உடலில் கபமானது அதிகமாகும்போது மூக்கில் நீர் வடிதல், தொண்டையில் கோழை கட்டல், குரல் கம்மல், இருமல், வயிறு கடுத்து இரைதல், வெண்மையாகவும் - சீதம் கலந்தும் பேதியாதல், இரைப்பு, உடலிலும், முகத்திலும் மினுமினுப்பு, குடைச்சல், நடுக்கல், தலைபாரம், நெஞ்சில் கபம் கட்டிக் கொள்ளுதல், நாற்றம், வாந்தி, சுரம், தும்மல், பசிமந்தம் போன்ற குணங்கள் தோன்றும். கப நோய்களின் எண்ணிக்கை 96 என்று பொதுவாகக் கூறப்பட்டாலும் பல்வேறு நூல்களில் 20 வகையான கப நோய்கள் மட்டுமே கூறப்பட்டு இருக்கின்றது.


கப நோய்களின் வகைகள் :

1) இருமல் ஐயம் :

இந்நோயில் உடலில் குளிர் உண்டாகி, முகத்தில் நீரேறி, ஊதித் தளதளத்துக் காணும், மேலும் மார்பில் கட்டிய சளி இளகி இனிப்பாக வெளியேறும். உடல் வெளுக்கும்,மலத்தில் சீதம் கலந்து வெளுத்து கழியும், உடல் உஷ்ணம் கூடி, உள்சுரம் கண்டு, சிறுநீர் மஞ்சளாக இறங்கும்  என்னும் குணங்கள் காணும்.

2) காச ஐயம் :

இந்நோயில் உடல் குளிர்ந்து, கனத்து பாரமாகும். மேலும் நாடிகள் தளர்ந்து வலிமை குறையும், வாய் வறண்டு அதிக சூடு உண்டாகும். அடிமூக்குத் தண்டு வீங்கி, ஓயாத இருமல், திணவு காணும்.

3) சுவாச ஐயம் :

இந்நோயில் நெஞ்சில் கோழை கட்டி இருமல் உண்டாகும். மேலும் மூக்கடைத்து குறட்டை விடுவது போல மேல்மூச்சு வாங்கும், குளிர்சுரம், மயக்கம், மூக்கில் நீர் பாய்தல், மார்பும் - நெஞ்சும் அடைக்கும், வாய் வரளும், நீர் வேட்கை அதிகரிக்கும் என்னும் குணங்கள் தோன்றும்.

4) தீபன ஐயம் :

இந்நோயில் அதிக பசி, உடலில் எரிச்சல், நெஞ்சடைத்து அதிக துன்பம் உண்டாகும், உடல் முழுதும் வலித்து உடல்சூடு அதிகரிக்கும், கைகால்கள் குளிரும், உடல் கனத்து பருத்துக் காணும், உள்நாக்கில் பிசுபிசுப்பு என்னும் குணங்கள் தோன்றும்.

5) மந்த ஐயம் :

இந்நோயில் வயிறு மந்தம், அடிவயிறு கனத்தல், உடல் முழுதும் வியர்வை, பெருமூச்சு வாங்குதல், நெஞ்சு வறண்டு அதிக இருமல், வாயில் கசப்பு - துவர்ப்பு சுவைகள் தோன்றல், சிறுநீர் - மலம் கட்டும், கபம் அதிகரிக்கும் என்னும் குணங்கள் தோன்றும்.

6) வளி (வாத) ஐயம் :

இந்நோயில் வயிறு பொருமி, அடிவயிறு வழித்து நீர் இறங்கும், நீர் தாரையில் கடுப்பு, உடல் வீங்கி அழுத்தினால் குழி விழும், உதடும் பற்களும் கறுக்கும், உடல் முழுதும் வலி, மேக நோய் கண்டவரை போல சிறுநீரில் வெள்ளை கலந்து இறங்கும் என்னும் குணங்கள் தோன்றும்.

7) அழல் (பித்த) ஐயம் :

இந்நோயில் கண்கள் மயங்கி தலை கிறுகிறுக்கும், உறக்கமின்மை, வயிறு உப்பல், உணவு உண்ணாமை, வாய்நீர் அதிகமாக ஊறல், தொண்டையில் கோழை கட்டல், இருமலோடு பெருமூச்சு வாங்குதல், உடல் மஞ்சள் நிறமாதல் என்னும் குணங்கள் தோன்றும்.

8) இருதாது கலப்பு ஐயம் :

இந்நோயில் கபத்துடன் வாதம் அல்லது பித்தம் சேர்ந்து பாதிப்படைந்து நோயை உண்டாக்கும். இதனால் உடல் முழுதும் உஷ்ணம் அதிகரித்து, விக்கல், இருமல், பெருமூச்சு, அதிக சுரம், உடல் வலிமை குறைதல், உடல் எங்கும் எரிச்சல், உணவு உண்ணாமை, இருமலின் போது கோழை வெளியேறுதல், உடல் குளிர்ந்து மயிர்கூச்செறிதல் என்னும் குணங்கள் தோன்றும்.

9) முத்தாது கலப்பு (சன்னி) ஐயம் :

இந்நோயில் கபத்துடன் வாதம் மற்றும் பித்தம் இரண்டும் சேர்ந்து பாதிக்கும். இதனால் நா வறண்டு, உடல் குளிர்ந்து, எரிச்சலும் உண்டாகும். மேலும் இசிவு (வலிப்பு), உடல் வன்மை குறைதல், ஞாபகமறதி, தாடை, கன்னம், காது, மூக்கு, புருவம், உச்சி போன்ற இடங்கள் துடித்து படபடக்கும்.

10) சுர ஐயம் :

இந்நோயில் விட்டு விட்டு சுரம் காயும், உடல் கனத்து வலிக்கும். அடிக்கடி சுரம், சுரம் விடும்போது எல்லாம் உடலில் வியர்வை, உணவு உண்டவுடனே வாந்தி, வயிறு நொந்து உப்பும், மேல்மூச்சு, இருமல், நா கறுத்து வறண்டு நீர் வேட்கை என்னும் குணங்கள் தோன்றும்.

11) பெருங்கழிச்சல் ஐயம் :

இந்நோயில் வயிற்றில் குத்தல், சூலை நோயைப் போல வயிறு சுழன்று வீங்குதல், விலாப் பகுதியில் இரைச்சல், சிவந்த நிறத்தில் கழிதல், உடல் சோர்வு, மார்பும் நெஞ்சும் நோதல், வாய் வறண்டு இருமலோடு மூச்சு வாங்குதல், மிகுந்த நீர் வேட்கை, உடல் எரிச்சல் எனும் குணங்கள் தோன்றும்.

12) நீர் ஐயம் :

இந்நோயில் நீர் வேட்கை மிகுந்து, அடிக்கடி நீரை பருகச் செய்யும், நீரைக் குடிக்கும் போதெல்லாம் தொண்டையில் தடைபட்டு இறங்கும், அடிக்கடி சிறுநீர் வெளியாகும், குரல் கம்மல், இருமிக் கோழை கக்கல், பற்கள் குடைதல் என்னும் குணங்கள் தோன்றும்.

13) நெருப்பு ஐயம் :

இந்நோயில் அதிக கபத்தோடு வெப்பம் கூடி இருமலும் கோழையும் மிகும், உடல் நெருப்பு போன்று மிகுதியாக காயும், கைகால்கள், மூக்கு ஆகிய இடங்களில் எரிச்சல் உண்டாகும், நீர்வேட்கை கூடும், சில நேரங்களில் கையும் கால்களும் சில்லிடும், வயிறு நிறைய உண்டாலும் பசி எடுக்கும் என்னும் குணங்கள் தோன்றும்.

14) பூத ஐயம் :

இந்நோயில் வெறி கொண்டவரைப் போல கண்களை உருட்டி விழித்துப் பார்த்தல், ஊமையை போன்று பேசாதிருத்தல், திடீரென்று உரத்துப் பேசுதல், குறட்டையோடு மூச்சு வாங்குதல், இருமலோடு கொடி கொடியாக சளி வெளியாதல், உடலெங்கும் மிகுதியாக வியர்த்தல், பல்லை மிகக் கடித்தல், இனிமையுடன் பேசிக் கொண்டு இருக்கும்போதே சண்டையிடுதல் என்னும் குணங்கள் தோன்றும்.

15) முயலக ஐயம் :

இந்நோயில் உடல் முழுதும் வலிப்பு உண்டாகி உணர்ச்சியற்று தளரும், கண் சிவந்து காணும், கண்ணில் அதிக நீர் வடியும், உடல் கன்றி கறுத்துக் காணும், தன்னை அறியாமல் சிறுநீரும், மலமும் வெளியாகும். இருமலோடு பெருமூச்சு வாங்கும் என்னும் குணங்கள் காணும்.

16) வெறி ஐயம் :

இந்நோயில் வெறி நோயின் குணங்களான கண்களை விழித்துப் பார்த்தல், அடிக்கடி மீசையை முறுக்குதல்,பிறர்மேல் பாய்தல், பல்லைக் கடித்தல், கண் சிவத்தல், உடல் கறுத்தல், உறுமுதல், உதடு காய்ந்து போதல் என்னும் குணங்கள் தோன்றும்.

17) விகார ஐயம் :

இந்நோயில் உடலின் எல்லா இடத்திலும் ஏதோ ஓடுவது போன்ற எண்ணம், மனம் போனபோக்கில் பலவகைப் பாடல்களை மிடுக்குடன் பாடுதல், பெண்களின் மேல்கொண்ட இச்சையால் வேறொன்றிலும் மனம் செல்லாமல் இருத்தல், மனம் வருந்தி பலவாறாகக் பேசுதல், உணவின் விருப்பமின்மை, மயக்கம், முகம் வேறுபாடு அடைதல் என்னும் குணங்கள் தோன்றும்.

18) சுரோணித ஐயம் :

இந்நோயில் முழங்கால் குடைதல், முதுகு விலா உளைந்து நோதல், முழங்கால் முழங்கை பூட்டுகள் வீங்கி குடைச்சல் உண்டாதல், இருமிக் கோழை கக்கல், பெருமூச்சு, தொண்டையில் சளி கட்டல், நா வறண்டு நீர் வேட்கை மிகுதல், நா இனித்தல் என்னும் குணங்கள் தோன்றும்.

19) விரண ஐயம் :

இந்நோயில் தொண்டை புண்ணாகி சளியும் சீழும் கலந்து வெளியாதல், புறங்கழுத்து, கன்னம் ஆகியவை வீங்கி சுரம் உண்டாதல், குளிர் எடுத்தல், உடம்பு எரிதல், கொக்கென்ற இருமல் கூவல் உண்டாதல், தொண்டையும் நாவும் புண்ணாதல் என்னும் குணங்கள் தோன்றும்.

20) துர்கந்த ஐயம் :

இந்நோயில் தொண்டையில் புண் உண்டாகி, அதில் சீழும் குருதியும் தோன்றி, இருமல் பெருகி, மீன் கழுவிய நீர் போன்று ஒழுகி நாற்றம் உண்டாகும். மேலும் உணவை விழுங்க முடியாமல் போகும், அடிவயிறு, கை, கால்கள் வீங்கும், உடல் வற்றும், நீர்வேட்கை, வியர்த்தல் என்னும் குணங்கள் தோன்றும்.

21) நித்திய ஐயம் :

இந்நோயில் தும்மல், இருமல் உண்டாகி உடலை கறுகி வற்றச் செய்து, உடல் முழுதும் எரிச்சல் உண்டாகும். மேலும் குருதியைக் கெடுத்து உடல் வெளுக்கும், வாந்தி, குரல் கம்மல், பேச முடியாமை, தலை கிறுகிறுத்து கீழே விழுதல் என்னும் குணங்கள் தோன்றும்.