ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

ரோக நிதானம் - மூக்கடைப்பு / பீனிசம் (Sinusitis)

            இந்நோயில் மூக்கின் உள்பகுதி சிவந்து, தும்மல், கண் சிவத்தல், மூக்கிலும், கண்ணிலும் நீர் வடிதல், தலைவலி, அடிக்கடி மூக்கைச் சிந்திச் சளி சீழ் அல்லது இரத்தம் வெளியாதல் எனும் குணங்கள் தோன்றும். இந்நோய் 6 வகைப்படும் என்றும், 9 வகைப்படும் என்றும் கூறினாலும், ஒருசில நூல்களில் வேறுசில வகைகளும் கூறப்படுகிறது.

பீனிசம் வரக் காரணங்கள் :
  1. குளிர்ந்த நீரினை பருகுதல்
  2. குளிர்ந்த உணவுகளை உண்ணுதல்
  3. பனி - குளிர்ந்த காற்றில் திரிதல்
  4. புகை அல்லது புழுதி படிந்த காற்றை சுவாசித்தல்
  5. உடலில் வெப்பம் அதிகரித்த நிலையில் தலை முழுகல்
  6. யோகப் பயிற்சிகளால் மூலச்சூடு அதிகரித்து மூளை வரை சென்று பரவுதல்

மூக்கடைப்பு நோயின் வகைகள் :

1) வாத பீனிசம் :
இந்நோயில் மூக்கு, நெற்றி, புருவம், கண், காது, வாய் இவற்றில் ஏதோ புழு ஊறுவது போன்ற உணர்வு, நமைச்சல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தும்மல், மூக்கும், வாயும் உலர்தல் போன்ற குணங்கள் காணும்.

2) பித்த பீனிசம் :
இந்நோயில் மூக்கில் எரிச்சல், தலை சுற்றல், மூக்கும், அதன் உட்புறமும் சிவந்து காணுதல், மூக்கில் மணம் அறிய இயலாமை, நீர் வேட்கை, மூக்கடைப்பு, மனக்கலக்கம்மூக்கில் கொப்புளம், புண், மஞ்சள் நிற சளி வெளியேறல் எனும் குணங்கள் காணும்.

3) சிலேஷ்ம பீனிசம் :
இந்நோயில் மூக்கிலும் கண்ணிலும் நீர் வடிதல், வெண்ணிற சளி, சளி முற்றி நாற்றத்துடன் கட்டியாக வெளியேறல், காதடைப்பு, மூக்கில் எரிச்சல், நமைச்சல் போன்ற குணங்கள் காணும்.

4) திரிதோஷ பீனிசம் :
வாத பித்த கப பீநசங்களின் குணங்கள் ஒரேநேரத்தில் உண்டாகும். இக்குணங்கள் காரணமின்றி அதிகரிப்பதும், குறைவதுமாய் இருக்கும்.

5) ரத்த பீனிசம் :
இந்நோயில் மூக்கில் நமைச்சலுடன் திமிர், சிவந்த சளியும் ரத்தமும் ஒழுகுதல், கண்ணிலும் காதிலும் தினவு, சருமம் கண் முதலியவைகள் சிவத்தல், ருசி தெரியாமை எனும் குணங்களை உண்டாக்கும்.

6) துஷ்ட பீனிசம் :
மேற்கூறிய ஐவகை பீனிச ரோகங்களை நிவர்த்தி செய்யாவிடில் இந்நோய் உண்டாகி அவைகளைவிட அதிக பாதிப்பை உண்டாக்கும்.

7) நீர் பீனிசம் :
இந்நோயில் மூக்கிலிருந்து நீர் தெளிவாக இருக்கும். தலை நோய், சிறு சுரம், சோம்பல், கைக்கால்கள் நோதல் எனும் குணங்கள் காணும்.

8) அதிதும்மல் பீனிசம் :
சுவாசத்தை நிறுத்திக் கும்பகம் செய்தல், சூரியனை சிமிட்டாது பார்த்தல், மூக்குத்தண்டின் எலும்பில் அடிபடுவதாலும், வாயுவானது அதிகரித்து நாசி, வாய், கண், செவி ஆகிய இடத்து நரம்பின் துவாரங்களை அடைத்து எந்நேரமும் தும்மலை உண்டாக்கும்.

9) நாசிகா சோஷம் :
இந்நோய் வாயு அதிகரித்து மூக்கில் சேரும்போது நாசி துவாரங்கள் வரளல், அத்துவாரத்தின் பக்கத்து தண்டுகளில் முள்ளால் குத்துவது போலிருத்தல், அதிக கபம், மூச்சு விடச் சிரமம் எனும் குணங்கள் உண்டாகும்.

10) நாசிகா நாகம் :
இந்நோய் கபமானது அதிகரித்து வாயுவை எழுப்பி நாசி துவாரங்களை அடைத்து மூக்கடைப்பு, மூச்சு திணறல் முதலிய குணங்களை உண்டாக்கும்.

11) கிராண பாகம் :
இந்நோய் பித்தத்தை கொண்டு நுனிமூக்கு பக்கங்களின் உட்புறத்தை வெந்தது போல் செய்து, அவ்விடத்தின் தோலிலும், மாமிசத்திலும் எரிச்சலுடன் காணும்.

12) நாசிகா சிராவம் :
இந்நோயில் கபம் அதிகரித்து மூக்கிலிருந்து கலங்கல் இல்லாத தெளிந்த சுத்த நீரை மிகவும் வடியச் செய்யும்.

13) அபிநசம் :
இந்நோயில் கபம் அதிகரித்து மூக்கின் நரம்புகளை அடைத்து முன்பு சொன்ன பீனிசங்களை விட அதிக உபத்திரவம் செய்யும்.

14) நாசிகா தீபிகை :
இந்நோயில் மூக்கில் நெருப்பில் பட்டது போலவும், இரத்தம் குழப்பியது போலவும் சிவந்து உட்புறமும், வெளியிலும் தொடக்கூடாத வேதனையுடன், மூச்சானது புகையைப் போல் வெப்பமாய் வருதல் எனும் குணங்கள் உண்டாகும்.

15) பூதி நாசிகம் :
இந்நோய் வாத பித்த கபங்களானவை தாடையில் மூலத்தைப் பற்றி நாசியில் சலம் வடிதல் மற்றும் துர்நாற்றம் எனும் குணங்கள் உண்டாகும்.

16) பூயாசிர நாசிகம் :
இந்நோய் திரிதோஷத்தினால் உண்டாகி நாசியில் சீழானது ரத்த நிறமாக விழுதலும், சிரசில் நோயுடன் எரிச்சலும் உண்டாகும்.

17) நாசிகா புடகம் :
இந்நோய் பித்த கபங்களினால் நாசியில் உண்டாகி சளி வறண்டு கட்டியாக விழுந்து, மூக்கில் கொப்புளமும் உண்டாக்கும்.

18) நாசா ரசம் :
இந்நோய் நாசியின் மூலத்தில் முளைபோல் கெட்டமாமிசத்தை வளர்பதுடன் வாத கப பீனிசக் குணங்களையும் உண்டாக்கும்.

19) நாசிகா அற்புதம் :
நாசியில் வீக்கத்துடன் பித்த கப பீனிசக் குறிகளையும் உண்டாக்கும்.

1 கருத்து: