வியாழன், 10 செப்டம்பர், 2020

ரோக நிதானம் - விக்கல் (Hiccup) நோய்

        கபத்தால் உண்டாகும் நோய்களில் விக்கல் நோயும் ஒன்றாகும். இது “விக்” எனும் ஒலியுடன் எழுவதால் விக்கல் என்றும், “இக்” எனும் ஒலியுடன் எழுவதால் இக்மா என்றும் அறியப்படுகிறது. விக்கல் நோய் மொத்தம் 5 வகைப்படும். இருப்பினும் சில நூல்களில் வேறு விதமாகவும் கூறப்பட்டுள்ளது.

விக்கல் நோய் உண்டாகக் காரணங்கள் :
  1. அதிக இனிப்பு, புளிப்பு, கசப்பு மற்றும் காரமான பொருட்களை உண்பதால்
  2. நாட்பட்ட உணவுகளை உண்பதால் வயிற்றில் புளித்து காற்றை பெருக்குவதால்
  3. வாயுவைப் பெருக்கும் உணவுகளை அதிகமாக உண்பதாலும்
  4. மூச்சை அதிகமாக அடக்கி யோகப் பயிற்சிகள் செய்வதால் வயிற்றில் கபம் மிகுந்து வாயுவைப் பெருக்கியும்
  5. சன்னி, அதிக தாகம், அதிக பசியில் வாடுதல், நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் உடையவருக்கும்
  6. அதிக உணவு அல்லது நீரால் இரைப்பை விரிவடைதல்
  7. சாராயம், கள் முதலியவைகளை அதிகமாகக் குடித்தல்
  8. குடலில் அடைப்பு ஏற்படுதல்
  9. வயிற்றில் கட்டி அல்லது புற்று
  10. மார்பில் கட்டி, சோபை முதலியவற்றால்
  11. உணவுக்குழாயில் கட்டி
  12. தொண்டையில் சுருக்கம்
  13. மூளையின் மேல்சவ்வில் ஈளை நோயால் உண்டாகும் சோபை
  14. மூளை பாதிப்பு அல்லது கட்டிகள்
  15. கால்கை வலிப்பு
  16. மூளையின் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு
  17. நீரடைப்பு
  18. உடல் மற்றும் வயிற்றில் அமில ஆதிக்கம்
  19. மூச்சடைப்பு
  20. தொற்றுநோய்களின் தீவிர நிலை

விக்கல் நோயின் வகைகள் :
1) அன்ன தோஷ விக்கல் :
அதிக காரம், அதிக சூடு, எளிதில் சீரணமாகாத உணவை உண்ணுதல் போன்ற காரணங்களால் உண்டாகும். இது செரியா விக்கல் அல்லது சூத்திர விக்கல்  என்றும் அறியப்படும்.

2) அற்ப விக்கல் :
இது சாப்பிடும்போதும், பசிக் களைப்பிலும் அதிகரித்த வாயுவினால் உண்டாகும்.

3) அடுக்கு விக்கல் :
உணவு செரிக்கும்போது சற்று நேரம் பொறுத்து பொறுத்து இலேசான அடுக்கடுக்கான விக்கல், வயிறு உப்புசம், வாந்தி, பேதி, கண்கலங்கல், கொட்டாவி என்னும் குணங்கள் உடையது.

4) மகா விக்கல் :
அதிக விக்கலினால் இரண்டு கண்புருவம், நெற்றிகள் தெறித்து விழுவது போலிருத்தல், கண்ணில் நீர்வடிதல், கண்கலங்கல், உடல் மரத்தல், நினைவு மாறல், உணவு தொண்டையில் அடைபடுதல், கால்களில் நோய், நெஞ்சு உலரல் என்னும் குணங்கள் உடையது. இது மிகவும் கொடியது.

5) நீட்டொலி விக்கல் :
நாபி அல்லது விலா பகுதியில் பிறந்த மேற்கூறிய குணங்களுடன் கொட்டாவி, தேகமுறுக்கல், அதிக சத்தத்துடன் நீண்டு வரும் விக்கல் என்னும் குணங்கள் உடையது.

6) வளி விக்கல் :
அதிக மகிழ்ச்சி, அதிக ஓட்டம், வெயிலில் திரிதல், உடலில் நீர்சத்து வறண்ட பிறகு நீரை பருகுதல் போன்ற காரணங்களால் உண்டாகும்.

7) அழல் விக்கல் :
அதிக பசி, இளைப்பு, கவலை, பித்தத்தை அதிகரிக்கும் உணவு வகைளை உண்பது போன்ற செயல்களால் விக்கல் உண்டாகி, உடல் கன்றிப்போதல், கொட்டாவி, அறிவு மங்கல், அடிக்கடி சினம் என்னும் குணங்களைக் கொண்டிருக்கும்.

8) ஐய விக்கல் :
கபத்தை பெருக்கும் உணவுகளை உண்ணுவதால் மார்பில் கோழை கட்டி விக்கலை உண்டாக்கும். இதனால் மூக்கும், கண்ணும் வெளுத்து, நொந்து தெறிப்பது போன்ற உணர்வும், கண்கலங்கி, உணவு விழுங்க இயலாமை, உணவில் வெறுப்பு, நெஞ்சு உலர்தல் என்னும் குணங்கள் உண்டாகும்.

9) சன்னி  விக்கல் :
நாட்பட்ட நோய்களால் உடல் வலிமை குறைந்து வாத - பித்த - கப தோஷங்கள் ஒருங்கிணைந்து மூச்சுத்திணறல், சோர்வு, உடல் ஓய்ச்சல் முதலிய குணங்களுடன் இந்நோய் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக