திங்கள், 28 செப்டம்பர், 2020

ரோக நிதானம் - மாந்தம் (அலசகம்)

            உண்ட உணவு செரிக்காமலும், வாந்தியாகாமலும், பேதியாகமலும் வயிற்றிலேயே நின்று தங்கி இரைதல், ஏப்பம் - வாந்தி ஆகாமை எனும் துன்பங்களை விளைவிக்கும் நோய் மாந்தநோய்  ஆகும்.  இந்நோய் மூன்று வகைப்படும்.

மாந்த நோய் உண்டாகக் காரணங்கள் :
            மாமிசம், ஆட்டுப்பால்,  மாவுப்பொருட்கள், சோறு முதலியவற்றை அளவுக்கு அதிகமாக உண்பதாலும், சரியாக பக்குவம் செய்யாத உணவுகளை உண்பதாலும், உணவுண்ணாமல் அதிக பட்டினி கிடப்பதாலும், நோயால் உடல் மெலிந்தவர்களும் அதிக உணவை உண்பதால் முக்குற்றங்களும் கேடடைந்து இந்நோய் உண்டாகும்.

மாந்த நோயின் பொதுக்குணங்கள் :
            உணவு வயிற்றில் தங்கி புளித்து வாய் குமட்டல், வாய்நீர் ஊறல், ஏப்பம் வராமை, வயிறு இரைந்து நோதல், புரட்டல், தலை சுற்றல், உடல் நடுக்கல், நாவறட்சி, அதிக தாகம், மயக்கம் எனும் குணங்கள் காணும்.

மாந்த நோயின் வகைகள் :
1. ஐய (சீதக்கட்டு) மாந்தம் :
இந்நோயில் உடலுக்கு வேண்டிய அளவு உணவு உண்ணாமல் இருத்தல், அளவுக்கு அதிகமாக உணவு உண்ணல், வேளைதவறி உண்ணுதல் போன்ற காரணங்களால்உணவானது வாந்தியாகாமலும், பேதியாகாமலும், செரிக்காமலும் சீதத்துடன் (ஐயம்/கபம்) பிசறிக்கொண்டு வயிறு ஊதல், வயிறு புரட்டல், வயிற்றில் வலி, மூச்சு விடஇயலாமை, வாய்நீர் ஊறல், நாவறட்சி, அதிக தாகம் எனும் குணங்கள் காணும்.

2. கோல் மாந்தம் :
இந்நோயில் உண்ட உணவு செரிக்காமல் வயிற்றை ஊதச் செய்து, வயிற்றில் இரைச்சல், புரட்டல், வலி முதலிய குணங்கள் உண்டாகி, தாங்க முடியாத வயிற்றுவலியுடன் புரளச் செய்யும். மேலும் அதிக தாகம், உடல் சிலிர்த்தல், கைகால் சில்லிடல், பிசுபிசுத்த வியர்வை,உடல் நிறமாறல், உடல் கோல் (கம்பு) போல வளைக்கவும், நிமிரவும் இயலாத நிலை போன்ற குணங்கள் காணும்.

3. நஞ்சு மாந்தம் :
இந்நோயில் நாட்பட்ட பழைய உணவுகளை உண்ணுதல், ஊசிப்போன - அழுகிய - பூஞ்சைபடிந்த உணவுகளை உண்பதால் வாயில் சுவை மாறி, வாய்நீர் ஊறல், குமட்டல், மயக்கம், வயிற்றுவலி, வாந்தி, குடல் புரட்டல், கழிச்சல், தாங்க முடியாத வயிற்றுவலி, வியர்வை, கைகால் சில்லிடல் எனும் குணங்கள் காணும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக