சனி, 26 செப்டம்பர், 2020

ரோக நிதானம் - தமரக (மார்பு) நோய்

            இந்நோய் மார்பு வலி, பெருமூச்சு,மூச்சடைப்பு,இளைப்பு, சோர்வு, கால் வீக்கம் முதலிய குணங்களைக் காட்டி உயிரைக் கொல்லும். இந்த மார்பு நோயானது 5 வகைப்படும்.

தமரக நோய் உண்டாகக் காரணங்கள் :
  1. அதிக கோபத்தால் பித்தம் மிகுந்து தமரக நோய் உண்டாகும்
  2. புளிப்பு, கசப்பு, துவர்ப்பு உணவை அதிகமாக உண்ணுதல்
  3. அதிக சூடுள்ள உணவை அதிகமாக உண்ணுதல்
  4. உடலை அதிகமாக வருத்தி வேலை செய்யுதல்
  5. அதிகமாக உண்ணுதல்
  6. மார்பில் அடிபடுதல்
  7. மலசலம் அடக்குதல்
  8. உடல் வற்றல்

தமரக நோயின் பொதுக்குணங்கள் :

            சிறிது தூரம் நடந்தாலும், ஓடினாலும் பெருமூச்சு வாங்குதல், மார்பு துடித்தல், மார்பில் வலி, தலை சுற்றல், மயக்கம், கண்கள் இருளல், உதடு - முகம் சிலசமயம் நீலநிறமாதல், தூக்கமின்மை, வாய் பிதற்றல், மார்பில் புகைச்சலுடன் இருமல் போன்ற குணங்கள் காணும்.

தமரக நோயின் வகைகள் :
1) வாத மார்பு நோய் :
இந்நோயில் மார்பு வறண்டு வெடிப்பது போலவும், குத்துவது போலவும் காணும். மேலும் முகம் வெளுத்தல், மார்பு கனத்து நொந்து படபடக்கும், வயிறு கடுத்து நெஞ்சு பாரமாக இருக்கும், அதிக சத்தத்தை தாங்க இயலாமை, அற்ப உறக்கம், உடல் வலி, மயக்கம், பயம், உடல் கருமை நிறம் அடைதல், மூச்சு பிடிப்பது போன்ற உணர்வு எனும் குணங்கள் காணும்.

2) பித்த மார்பு நோய் :
இந்நோய் அதிகமாக ஆடல், பாடல் செய்வதால் திடீரென மார்பு நொந்து, உடல் துடித்து, உயிர் போய்விடும் என்ற பயத்தை உண்டாகும். மேலும் தலை கிறுகிறுத்து மயக்கம், நாவறட்சி அல்லது வாயில் அதிகமாக நீர் ஊறல், உடல் அழற்சி, தொண்டை அடைப்பது போன்ற உணர்வு, வியர்வை எனும் குணங்கள் காணும்.

3) ஐய மார்பு நோய் :
இந்நோயில் மார்பை கெட்டியாக இழுத்து பிடித்தது போலும், மூச்சு பிடித்தது போலவும், பாறாங்கல்லை வைத்தது போலவும் இருக்கும். மேலும் இருமல், மார்பில் தாங்க முடியாத வலி, இடது மார்பிலிருந்து, தோள்பட்டை, கை, புஜம், கை விரல்கள் போன்ற பகுதிகளில் வேதனை, இந்த பகுதிகளில் சில்லிடல் மற்றும் மரத்து போதல், முக வாட்டம், மூச்சு திணறல் போன்ற குணங்கள் காணும்.

4) முக்குற்ற மார்பு நோய் :
இந்நோயில்மார்பில் குத்துவது போன்ற வலி எரிச்சல், மார்பு பளுவாக இருத்தல், நீர் வேட்கை, மயக்கம், கீல்களில் வீக்கம், சுரம், தலைவலி போன்ற குணங்கள் காணும்.

5) கிருமி மார்பு நோய் :
இந்நோய் வயிற்றில் உண்டாகும் கிருமிகள் சிலவேளைகளில் மார்பு வரையில் வந்து உலவுவதால் உண்டாகும். இதில் மார்பில் துடிதுடித்து அதறல், வீக்கம், அதிக நமைச்சல், அதிர்ச்சி,கண்கள் பஞ்சடைதல், இருமல், கோழை, மூச்சு தடுமாறல், முகமும் கண்களும் கறுத்தல் போன்ற குணங்கள் காணும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக