வெள்ளி, 25 செப்டம்பர், 2020

ரோக நிதானம் - குருதி அழல் / இரத்த பித்தம்

            இந்நோய் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிப்பதாலும், இரத்தத்தில் பித்தத்தின் அளவு அதிகரித்து இரத்தம் கெடுவதாலும் உண்டாகிறது. இந்நோயில் இரத்தம் கண், காது, மூக்கு, வாய், ஆசனவாய், நீர்த்தாரை, யோனி ஆகிய வழிகளில் வெளியேறும். இந்நோய் 8 வகைப்படும்.

குருதி அழல் நோய் உண்டாகக் காரணங்கள் :
  1. உள்ளுறுப்புகள் சீர்குலைந்து, வறண்டு, வெதும்பி இரத்தம் கெடுதல்
  2. அதிக வியர்வையால் உடல் வலிமை குறைந்து பித்தம் அதிகரித்தல்
  3. அதிக காரம், உப்பு, புளிப்பு உணவுகளை உண்ணுதல்
  4. உஷ்ணம் / குளிர்ந்த உணவுகளை அதிகமாக உண்ணுதல்
  5. வெயிலில் அதிகமாக அலைந்து திரிதல்
  6. அதிக நடை, அதிக புணர்ச்சி

குருதி அழல் நோயின் பொதுக்குணங்கள் :

            இருமல், குளிர்ச்சியும் புளிப்பும் கலந்த உணவில் விருப்பம், வாந்தி, தலைபாரம், வாய் சிவத்தல், பித்த வாந்தி அல்லது இரத்த வாந்தி, உடல் நலிவடைதல், இருமல், வாந்தி, இரைப்பு, செரியாமை, உடல் எரிச்சல், உடல் வெளுத்தல், உணவில் வெறுப்பு, பெருமூச்சு, அதிக தாகம், விக்கல், கை கால் முகம் வீங்குதல், நடுக்கம், இருமும்போதும் வாந்தியின்போதும் இரத்தம் வருதல், கண், காது, மூக்கு, வாய், ஆசனவாய், யோனி, நீர்த்தாரையில் இரத்தம் வருதல் போன்ற குணங்கள் உண்டாகும்.

குருதி அழல் நோயின் வகைகள் :
1) வாத குருதி அழல் :
இந்நோயில் நுரையுடன் இரத்தம் கறுத்து வெளியாதல், உடலில் வலி, மலம் கட்டுதல், மலம் கழிக்கும்போது வலியுடனும், குருதி கலந்தும் வெளிப்படும்.

2) பித்த குருதி அழல் :
இந்நோயில் இரத்தம் சருகு ஊறிய நீரின் நிறத்தில் வெளியாகும். உடல் வெளுத்து மஞ்சள் நிறத்தில் இருக்கும். கண், நாக்கு, தோல் ஆகியவை பசுமை கலந்த மஞ்சள் நிறத்திலும் காணும்.

3) ஐய குருதி அழல் :
இந்நோயில் இரத்தம் வெளுத்து, கோழையுடன் சேர்ந்தும், நாற்றத்துடனும் வெளிப்படும். மேலும் ஓயாத இருமல், அற்பசுரம், மூக்கில் நீர் வடிதல் எனும் குணங்கள் காணும்.

4) வாதபித்த  குருதி அழல் :
இந்நோய் வாத மற்றும் பித்த குருதி அழலின் குணங்களைக் கொண்டது.

5) வாதகப குருதி அழல் :
இந்நோய் வாத மற்றும் ஐய குருதி அழலின் குணங்களைக் கொண்டது.

6) கபவாத குருதி அழல் :
இந்நோய் ஐய மற்றும் வாத குருதி அழலின் குணங்களைக் கொண்டது.

7) கபபித்த குருதி அழல் :
இந்நோய் ஐய மற்றும் பித்த குருதி அழலின் குணங்களைக் கொண்டது.

8) முக்குற்ற குருதி அழல் :
இந்நோய் வாத - பித்த - ஐய குருதி அழலின் குணங்களைக் கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக