திங்கள், 28 செப்டம்பர், 2020

ரோக நிதானம் - செரியாமை / அசீரணம்

            உண்ட உணவானது செரிக்காமல் வயிற்றில் தங்கி பேதி, ஏப்பம், வயிறு ஊதல், வாந்தி, விக்கல் எனும் குணங்களைக் காட்டுவது செரியாமை எனப்படும். இது 9 வகைப்படும்.

செரியாமை நோய் வரக் காரணங்கள் :

எளிதில் செரிக்காத உணவுகளாகிய கொழுப்பு, இறைச்சி, மீன், கிழங்கு, கடலை, மொச்சை இவற்றை அளவுக்கு மிஞ்சி உண்பதாலும், ஊசிய உணவு வகைகள் மற்றும் பழைய உணவுகளை அதிகமாக உண்பதால் வயிற்றில் புளிப்பு மிகுந்து உணவை செரிக்கும் அமிலம் தன்வலிமை இழந்து உணவு செரிமானம் ஆகாமல் போகும். மேலும் நிலம் குளிர்ச்சியடைவதல் அல்லது குளிர்ந்த பகுதிகளில் இருப்பவர்களுக்கு உண்டாகும் மந்தம், தூக்கமின்மை, மனக்கலக்கம், பேராசை, பயம் முதலிய காரணங்களாலும் இந்நோய் உண்டாகும்.

செரியாமை நோயின் பொதுக்குணங்கள் :

            வயிறு உப்புதல், வயிறு இரைதல், தொடர் ஏப்பம், அடிக்கடி விக்கல், தொண்டையில் உப்பு கரித்தல், வயிற்றிலுள்ள நீர் எதிரெடுத்தல்

செரியாமை நோயின் வகைகள் :

1. வாத அசீரணம் :
இந்நோயில் உடல் இளைத்தல், தாகம், வயிற்றில் பசிமந்தம் எனும் குணங்கள் காணும்.

2. பித்த அசீரணம் :
இந்நோயில் உடல்சூடு அதிகரித்தல், தாகம், சோர்வு, புளித்த ஏப்பம் என்னும் குணங்கள் காணும்.

3. ஐய அசீரணம் :
இந்நோயில் வாயில் நீர் ஊறல், வயிற்றில் வலியுடன் சிரமம், உடல் கனத்து வலி, கண்கள் - தாடை இவற்றில் அதைப்பு, அடிக்கடி ஏப்பம் எனும் குணங்கள் காணும்.

4. பித்த - ஐய அசீரணம் :
இந்நோயில் உண்ணும் உணவு வாந்தியாதல், உடலும் நாவும் வறளல், ஏப்பம், உடல் எரிச்சல், கழுத்தில் வியர்த்தல், உடல் திடீரென்று குளிரல் எனும் குணங்கள் காணும்.

5. வாத - பித்த அசீரணம் :
இந்நோயில் புளித்த ஏப்பம், உணவு வாந்தியாதல், வயிறு உப்பல், வயிறு இரைந்து புளித்த பேதி, முகம் கருத்தல், உடல் வாடல், மயக்கம், தாகம் எனும் குணங்கள் காணும்.

6. கப - வாத அசீரணம் :
இந்நோயில் உடல் முழுதும் நோதல், கோழை உண்டாதல், உடலும் கண்களும் வெளுத்தல், நுரையாக பேதியாதல், வெளுத்த வாந்தி, இருமல், பொய்ப்பசி எனும் குணங்கள் காணும்.

7. நாட்பட்ட அசீரணம் :
இந்நோயில் உண்ட உணவு வயிற்றிலேயே தங்கி கனத்து நாள்பட்ட மந்தமாக இருக்கும்.

8. விருப்ப அசீரணம் :
இந்நோயில் உண்ணும் உணவு செரிக்காமல் புளித்த ஏப்பம்,  வயிற்றில் இரைச்சல், வயிறு பொருமல், வயிற்றில் வலி எனும் குணங்கள் காணும்.

9. வல்லுணவு அசீரணம் :
இந்நோயில் வாந்தி, மயக்கம், நினைவு அழிதல், நாக்கு - கண் - மூக்கு - உடல் எனும் இவைகள் கருத்தல், உடல் உலர்தல், உணவு மற்றும் நீரின் மீது வெறுப்பு, மலம் வெளுப்பு மற்றும் கறுத்த நிறத்தில் பேதியாதல் எனும் குணங்கள் காணும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக