செவ்வாய், 13 அக்டோபர், 2020

ரோக நிதானம் - மண்ணீரல் (இடப்பாட்டீரல்) நோய்

            மண்ணீரல் தன் அளவில் இருக்காமல் நாளுக்குநாள் பெருத்துக் கொண்டே வந்து உடலின் இரத்த அளவைக் குறைப்பது மண்ணீரல் நோய் எனப்படும். இது 4 வகைப்படும்.

மண்ணீரல் நோய் வரக் காரணங்கள் :
  1. உணவில் பால், நெய், எண்ணெய் இவைகளை அளவுக்கதிகமாக உண்ணுதல்
  2. வயிறு நிறைய உண்டவுடன் ஆடல், பாடல், குதித்தல், நீந்துதல்
  3. உடலுக்கு ஆகாத குருதியை கெடுக்கும் உணவை உண்ணுதல்
  4. குளிர்க் காய்ச்சல், பாண்டு, சுரம் போன்ற நோய்களின் தாக்கம்
  5. கழிச்சல் மருத்துகளை அடிக்கடி எடுத்தல்
  6. உண்டவுடன் உறங்குதல்

மண்ணீரல் நோயின் பொதுக்குணங்கள் :
            இந்நோயில் வாயில் சுவையறிய இயலாமை, குமட்டல், உணவில் வெறுப்பு, வாந்தி, வயிறு பொருமல், உடல் சூடு அதிகரித்தல், வயிறு பெருத்து உடல் இளைத்துக் கொண்டே வருதல், மேலும் உடல் கறுத்துக் காணுதல், மண்ணீரல் பெருத்துக் கொண்டே வருதல், வயிற்றில் பளு மற்றும் வலி, உணவு செரியாமை, வயிற்றில் நீர் கோர்த்து கொள்ளுதல்.

மண்ணீரல் நோயின் வகைகள் :
1) வாத மண்ணீரல் நோய் :
இந்நோயில் பொதுக் குணங்களோடு வயிற்றின் மேல் குருதிக் குழல்கள் புடைத்துப் பச்சை நிறத்தில் காணுதல், கைகால் சோம்பல், மலம் சிறுநீர் சுருங்குதல் எனும் குணங்கள் காணும்.

2) பித்த மண்ணீரல் நோய் :
இந்நோயில் பொதுக் குணங்களோடு வாந்தி, குமட்டல், மயக்கம், தலை சுற்றல், கழிச்சல் போன்ற குணங்கள் காணும்.

3) ஐய மண்ணீரல் நோய் :
இந்நோயில் பொதுக் குணங்களோடு உடல் வலிமை குறைந்து நிணநீர் குழாய்களின் முடிச்சுகள் வீங்கித் திரண்டு கட்டிகளைப் போலக் காணும்.

4) முக்குற்ற மண்ணீரல் நோய் :
இந்நோயில் முன்சொன்ன மூன்று குணங்களும் கலந்து தோன்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக