ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

ரோக நிதானம் - அம்மை / வைசூரி

            “அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது” எனும் கொள்கைக்கு ஏற்ப சீதோஷ்ண நிலையின்  மாறுபாட்டால், நமது உடலின் தட்பவெட்ப மாறுதலால் இந்நோய் உண்டாகிறது. அது எவ்வாறெனில் கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கத்தால் உடல் அதிக சூடாகி பித்தம் மாறுபாடு அடைகிறது. அந்நேரத்தில் கோடைமழையின் போது கபமும் சேர்ந்து கேட்டு உடலில் மாறுபாடு அடைந்த “பித்தகபத்தால்” இந்நோய் உண்டாகிறது. அதேபோல மழைக்காலத்தில் வெப்பம் அதிகமானால் முதலில் கபம் கேடடைந்து பின் பித்தமும் பாதித்து “கபபித்த” மாறுதலால் இந்நோய் உண்டாகிறது. இது 14 வகைப்படும். இவை தவிர வேறு சில வகைகளும் நடைமுறையில் உள்ளது.

அம்மை நோயின் பொதுக்குணங்கள் :

திடீர் சுரம், உடல்வலி, தலைவலி, இடுப்பில் உளைச்சல், தலைபாரம், உடலில் எரிச்சல் தும்மல், வாந்தி, மூக்கில் நீர் வடிதல் எனும் குணங்கள் தோன்றி முத்துகள் போல சிறிதும், பெரிதுமாக கட்டிகள் எழும்பி உடல் முழுதும் பரவும். பிறகு மலம் கட்டுதல் அல்லது பேதி, தொண்டைவலி, அறிவு தடுமாறல், பிதற்றல், மயக்கம், உணவுண்ண இயலாமை, எனும் குணங்களுடன் இந்தக் கட்டிகள் பெருத்து நீர் கொண்டு, கொப்புளமாகி, வெளுத்து, உடைந்து, பக்கு வைத்து ஆறி இயல்பு நிலைக்கு வரும். அப்போது வாயுலரல், கீல்களில் தளர்ச்சி, உடல்சோர்வு, மயிர்க்கூச்சம், கொப்புளங்கள் ஒன்பது நாள் இருக்கும்.

அம்மை நோயின் வகைகள் :

1) வாயம்மை :
இந்நோயில் வாயில் சிறு கொப்புளங்கள் உண்டாகி உணவு உண்ண முடியாத நிலை ஏற்படும்.

2) கோணியம்மை :
இந்நோய் கோணியில் உறங்கும்போது உடல் முழுவதும் சிவந்து உண்டாகும்.

3) பனைமுகரியம்மை :
இந்நோயில் மிதமான சுரம் காய்ந்து உடல் கடுக்கும். கண் சிவந்து எரிச்சல், கழுத்து வீங்கும், சன்னி, பிதற்றல், பெண்களுக்கு பெரும்பாடும் தோன்றும்.

4) பாலம்மை :
இந்நோயில் கடும் சுரமுடன் மூன்று நாளில் தலையில் கட்டிகள் தோன்றி, உடல் கடுக்கும். 7-ம் நாளில் நீர் கோர்த்து,9-ம் நாளில் இறங்கும். 15-ம் நாளில் தலை முழுகலாம்.

5) வரகுதரியம்மை :
இந்நோயில் அதிக சுரமுடன் 3-ம் நாளில் தலையில் கட்டைகள் தோன்றும். வாயிலும், நீர்த்தாரையிலும் குருதி கண்டு, 7-ம் நாளில் நீர் கட்டி, 11-ம் நாளில் இறங்கும்.

6) கொள்ளம்மை :
இந்நோயில் சுரம், சன்னி, பிதற்றல், வலிப்பு கண்டு, 3-ம் நாளில் தலையில் கட்டிகள் தோன்றி, 13-ம் நாளில் இறங்கும்.

7) கல்லுதரியம்மை :
இந்நோயில் கடும் சுரம், வாந்தி, பேதி கண்டு 3ம் நாளில்தலையில் கட்டி தோன்றி, 7ம் நாளில் சங்கம்பழம் போல நீர் கட்டி, 10ம் நாளில் இறங்கும். 11ம் நாளில் தலை முழுகலாம்.

8) கடுகம்மை :
இந்நோயில் சுரமடித்த 3-ம் நாளில் தலையில் கடுகு போல கட்டிகள் தோன்றி உடலெங்கும் பரவி, வீக்கம், பேதி, சிறுநீர் சுருங்கல், சிறுநீருடன் குருதி வெளியாதல், குரல்கம்மல் எனும் குணங்கள் தோன்றி, 13ம் நாளில் குணமாகும்.

9) மிளகம்மை :
இந்நோயில் சிறுசுரமாக தோன்றி உடல் வீங்கி கடுக்கும், இடுப்பு விளங்காது, கீல்களில் வீக்கம் மற்றும் வலி, உடல் வலிமை குறைதல் எனும் குணங்கள் உண்டாகி 7ம் நாளில் கட்டிகள் தோன்றும்.

10) உப்புதரியம்மை :
இந்நோயில் சுரம் கண்டு 3ம் நாளில் தலையில் கட்டிகள் தோன்றி உடல் முழுதும் உப்பு போலிருக்கும். 5ம் நாளில் நீர் கட்டி 7ம் நாளில் வடியும். 11ம் நாளில் தலை முழுகலாம்.

11) கரும்பனசையம்மை :
இந்நோயில் சுரம் கண்ட 4ம் நாளில் தலையில் கட்டிகள் தோன்றி, உடல் முழுதும் குத்திக் கருகும். பேதி, மயக்கம், மலம் கட்டி 13ம் நாளில் வடியும், உடல்முழுதும் விரிந்து, இரணமாகி கிருமி உண்டாகும். நினைவின்றி, மேல்மூச்சு வாங்கும். 21 நாளில் குணமாகும்.

12) வெந்தய அம்மை :
இந்நோயில் சுரம் கண்ட 3ம் நாளில் தலையில் கட்டி தோன்றி, 7ம் நாளில் நீர் கட்டி, 9ம் நாளில் வடியும். 15ம் நாளில் தலை முழுகலாம்.

13) பாசிப்பயற்றம்மை :
இந்நோயில் சுரமும், பிதற்றலும் கண்டு, 3 நாளில்  தலையில் கட்டிகள்தோன்றி, 7ம் நாளில் நீர் கட்டி, 9ம் நாளில் வடியும். 17ம் நாளில் தலை முழுகலாம்.

14) விச்சிரிப்பு அம்மை :
இந்நோயில் சுரம், கண் சிவத்தல், வாந்தி, பேதி காணும். 3ம் நாளில் தலையில் கட்டிகள் தோன்றி, உடல் முழுதும் உமி போல வாரியிட்டு மறையும், வயிறு உளையும். 7ம் நாளில் தலை முழுகலாம்.

15) நீர்க்குளுவன் அம்மை :
இந்நோயில் சுரம் கண்டு 3ம் நாளில் சங்கம்பழம் போல தோன்றி, 7ம் நாளில் இறங்கும். 9ம் நாளில் தலை முழுகலாம்.

16) தவளையம்மை :
இந்நோயில் சுரம் கண்டு நடக்க முடியாமல் சூலை போல வலிக்கும். உணவு செல்லாது. 3ம் நாளில் தலையில் கட்டிகள் தோன்றி, 9ம் நாளில் இறங்கும். 11ம் நாளில்  தலை முழுகலாம்.

17) பெரியம்மை :
இந்நோயில் அதிக சுரம் கண்டு, மூக்கில் நீர் வடிதல், தும்மல், தலைவலி, கீல்களில் வலி, முதுகு வலி, வாந்தி, கண் சிவத்தல் எனும் குணங்கள் தோன்றி, 3ம் நாளில் கட்டிகள் தோன்றி, 7ம் நாளில் குளிர்சுரமும், தாகமும் உண்டாகும். இந்நோய் 15 அல்லது 16 நாட்களில் குணமடையாவிட்டால் நோயின் தாக்கத்தால் பித்தம் கேடடைந்து இரத்தத்தை கெடுத்து மரணத்தை விளைவிக்கும்.

18) சிறியம்மை :
இந்நோயில் தலைவலி, சிறுசுரம், சோம்பல், முதுகுவலி போன்ற குணங்கள் தோன்றி, 3ம் நாளில் கழுத்து , மார்பு பகுதிகளில் கட்டிகள் தோன்றி, நீர் கட்டி, ஒரு வாரத்திற்குள் இறங்கும்.

19) தட்டம்மை :
இந்நோயில் தும்மல், இருமல், கண் சிவத்தல், கண் எரிச்சல், மூக்கில் நீர் வடிதல், கண் ரெப்பை வீங்குதல், வாய் சிவந்து புன்னாதல், உணவருந்த இயலாமை, நீர் பேதி, உடல் இளைத்தல், சுரம் எனும் குணங்கள் தோன்றி, 3ம் நாளில் கட்டிகள் தோன்றும். 10 நாட்களுக்குள் இறங்கும்.

20) பூட்டுத்தாளம்மை (புட்டாளம்மை) :
இந்நோயில் சுரம் காய்ந்து தாடை (தாள்) மற்றும் கீல்களில் (பூட்டு) பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்நோயில் சுரம் காய்ந்து தாடையின் பூட்டுகள் மற்றும் கழுத்தின் பக்கவாட்டில் கட்டிபோல வீங்கி சிவந்து காணும். இதனால் வாயை திறக்க முடியாத நிலை உண்டாகும். மேலும் சிலருக்கு விரையும் சேர்ந்து வீங்கும். பெண்களுக்கு முலைகள் வீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக