சனி, 12 செப்டம்பர், 2020

ரோக நிதானம் - சந்நிபாதம் / சன்னி (Convulsion)

            ஏதேனும் ஒரு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு வாத, பித்த, கபம் எனும் மூன்று நாடிகளும் ஒருசேர தன்னளவில் அதிகரித்து பல்வேறு பாதிப்புகளைச் செய்தால் அதைச் சந்நிபாதம் அல்லது சன்னி என்று கூறுவார். பொதுவாகச் சன்னி நோய்களின் வகைகள் 13 என்று கூறினாலும் பல்வேறு நூல்களை ஆராயும்போது நமக்கு 20க்கும் மேற்பட்ட சன்னி வகைகள்பற்றிய விவரங்கள் கிடைக்கிறது.

சந்நிபாதம் பொதுக்குணங்கள் :
  1. கண்கள் சிவத்தல் அல்லது பசுமை நிறத்தில் இருத்தல்
  2. கழுத்து - நெற்றி - மார்பு பகுதிகளில் வியர்த்தல்
  3. உடல் வலி - எரிச்சல் - மயிர்க்கூச்சம்
  4. தயக்கம் - இருமல் - வீக்கம்
  5. சுரம் - பிரமை - பிதற்றல்

சந்நிபாத நோய் உண்டாகக் காரணங்கள் :
  1. வாத - பித்த - கப குற்றத்தை அதிகரிக்கும் உணவுகளைத் தொடர்ந்து உண்ணுதல்
  2. மற்ற நோய்களால் பாதிக்கப்பட்ட காலத்தில் பத்திய மீறல்
  3. அகால நேரத்தில் எண்ணெய் தேய்த்து தலை முழுகுதல்
  4. ஆண் - பெண் தகாத உறவு
  5. கட்டி, தீப்புண், பலத்த காயம்
  6. பிரசவ காலத்தில் ஏற்படும் சுரம்

சந்நிபாத நோயின் வகைகள் :

1) வாத சன்னி :
இந்நோயில் வாதம் அதிகரிப்பதால் தலை நடுக்கல், பற்களைக் கடித்தல், சீறிவிழுதல், இருமல், கைகால்களை தூக்கிப் போடல், முகம் மற்றும் கண்கள் மினுமினுத்தல், மார்பு துடித்தல், நாவறட்சி, விடாத சுரம், பிரமை, உடல் தளர்ச்சி, உளைச்சல், நடுக்கம், தாகம், வாயில் கசப்பு தோன்றல், நா கறுத்தல், மூக்கில் நாற்றம், பெருமூச்சு, கழிச்சல், பெருமூச்சு, வயிறு நொந்து உளைதல் எனும் குணங்கள் காணும்.

2) பித்த சன்னி :
இந்நோயில் பித்தம் அதிகரிப்பதால் உடல் குளிர்தல், மயக்கம், பேசாது இருத்தல், சோர்வு, தளர்வு, கண் - தலை - செவி மந்தமடைதல், தாகம், அதிக சுரம், கழிச்சல், விக்கல், வாந்தி, வியர்வை, மேல்மூச்சு போன்ற குணங்கள் காணும்.

3) கப சன்னி :
இந்நோயில் கபம் அதிகரிப்பதால் கைகால்கள் சில்லிடல், உடல் தளர்தல், சோர்வு, உடல் வலி, அறிவு குலைதல், நாடுகள், மேல்மூச்சு, கண்கள் விரித்து நிலை குத்திப் பார்த்தல், நாடியில் தளர்வு, மயிர் சிலிர்த்தல் எனும் குணங்கள் காணும்.

4) கீல்வாத சன்னி :
இந்நோயில் வாத - கபம் மீறுவதால் கீல்களில் வலி, வீக்கம், கைகால்களை நீட்டவும், மடக்கவும் இயலாமை, மயக்கம், இருமல், பெருமூச்சு, தொண்டையில் கோழை, வயிற்றுவலி, குளிர், அதிசுரம், மயக்கம் எனும் குணங்கள் காணும்.

5) அந்தக சன்னி :
இந்நோயில் அதிக சோர்வு, மந்தம், விக்கல், வயிறு உப்புசம், உடல் நடுக்கம், தலை சுற்றல், நாடியில் தளர்வடைந்து உயிர் பிரியும். (அந்தகன் - எமன்).

6) உடல்கடுப்பு சன்னி :
இந்நோயில் உடல் முழுதும் கடுத்து, எரிச்சலுடன் சோர்வு, தூக்கமின்மை, உதடு உலர்தல், பேதி, நெற்றியில் வியர்த்தல் எனும் குணங்கள் காணும்.

7) சித்தவிப்பிரம சன்னி :
இந்நோயில் சித்தம் மயங்கி, பயத்துடன் விழித்தல், நினைவு மாறுதல், வாதபித்த தோஷங்கள் அதிகரித்து உயிர் பிரியும்.

8) சீதள சன்னி :
இந்நோயில் உடல் முழுதும் குளிர்ந்து, உடல் வலி, குரல் கம்மல், பேதி, ஒக்காளம், விக்கல், மூர்ச்சை, நடுக்கல், புலம்பல் எனும் குணங்கள் காணும்.

9) தாந்திரீக சன்னி :
இந்நோயில் உடலின் பலம் குறைந்து பெருமூச்சு, புகைந்து இருமல், பிதற்றல், தொண்டையில் தினவு, நாமுள், வயிறு உளைந்து கழித்தல் எனும் குணங்கள் காணும்.

10) கண்ட குருக்கல் சன்னி :
இந்நோயில் காதுவலி, கழுத்தில் முள் சொருகியது போல வலி, தலை வளைதல், பயம், திடுக்கிடல், விக்கல், வாந்தி, இருமல் எனும் குணங்கள் காணும்.

11) செவிமூல சன்னி :
இந்நோயில் காதில் வலி, வீக்கம், காதுகேளாமை, வாய்ப்புண், நாகறுத்தல், தலை கனத்து அரற்றல் எனும் குணங்கள் காணும்.

12) கண்ணிடுக்கு சன்னி :
இந்நோயில் கண்கலங்கி, சிவந்து இடுக்குதல், கண் இமைகள் ஒட்டிக் கொள்ளுதல், தொடை, கீல்கள், எலும்புகளில் அதிக வலி, வாத இழுப்பு எனும் குணங்கள் காணும்.

13) இரத்த வாந்தி :
இந்நோயில் வாந்தியில் கோழையுடன் இரத்தம் கலந்து வெளியேறும்.

14) பிரலாப சன்னி :
இந்நோயில் உடல் எரிச்சல், வலி, மயக்கம், பிதற்றல், மயிர்க்கூச்சம் எனும் குணங்கள் காணும். (பிரலாபம் - பிதற்றல்)

15) நாவாத சன்னி :
இந்நோயில் நா கறுத்து, வறண்டு, முள்போல் இருக்கும்.

16) முப்பிணி சன்னி :
இந்நோயில் வாத - பித்த - கப தோஷங்கள் மூன்றும் ஒருசேர அதிகரித்து ஐம்புலன்களையும் தாக்கி 15 நாட்களுக்குள் கொல்லும்.

17) நிப சன்னி :
இந்நோயில் அறிவு  முற்றிலும் மங்கிப் போயிருக்கும்.

18) சோக சன்னி :
இந்நோயில் பெண்களுக்கு நாபியிலும், மூலத்திலும் நின்று நாதம் தீய்ந்து, பெண்ணுறுப்பை  வீங்கச் செய்யும்.

19) மோகன சன்னி :
இந்நோயில் சன்னியின் பொதுக்குணங்களோடு உடல் நைந்து போய், உயிர் பிரியும்வரை தெளிவுடன் இருப்பதைப் போன்ற குணத்தை உண்டாக்கும்.

20) நஞ்சு சன்னி :
இந்நோய் பாம்பின் விஷம்போல உடலில் பரவித் தீவிரமாகும்.

21) தீச்சன்னி :
இந்நோயில் கண்கள் சிவத்தல், அதிக சுரம், மூச்சு குறைதல்,  நாவறட்சி, விழிசுழலல், வார்த்தை தடுமாறல் எனும் குணங்கள் காணும்.

22) மந்த சன்னி :
இந்நோயில் சன்னியின் பொதுக்குணங்களோடு பசிமந்தம், செரியாமை, புளியேப்பம், வயிறு பொருமல் எனும் குணங்கள் காணும்.

23) சண்ட சன்னி :
இந்நோயில் சன்னியின் பொதுக்குணங்கள் தோன்றி நோய் நீங்குவது போலக் காண்பித்து உயிரைப் பறிக்கும்.

24) இயற்கை இரணசன்னி :
இந்நோய் உடலில் தோன்றும் வெம்மையால் பருக்கள் தோன்றி, உடைந்து காய்ந்து, அதன் சீழ் உடலில் ஊறி சன்னியை உண்டாக்கும்.

25) செயற்கை இரணசன்னி :
இந்நோய் வலி பொருந்திய காயத்தினால் புண் உண்டாகி, மருந்துகளால் குணமாகாமல், சீழ் பிடித்துப் புரையோடி, அதிக வேதனையோடு சன்னி சுரத்தை உண்டாக்கும்.

26) சுக சன்னி :
இந்நோய் வயிறு மந்தமாக இருக்கும்போது எண்ணெய் தேய்த்துத் தலை முழுகியபின், தயிரும் சோறும் சேர்ந்து உண்ட பிறகு, பெண்ணுடன் சேர்வதால் வாயு அதிகரித்து சன்னி உண்டாகும்.

27) பிரசவ சன்னி :
இந்நோய் பிரசவ காலத்தில் உண்டாகும் சுரத்தால் உண்டாகும்.

28) சூதக சன்னி :
இந்நோய் மாதவிலக்கு காலத்தில் பெண்களுக்கு உண்டாகும்.

29) தாகபூர்வ சன்னி :
இந்நோயில் பித்தம் மிகுந்து அதிக எரிச்சலுடன் சுரம் உண்டாகி, பின் வாத - கபத்தின் இயல்பால் சீதளம் (குளிர்) கண்டு சன்னி காணும். (தாகம் - எரிச்சல்).

30) சீதபூர்வ சன்னி :
இந்நோயில் வாத மற்றும் கபத்தின் மிகுதியால் சீதளம் உண்டாகி பிறகு பித்தத்தின் இயல்பால் எரிச்சலுடன் சுரமுண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக