செவ்வாய், 1 செப்டம்பர், 2020

ரோக நிதானம் - ஈளை / சுவாசகாசம் (Asthma)

            இந்நோய் கபத்தின் குற்றத்தால் உண்டாகும் நோய்களில் ஒன்றாகும். இந்நோயில் மார்பிலும், தொண்டையிலும் சேர்ந்த கோழையானது வெளியேறும்போது ஓசையுடன் வெளியேறுவதை இருமல் அல்லது ஈளை என்று சித்த மருத்துவ நூல்கள் கூறுகிறது. இந்நோய் 13 வகைப்படும்.

ஈளை நோய் வரக் காரணங்கள் :

  1. குளிர் காற்று - அதிக வெயிலில் இருத்தல்
  2. அதிக சூடான - குளிர்ச்சியான பொருளை உண்ணுதல்
  3. சத்தமாகக் கத்துதல் - பாடுதல்
  4. புழுதி, சுண்ணம், பூநீறு, புகை, அதிக காரம், நறுமணம், துர்நாற்றம் உள்ள பொருட்களை முகர்தல்
  5. இளைப்பு, இரைப்பு, நுரையீரல் புற்று, இதயம் சார்ந்த நோய்களின் தாக்கம்
  6. புகைப்பிடித்தல், கஞ்சா, மதுப்பழக்கம்
  7. நாக்குப்பூச்சி முதலிய கிருமித் தொற்று

ஈளை நோயின் வகைகள் :

1) வாத ஈளை :

இந்நோயில் தொண்டையில் புண்பட்டதுபோலச் சிவத்தல், காதுநோய், காதடைப்பு, மார்புநோய், மூச்சு வாங்கவும் - விடவும் முடியாமை, தொண்டையை அடித்ததுபோல வலி, பெருமூச்சுவிடல், விலாவில் வலி, வாய் ஓயாத இருமல், நுரையுடன் கறுநிறத்தில் கோழையை உமிழச் செய்தல், வாந்தி எனும் குணங்கள் தோன்றும்.

2) பித்த ஈளை :

இந்நோயில் ளிர்ந்த பொருட்களை உண்பதால் இருமல் உண்டாகி, தலைவலி, உடல்வலி, சுரம், தாகம், இருமி இரத்தம் கக்கல், உடல் வறண்டு இளைத்தல், உணவில் வெறுப்பு, மயக்கம், புளியேப்பம், மனம் தடுமாறல் எனும் குணங்கள் தோன்றும்.

3) கப ஈளை :

இந்நோயில் முகம் ஊதல், மூக்கில் நீர் வடிதல், தொண்டையில் புண், வாய் ஓயாது இருமல், மார்பு நொந்து இருமல், கோழை வெளுத்துச் சீழ் போல வெளியேறுதல், பெருமூச்சு, அடிவயிறு நோதல், வயிற்றில் காற்று நிரம்பல், சுரம், மனக் கலக்கம், உடல் இளைத்தல், வாந்தி, உடல்வலி, அடிவயிறு நோதல் எனும் குணங்கள் தோன்றும்.

4) வாதபித்த ஈளை :

இந்நோயில் தொண்டை உலர்ந்து புண், வாய் ஓயாது இருமி இரத்தம் வெளியாதல், காதடைப்பு, காதிரைச்சல், செரியாமை, பேதி, வயிறு உப்பல், மார்பு நோய், மார்பு எலும்பு - முதுகுத்தண்டில் வலி, மூச்சு படபடத்தல் எனும் குணங்கள் தோன்றும்.

5) பக்கமந்தார ஈளை :

இந்நோயில் இடுப்புவலி, மூக்கில் நீர் வடிதல், தொண்டை கம்மல், வயிறு பொருமல் எனும் குணங்கள் தோன்றும்.

6) சுடர் ஈளை :

இது பிள்ளை பெற்ற பின் தாய்க்கு வரும் நோய். இந்நோயில் தொண்டை - மார்பு - மூக்கில் குத்தல், மூக்கில் நீர் வடிதல், நீர்வேட்கை, சுரம், இடைவிடாத இருமல், இழுப்பு, பெருமூச்சு, கண்கள் சிவந்து முட்டுதல் எனும் குணங்கள் தோன்றும்.

7) இழுப்பு ஈளை :

இந்நோயில் மூக்கிலிருந்து வெளியாகும் காற்றில் அனல் வீசும், தொண்டை கட்டி மூச்சு எலி கத்துவது போல இருத்தல், மார்பில் கோழை கட்டி இருமல், வயிறு உப்பல், உணவு செரியாமை, நோய் முற்றிய நிலையில் மூச்சு பாம்பு சீறுவது போல இருத்தல் எனும் குணங்கள் தோன்றும்.

8) இரத்த ஈளை :

இந்நோயில் தொண்டையில் வலி, குரல் கம்மல், வாந்தியில் கோழையும், குருதியும் கலந்து வருதல், வயிறு நோதல், கைகால் ஓய்ச்சல், மார்பிலும் விலாவிலும் ஊசியால் குத்துவது போல வலி, தாகம், குரல் மாற்றம், நெஞ்சில் குறுகுறு சத்தம், பெருமூச்சு எனும் குணங்கள் தோன்றும்.

9) பீனிச ஈளை  :

இந்நோயில் கோழை கோழி இறைச்சி நாற்றத்துடன் வெளியேறுதல், சோர்வு, இரைப்பு, உடல் இளைத்தல், மலமும் சிறுநீரும் கருநிறம் அடைதல், உணவு செல்லாமை, வயிறு பொருமலுடன் வலி, மூக்கில் நீர் வடிதல், உடல் குளிர்தல் எனும் குணங்கள் தோன்றும்.

10) மருந்தீடு ஈளை :

இந்நோய் ஈடு மருந்தால் உண்டாகும். இந்நோயில் உடல் மெலியும், தொண்டை புண், வாய் ஓயாத இருமல், வாய் நாற்றம், தலை கிறுகிறுப்பு, மயக்கம், அதிகபசி எனும் குணங்கள் தோன்றும்.

11) கஞ்சா ஈளை :

இந்நோய் கஞ்சா, அபின், புகையிலை முதலிய பொருட்களைப் பயன்படுத்துவதால் தொண்டை, மூச்சுக்குழாய், நுரையீரல் எனும் உறுப்புகள் வெதும்பி உண்டாகிறது. இந்நோயில் உடல் மெலிந்து, இருமல் தீராமல் நிலைத்து இருக்கும். நாட்கள் செல்லச் செல்ல இருமலும், கோழையும் அதிகமாகி, கோழையானது கறுத்து கெட்டியாக வெளியாகும்.

12) மது ஈளை :

இந்நோய் கள், சாராயம் ஆகியவற்றை அதிகமாக அருந்துவதால் உண்டாகிறது. இந்நோயில் உடல் வலிமை குறைந்து, தொண்டை, ஈரல் முதலியன வெதும்பி இருமல் உண்டாகும். மேலும் இடைவிடாது இருமல், மேல்மூச்சு, சோர்வு, இளைப்பு எனும் குணங்கள் தோன்றும்.

13) சுர ஈளை  :

இந்நோய் நாட்பட்ட சுரத்தால் உடல் மெலிந்த நிலையில் உண்டாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக