ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

ரோக நிதானம் - குரல் கம்மல் நோய்

            இந்நோயில் பேசும்போது குரலொலி இயற்கையாய் இல்லாமல் தாழ்ந்தும், சில நேரங்களில் சத்தமில்லாமலும், கீச்சுக்குரலாகவும் இருக்கும். மேலும் தொண்டையில் ஏதோ பூசியது போலத் தொண்டை உலர்ந்து, இருமித் தொண்டை இறுக்கியது போல இருக்கும். இதன் காரணமாக இந்நோய் குரல் கம்மல் நோய் என்று அழைக்கப்படுகிறது. இது 6 வகைப்படும்.

குரல் கம்மல் நோய் வரக் காரணங்கள் :
  1. அதிக குளிரான காற்றில் இருத்தல்
  2. குளிர்ச்சியான பொருட்களை உண்ணுதல்
  3. தொண்டை புண்ணாகும் அளவில் சூடான நீரை பருகல்
  4. இளைப்பு நோயினால் தொண்டையில் புண்ணாதல்
  5. குரல்வளையில் உள்ள கொழுப்பு மற்றும் சதை வீங்குதல்
  6. மிகவும் சத்தமாகப் பேசுதல் - பாடுதல்
  7. கழுத்தில் அடிபடுதல்
  8. நச்சுப்பொருட்களை உண்ணுதல்

குரல் கம்மல் நோயின் வகைகள் :

1. வாதக் குரல் கம்மல் :
இந்நோயில் வறட்சியான - வழுவழுப்பான பொருட்களை உண்ணுதல், கடும் வெயிலில் திரிதல் போன்ற காரணங்களால் குரல்வளை வறண்டு முள்சொருகியது போல் வேதனையை உண்டாக்கி, குரலில் நடுக்கம் காணப்படும்.

2. பித்த குரல் கம்மல் :
இந்நோய் பித்தத்தை பெருக்கக்கூடிய உணவு வகைகளை உண்பதால் குரல்வளை சிவந்து புண்ணாகி, தொண்டை நொந்து, குரல் சிறுத்து குரல் வளையில் எரிச்சலுடன், வரட்டல், பேச முடியாமை, கம்மிய பேச்சு என்னுங் குணங்களுடையது

3. கப குரல் கம்மல் :
இந்நோய் பனிக்காற்று, குளிர்ந்த பொருட்களை உண்ணுதல் போன்ற காரணங்களால் தொண்டையில் கோழை கட்டி, புண்பட்டு, இருமலுடன் குரல் ஒலியை மங்கச் செய்யும்.

4. திரிதோஷ குரல் கம்மல் :
இந்நோய் நாட்பட்ட நோய்கள் குணமாகும் வேளையில் வாத - பித்த - கப தோஷங்களின் கேடினால் உண்டாவதால் எளிதில் குணமாகாது. இந்நோயில் தொண்டையை இறுக்கிப் பிடித்தது போலப் பேச இயலா நிலை உண்டாகும்.

5. இளைப்பு குரல் கம்மல் :
இந்நோய் இளைப்பு நோயின் தாக்கத்தால் உன் உண்டாகும்.

6. நிணக் குரல் கம்மல் :
இந்நோய் தொண்டையில் சதை வளர்ச்சி அடைவதால் உண்டாகும்.


குரல் கம்மல் நோய் சாத்திய அசாத்தியங்கள் :
வாதம், பித்தம், சிலேஷ்ம, கஷயரோம குரற்கம்மல்கள் சாத்தியம். திரிதோஷமேதோகுரற் கம்மல்கள் அசாத்தியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக