செவ்வாய், 1 செப்டம்பர், 2020

ரோக நிதானம் - இருமல் /இரைப்பு (Cough)

            இது கபம் அதிகரித்தல், அசீரணபேதி, வாந்தி, விஷப்பாண்டு, விடாது சுரம், புகை, காற்று, தானியச்சுனை, அதிசீதள கபம் முதலிய காரணங்களால் உண்டாகும். இதனால் அற்ப சுவாசம், மார்பிலும் விலாப்பக்கங்களிலும் குத்தல், திணறித் திணறி மூச்சு வாங்கல், வயிறு உப்புசம்  எனும் குணங்கள் உண்டாகும். இது ஐந்து வகைப்படும்.

இருமல் நோயின் வகைகள் :
1) சுர இருமல் :
இந்நோயில் நாட்பட்ட சுரத்தால் உடல் வற்றி வெளுத்து, கடும் இருமல், தோல் சுருங்கல், மூச்சுத் திணறல், கண் நரம்புகள் பச்சை நிறமாதல் எனும் குணங்கள் காணும்.

2) மது இருமல் :
இந்நோய் மது அருந்துவதால் உண்டாகும். இந்நோயில் நெஞ்சு உலர்தல், தொண்டை வற்றல், உடலில் திணவு, நாபியில் ரணம், ஈரல்கள் வீங்கி வெதும்பல், தலையில் தாக்கிப் பிரமித்தல் எனும் குணங்கள் காணும்.

3) மருந்தீடு இருமல் :
இந்நோய் ஈடு மருந்தால் உண்டாகும். இந்நோயில் உடல் இளைத்தல், உடல் சூடு அதிகரித்தல், உணவில் வெறுப்பு, அடிக்கடி பயப்படுதல், புலம்பல், மயக்கம், வறட்டு இருமல், இரைப்பு, வாயில் புலால் மனம் வீசுதல், நா வழவழப்பு, ஒரே நினைவில் இருத்தல் எனும் குணங்கள் உண்டாகும்.

4) கஞ்சா இருமல் :
இந்நோய் அபின், கஞ்சா, புகையிலை போன்றவற்றை பயன்படுத்துவதால் உண்டாகும். இந்நோயில் உடலில் ஒளி குறைதல், தொடர் இருமல், பிரமித்தல் எனும் குணங்கள் காணும்.

5) இரத்த இருமல் :
இந்நோயில் காயங்களின் குருதிப் பெருக்கை கண்டு மனம் அஞ்சி, நுரையீரல் மற்றும் இருதயத்தின் செல்கள்  மாறுபட்டு, உடல் தீப்போல எரிந்து, வறட்டு இருமல் காணும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக