செவ்வாய், 13 அக்டோபர், 2020

ரோக நிதானம் - ஊதல் (சோபை) நோய்

            உடலில் இரத்தம் கெட்டு நீர்க் கோர்த்து உடல் வெளுத்து வீங்கி ஊதுதல் சோபை எனப்படும். இந்நோய் 4 வகைப்படும்.

சோபை நோய் உண்டாகக் காரணங்கள் :
  1. நஞ்சை உண்ணுதல்
  2. வெளுப்பு நோயின் தாக்கம்
  3. மலைகள், நீர்நிலைகளின் கரைகளில் வசித்தல்
  4. சாம்பல், மண், தவிடு போன்றவற்றை அதிகமாக உண்ணுதல்

சோபை நோயின் பொதுக் குணங்கள் :
இந்நோயில் உடல் வெளுத்து வலிமை குறைந்து, நடந்தால் கணுக்காலில் வீக்கம், சோர்வு, இளைப்பு, தலை சுற்றல், மயக்கம் உண்டாகி, பின் உடல் நாளுக்கு நாள் வீங்கும்.

சோபை நோயின் குணங்கள் :
1) வாத சோபை :
இந்நோயில் பொதுக் குணங்களோடு செரியாமை, மயிர் சிவந்து, தூக்கம் கெடும்.

2) பித்த சோபை :
இந்நோயில் பொதுக் குணங்களோடு வாந்தி, மயக்கம், நீர்வேட்கை, இளைப்பு, சோர்வு, உடல் மஞ்சள் நிறத்தில் அல்லது சிவந்து காணும்.

3) ஐய சோபை :
இந்நோயில் பொதுக் குணங்களோடு தோலில் தினவெடுத்து, மயிர்க்கால்கள் வெளுத்து, குரல் கம்மல், கண் எரிச்சல் எனும் குணங்கள் காணும்.

4) முக்குற்ற சோபை :
இந்நோயில் பொதுக் குணங்களோடு முன்சொன்ன மூன்று குணங்களும் கலந்து காணும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக