ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - மேகவெள்ளை அல்லது பிரமியம் (Genorrhoea)

            வாதம் கேடு அடைவதால் உண்டாகும் நோய்களில் மேகவெள்ளை அல்லது பிரமியம் என்னும் நோயும் ஒன்றாகும். சிறுநீர் இறங்குவதற்கு முன்போ அல்லது பின்போ வெண்ணிறத்தில் சீழ் போல இறங்குவதுவும், நீர்த்தாரையில் எரிச்சலும், கடுப்பும் உண்டாக்குவதும் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும். இந்நோய் கண்டவர்கள் சிறுநீர் கழிக்கும்போது சீழ் போன்ற திரவம் கலந்து இறங்கும் அல்லது சிறுநீர் கழித்தவுடன் நீர்த்தாரையில் நூல்போல வெண்ணிற திரவம் இருக்கும். மேலும் சிறுநீர்த்தாரையில் எரிச்சல், நமைச்சல் உண்டாகும். இது 21 வகையாக பிரிக்கப்படுகிறது.


பிரமியம் உண்டாகக் காரணங்கள் :

  1. அளவுகடந்த கலவியில் ஈடுபட்டு, அதோடு பட்டினி கிடந்தால் உண்டாகும்.
  2. யோகத்தில் நிலைத்து மூலக்கனலை எழுப்பும்போது உண்டாகும்.
  3. அதிக காரமான உணவை தொடர்ந்து உண்பதால் உண்டாகும்.
  4. அதிக உவர்ப்பு, துவர்ப்பு கொண்ட உணவை தொடர்ந்து உண்பது.
  5. தன்னால் தாங்க இயலாத சூட்டினை தாங்கிக் கொள்வதால் உண்டாகும்.
  6. அதிக சூட்டினை உடலில் உண்டுபண்ணும் தொழிலை செய்வது.

பிரமிய வகைகள் :

1) வாதப் பிரமியம் :

ஆண்குறியின் அடித்தண்டிலும் விதைகள் கனத்தும் வலி, அடிவயிறு, பக்கங்களில் பாரமாய் தோன்றி வலியும் உண்டாகும். வயிற்றில் இழுத்துப் பிடித்தது போன்ற வலியும் இருக்கும். சிறுநீர் சீழ் கலந்து இறங்கும். உடல் வற்றும்.

2) பித்தப் பிரமியம் :

உடல் வற்றி சோர்வு, மூட்டுக்களிலும், கைகால்கள் ஓய்ந்து வலிக்கும். குதம், குய்யம் கடுக்கும். உடல் கறுத்து எரிச்சலுடன் காணும். சிறுநீர் கழியும் போது மஞ்சள் நிறத்துடன் தாங்க முடியாத வலியுடன் இறங்கும்.

3) கபப் பிரமியம் :

ஆண்குறி கடுத்து வலிக்கும். கண்களும், உடலும் வெளுத்து, உடலில் அனல் மிகுந்து நீர்ச்சுருக்கு உண்டாகும். சிறுநீர் வெண்ணிறமாக சீழ் கலந்து இறங்கும்.

4) வாதப் பித்தப் பிரமியம் :

உடல் முழுவதும் வலித்து, வயிற்றில் கட்டி தோன்றி மலம் வெளியாகாமல் இறுகிக் கொள்ளும். சிறுநீர் கழிக்கும்போது சுருக்கென்ற வலியுடன் இறங்கும். ஆண்குறியின் அடியில் ஊசியால் குத்துவதைப் போல வலி இருக்கும்.

5) பித்தக் கபப் பிரமியம் :

வாய் மிகவும் கசப்பாக இருக்கும். அடிவயிறு பொருமி ஊதி இழுத்துப் பிடிப்பது போல வலி இருக்கும். மஞ்சள் நிறமும் சீழும் கலந்து சிறுநீர் இறங்கும். கீல்களில் வலி உண்டாகும். பசியின்மை, பகல் தூக்கம், ஆண்குறியில் சுருக்கென்ற வலி இருக்கும்.

6) தொந்தப் பிரமியம் :

உடலில் திணவு உண்டாகி, உடல் முழுதும் புழுக்கள் ஊர்வது போன்ற உணர்வு உண்டாகும். அடிவயிற்றில் சுரப்புண்டாகி அடிக்கடி சிறுநீர் கடுத்து சீழுடன் இறங்கும். சிறுநீரை தெளிய வைத்தால் அடியில் தூசு போல படியும்.

7) கட்டிப் பிரமியம் :

ஆண்குறியிலும், நீர்த்தாரையிலும் திணவும் எரிச்சலும் உண்டாகும். மேலும் ஆண்குறியில் பருக்கள் தோன்றி கட்டியாக மாறி சீழ் வடியும். ஆண்குறியின் கீழ்பகுதியில் கட்டி உண்டாகி உடைந்து நீர்ப்புழையுடன் சேர்ந்து துளை உண்டாகி அதன் வழியாக விதையின் மேல் நீர்க் கசியும். மேலும் இதனால் உண்டாகும் நாள்பட்ட கட்டிகள் உடலில் ஊறி உடலை வற்றச் செய்து உடல் வலிமையை குறைக்கும்.

8) சலப் பிரமியம் :

ஆண்குறியில் வலியும், சிறுநீர்த்தாரையில் வெண்ணிறக் கசிவும் இருக்கும். அடிவயிற்றில் பிடுங்கலுடன் வலி இருக்கும். மலத்தில் சீதம் கலந்து போகும். தொடை இடுக்குகளில் கட்டியும், உடல் முழுவதும் வழியும் இருக்கும்.

9) நாறு தந்திப் பிரமியம் :

அடிவயிறு புண் போல நொந்துக் காணும்.ஆண்குறியின் அடித்தண்டு விறுவிறுத்து பூரிக்கும். சிறுநீர் இறங்கும் முன்னர் ஆண்குறியின் துளையிலிருந்து கம்பிபோல வெள்ளை திரவம் வரும். இந்த திரவம் எப்போதும் கசிந்து துணியில் நனைந்து காணும். கைகால் எரிச்சல் இருக்கும்.

10) சீதப் பிரமியம் :

சீழ் போல வெள்ளை விழும். அரையாப்பு, பவுத்திரக் கட்டிகள் காணும். நாபிப் பகுதி புண்ணாகும். கணுக்கால் மூட்டில் தாங்க முடியாத வலி உண்டாகும். அடிக்கடி சிறுநீர் கடுத்து இறங்கும். சுரம் கண்டு அதிக குளிர் எடுக்கும். உடல் முழுவதும் நொந்து மயக்கம் உண்டாகும்.

11) ஒழுக்குப் பிரமியம் :

இந்நோயில் சீழும், குருதியும் கலந்த நீர்ப்போல வெள்ளை எந்நேரமும் ஒழுக்கிக் கொண்டே இருக்கும். உடல் முழுதும் சிறுசிறு பருக்கள் போல் கட்டிகள் உண்டாகி, முளைகள் தோன்றி உடைந்து புண்ணாகும். வயிற்றில் தீப்போல அனலை உண்டுபண்ணி அதிகப் பசி எடுக்கும். உடல் முழுதும் குடைந்து படுக்கையில் இருக்கச் செய்யும்.

12) அரித்திராப் பிரமியம் :

மஞ்சள் நிறத்தில் வெள்ளை கழியும். நீர்த்தாரையில் எரிச்சலும், கடுப்பும் காணும். முகம் மஞ்சள் நிறமடைந்து நாவில் கசப்பு காணும். மனம் அடிக்கடி திடுக்கிடும்.

13) கிரிச்சரப் பிரமியம் :

குத்தலுடன் மஞ்சள் நிறமான நீர் இறங்கும். சிறுநீர் வராமல் கட்டிக் கொள்ளும்.ஊண், உறக்கம் இருக்காது. உடல் முழுதும் உளைந்து, மனதில் சஞ்சலம் தோன்றும்.

14) கரப்பான் பிரமியம் :

வயிறு உளைந்து, நொந்து சீதத்துடன் மலம் கழியும். சிறுநீர் கடுத்து இறங்கும்.உடல் வெப்பம் அதிகமாகி சொறி, கரப்பான் போன்ற நோய்கள் காணும்.s கைகால்கள் ஓய்ந்து, ஆண்குறி புண் போல நொந்து குத்திச் சிறுநீர் கழிக்கும்போது சுண்ணாம்பு கல்லைக் கரைத்ததுபோல நீர் இறங்கும்.

15) கல் பிரமியம் :

குறியிலிருந்து கள்ளைப்போல வெள்ளை கசியும். உடம்பில் கற்றாழை நாற்றம் வீசும். வயிற்றில் கல்லைப்போல் சிறுநீர்க் கட்டிக்கொண்டு வயிறு விம்மி நீர்க் கழியும். பசி இல்லாமல், உந்தி முதல் விரை வரை விறுவிறுத்து உப்புசமாக காணும்.

16) தந்துப் பிரமியம் :

சிறுநீர் கழியும்போது சிலந்தி நூல்போல வெள்ளையும், இரத்தமும் கலந்து லியுடன் காணப்படும். விலாபுறங்களில் வலித்து, சிறுநீர்த் துளித்துளியாக இறங்கும்.

17) நீச்சுப் பிரமியம் :

சிறுநீர் இறுகி கள்ளைப் போல வெளுத்து சீழுடன் இறங்கும். ஆண்குறி விரைக்கும்போது அடித்தண்டு வீங்கி இறுக்கிப் பிடித்தது போல விறுவிறுத்து வலிக்கும். நரம்புகள் சுருங்கி,அடிவயிற்றில் குத்தல் காணும்.

18) வலிப் பிரமியம் :

ஆண்குறியின் அடிநரம்பு, குதம், குய்யம் ஆகிய இடங்களில் வலி, புறங்காலில் திமிர் காணும். உடல் முழுதும் கனன்று, மயக்கமும், நாவில் கசப்பும் காணும்.குறி வீங்கி நீர் இறங்கும்போது அதில் இற்றுப்போன சதைத் துணுக்குகளும், வெள்ளையும் சேர்ந்து இறங்கும்.

19) மதுப் பிரமியம் :

ஆண்குறி மிகவும் நொந்து நீர் வண்டலாய் தென் போல இறங்கும். சிறுநீரில் எறும்பு மொய்க்கும். சிறுநீர்ப் பாதையின் உள்பகுதியில் இரணமாகி, உடல் முழுதும் நாற்றம் எடுக்கும். நாக்கு வறண்டு, சுவையற்று இருக்கும். மயக்கம் உண்டாகும்.

20) விரணப் பிரமியம் :

உடல் முழுதும் புண் உண்டாகி அதிக துன்பம் தரும். மேலும் மயக்கம் உண்டாகும். ஆண்குறி பருத்து வீங்கி சீழும், இரத்தமும் கலந்து நீர் இறங்கும். மூட்டுகள் வீங்கி நொந்து வலிக்கும். உடல் தும்பி விறுவிறுத்துப் போகும்.

21) இரத்தப் பிரமியம் :

உடல் தளர்வுற்று சோர்வு, கிறுகிறுப்பு, மயக்கம் காணும். அதிக வலியுடனும், கடுப்புடனும் சிறுநீர் இறங்கும். சிறுநீருடன் இரத்தம் கலந்து அதிக துர்நாற்றத்துடன் இறங்கும். முகம் மிகவும் கலங்கிக் காணப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக