செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - பெருவயிறு / மகோதரம் (Dropsy of Belly)

        இதுவும் வாதநாடியின் மீறலாலும்,  வாதநாடி பிறழ்ந்து போவதாலும் உண்டாகும் என்று அறியப்படுகிறது. இந்நோய் நாளுக்கு நாள் பெருத்துக் கொண்டே வந்து அதனுள் நீர் சுரந்து வருவதும், வயிற்றின் உள்ளுருப்புகளாகிய ஈரல், குடல், கருப்பையில் கட்டி ஆகியவற்றில் ஏதாவது ஒன்று பெருத்து வருதலால் உண்டாகிறது என்று அறியப்படுகிறது. இந்நோயில் 32 வகைகள் உள்ளது.


நோய் உண்டாகக் காரணங்கள் :

  1. உமி, கல், மண், மலர், முள் கலந்த உணவைத் தொடர்ந்து உண்ணுதல்.
  2. சுனைநீர், தேங்கிய நீர், வண்டு மொய்த்த நீர், தேரை தங்கிய நீர், கள், சாராயம் இவற்றை அடிக்கடி அருந்தல், செரியாமை.
  3. மருந்தீடு, மேகநோய், செம்பின் களிம்பு.
  4. ரச, கந்தக பாசாண மருந்துகளை உடலின் வலிமை அறியாமல் உண்ணுதல்.
  5. வயிற்றில் கட்டி, கல்லீரல், மண்ணீரல், சிறுநீரக, தமரகம் (இதயம்) போன்ற நோய்களாலும்,
  6. வயிற்றில் கட்டி உண்டாகி அதில் நீர், சீழ், இரத்தம் மாமிசம், சதை ஆகியவை சேர்ந்து அதிகரித்து காணுவதாலும் உண்டாகும்.


பெருவயிறு நோயின் வகைகள் :

1) வளி பெருவயிறு :

இந்நோயில் கண்கள் கருத்து, சுரம், அதிதாகம், கழிச்சல், அதிக வியர்வை, தோல் சுரசுரப்பு போன்ற குணங்கள் தோன்றி உடல் முழுவது மஞ்சள் பூக்கும்.

2) அழல் பெருவயிறு :

இந்நோயில் உடல் வெளுத்து மெலிந்து வற்றி பலமிழந்து, உணவில் விருப்பமின்மை, அடிவயிற்றில் வீக்கம், இரைச்சல், உப்புசம், புளியேப்பம், மன சஞ்சலம் போன்ற குணங்கள் தோன்றி முகம் பிணத்தின் முகம்போலக் களையிழந்து காணும்.

3) ஐய பெருவயிறு :

இந்நோயில் உடல் பஞ்சு போல வெளுத்து நடுக்கம், குளிர் காய்ச்சல், உணவில் ருசியின்மை, உறக்கமின்மை, வயிற்றில் இரைச்சல், உப்புசம், இருமல், கோழைக்கக்கல், அதிக சினம் போன்ற குணங்கள் தோன்றி சிறுநீர், மலம் கடுத்து இறங்கும்.

4) வளிஐய பெருவயிறு :

இந்நோயில் உடல் வெளுத்து நொந்து கடுப்புடன், வயிறு வீங்கி நரம்புகள் புடைத்து விம்மி மேலெழுந்து காணும். வாயில் துர்நாற்றம், அடிவயிற்றில் அதிக இரைச்சல் உண்டாகி மலம் கட்டி, விரைகள் வீங்கிப் பெரிதாகும்.

5) அழல்ஐய பெருவயிறு :

இந்நோயில் நாபி முதல் மார்பு வரை வயிறு பிதுங்கிக் காணும். வயிற்றில் உள்ள காற்று வெளியேறாது உள்ளே நின்று, மார்பில் வலி, மலம், சிறுநீர் கட்டும். உடல், கை, கால்கள் வீங்கி, மூளை பாதித்துக் கண் ஒளி மங்கும்.

6) முக்குற்ற பெருவயிறு :

இந்நோயில் உடல் முழுதும் பெருத்து, வீங்கி, கண்கள் பஞ்சு போல வெளுத்துக் கண்ணீர் வடியும். கைகால்கள் வற்றி மெலிந்து காணும். வாதநாடி படபடத்து நடக்கும். தலைசுற்றல், மயக்கம் காணும். உடலில் மஞ்சள் பூத்து இருக்கும்.

7) கல் பெருவயிறு :

இந்நோயில் மேல்வயிறு கல்போலக் கடினமாகி, இருமல், இளைப்பு, மலம், சிறுநீர் கட்டும். உணவு செல்லாது, முகம் கறுத்து இறுகி, வாயிற்று நரம்பு புடைத்துப் பச்சை நரம்புகள் தெரியும்.

8) வில் பெருவயிறு :

இந்நோயில் வில் போன்று வயிறு குவிந்து வளைந்து அழுத்தமாக இருக்கும். மேல்வயிறு கடுத்து, உப்பி, இரையும். விரை வீங்கும். சிறுநீரும், மலமும் தடைபட்டு தாங்க முடியாத வலியுடன் இருக்கும். அதிகதாகம், மனக் கலக்கம், மயக்கம் காணும்.

9) வழுவைப் பெருவயிறு :

இந்நோயில் வயிற்றில் நீர் கோர்த்து வயிறு தொளதொளத்து காணும். மேலும் வயிற்றில் மாமிசத்தை அடைத்தது போலக் காணும். பசியை கெடுத்து, உணவில் வெறுப்பை தந்து, படுக்கையில் தங்காது துன்பம் தரும்.

10) நழுவைப் பெருவயிறு :

இந்நோயில் அடிவயிற்றில் பந்தைபோல உருண்டு திரண்டு ஒரு கட்டி காணும். அதை அழுத்த இடம் விட்டு இடம் நகரும். மேல்வயிற்றில் அனலையும், எரிச்சலையும் உண்டாக்கி மேல்மூச்சு வங்கி, சரியாக நடக்க முடியாமல் போகும். தாபமும், தளர்ச்சியும், தாங்க முடியாத உடல் எரிச்சல், தளர்ச்சி, நா வறட்சி, நெஞ்சு புண்ணாகும்.

11) நீராம்பல் பெருவயிறு :

இந்நோயில் நாவறட்சி, இருமல், அடிவயிற்றில் விம்மல், மூச்சு விடுவதற்கு சிரமம், கழிச்சல், உடல் தளர்ச்சி, உருவம் மாறும். கடைக்கண் வெளுத்து, புறங்கால் வீங்கி, கைக்கால்கள் நீட்டவும், மடக்கவும் முடியாமல் இருக்கும்.

12) ஊராம்பல் பெருவயிறு :

இந்நோயில் மேல்வயிறு பொருமி அதிக துன்பம் தரும். உடல் வெம்மையால் உடல் வற்றும். உடல் குன்றி, மனத்துயரமும், தலை கனத்து மயக்கம், அடிக்கடி சினம், கலக்கம் போன்ற குணங்கள் தோன்றும்.

13) வெப்புப்பாவை பெருவயிறு :

வயிற்றில் காற்று சேர்ந்து உப்பி காணும். அடிக்கடி சினம், கசப்பு, புளிப்பு சுவைகளில் வெறுப்பு, நாவில் உப்புச் சுவை, உடல் முழுவதும் கனத்தல், வயிறு புரண்டு வெதும்பல், விலாப்பக்கங்களில் கட்டி, அடிக்கடி உடல் அதிர்ந்து காணுதல் போன்ற குணங்கள் காணும்.

14) குலைமுட்டி பெருவயிறு :

இந்நோயில் அம்மிக் குழவிப் போல அடிவயிற்றில் கட்டித் தோன்றி வலிக்கும். உணவு செல்லாது, அபானத்தை இறுக்கி, மலம் கட்டும். உடல் வற்றிக் கருகி, தலை, முகம், கை, கால் வீக்கம், மூச்சு வாங்கி குரல் கம்மல் போன்ற குணங்கள் தோன்றும்.

15) கீழ்க்கவிசை பெருவயிறு :

இந்நோயில் அடிவயிற்றில் வில்லைப் போலக் கட்டி உருவாகி வயிறு வீங்கி, மேல்வயிறு கனத்து, மூட்டுகளில் குடைச்சல், வாய் பிதற்றல், மனதில் தோன்றியபடி எல்லாம் பேசுதல், மலம், சிறுநீர் சுருங்கி அதிக துன்பம் உண்டாகும்.

16) மேல்க்கவிசை பெருவயிறு :

இந்நோயில் வயிற்றில் உள்ள ஊண் திரட்சிகள் எல்லாம் திரண்டு மேல்வயிற்றை வில்போல வளையச் செய்யும். வயிற்றின் நரம்பு, தோல் சுருங்கி, படபடப்பு, பெருமூச்சு உண்டாகும். மார்பில் அடைப்பு, குத்தல் வலி காணும். வாய்க் குமட்டி, உமிழ்நீர் மிகுதியாக வடியும். உணவில் வெறுப்பும் உண்டாகும்.

17) பக்கக்கவிசை பெருவயிறு :

இந்நோயில் பக்கங்களில் கவிசை (கட்டி) போலக் காணும். வயிறு கனத்து கல்போலக் காணும். அடிவயிற்றில் குமுறல், அதிக தாகம், உடல் எரிச்சல், வயிறு பொருமி உப்பல், புளியேப்பம், நெஞ்சில் எரிச்சல் போன்ற குணங்கள் கண்டு மலமும் நீரும் கட்டி மிகுந்த துன்பம் விளைவிக்கும்.

18) பழுக்கவிசை பெருவயிறு :

இந்நோயில் உடலில் அமைந்த பழுவெலும்பு முள்ளைப் போல வயிற்றில் எழும்பி, வயிறு முழுமையும் கனத்து, உப்புசமும், மேல்மூச்சும், அதிக சோம்பல், உறக்கத்தை உண்டாக்கும். உணவில் வெறுப்பு, வயிற்றில் அடிக்கடி காற்று சேர்ந்து வீங்கி, உண்ட உணவு செரியாமல், உடல் ஊதி மூச்சுத் திணறல் போன்ற குணங்களை உண்டாக்கும்.

19) மாப்பெருவயிறு :

இந்நோயில் மந்தம் உண்டாகி, உணவு கொள்ள முடியாமலும், உண்ட உணவு செரியாமலும் செய்து, உடலின் குருதி வன்மை குறைந்து உடல் உடலை வற்றச் செய்யும். வயிற்றின் நரம்புகள் புடைத்து வெளியாகி, வயிறு முழுதும் நாளுக்கு நாள் வீங்கிக் கொண்டே வரும். வீக்கம் எளிதில் வற்றாது மூச்சுத் தின்றாலும் உண்டாகும். மலம் கட்டும். அடிக்கடி மயக்கம் உண்டாகும்.

20) சூல்ப் பெருவயிறு :

இந்நோய் பெண்கள் சூல்க் கொண்டபோது (கருத்தரித்தபோது) வரும்.இதனால் அதிக மனவருத்தம் உண்டாகி, உணவு செல்லாது, உடல் முழுவதும் அழன்று, மயக்கம் வரும். அதிக நீர் தாகம், கைகால் மூட்டுகளில் வீக்கம், ருசியின்மை, சுரம், உடல் உளைச்சல் போன்ற குணங்கள் தோன்றும்.

21) வல்லைப் பெருவயிறு :

இந்நோயில் வயிற்ருக்கும் மார்பு எலும்புக்கும் நடுவில் உள்ளங்கை அளவில் கட்டி உருவாக்கிக் கல்லைக் கொண்டு அடைத்தது போலக் கடினமாகக் காணும். இதனால் உணவு செல்லாமை, சுடுநீரின்மேல் இச்சை, கைகால்கள் வெளுத்துச் சத்து இல்லாமல் வற்றுதல் போன்ற குணங்கள் தோன்றும்.

22) நச்சுப் பெருவயிறு :

உடல் மெலிந்து விதைகள் வீங்கித் தளர்ந்து, உடம்பில் நடுக்கலும், திமிர்தலும், மனத்துயரமும், துடுக்காகவும், படபடத்தும் பேசச் செய்யும்.

23) பாண்டுப் பெருவயிறு :

இந்நோயில் உடலின் குருதி வன்மை குறைந்து, உடல் முழுதும் வீங்கி, முகத்தில் நிறம் மாறுபாடு அடைந்து, நாடி சரியாக நடக்காது. மயிர் சிவந்து, இரத்தம் இல்லாமல் உடல் மெலிந்து நடக்கவும் முடியாது போகும். மேலும் முகம் வீங்கி, வயிறு பொருமி, பெருமூச்சு, புறங்கால் வீங்குதல் போன்ற குணங்கள் தோன்றும்.

24) சோபைப் பெருவயிறு :

இந்நோயில் மேல்வயிறு அழுத்தமாகவும், அடிவயிறு குழைந்து உப்பியும் காணும். கைகால்கள், விரைகள் வீங்கி, மேல்மூச்சு, இருமல், தாகம், உடம்பெல்லாம் குளிர்தல், மலம், சிறுநீர் கட்டுதல் போன்ற குணங்கள் காணும்.

25) காமாலைப் பெருவயிறு :

இந்நோயில் காமாலைப் போல உடல் முழுதும் மஞ்சள் நிறம் கண்டு, உடலில் நடுக்கமும், குளிர்ச்சியும், உடலும் புறங்காலும் வீங்கிக் காணும். மேலும் அடிவயிறு சுருங்கி உளையும். முகம், மூக்கு, மார்பு இந்த இடங்களில் வியர்வையும் உண்டாகி, சுரமும், கோழையும் தோன்றி, தலை வலித்து, மனச்சலிப்பு கண்டு, சரியான உறக்கம் இல்லாமல் போதல் போன்ற குணங்கள் காணும்.

26) குன்மப் பெருவயிறு :

இந்நோயில் உண்ட உணவு செரியாமல் வயிற்றில் குடலை புரட்டிக் குத்தல், வலித்தல், வாந்தி, அசீரண பேதி, விலா, இடுப்பு, வயிறு போன்ற இடங்கள் வீங்கிக் காணும். சிறுநீர் பசுவின் நீரைப் போல இறங்கும்.

27) உதரப் பெருவயிறு :

நாவறட்சி, கண் சிவத்தல், வயிற்றில் காற்று கூடி வயிறு உப்பல், தாகம், மலம் சரியாகக் கழியாமல் இருத்தல், உணவு கொள்ளாமை, அடிவயிற்றிலிருந்து மார்பு, கழுத்து வரையிலும் ஒரே வீக்கமாகக் காணும்.

28) கூர்மப் பெருவயிறு :

இந்நோயில் கண்களில் பசை உலர்ந்து வறண்டு, இரு கண்களும் சிவந்து சுருங்கி காணும். மேலும் இருமல், இளைப்பு, தாகம், வயிற்றில் இரைச்சலுடன் குமுறலும் காணும். மேலும் வயிற்றில் ஆமைபோலக் கட்டி உண்டாகும். உணவு செல்லாது.

29) பீலிகைப் பெருவயிறு :

இந்நோயில் உடலைத் தொட்டுப் பார்க்க ஆமைஓடு போலச் சொரசொரத்துக் காணும். அடிக்கடி மலமும், சிறுநீரும் கழியும். உடல் முழுவது வீங்காமல் ஒருசில் இடங்களில் மட்டும் வீங்கும். அபானவாயு அதிகரிக்கும். உணவை அதிகமாக உண்ணச் செய்யும். அதிக சிறுநீர் கழிந்தாலும் மயக்கம் உண்டாகாது. கண்களில் இரத்தம் காணும்.

30) சுரப் பெருவயிறு :

இந்நோயில் வயிறும், புறங்காலும், கணுக்காலும் வீங்கும். மேலும் மார்பு, பிடரி இவற்றில் பச்சை நரம்பு புடைத்துத் தோன்றி, வயிறு மிகப் பொருமும். சுரமும், அசதியும், உடல் முழுவதும் எரிச்சலும், இதனால் கண்கள் வீங்கியும் காணும்.

31) நீர்ப் பெருவயிறு :

இந்நோயில் உடல் முழுதும் நீர்க் கோர்த்து வீங்கும். உடல் மஞ்சள் நிறத்தில் தோன்றும். வயிறு உப்புசத்துடன் உழன்று காணும். மேலும் ஆண்குறியில் தளர்ச்சியும், முதுகு மற்றும் வயிற்றில் நீரும் கோர்த்து உடல்தாதுக்கள் ஒவ்வொன்றாகக் குறைந்து, ஐம்பொறிகளையும் கலங்கச் செய்யும்.

32) மாங்கிசப் பெருவயிறு :

இந்நோயில் வயிற்றில் சதைகள் அளவிற்கு மிஞ்சி வளர்ந்து, வயிறு பொருமி, அடிவயிற்றில் கல்லைப் போல் அழுத்தமும் காணும். மேலும் உடலில் வெப்பம் அதிகரித்து உடல் வற்றி உலர்ந்து, அடிக்கடி தண்ணீரைப் பருகச் செய்யும். சொற்கள் குழறி, அடிக்கடி ஏப்பமும், சிறுநீரிலும், மலத்திலும் இற்றுப்போன சதைகளும் வெளிவரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக