ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - நீரினை அருக்கல் நோய்கள்

            சிறுநீர் தொடர்பான நோய்களை சித்த மருத்துவம் இரண்டு வகையாக பிரிக்கிறது. அவை நீரினை பெருக்கல் நோய், நீரினை அருக்கல் நோய். நீரினை பெருக்கல் நோய் என்பது மதுமேகம் என்னும் நீரிழிவு நோயாகும். இதைப்பற்றி முன்பே பார்த்துவிட்டோம். இங்கு நீரினை அருக்கல் என்னும் நோயைப்பற்றி பார்க்கலாம். இதுவும் வளியாகிய வாதம் கேடடைவதால் உண்டாகிறது.

            நீரினை அருக்கல் நோய் என்பது பொதுவாக மூத்திரக் கிரிச்சரங்கள் என்ற பெயரில் அழைக்கபடும். இந்த நோய்க்கண்டால் சிறுநீர் மிகவும் குறைவாக வெளியேறும். மேலும் சீறுநீர் கழிக்கும்போது எரிச்சல், கடுப்பு, நீருடன் சிறுமணல் அல்லது கல் போன்ற பொருட்கள் வெளியாதல், வெள்ளைநிற திரவம் வெளிப்படுதல் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும். சிறுநீருடன் வெள்ளைநிற திரவம் வெளியாவதைப் பற்றி பலநூல்களில் தனியாகவே கூறியதால் வெள்ளை அல்லது பிரமியம் என்னும் தலைப்பில் முன்பே கண்டோம்.

            இங்கு சிறுநீரினை அருக்கல் என்னும் நோய்கள் பொதுவாக ஐந்து வகையாகப் பிரிக்கப்படும். அவை கல்லடைப்பு, நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, சொட்டுநீர், நீரடைப்பு ஆகும். இனி இவற்றைப்பற்றி விரிவாக காண்போம்.


I. கல்லடைப்பு (Gravel) :

இந்நோயில் சிறுநீர் கழிக்கும்போது திடீரென்று நீரடைத்தல், குறியின் முனை நோதல், நீர்த்தாரை எரிதல், இடுப்பு மற்றும் முதுகுத்தண்டின் அருகில் வலி, சிறுமணலை போன்ற கற்கள் வெளியேறுதல் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.


நோய் உண்டாகக் காரணம் :

  1. தேங்கிய நீர் மற்றும் அழுக்கடைந்த நீரை அருந்துதல்.
  2. கல், மண், மயிர் கலந்த உணவை உண்ணுதல்.
  3. உடலில் வாயுவை அதிகரிக்கும் உணவுகளை உண்ணுதல்.
  4. உடலை மந்தப்படுத்தும் உணவுகளை உண்ணுதல்.


கல்லடைப்பின் வகைகள் :

1) வாதக் கல்லடைப்பு :

சிறுநீர் இறங்கும்போது அடிவயிற்றில் சுருக்கென்ற குத்தல், ஆண்குறியில் தாங்க முடியாத வலி, இதனால் அழுகை, பெருமூச்சு,வயிறு உப்பல், வெளியாகும் நீரில் மெல்லிய சவ்வு படலம் வெளியாதல் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.

2) பித்தக் கல்லடைப்பு :

நீர்த்தாரையில் இரும்பைக் காய்ச்சி சுட்டதைப்போல எரிச்சல், சிறுநீருடன் குருதி வெளியாதல், நீர்த்தாரையில் குடைச்சல், குத்தல், கூச்சம் போன்ற உணர்வுகள் உண்டாதல், சிறுநீர் கழியும்போது செந்நிற கற்கள் வெளியாகி, உடல் முழுவது அனல் போல கொதிக்கும்.

3) கபக் கல்லடைப்பு :

நாபியில் குத்தல், கைகால் மூட்டுகள், இடுப்பு இவற்றில் குடைச்சலும், இசிவும் காணும். ஆண்குறி விறுவிறுத்துக் கடுத்து, சிறுநீர் வெளியாகும்போது சிறு கற்கள் வெளிப்படும்.

4) முக்குற்ற கல்லடைப்பு :

நீர்த்தாரையின் அடியில் தாங்க முடியாத வலியும், துன்பமும் உண்டாகி, சிறுநீர் விட்டு விட்டுப் பாயும். நீர் கழிக்கும்போது சிறுமணல், நொறுங்கிய கற்கள் வெளியாகும். திடீரென்று சிறுநீர் வெளியாகாமல் தடைபடும். குதம், குய்யத்தில் தாங்க முடியாத வலி, குறிமுனையில் கற்கள் தடைபட்டு வலியும் வீக்கமும் உண்டாகி சிறுநீருடன் குருதியும் வெளிப்படும்.


II. நீர்ச்சுருக்கு / கிரிச்சரம் (Retention of Urine) :

இந்நோயில் நீர்த்தாரையில் குத்தல், குடைச்சல், எரிச்சல், வலி ஆகிய குணங்களை உண்டாக்கி, முகத்தை வீங்கச் செய்து, சொட்டு சொட்டாக சிறுநீர் பிரியும்.


நோய் உண்டாகக் காரணங்கள் :

  1. வெப்பம் மிகுந்த இடங்களில் திரிதல்.
  2. பழைய உணவுகளை உண்ணுதல்.
  3. பகலிலும் பெண் போகம்.
  4. அதிக பகல் தூக்கம்.
  5. லாகிரி வஸ்துகளை அதிகம் பயன்படுத்தல்.


நீர்ச்சுருக்கின் வகைகள் :

1) வாதக் கிரிச்சரம் :

இந்நோயில் மேகம் என்னும் துன்பம் உண்டாகி நீர்த்தாரையில் வெள்ளைநிற திரவம் தங்கி சிறுநீர் வெளியாவதை தடுத்து தேகம் முழுவது கடுப்பு உண்டாக்கும். சிறுநீர் இறங்கும்போது கெட்டுப்போன மாமிசம்போலக் கறுப்பாக இறங்கும்.

2) பித்தக் கிரிச்சரம் :

இந்நோயில் சிறுநீர் மஞ்சள் அல்லது / மற்றும் சிவந்த நிறத்தில் இறங்கும். கைகால்கள் தளர்ந்து அசதியாக இருக்கும். சிறுநீர் சுருங்கி கடுப்புடன் வெளியேறும். மேலும் ஆண்குறி, விதை, குதம் இவற்றில் வாயுவின் செயல் மீறிக்காணும். வயிறு விம்மி, உப்பி இரைச்சலுடன் காணும். வாய் உலர்ந்து மிரட்சி காணும்.

3) கபக் கிரிச்சரம் :

இந்நோயில் குதத்திலும், விரையிலும் அதிக வலியும், ஆண்குறியில் ஒருவித கூச்சமும், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வும் உண்டாகி சிறுநீர் எரிச்சலுடன் இறங்கும். உடல் வெளுத்து, கண்கள் பச்சை நிறமாகி, கிறுகிறுப்பும், மயக்கமும் காணும். உடல் முழுவதும் கடுப்பும், வலியும் உண்டாகி சொறிதலையும் செய்யும்.

4) மேகக் கிரிச்சரம் :

சிறுநீர்க் கழிக்கும்போது அடிக்கடி வெள்ளைநிற நூல்போல சேர்ந்து அதிக துர்நாற்றத்துடன் கழியும். நீர்த்தாரையின் அடியில் புறாவின் எச்சம்போல இருக்கும். ஆண்குறி, குதம் இவை வேக்காடும், எரிச்சலும் கொண்டிருக்கும்.


III. நீர்க்கட்டு :

இந்நோயில் நாள்கணக்கில் சிறுநீர் கழியாமல் இருந்தாலும் சிறுநீர்ப்பை நிறையாது. அல்லது சிறுநீர்ப்பையில் சிறுநீர் இருந்தாலும் சிறுநீர் இறங்காது.


நீர்க்கட்டு உண்டாகக் காரணங்கள் :

  1. குண்டிக்காயில் (Kidney) சிறுகற்கள் உண்டாகி துவாரங்களை அடைத்தல்.
  2. பிறப்பிலேயே நீர்த்தாரையில் அடைப்பு.
  3. நீர்த்தாரையில் கட்டிகள் உருவாதல்.
  4. குண்டிக்காயில் நீரைப் பிரிக்கும் வாயுக்கள் அதன் தொழிலை இழப்பது.
  5. குண்டிக்காயின் நீர்த்தாரையில் குருதிக்கட்டி உண்டாதல்.
  6. அடிபட்டு நசுங்குதல்.
  7. நஞ்சு உட்கொள்ளுதல்.
  8. மிகுந்த பேதி.
  9. அதிக வியர்வை.


நீர்க்கட்டின் குணங்கள் :

இந்நோயில் நீர்க் குண்டிகாயுடன் தொடர்புடைய சிறுபுளைகள் கேடடைந்து அதனால் சிறுநீர் இறங்காமை, மயக்கம், தலைசுற்றல் போன்ற குணங்களைக் காட்டி 10 நாட்களுக்குள் படுக்கையில் கிடத்தி அரட்டல், புரட்டல், கைகால் சில்லிடல், நாவறட்சி, குறுக்கில் வலி, கண்மணி சுருங்கல் போன்ற குணங்களை உண்டாக்கும். மேலும் சிறுநீர் செந்நிறமாக இறங்கும். உடலில் பிசுபிசுத்த வியர்வை, உண்டாகி, கடுமையான வாந்தி, பேதி, மூச்சுத்திணறல், சோர்வு உண்டாகும்.


IV. சொட்டு நீர் :

தனக்கே தெரியாமல் சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறும். இதை குழந்தைகளுக்கு வரும் சொட்டு நீர், பெரியவர்களுக்கு வரும் சொட்டு நீர் என்று இருவகையாகப் பிரிக்கலாம். இதுவும் இரண்டு இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.


சொட்டுநீர் வகைகள் மற்றும் குணங்கள் :

குழந்தைகளுக்கு வரும் சொட்டுநீர் :

சிறுகுழந்தைகளுக்கு பெரும்பாலும் அறிவின்மையால் தானாக சிறுநீர் வரும். மேலும் சிறு ஒலிகளுக்கும் அஞ்சும் இயல்பையுடைய குழந்தைகளுக்கு அவர்கள் அஞ்சும் நிலை உண்டானால் தானாகவே நீரி வரும். சில வேளைகளில் சிறுநீர் போகவேண்டிய நிலை வந்த போதும் சோம்பலால் அவை நீரை அடக்குவதாலும் பிறகு சிறுநீர் பிரியும். இது முதல் வகை.


மேலும் வயிற்றில் புழு, இளைப்பு நோய், நீர்ப்புழை பிறப்பிலேயே சரியான அளவில் இல்லாமல் சுருங்கி இருத்தல் போன்ற காரணங்களாலும் சிறுநீர் பிரியும். இது மற்றொரு வகை.


பெரியவர்களுக்கு வரும் சொட்டுநீர் :

நோயினாலும், முதுமையினாலும் அடிக்கடி சிறுநீர் வெளிப்படுவது போன்ற உணர்ச்சியாலும் அதை அடக்க முடியாமல், அடிக்கடி நீரைச் சிறு அளவில் சொட்டு சொட்டாக பிரியும். மேலும் இருமல், சிரித்தல், அழுதல், பயம் போன்ற உணர்வினால் தன்னை அறியாமல் நீர் சொட்டும். இது முதல் வகை.


நீர்ப் பெருக்கல், நீர் அருக்கல், நரம்புத்தளர்ச்சி, வெள்ளை, பாரிச வாயு, சிறுநீர்ப்பை வீக்கம், வலிமை இழத்தல் போன்ற காரணங்களால் சிறுநீர் சொட்டு சொட்டாக பிரியும். இது இரண்டாவது வகை.


V. நீரடைப்பு :

இந்நோயில் சிறுநீர் குறைந்த அளவில் வெளியேறுதல், சிறுநீர்ப்பை, சிறுநீர்த்தாரை போன்ற இடங்களில் எரிச்சல், வயிறு விம்மி வலித்தல் போன்ற குணங்கள் உண்டாகும்.


நீரடைப்பு குணங்கள் :

  1. மூக்கில் நீர் பாய்தல்.
  2. கண் இரப்பை சற்று வீங்கி கண்ணீர் வடிதல்.
  3. மார்பு நொந்து மூச்சு தடுமாறல்.
  4. வாந்தி, தலைநோய், மயக்கம், உறக்கம்.
  5. சுரம், உடல் வெளுத்து ஊதல்.
  6. கண் ஊதி மூடிக் கொள்ளுதல்.
  7. வயிற்றில் நீர்க் கோர்த்து ஊதி, சிறுநீரில் குருதி கலந்து கறுத்து வெளிப்படும்.
  8. நீர்த்தாரையில் எரிச்சல், நமைச்சல், வலி காணும்.
  9. சிறுநீர் கழியும்போது தாங்கமுடியாத வலி, எரிச்சல் காணும்.
  10. இளைப்பு, பெருமூச்சு, ஆயாசம், மார்பு நோய், முக வீக்கம் காணும்.
  11. சிறுசுரம், இடுப்பு நோய், ஆண்குறி வீக்கம்,அடிவயிறு வலி காணும்.
  12. சில வேளைகளில் சிறுநீர் இறங்கும் முன்பும், பின்பும் பச்சை நிற திரவம் வெளியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக