திங்கள், 31 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - இளைப்பு நோய் (Consumption) & உளமாந்தை

சயம் / ஈளை / இளைப்பு நோய் :

            கபத்தால் விளையும் நோய்களில் மிகவும் முக்கியமானது சயம் என்னும்  இளைப்பு நோயாகும். “கொல்லவரும் நோய்களில் தொல்லை தரும் சயம்” என்று கூறுவதிலிருந்து இதன் கொடுமையை உணரலாம். இந்நோயானது உடலின் வலிமையை குறைத்து, உடலின் 7 தாதுக்கள் மற்றும் அபானன், உதானன் என்னும் வாயுக்களையும் கேடு அடையச் செய்யும். ஈளை அல்லது சயம் என்னும் இளைப்பு நோய் 12 வகைப்படும்.

            மேலும் இந்த 12 வகையான இளைப்பு நோய்களைத் தவிர்த்து உளமாந்தை என்ற குடல் இளைப்பு நோயும் இளைப்பு நோயின் ஒரு பிரிவாக அதற்குரிய குணங்களோடு அறியபடுகிறது. இது 4 வகைப்படும். ஆக இளைப்பு மற்றும் உளமாந்தை நோய்கள் மொத்தம் 16 வகைப்படும்.

இளைப்பு நோய் உண்டாகக் காரணங்கள் :
  1. அடிக்கடி பட்டினி இருத்தல்
  2. இரவில் விழித்து இருத்தல்
  3. அதிக உழைப்பு
  4. நாட்பட்ட நோய்கள்
  5. மன அழுத்தம்
  6. உடலுக்கு ஊட்டம் இல்லாத உணவை உண்ணுதல்
  7. காற்றோட்டம் இல்லாத இடத்தில் இருத்தல்
  8. கஞ்சா, புகைக்பழக்கம் மற்றும் மருந்தீடு
  9. உப்பு, காரம் உணவில் அதிகம் சேர்த்தல்
  10. அதிக வெப்பமுள்ள இடத்தில் வேலை செய்தல்

இளைப்பு நோயின் வகைகள் :
1) பிரம்மசயம் :
இந்நோயில் உடல் இளைத்தல், இருமல், புண்ணிலிருந்து வடியும் நீர் சளியுடன் காணுதல், கோழையோடு இரத்தம் வருதல், உடல் எரிச்சல், காய்ச்சல், சுவையின்மை, மனக்கலக்கம், வாந்தி எனும் குணங்கள் காணும்.

2) இராசசயம் :
இந்நோயில் தலை - மார்பு நோதல், மஞ்சள் நிறத்தில் கோழை வெளியாதல், மூச்சுக்குழலில் வலி, உடல் வலித்து அனலாகக் கொதித்தல், இருமல், வாந்தி, குரல் மாற்றம் எனும் குணங்கள் காணும்.

3) வைசியசயம் :
இந்நோயில் கைகால் சோர்வு, அதிக வியர்வை, சுரம், வெயிலை தாங்க முடியாமை, வெளுப்பு, மலச்சிக்கல்,  இருமல், கோழை, பசியின்மை, உடல் நடுக்கம், வேதனை, கொட்டாவி எனும் குணங்கள் காணும்.

4) சூத்திரசயம் :
இந்நோயில் கண்ணில் அழற்சி, இருமல், சுவாசக்குழல் புண்ணாதல், மயக்கம், மயிர்க்கூச்செறிதல், அதிகாலையில் குளிர், வலி, வியர்வை, வாந்தி, கோழை, கழுத்தில் கோழை அடைத்தல், குத்தல், எரிச்சல், கொட்டாவி, மலச்சிக்கல் எனும் குணங்கள் காணும்.

5) வாதசயம் :
இந்நோயில் உடல் இளைத்தல், தலைவலி, விக்கல், விலா - நடுமுதுகு - கழுத்து - தோள்பட்டை - கை - கால் வலி, வாந்தி, கோழை, சுரம், தாகம், அதிசாரம், இருமல், உறக்கமின்மை, மார்பு குத்தல், நாவில் கசப்பு எனும் குணங்கள் காணும்.

6) பித்தசயம் :
இந்நோயில் இரைப்பு, விலாவும் கழுத்தும் சுருங்குதல், இரத்த வாந்தி, வெளுப்பு, உணவு செரியாமை, மூத்திரம் மஞ்சள் நிறத்தில் வெளியாதல்,, மயக்கம், குரல் கம்மல், இருமல், கோழை, சுரம், குளிர், வியர்வை, தசையில் வலி, வேதனை, அதிக சீதளம் எனும் குணங்கள் காணும்.

7) கபசயம் :
இந்நோயில் இருமல், வாந்தி, கோழை, ஏப்பம், சுவையின்மை, அதிசாரம், குரல் கம்மல், அசதி, உடல் வெளுத்தல், மூக்கில் நீர் வடிதல், வயிறு கல்லைப் போல இருத்தல், எரிச்சல், செரியாமை, வேதனை எனும் குணங்கள் காணும்.

8) வாதபித்தசயம் :
இந்நோயில் உடலில் கடுப்பு, குத்தல், எரிச்சல், சுரம், தாகம், இருமல், அதிக வாயு, சுவையின்மை, கோழை, மயக்கம், உடல் கறுத்தல், இரைப்பு, தும்மல், வயிறு குத்தல், கண்ணில் நீர் வடிதல், புளித்தல், நெஞ்சு உலர்தல், அதிக குளிர்ச்சி, சிறுநீர் தடைபடுதல் எனும் குணங்கள் காணும்.

9) வாதகபசயம் :
இந்நோயில் குரல் கம்மல், தொண்டை கம்மல், சுரம், இருமல், கோழை, உடலில் கடுப்பு,  உடல் வெளுத்தல், பலவீனம், கைகால் வற்றல், நாடி படபடத்தல், தண்டின் அடியில் திணவு எனும் குணங்கள் காணும்.

10) பித்தகபசயம் :
இந்நோயில் அதிக தூக்கம், அதிக சோம்பல், சுரம், வாந்தி, பேதி, இருமல், கோழையுடன் இரத்தம், கோழை அதிக நாற்றத்துடன் காணுதல், தலைசுற்றல், பிரமை, தாகம், மூக்கடைப்பு, குளிர், நெஞ்சில் சளி கட்டல், மூக்கு வறளல் எனும் குணங்கள் காணும்.

11) விகாரசயம் :
இந்நோயில் காதில் இரைச்சல், கண்கள் வெளுத்தல், உடல் வலிமை குறைதல், உடல் இளைத்தல், புண்கள் உண்டாதல், பிரமேகம், மயக்கம், விலாவில் வலி, வாந்தியில் இரத்தம் காணுதல், மூச்சோடு சேர்ந்து வாய் நாற்றம்,பசி, எரிச்சல், கைகால் குளிர்தல், உள்நாக்கில் பசபசப்பு - திணவு எனும் குணங்கள் காணும்.

12) தொந்தசயம் :
இந்நோயில் குரல் மாறுதல், சுரம், இருமல், கோழையுடன் இரத்தம் காணுதல், நடுக்கல், பேதி, நாக்கு கறுத்தல், வாய் நாற்றம், புலம்புதல், மலம் - சிறுநீர் கட்டுதல், வாந்தி, மேல்மூச்சு, வாயில் கசப்பு எனும் குணங்கள் காணும்.

உளமாந்தை ரோக நிதானம்

            சயத்தின் பிரிவாகிய இந்த நோய் குடலில் உள்ள கபம் குறைவாக  உள்ளபோது உண்ணுவதால் அந்த உணவு செரிக்காமல், வயிறு ஊதல், கழிச்சல், உடல் இளைத்தல், இருமல், வாந்தி எனும் குணங்களை உண்டாக்கும்.

உளமாந்தை நோய் வரக் காரணங்கள் :
  1. பசி எடுக்கும்போது உண்ணாமல், பசி மந்தமானவுடன் உண்ணுதல்
  2. பகலில் உறங்கி, இரவில் கண் விழித்து வேலை செய்தல்
  3. அதிகமாக மாமிச உணவை உண்ணுதல்
  4. புணர்ச்சிக்கு பின் மயங்கி விழுதல்
  5. சாராயம், கள் முதலியவற்றை அதிகமாகக் குடித்தல்
  6. அதிக ஓட்டம்

1) வாத உளமாந்தை :
இந்நோயில் மார்பிலும் - விலாவிலும் நோயை உண்டாக்கி, நினைவு தடுமாறல், இருமல், உள்சுரம், கழிச்சலில் சீழ் கலந்து வெளியாதல், வயிற்றில் கட்டிபோலத் திரண்டு இருத்தல், உடல் இளைத்தல், உணவில் விருப்பமின்மை, செரியாமை, கழித்தல், கைகால் மெலிதல் எனும் குணங்களைக் கொண்டிருக்கும்.

2) பித்த உளமாந்தை :
இந்நோயில் அடிவயிற்றில் தாங்க முடியாத வலி, வயிறு கட்டிபோல வீங்கிப் பெருத்து குத்தல் உண்டாகும். அக்கட்டி உருண்டு, திரண்டு வயிறு கனத்து சுரம், இருமல் உண்டாகும். கட்டி முதிர்ந்து பழுத்து உடையும்போது வாந்தி, மயக்கம், சன்னி எனும் குணங்களை உண்டாக்கும்.

 3) சிலேஷ்ம உளமாந்தை :
இந்நோயில் உடல் மெலிந்து, புண்போல நொந்து, அடிக்கடி வாந்தியாகும். மேலும் வாந்தியில் சீழ் கலந்து காணும். மனக்கலக்கம், மயக்கம், உடல் நடுக்கம், உள்சுரம், உடல் வெளுத்தல் எனும் குணங்கள் உண்டாகும்.

4) தொந்த உளமாந்தை :
இந்நோயில் உணவு உண்ணும்போது தொண்டையை அடைப்பது போல் வலி, உணவில் விருப்பமின்மை, நெஞ்சில் குத்தல், மனச்சோர்வு, உடல் வன்மை குறைதல், அதிக தூக்கம், உடல் முழுதும் திணவு, இருமல், அதிக நாற்றத்துடன் கோழை வெளியாதல் எனும் குணங்களைக் கொண்டிருக்கும்.

ரோக நிதானம் - கப / ஐய (Phlegmatic Diseases)

உடலில் கபமானது அதிகமாகும்போது மூக்கில் நீர் வடிதல், தொண்டையில் கோழை கட்டல், குரல் கம்மல், இருமல், வயிறு கடுத்து இரைதல், வெண்மையாகவும் - சீதம் கலந்தும் பேதியாதல், இரைப்பு, உடலிலும், முகத்திலும் மினுமினுப்பு, குடைச்சல், நடுக்கல், தலைபாரம், நெஞ்சில் கபம் கட்டிக் கொள்ளுதல், நாற்றம், வாந்தி, சுரம், தும்மல், பசிமந்தம் போன்ற குணங்கள் தோன்றும். கப நோய்களின் எண்ணிக்கை 96 என்று பொதுவாகக் கூறப்பட்டாலும் பல்வேறு நூல்களில் 20 வகையான கப நோய்கள் மட்டுமே கூறப்பட்டு இருக்கின்றது.


கப நோய்களின் வகைகள் :

1) இருமல் ஐயம் :

இந்நோயில் உடலில் குளிர் உண்டாகி, முகத்தில் நீரேறி, ஊதித் தளதளத்துக் காணும், மேலும் மார்பில் கட்டிய சளி இளகி இனிப்பாக வெளியேறும். உடல் வெளுக்கும்,மலத்தில் சீதம் கலந்து வெளுத்து கழியும், உடல் உஷ்ணம் கூடி, உள்சுரம் கண்டு, சிறுநீர் மஞ்சளாக இறங்கும்  என்னும் குணங்கள் காணும்.

2) காச ஐயம் :

இந்நோயில் உடல் குளிர்ந்து, கனத்து பாரமாகும். மேலும் நாடிகள் தளர்ந்து வலிமை குறையும், வாய் வறண்டு அதிக சூடு உண்டாகும். அடிமூக்குத் தண்டு வீங்கி, ஓயாத இருமல், திணவு காணும்.

3) சுவாச ஐயம் :

இந்நோயில் நெஞ்சில் கோழை கட்டி இருமல் உண்டாகும். மேலும் மூக்கடைத்து குறட்டை விடுவது போல மேல்மூச்சு வாங்கும், குளிர்சுரம், மயக்கம், மூக்கில் நீர் பாய்தல், மார்பும் - நெஞ்சும் அடைக்கும், வாய் வரளும், நீர் வேட்கை அதிகரிக்கும் என்னும் குணங்கள் தோன்றும்.

4) தீபன ஐயம் :

இந்நோயில் அதிக பசி, உடலில் எரிச்சல், நெஞ்சடைத்து அதிக துன்பம் உண்டாகும், உடல் முழுதும் வலித்து உடல்சூடு அதிகரிக்கும், கைகால்கள் குளிரும், உடல் கனத்து பருத்துக் காணும், உள்நாக்கில் பிசுபிசுப்பு என்னும் குணங்கள் தோன்றும்.

5) மந்த ஐயம் :

இந்நோயில் வயிறு மந்தம், அடிவயிறு கனத்தல், உடல் முழுதும் வியர்வை, பெருமூச்சு வாங்குதல், நெஞ்சு வறண்டு அதிக இருமல், வாயில் கசப்பு - துவர்ப்பு சுவைகள் தோன்றல், சிறுநீர் - மலம் கட்டும், கபம் அதிகரிக்கும் என்னும் குணங்கள் தோன்றும்.

6) வளி (வாத) ஐயம் :

இந்நோயில் வயிறு பொருமி, அடிவயிறு வழித்து நீர் இறங்கும், நீர் தாரையில் கடுப்பு, உடல் வீங்கி அழுத்தினால் குழி விழும், உதடும் பற்களும் கறுக்கும், உடல் முழுதும் வலி, மேக நோய் கண்டவரை போல சிறுநீரில் வெள்ளை கலந்து இறங்கும் என்னும் குணங்கள் தோன்றும்.

7) அழல் (பித்த) ஐயம் :

இந்நோயில் கண்கள் மயங்கி தலை கிறுகிறுக்கும், உறக்கமின்மை, வயிறு உப்பல், உணவு உண்ணாமை, வாய்நீர் அதிகமாக ஊறல், தொண்டையில் கோழை கட்டல், இருமலோடு பெருமூச்சு வாங்குதல், உடல் மஞ்சள் நிறமாதல் என்னும் குணங்கள் தோன்றும்.

8) இருதாது கலப்பு ஐயம் :

இந்நோயில் கபத்துடன் வாதம் அல்லது பித்தம் சேர்ந்து பாதிப்படைந்து நோயை உண்டாக்கும். இதனால் உடல் முழுதும் உஷ்ணம் அதிகரித்து, விக்கல், இருமல், பெருமூச்சு, அதிக சுரம், உடல் வலிமை குறைதல், உடல் எங்கும் எரிச்சல், உணவு உண்ணாமை, இருமலின் போது கோழை வெளியேறுதல், உடல் குளிர்ந்து மயிர்கூச்செறிதல் என்னும் குணங்கள் தோன்றும்.

9) முத்தாது கலப்பு (சன்னி) ஐயம் :

இந்நோயில் கபத்துடன் வாதம் மற்றும் பித்தம் இரண்டும் சேர்ந்து பாதிக்கும். இதனால் நா வறண்டு, உடல் குளிர்ந்து, எரிச்சலும் உண்டாகும். மேலும் இசிவு (வலிப்பு), உடல் வன்மை குறைதல், ஞாபகமறதி, தாடை, கன்னம், காது, மூக்கு, புருவம், உச்சி போன்ற இடங்கள் துடித்து படபடக்கும்.

10) சுர ஐயம் :

இந்நோயில் விட்டு விட்டு சுரம் காயும், உடல் கனத்து வலிக்கும். அடிக்கடி சுரம், சுரம் விடும்போது எல்லாம் உடலில் வியர்வை, உணவு உண்டவுடனே வாந்தி, வயிறு நொந்து உப்பும், மேல்மூச்சு, இருமல், நா கறுத்து வறண்டு நீர் வேட்கை என்னும் குணங்கள் தோன்றும்.

11) பெருங்கழிச்சல் ஐயம் :

இந்நோயில் வயிற்றில் குத்தல், சூலை நோயைப் போல வயிறு சுழன்று வீங்குதல், விலாப் பகுதியில் இரைச்சல், சிவந்த நிறத்தில் கழிதல், உடல் சோர்வு, மார்பும் நெஞ்சும் நோதல், வாய் வறண்டு இருமலோடு மூச்சு வாங்குதல், மிகுந்த நீர் வேட்கை, உடல் எரிச்சல் எனும் குணங்கள் தோன்றும்.

12) நீர் ஐயம் :

இந்நோயில் நீர் வேட்கை மிகுந்து, அடிக்கடி நீரை பருகச் செய்யும், நீரைக் குடிக்கும் போதெல்லாம் தொண்டையில் தடைபட்டு இறங்கும், அடிக்கடி சிறுநீர் வெளியாகும், குரல் கம்மல், இருமிக் கோழை கக்கல், பற்கள் குடைதல் என்னும் குணங்கள் தோன்றும்.

13) நெருப்பு ஐயம் :

இந்நோயில் அதிக கபத்தோடு வெப்பம் கூடி இருமலும் கோழையும் மிகும், உடல் நெருப்பு போன்று மிகுதியாக காயும், கைகால்கள், மூக்கு ஆகிய இடங்களில் எரிச்சல் உண்டாகும், நீர்வேட்கை கூடும், சில நேரங்களில் கையும் கால்களும் சில்லிடும், வயிறு நிறைய உண்டாலும் பசி எடுக்கும் என்னும் குணங்கள் தோன்றும்.

14) பூத ஐயம் :

இந்நோயில் வெறி கொண்டவரைப் போல கண்களை உருட்டி விழித்துப் பார்த்தல், ஊமையை போன்று பேசாதிருத்தல், திடீரென்று உரத்துப் பேசுதல், குறட்டையோடு மூச்சு வாங்குதல், இருமலோடு கொடி கொடியாக சளி வெளியாதல், உடலெங்கும் மிகுதியாக வியர்த்தல், பல்லை மிகக் கடித்தல், இனிமையுடன் பேசிக் கொண்டு இருக்கும்போதே சண்டையிடுதல் என்னும் குணங்கள் தோன்றும்.

15) முயலக ஐயம் :

இந்நோயில் உடல் முழுதும் வலிப்பு உண்டாகி உணர்ச்சியற்று தளரும், கண் சிவந்து காணும், கண்ணில் அதிக நீர் வடியும், உடல் கன்றி கறுத்துக் காணும், தன்னை அறியாமல் சிறுநீரும், மலமும் வெளியாகும். இருமலோடு பெருமூச்சு வாங்கும் என்னும் குணங்கள் காணும்.

16) வெறி ஐயம் :

இந்நோயில் வெறி நோயின் குணங்களான கண்களை விழித்துப் பார்த்தல், அடிக்கடி மீசையை முறுக்குதல்,பிறர்மேல் பாய்தல், பல்லைக் கடித்தல், கண் சிவத்தல், உடல் கறுத்தல், உறுமுதல், உதடு காய்ந்து போதல் என்னும் குணங்கள் தோன்றும்.

17) விகார ஐயம் :

இந்நோயில் உடலின் எல்லா இடத்திலும் ஏதோ ஓடுவது போன்ற எண்ணம், மனம் போனபோக்கில் பலவகைப் பாடல்களை மிடுக்குடன் பாடுதல், பெண்களின் மேல்கொண்ட இச்சையால் வேறொன்றிலும் மனம் செல்லாமல் இருத்தல், மனம் வருந்தி பலவாறாகக் பேசுதல், உணவின் விருப்பமின்மை, மயக்கம், முகம் வேறுபாடு அடைதல் என்னும் குணங்கள் தோன்றும்.

18) சுரோணித ஐயம் :

இந்நோயில் முழங்கால் குடைதல், முதுகு விலா உளைந்து நோதல், முழங்கால் முழங்கை பூட்டுகள் வீங்கி குடைச்சல் உண்டாதல், இருமிக் கோழை கக்கல், பெருமூச்சு, தொண்டையில் சளி கட்டல், நா வறண்டு நீர் வேட்கை மிகுதல், நா இனித்தல் என்னும் குணங்கள் தோன்றும்.

19) விரண ஐயம் :

இந்நோயில் தொண்டை புண்ணாகி சளியும் சீழும் கலந்து வெளியாதல், புறங்கழுத்து, கன்னம் ஆகியவை வீங்கி சுரம் உண்டாதல், குளிர் எடுத்தல், உடம்பு எரிதல், கொக்கென்ற இருமல் கூவல் உண்டாதல், தொண்டையும் நாவும் புண்ணாதல் என்னும் குணங்கள் தோன்றும்.

20) துர்கந்த ஐயம் :

இந்நோயில் தொண்டையில் புண் உண்டாகி, அதில் சீழும் குருதியும் தோன்றி, இருமல் பெருகி, மீன் கழுவிய நீர் போன்று ஒழுகி நாற்றம் உண்டாகும். மேலும் உணவை விழுங்க முடியாமல் போகும், அடிவயிறு, கை, கால்கள் வீங்கும், உடல் வற்றும், நீர்வேட்கை, வியர்த்தல் என்னும் குணங்கள் தோன்றும்.

21) நித்திய ஐயம் :

இந்நோயில் தும்மல், இருமல் உண்டாகி உடலை கறுகி வற்றச் செய்து, உடல் முழுதும் எரிச்சல் உண்டாகும். மேலும் குருதியைக் கெடுத்து உடல் வெளுக்கும், வாந்தி, குரல் கம்மல், பேச முடியாமை, தலை கிறுகிறுத்து கீழே விழுதல் என்னும் குணங்கள் தோன்றும்.

புதன், 26 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - ஊண் (நிண) கழிச்சல் / கிராணி (Chronic Dysentery)

            வயிற்றில் உள்ள பசித்தீ கேடு அடைந்து உண்ட உணவு செரிக்காமல் வயிற்றில் புளித்து, இடைவிடாது கழிச்சல் உண்டாகி, எளிதில் குணம் ஆகாமல், குடலைப் புண்படுத்தி மலத்துடன் நிணம் கலந்து வருவதால் இது நிணக்கழிச்சல் என்றும், குடல் சதை இற்று அதனுடைய ஊண் மலத்துடன் கலந்து வெளியேறுவதால் ஊண்கழிச்சல் என்றும் அழைக்கப்படும். இது 11 வகைப்படும் என்று கூறுவர்.

கிராணி உண்டாகக் காரணங்கள் :
  1. அதிசார நோயை சரியாக கவனிக்காமல் விட்டு குடல் புண்ணாவதால்
  2. உடலின் 7 தாதுக்களை அதிகப்படுத்துவதால்
  3. எளிதில் செரிக்காத, சரியாக சமைக்காத உணவை உண்பதால்
  4. சுனைநீர், சுண்ணாம்பு கலந்த நீர் போன்றவற்றை பருகுவதால்
  5. மலம் இளக்கும் மருந்துகளை அடிக்கடி உண்ணுதல்
  6. இரத்த இயக்க மாறுபாடு
  7. குடல் வாதம், குடல் இயக்க பாதிப்பு
  8. குடலில் இரத்தக்கட்டி இருப்பதால் இந்நோய் உண்டாகும்

கிராணி நோயின் வகைகள் :
1) வாதக் கிராணி :
இந்நோயில் நடுவயிற்றில் வலியும், பசியும் எடுக்கும். உடம்பு இளைத்து சீதக்கழிச்சல் உண்டாகும். மலத்துடன் காற்று அதிகமாக பிரிவதால் மலம் சிதறும். மேலும் மலம் கறுத்து, பழைய வெல்லப்பாகு போல இருக்கும்.

2) பித்தக் கிராணி :
இந்நோயில் நாடு வயிற்றில் தாங்க முடியாத வலி உண்டாகி மலம் பலநிறத்துடன் கழியும். உறக்கம் கெடும், நரம்புகள் தளரும். இற்றுப்போன வயிற்றில் ஊண் வெளியாகும்.உணர்வு அற்றுப்போகும். பேன் தலையை விட்டுப்போகும். கொடுக்கும் மருந்து பலனற்றுப் போகும்.

3) கபக் கிராணி :
இந்நோயில் மலம் கழியும்போது ஆசனவாய் எரிச்சலுடன் கடுக்கும். மேலும் மலம் அதிக நாற்றத்துடன் வெளுத்து இருக்கும். கைகால்கள் தளர்ச்சி அடையும். உட்காய்ச்சல், கண்கள் சிவந்து, மூக்கு - நாக்கு வரளும், குடல் நைந்து மலத்துடன் மெல்லிய தோல் வெளியேறும், அதிக விக்கல், உடல் சத்து குறையும், நினைவு கெடும் என்னும் குணங்கள் தோன்றும்.

4) தொந்தக் கிராணி :
இந்நோயில் அதிக காய்ச்சல், அதிக இரைச்சலுடன் மலம் வெளியேறுதல், குளிர், நடுக்கம், தலைவலி, உடல்சூடு, எரிச்சல், பால் போன்ற நிறத்தில் மலம் கழியும், அதிகமாக காற்று பிரியும் என்னும் குணங்கள் தோன்றும்.

5. உஷ்ண வாயு கிராணி :
இந்நோயில் வயிறு கனத்து ஊதும், வயிற்றில் இரைச்சல், கைகால் அசதி, மலம் தீய்ந்து வெளியேறுதல், உணவு செரிக்காமல் புளியேப்பம், உடல் வன்மை கெட்டு கறுத்து மெலியும் என்னும் குணங்கள் தோன்றும்.

6. அந்தர வாயு கிராணி :
இந்நோயில் உண்ட உணவு செரிக்காமல், கீழ்நோக்கியும் செல்லாமல் வயிற்றிலயே இருந்து புளிக்கச் செய்து, புளித்த ஏப்பம், வாந்தி, உணவில் சுவையின்மை, விலாவில் வலி, தாகம், விக்கல், உடலில் வெப்பம் அதிகரித்தல் என்னும் குணங்கள் தோன்றும்.

7. மூல வாயு கிராணி :
இந்நோயில் மூலவாயு (அபானவாயு) கீழ்க்குடலில் தங்கி உடலை வாட்டி, பசித்தீயைக் கெடுத்து, மந்தத்தை உண்டாக்கி, உண்ட உணவைச் செரிக்காமல் செய்யும். செரிக்காத உணவும், அபான வாயுவும் சேர்ந்து வயிற்றில் இரைச்சலையும், அடித்தொடையில் குத்தலையும் உண்டாக்கி, முளையை வெளியேத் தள்ளும். உடல் கிழத்தன்மை அடையும் என்னும் குணங்கள் தோன்றும்.

8. குன்ம கிராணி :
இந்நோய் நாட்பட்ட குன்ம நோயால் உண்டாகும். இந்நோயில் பேச இயலாமை, கண் ஒளி குறைந்து பீளை சேர்ந்து, தலை வியர்த்தல், தலைக்கனம், தலை நடுக்கல், உறக்கம், உடல் எரிச்சல், வயிறு உப்பி இரைதல், வயிற்றில் ஒருபுறம் மட்டும் வலித்து கழிச்சலை உண்டாதல் என்னும் குணங்கள் தோன்றும்.

9. கருப்பக் கிராணி :
இந்நோய் பெண்கள் கருவான ஒருசில மாதத்தில் தோன்றும். ஒருசில பெண்களுக்கு குழந்தை பெற்ற பிறகு உண்டாகும். இந்நோயில் வாந்தி, வயிறு இறைந்து கழிதல், வயிறு கடுத்து பலநிறமாக கழிதல், அடிக்கடி களைத்துப் போதல், கண்கள் மஞ்சளாதல், உடல் வெளுத்தல், கைகால் எரிச்சல், பெருமூச்சு என்னும் குணங்கள் தோன்றும்.

10. ஒட்டுக் கிராணி :
இந்நோயில் நோயாளிகள் படுக்கையில் இதமாக படுத்தல், இளைப்பு, அதிக வயிற்றுவலி, மார்பு, விலா, முதுகு வலி முதலியன தோன்றும்.ஒரே முறையில் மலம் கழியாமல் ஒவ்வொரு முறையும் சிறிது சிறிதாக கழிதல், கொப்பூழில் வளையம் போல இழுத்துப் பிடித்து வலித்தல் என்னும் குணங்கள் தோன்றும்.

11. சங்கர (எரிச்சல்) கிராணி :
இந்நோயில் உண்ட உணவு செரியாமல் வயிறு பொருமல், இரைந்து செரியாத கழிச்சல், ஆசனவாய் எப்போதும் ஈரமாக இருத்தல், உடலில் சிறுவியர்வை, சுரம், வாந்தி, மனத்துயரம், மார்பில் கோழை கட்டுதல், மயக்கம், கண்கள் குழி விழுந்து இருள் அடைதல் என்னும் குணங்கள் தோன்றும்.

ரோக நிதானம் - பெருங்கழிச்சல் / அதிசாரம் (Diarrhea)

            நோயால் இளைத்த மிருகமாமிசம், கெட்டு உலர்ந்த அல்லது அழுகிய மாமிசம், அழுகிய உணவுகள், நன்றாக வேகாத பதார்த்தங்கள், எளிதில் செரிக்காத உணவுவகைகள், கள் சாராயம் குடித்தல், காரமான பொருட்கள், வயிற்றில் புழுக்கள் அதிகமாகக் காணப்படுதல், அபானவாயு, தும்மல், மலம், சிறுநீர், கொட்டாவி, பசி, தாகம், இருமல், நித்திரை, கண்ணீர், சுக்கிலம், சுவாசம், வாந்தி, இளைப்பு என்னும் உடலின் 14 வேகத்தை அடக்குதல் போன்ற காரணங்களால் இந்நோய் உண்டாகிறது.

            மேலும் வாயு அதிகரித்து 7 தாதுக்களையும், பசியையும், கெடுத்து மலப்பையில் சேர்த்துக் கொண்டு கெட்டியாயிருக்கிற மலத்தை நீராகக் கறைத்து ஆசன வாயின் வழியாய் ஒழுகச் செய்யும். இது மார்பு, குதம், வயிறு இவ்விடங்களில் நோதல், உடம்பு இளைத்தல், அசீரணம் என்னும் குணங்கள் கொண்டது. மேலும் இரைப்பை புற்று, இரைப்பை சுரப்புகள் அதிகமாகச் சுரத்தல், இரைப்பை புண், சிறுகுடலில் உண்டாகும் இளைப்பு, சிறுகுடல் ஊட்டச்சத்தைச் சரியாக உறிஞ்ச இயலாத நிலையில், ஒட்டுண்ணிகள், நுண்கிருமிகள், குடல் புற்று, அடிக்கடி மலமிளக்கும் மருந்துகளை உண்ணுதல், கணைய புற்று, பெருங்குடல் பாதிப்பு, நாட்பட்ட நோய்களுக்கு நீண்டநாட்கள் மருந்து உண்ணுதல் போன்ற காரணங்களாலும் இந்நோய் உண்டாகிறது. இந்நோய் 8 வகைப்படும். சில நூல்கள் அசீரணத்தால் உண்டாகும் கழிச்சளையும் சேர்த்து 9 வகைப்படும் என்றும் கூறுகிறது.

அதிசார நோயின் வகைகள் :
1. வாத அதிசாரம் :
இந்நோயில் வயிறு பொருமி நொந்து, சூலைபோல வலித்து, வயிற்றில் காற்று கூடி இரையும். நீர் இறங்காத, அடிக்கடி கழியும். உண்ட உணவு சரியாகச் செரியாமல் கழியும் மலம் மஞ்சள் - கறுப்பு நிறத்தில் அதிக துர்நாற்றத்துடன் கழியும். உடல் வெளுக்கும். உணவு சீரணிக்காமல் கழியும், புளிப்பு நெஞ்சில் தங்கி இருத்தல் என்னும் குணங்கள் தோன்றும்.

2. பித்த அதிசாரம் :
இந்நோயில் வயிறும் ஆசனவாயும் கடுத்து, மலமானது முதலில் மஞ்சள் நிறத்திலும், பிறகு இரத்தம் கலந்தும், வறண்டு, நுரை கூடி, மிகுந்த காற்று பரிந்து துர்நாற்றத்துடன் கழியும். உடல், கைகால் வீங்கி, காய்ச்சல் கண்டு, உடல் வெளுத்து, தலை நோதல், வாந்தி என்னும் குணங்கள் தோன்றும்.

3. சிலேத்தும அதிசாரம் :
இந்நோயில் மலம் கேட்ட நாற்றத்துடன், நுரைத்து, வயிறு அடிக்கடி வலித்து, ஊனுடன் சேர்ந்து கழியும். மேலும் சுவையின்மை, இருமல், மார்புச்சளி, பெருமூச்சு, மயிர் சிலிர்த்தல், ஆசனவாய் கடுத்தல், உடல் முழுதும் திணவு எடுத்தல் என்னும் குணங்கள் தோன்றும்.

4. திரிதோஷ அதிசாரம் :
இந்நோயில் வாத - பித்த -சிலேத்தும அதிசாரங்களில் தோன்றும் அனைத்து குணங்களும் சேர்ந்து தோன்றும். மேலும் உள்காய்ச்சல், வெளியில் குளிர்ச்சி, விக்கல், வாந்தி, இருமல், மேல்மூச்சு, வயிறு இரைந்து இரத்த சீதமாய் கழிதல், உறக்கம், உடல் கடுப்பு, மேல் வலி, உணர்ச்சியற்று இருத்தல் என்னும் குணங்கள் தோன்றும்.

5. சுர அதிசாரம் :
இந்நோய் சுர நோய்க்குத் துணை நோயாக வரும். இதைப் பற்றிச் சுர நோயின் ரோக நிதானத்தில் விரிவாகக் காணலாம்.

6. தோஷ அதிசாரம் :
இந்நோய் குழந்தைகளுக்குப் பறவைகளின் பார்வையால் உண்டாகும் தோஷத்தால் ஏற்படும் என்று கூறுவர்.

7. பய துக்க அதிசாரம் :
இந்நோய் அதிக பயம் மற்றும் துக்கத்தால்  தூக்கத்தின் காரணமாக வாத - பித்த - கப தாதுக்கள் தம் இயல்புமாறி கழிச்சலை உண்டாக்கும். இந்நோயில் தாதுக்களின் நிலை அறிந்து அவற்றைத் தன்நிலைக்கு கொண்டு வருவதால் கழிச்சலை குணமாக்கலாம்.

8. மந்த அதிசாரம் :
இந்நோய் உண்ட உணவு செரியாமல் செரியாமல் பேதியாகும். இந்நோயில் மலம் மந்தத்துடன் துர்நாற்றத்துடன் பேதியாதல், வயிற்றில் நோய், வாயில் நீருறல் என்னும் குணங்கள் தோன்றும். இதனை அசீரண பேதி என்றுங் கூறுவர்.

9. ரத்த அதிசாரம் :
இந்நோய் அதிக காரம், புளிப்பு கொண்ட உணவுகளை உண்பதாலும், இரசம், பாடாணம் கூடிய மருந்துகளை அதிகமாகவோ அல்லது அதிக நாட்கள் உண்பதாலும், மேலும் வயிற்றை புண்ணாக்கும் குன்றிமணி, சித்திரமூலம், மூசாம்பரம், சேங்கொட்டை போன்ற பொருட்களைக் கொண்டு செய்த மருந்துகளை அளவு தெரியாமல் உண்பதாலும் மலத்துடன் இரத்தம் கலந்து பேதியாகும். இந்நோயில் சில வேளைகளில் மலத்துடன் சீதம் அல்லது பச்சை இரத்தமும் கலந்து வெளிப்படுவதை சீதக் கழிச்சல் (சீதபேதி) என்று கூறுவர்.

ரோக நிதானம் - காமாலை (Jaundice)

            பாண்டு நோய் முற்றிய நிலையில் பித்தத்தை அதிகரிக்கும் உணவை உண்பதாலும், அசுத்தமுள்ள நீரை பருகுவதாலும், பருவநிலை மாறுபாடு அடைவதாலும் காமாலை உண்டாகிறது. மேலும் பித்தப்பை குழாயில் அடைப்பு உண்டாகி பித்தம் குடலுக்கு செல்லாமல் இரத்தத்தில் கலப்பதாலும், பித்தப்பை குழாயில் அடைத்திருக்கும் கற்கள், குடல் புழுக்கள், பித்தப்பை மற்றும் அதன் அருகில் உள்ள உறுப்புகளில் புற்று, கட்டி, தொற்று, அழற்சி, நிணநீர் நாளங்களில் வீக்கம், பித்தப்பை சுருக்கம் போன்றவற்றின் காரணமாகவும் இந்நோய் உண்டாகிறது.

                மேலும் துருசு, செம்பு, காரீயம், வெள்ளை பாடாணம் போன்றவற்றைக் கொண்டு செய்யும் மருந்துகள் சரியாக முடிக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் அதை உண்பதாலும், பாம்புக்கடி, கள், சாராயம், ஈரலில் தொற்று, அழற்சி, பாதிப்பு போன்ற காரணங்களாலும், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிப்பதாலும் இந்நோய் உண்டாகிறது என்று அறியப்படுகிறது. இந்நோயில் மொத்தம் 13 வகைப்படும்.

காமாலை நோயின் வகைகள் :

1. ஊது காமாலை :
இந்நோயில் கண்களிலும், வாயிலும் நீர் வடிதல், உடல் முழுதும் வீக்கத்துடன் கனத்தல், திமிர், எரிச்சல், உள்ளங்கை - கால் - கண் - உடல் இவைகளில் வெளுப்பு, கை கால் ஒச்சல், நடுக்கல், இளைப்பு, மலம் கட்டுதல், முகத்தில் மஞசள் நிறம், காது மந்தம், தலைபாரம், தலைசுற்றல், தயக்கம், மஞ்சள் மூத்திரம் என்னும் குணங்கள் தோன்றும்.

2. வறள் காமாலை :
இந்நோயில் கைகால் வற்றல், அசதி, மலம் கருத்தல், சிறுநீர் சிவந்து அல்லது கறுத்து அருகலுடன் கழிதல், பார்வை மந்தம் உடல் கறுத்தல் என்னும் குணங்கள் தோன்றும்.

3. வாத காமாலை :
இந்நோயில் வயிறு பொருமல், வீக்கம், மலபந்தம், புறங்கால் - முகம் அதைத்தல், சோம்பல், உடல் கடுத்தல், கண்கள் வீங்குதல், உறக்கமின்மை என்னும் குணங்கள் தோன்றும்.

4. பித்த காமாலை :
இந்நோயில் மயக்கம், தயக்கம், உறக்கமின்மை, படுக்கையாகக் கிடத்தல், அசீரணம், மேல்மூச்சு, உண்ட உணவு அப்படியே பேதியாதல், வயிறு இரைச்சல், அசதி என்னும் குணங்கள் தோன்றும்.

5. சிலேத்தும காமாலை :
இந்நோயில் தேகம் உருவழிந்து போதல், இருமல், தலை - முகம் இவற்றில் வியர்வை, மேல்மூச்சு, உடல் நடுக்கம், நெஞ்சு கனத்தல், நடை தளரல், கண்கள் சிவத்தல் என்னும் குணங்கள் தோன்றும்.

6. வாத சிலேத்தும காமாலை :
இந்நோயில் வாத, சிலேத்தும காமாலைகளின் குணங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றும்.

7. சிலேத்தும பித்த காமாலை :
இந்நோயில் சிலேத்தும, பித்த காமாலைகளின் குணங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றும்.

8. தொந்தக் காமாலை :
இந்நோயில் வாத, பித்த, சிலேத்தும காமாலைகளின் குணங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றும்.

9. மஞ்சள் காமாலை :
இந்நோயில் மஞ்சள் நிறமான சிறுநீர், உடல் முழுதும் ஊதல், தளர்ச்சி, முகம் - கால் - கை - உண்ணாக்கு - கண்ணின் வெண்படலம் இவைகள் மஞ்சள் நிறமாதல், முகத்தில் மினுமினுப்பு, உணவில் வெறுப்பு, அழுகை, மனச்சலிப்பு, சுவாசத்தில் மஞ்சள் நாற்றம் வீசுதல், தாதுநஷ்டம், மலபந்தம் என்னும் குணங்கள் தோன்றும்.

10. அழகு காமாலை :
இந்நோயில் கைகால் அசதி, கண் - சிறுநீர் இவைகளில் மஞ்சள் நிறம், ஆண்குறியில் எரிச்சல், அசீரணம், வயிற்று உப்புசம், உடல் வெப்பத்துடன் மினுமினுத்தல் என்னும் குணங்கள் தோன்றும்.

11. செங்கமலக் காமாலை :
இந்நோயில் தாமதகுணம், உடல் தளர்த்தல், சோம்பல், சிறுநீர் சிவந்து அல்லது மஞ்சள் நிறத்துடன் அகுறைந்த அளவில் கழிதல், உடலும் நகமும் வெளுத்தல், சுரம், உண்ணாக்கு - நாவு - உமிழ்நீர் இவைகளில் மஞ்சள் நிறம் என்னும் குணங்கள் தோன்றும்

12. கும்ப காமாலை :
இந்நோயில் உடல் கண்டுகண்டாக வீங்குதல், அடிக்கடி களைத்தல், வியர்த்தல், உடலும் சிறுநீரும் மஞ்சள் நிறமாகக் காணுதல், மாலைநேரத்தில் வியர்வை, கண்சிவத்தல், உடல் சோர்வு, வாதத்தின் ஆதிக்கம் உடலில் அதிகமாக இருத்தல் என்னும் குணங்கள் தோன்றும்.

13. குன்ம காமாலை :
இந்நோயில் உணவு செரிக்கும் காலத்தில் அடிவயிறு வலித்தல், வாந்தி, கண்களில் மஞ்சள்நிறம், மஞ்சள் நிறத்துடன் குழம்பிய சிறுநீர், வாய் வெளிர்ந்து போதல், பிரமை, இருமல், இளைப்பு என்னும் குணங்கள் தோன்றும்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - வெளுப்பு / பாண்டு (Anemia)

            இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பு மூலக்கூறுகள் அளவில் குறைவதால் உடலின் இயற்கை நிறம் வேறுபட்டு கண்கள், நகக்கண்கள், நாக்கு முதலியன வெளுத்துக் காணப்படுவது வெளுப்பு அல்லது பாண்டு எனப்படும். இந்நோய் 5 வகைப்படும். சில நூல்களில் 6 வகை என்றும் கூறப்பட்டுள்ளது.

பாண்டு உண்டாகக் காரணங்கள் :

            குருதியின் வன்மையை குறைக்கும் புளிப்பு, உப்புச் சுவையுள்ள பொருட்களை அதிகமாக உண்பதாலும், தாம்பூலம் (வெற்றிலை - பாக்கு, புகையிலை) அதிகமாக எடுத்துக் கொள்வதாலும், கள், சாராயம் போன்றவற்றை அதிகமாக குடிப்பதாலும், அதிசாரம் என்னும் நோயால் துன்புற்றவர்களும், நெருப்பிற்கு அருகில் இருந்து நெடுநேரம் வேலை செய்பவர்களுக்கும், பகல் உறக்கம் கொள்பவர்களுக்கும், சரியாக செய்து முடிக்காத மருந்துகளை தேவைக்கு அதிகமாக உட்கொண்டாலும்,குறிப்பிட்ட நாள் அளவிற்கு மேல் நீண்ட நாட்கள் மருந்து உட்கொண்ட நிலையிலும் இந்நோய் உண்டாகும்.

            மேலும் இரத்தவாந்தி, இரத்தக் கழிச்சல், நிணக்கழிச்சல், குன்மம், இரத்தமூலம், எருவாய் சிறுமூலம், செண்டுமூலம், பெருமூலம், தமரகமூலம், சித்த மூலம், முக்குற்ற மூலம், சுருக்கு மூலம், உணவுக்குழல், வயிறு, குடல் பகுதிகளில் உண்டாகும் புற்றுநோய், இளைப்பு, குருதி மூக்கடைப்பு, பெரும்பாடு போன்ற நோய்கள் நீண்டகாலம் இருந்தாலும் இந்நோய் உருவாகும்.

பாண்டு நோயின் வகைகள் :

1) வாதப்பாண்டு :

இந்நோயில் குடல் புரட்டி, அடிவயிற்றில் வலி, நீர்வேட்கை, பசி இல்லாமை, இரத்த நாளங்கள் கறுத்து பரபரப்பாகி காணுதல், உடல் நடுக்கம், கண் வெளுப்பு, உடல் வெளுத்து வீங்குதல், வீங்கிய இடங்களில் வலி, தலைவலி, மலம் தீய்ந்து வெளிப்படுதல் போன்ற குணங்கள் காணும்.

2) பித்தப்பாண்டு :

இந்நோயில் உடல் வெளுத்து மஞ்சள் நிறம் அடைந்து நாக்கு, கைகால்கள் வெளுத்து, கண் பார்வை மங்கும். அதிக தாகம், மயக்கம், வாய் காரம் அல்லது கசப்புச் சுவையுடன் இருத்தல், நெஞ்சை இறுக்கிப் பிடிப்பது போல மூச்சு முட்டுதல், தலை கிறுகிறுத்தல், குளிர்ச்சி தரும் பொருட்களில் விருப்பம், புளியேப்பம், வாய் நாற்றம், வாய் புண்ணாதல், அடிக்கடி மஞ்சள் நிறத்தோடு கழிதல் போன்ற குணங்கள் காணும்.

3) சிலேத்துமப்பாண்டு :

இந்நோயில் தோல் மிக வெளுத்து, நரம்புகள் புடைத்து, நா உப்புக் கரித்தல், மயிர் சிலிர்த்தல், வாந்தியாதல், குரல் கம்மல், அடிக்கடி தும்மல், இருமிக் கோழையைக் கக்கல், மயக்கம், இடுப்பு நோதல், ஆண்மைக்குறைவு, அடிக்கடி சீறிச் சினம் கொள்ளுதல், சோர்வும், தளர்வும் உண்டாதல் போன்ற குணங்கள் காணும்.

4) முக்குற்றப்பாண்டு :

இந்நோயில் சுவையின்மை, இரைப்பு, மேல்மூச்சு வருதல், அதிக இளைப்பு, உடல் வன்மை குறைதல், இதயம் அதிகமாக துடித்தல், உடல் சூடு கண்டு அடிக்கடி சிறுநீர் கழிதல், வெப்பமும், தயக்கமும் உண்டாதல், தும்மல், உடல் முழுமையும் ஊதல் போன்ற குணங்கள் காணும்.

5) விஷப்பாண்டு :

இந்நோயில் உடலுக்கு ஒவ்வாத பொருட்களை உண்டதால் பிறந்த நஞ்சின் காரணமாக உடல் வெளுக்கும். மேலும் அதிக நீர்வேட்கை, வாந்தி, விக்கல், இருமல், சுவையின்மை, பெருமூச்சு வாங்குதல், உடல் முழுமையும் வீங்கி, நரம்புகள் புடைத்து, உடல் சூடாகும்.

6) மண்ணுன் பாண்டு :

இந்நோய் சிறுகுழந்தைகளும், சிறு வயதினரும், கருவுற்றவரும் மண், சாம்பல், செங்கல், திருநீறு, கற்பூரம் போன்றவற்றின் மீது விருப்பம் கொண்டு அளவுக்கு அதிகமாக உண்பதால் உண்டாகிறது. இந்நோயில் உண்ட பொருளுக்கு ஏற்ப வயிறு ஊதல், செரியாமை, வாந்தி, கழிச்சல், சுரம், வயிற்றுப்புழு, போன்ற குணங்கள் கண்டு, உடல் மெலிந்து குருதி வற்றி, உடல் வெளுத்து, வீங்கி, இதயம் அதிகமாகத் துடிக்கும்.


            இதுவரை கூறிய 6 வகையான பாண்டு நோய்களைத் தவிர உடலில் இரத்தத்தின் அளவு குறைவதால் உடற் கட்டுகள் ஏழும் குறைந்து மெலிந்து, உடல் வீங்கி, நிறம்மாறி, மஞ்சள் அல்லது நீலநிறம் அடைந்து, அதிக தாகம், அடிக்கடி மயக்கம், மனச்சோர்வு, அறிவு தடுமாற்றம், ஆண்மைக்குறைவு போன்ற குணங்களில் ஏதேனும் ஒன்றைக் கொண்ட நீலப்பாண்டு, அலசப் பாண்டு, அலிமுகப்பாண்டு என்ற மூன்று வகையான நோய்களும் உண்டாகும். இவை முன்கூறிய குணங்களையே கொண்டிருப்பதால் இவற்றை தனியாகக் கூறவில்லை.

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - நீர்வேட்கை

            இந்த நோயானது அடிக்கடி நீரைப் பருக வேண்டும் என்ற உணர்வைக் கொடுக்கும். இது தனி நோயாகவும், சில நோய்களுக்குத் துணை நோயாகவும் வரும். அதாவது விரைவில் செரிக்காத உணவை உண்பதால் அந்த உணவு செரிக்கும்வரை நீர்வேட்கையை உண்டாக்கும். அல்லது பித்தம் அதிகரித்து அதனால் உண்டாகும் நோய்களிலும் உடலின் நீர்சத்து குறைதல், மற்றும் அதிகளவு நீர் வெளியேறுதல், வாந்தி, பேதி, நீரிழிவு போன்ற நோய்களாலும், அதிக ஆடல், பாடல், ஓடுதல் போன்ற செயல்களாலும் இந்நோய் உண்டாகிறது.

            இந்நோயில் நா வறண்டு போதல், நீரைப் பருக வேண்டும் என்ற இச்சை, நீரைப் பருகினாலும் தாகம் அடங்காமை, இளைப்பு, மயக்கம், உடலில் ஒருவித நடுக்கம், உடல் எங்கும் எரிச்சல், உதட்டை நாவால் நனைத்தல், குரல் கம்மல் போன்ற குணங்கள் உண்டாகும். இந்நோய் தாகம், நாவறட்சி என்ற வேறு பெயரிலும் கூறப்படும். இது 6 வகைப்படும்.


நீர்வேட்கை நோயின் வகைகள் :

1. வாத தாகம் :

இந்நோயில் உடல் வாடிக் கறுத்தல், தலை சுற்றல், மனக்கலக்கம், சுவையை உணர இயலாமை, காதுமந்தம், அதிக தூக்கம், உடல் வலிமை குறைதல், குளிர்ந்த நீரைப் பலமுறை பருகினாலும் தாகம் அடங்காமை போன்ற குணங்கள் உண்டாகும்.

2. பித்த தாகம்:

இந்நோயில் உடல் எப்போது வெப்பமாக இருத்தல், நாக்கு, உதடு, அண்ணாக்கு வறண்டு போதல், தொண்டை, நாக்கு சிவந்து முள்போல இருத்தல், நா எரிதல், தொண்டை புகைத்தல் போன்ற குணங்கள் தோன்றும்.

3. கப தாகம் :

இந்நோயில் தொண்டை அடைத்துக் கொண்டதுபோல உணர்வு, வாய் இனித்தல், வயிருப் பொருமல், பசியின்மை, தலைநோய், உடல் குளிர்தல், வாய் சுவை அறியாமை, உணவு செரியாமை போன்ற குணங்கள் தோன்றும்.

4. தொந்த தாகம் :

இந்நோயில் சன்னி, நீரிழிவு, இளைப்பு நோய்கள் முற்றி, வாத-பித்த-கப தாக நோய்களின் குணங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றும்.

5. இரசக்குற்ற தாகம் :

இந்நோய் உடலின் ஏழு தாதுக்களில் இரசம் என்ற தாது இரத்தமாக மாறும்போது உண்டாகும். மேலும் அதிகமான இரத்தம் வெளியேறினாலும் உண்டாகும். இதனால் அதிக தாகம், நா வறண்டு போதல், மூளைக் கலங்கி அடிக்கடி இளைப்பு உண்டாதல் போன்ற குணங்கள் காணும். சில நேரங்களில் மரணமும் ஏற்படும். 

6. செரியாமை தாகம் :

இந்நோய் இனிப்பு, உப்பு, எளிதில் செரிக்காத உணவு வகைகளை உண்பதால் உண்டாகிறது. மேலும் நோயுற்ற காலங்களில் அதிக தூரம் நடப்பதாலும், அதிக உணவை உண்பதாலும் இந்நோய் உண்டாகிறது.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - வாயில் உண்டாகும் நோய்கள்

                சித்த மருத்துவத்தில் பொதுவாக அனைவருக்கும் வரக்கூடிய வாய் (உதடு) நோய் என்ற பிரிவில் 11 வகைகள், நாக்கு நோய் என்ற பிரிவில் 7 வகைகள் என 18 வகையான நோய்களும், குழந்தைகளுக்கு வரக்கூடிய அக்கரம் என்ற 7 வகையான நோய்களும், மேலும் நாமுள், நா நாற்றம் என்ற இரண்டு வகை நோய்கள் என்ற 9 நோய்களும் என மொத்தம் 27 வகையான நோய்கள் கூறப்படுகிறது. (இவற்றில் அக்கரம், நாமுள், நாநாற்றம் போன்றவற்றை குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்கள்பற்றிக் காணும்போது விரிவாகக் காண்போம்.)

உதட்டு நோய் ரோக நிதானம்

உதட்டில் வரும் வியாதிகள் வாதம், பித்தம், கபம், முக்குற்ற கலப்பு (தொந்தம்), சதை, நீர், மினுமினுப்பு, குருதி, குட்டம், வெடிப்பு, அடிபட்ட வீக்கம் என்று 11 வகைப்படும்.

உதட்டு நோய் வகைகள் :

1. வாத உதட்டு நோய் :

இதில் உதடுகளில் கத்தியின் வாயைப் போல் கூர்மையான வெடிப்புகளும், மறத்தலும் அதிக நோய் உண்டாகும்.

2. பித்த உதட்டு நோய் :

உதடுகளில் அதிக எரிச்சலுடன் கடுகை போல் மஞ்சள் நிறமான கொப்புளங்கள் உண்டாகும். அப்போது அதிலிருந்து வியர்வை கசிவு உண்டாகும். அக்கொப்புளங்கள் சீக்கிரத்தில் உடைவதாயிருக்கும்.

3. சிலேத்தும உதட்டு நோய் :

உதடுகளில் அதிக சீதளத்தைக்கொண்டு சகிக்கக்கூடாத நோயையும், வீக்கத்தையும், வெளுப்பான சிறிய கொப்புளத்தையும் உண்டாக்கும். அதிலிருந்து வியர்வை பெருகும்.

4. முக்குற்ற கலப்பு (தொந்தம்) உதட்டு நோய் :

உதடுகளில் வெடிப்பு, அதிக நோய் மரத்தல், கொப்புளங்கள் எழும்புதல், அதில் மாறாது சலம் வடிதல், துர்கந்தம், ஒரு வேளை வாடுதல், ஒரு வேளை உப்புதல், வறளல் என்னும் இக்குணங்களை உண்டாக்கும்.

5. சதை உதட்டு நோய் :

உதடுகளில் சிவந்த மாமிசத்தை ஒத்த இரணத்தை உண்டாக்கி அதிலிருந்து அந்த நிறமான கிருமிகள் நெளிவதும், நமைச்சலும் நோயும் உண்டாகும்.

6. நீர் உதட்டு நோய் :

உதடுகளில் வாத சிலேத்துமங்களால் நீர்க்குமிழியைப் போல் மாமிசத்தை வளரும். இதில் சலமும் சீழும் கசியும்.

7. மினுமினுப்பு உதட்டு நோய் :

உதடுகளில் எண்ணெய் தடவினது போல் மினுமினுத்த வீக்கம், அதில் கொழுப்பைப் போல் நல்ல மிருது வியர்வை, மிகுந்த தினவு என்னும் இக்குணங்களை உண்டாக்கும்.

8. இரத்த உதட்டு நோய் :

உதடுகள் ரத்த நிறமாகவும், ரத்தத்தை கக்குவது போலவும் இருக்கும்.

9. குட்ட உதட்டு நோய் :

உதடுகளில் சிறிய பேரிச்சங்காயை போன்ற வீக்கத்தை உண்டாக்கி மேலும் சிவந்த நிறத்தையும் உண்டாக்கும்.

10. வெடிப்பு உதட்டு நோய் :

இது வாய்வு உதட்டில் சேரும்போது பிறந்து அவ்வுதடுகளில் வெடிப்பை உண்டாக்கும்.

11. வீக்கம் உதட்டு நோய் :

உதடுகளில் காயங்கள் படும்போது பிறந்து அந்த இடத்தில் கட்டிகளை உண்டாக்கி அவை உடையும் படிச்செய்து இரணம் அல்லது வெடிப்பை உண்டாக்கும். அவைகளில் தினவும் அற்ப வலியும் இருக்கும்.


நாக்கு நோய் ரோக நிதானம்

            நாவில் ஏற்படும் நோய்கள் நாக்கரணை, நாக்குப்புற்று, நாக்குப் பிளவை, நாக்குக் கிரந்தி, நாக்குச் சிலந்தி, உள்நாக்கு 6 வகைப்படும். சிலர் நாக்குப்புண் என்ற நோயையும் சேர்த்து 7 வகையாகக் கூறுவர். இவை ஆண்களுக்கு நாக்கின் வலது புறத்திலும், பெண்களுக்கு நாக்கின் இடது புறத்திலும் உண்டாக்கும். இவற்றில் நாக்கரணை, நாக்குப்புற்று, நாக்குப் பிளவை ஆகிய நோய்களில் நாக்கின் கீழ் சோறு போல வெளுத்த நிறத்தோடு குருக்கள் தோன்றி, காதில் குத்தல், தலைவலி, வாயில் நீர் வடிதல், ஒக்காளம், பிடரியில் திமிர், நாவின் ஒருபுறத்தில் தடித்து சுண்ணாம்பு பட்டு வெந்ததுபோலப் புண்ணாகி, தொண்டை வறண்டு, பேசும்போது நாக்கு தடுமாறி குழறும் போன்ற குணங்கள் தோன்றும்.

நாக்கு நோய் வகைகள் :

1. நாக்கரணை :

நாக்கு முழுதும் வெடித்தல், அவ்வெடிப்புகளில் முள்தைத்தது போல் அருகுதல், மரத்தல், பழுத்த இலையைப்போலிருத்தல் என்னும் குணங்களை உண்டாக்கும்.

2. நாக்குப்புற்று :

நாக்கு முற்றிலும் காங்கையை கொண்டு சிவப்பாகி அதில் மாமிச நிறமான சிறு சிறு கொப்புளஙகளை உண்டாக்கும்.

3. நாக்குப்பிளவை :

நாவெல்லாம் இலவமுட்களைப் போல் தடித்தும் வெளுத்தும் நெருங்கியும் நோயைத் தருகின்ற கொப்புளங்களை உண்டாக்கும்.

4. நாக்கு கிரந்தி :

சிலேத்தும பித்தங்களை கொண்டு நாவின் கீழ் வீக்கத்தை யுண்டாக்கும். இதனால் நாமரத்து தடித்து உயரும். அவ்வீக்கம் பழுத்தால் புலால் நாற்றம் வீசுவதும் மாமிசம் கரைவது மாயிருக்கும்.

5. நாக்குச் சிலந்தி :

அடிநாவின் கீழ் நுனிநாவைப் போல் தடித்த வீக்கத்தை உண்டாக்கும். இதனால் மரத்தல் அந்த இடத்தில் சிறு சிறு முளைகளைப் போல் கொப்புளம் எழும்புதல், தினவும் நோயும் அதிகரித்தல், வாயில் எரிச்சலுடன் நீர் வடிதல், உணவு உண்ண இயலாமை என்னும் குணங்களை உண்டாக்கும்.

6. உள்நாக்கு :

உண்ணாக்கில் வீக்கத்தை உண்டாக்கும். அப்போது முன்பு சொல்லிய நாக்குச் சிலந்தி நோயின் குணங்களுடன் இருமலும், அருகுதலும் உண்டாகும். இதனை உண்ணாக்கென்பர்.


வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - சுவையின்மை / அரோசிகம்

        சுவையின்மை நோய் உடலின் கேடாலும், மனதின் கேடாலும் உண்டாகிறது. இதனால் உண்ணும் உணவின் சுவையை அறிய முடியாமல் போகும். உடலின் கேட்டினால் உண்டாகும் சுவையின்மை நோயானது வாதம், பித்தம், கபம் போன்ற தாதுக்களின் பாதிப்பினால் உண்டாகும். மனதின் கேட்டினால் வரும் சுவையின்மை நோயானது மனக்கலக்கம், பீதி, மிகுந்த மனமகிழ்ச்சி ஆகிய மனதின் வேறுபாட்டால் உண்டாகும்.


சுவையின்மை நோயின் வகைகள் :

1) வாதச் சுவையின்மை :

வாதம் மாறுபாடு அடைவதால் உண்டாகும் இந்நோயில் வாய் எப்போதும் துவர்ப்பாகத் தோன்றுவதுடன், உண்ணும் எந்தப் பொருளும் துவர்ப்பாக இருக்கும். மேலும் பல்கூச்சம், ஒக்களித்தல் முதலிய குணங்கள் தோன்றும்.

2) பித்த சுவையின்மை :

பித்தம் மாறுபாடு அடைவதால் உண்டாகும் இந்நோயில் வாயில் கசப்பு அல்லது புளிப்பு சுவையுடன் இருக்கும், உண்ணும் பொருட்களும் இச்சுவையுடன் காணப்படும், வாய் குமட்டிக் குமட்டி ஒக்களித்தல் என்னும் குணங்களுடன் தோன்றும்.

3) கபச் சுவையின்மை :

கபம் மாறுபாடு அடைவதால் உண்டாகும் இந்நோயில் வாய் புலால் மனத்தோடு, கோழை அதிகரித்து, ஒருவித வெறுப்பு தோன்றுவதுடன், கோழையும் வாய்நீரும் இனிப்புச் சுவையுடன் காணும். அடிக்கடி ஒக்காளமும் காணும்.

4) தொந்தச் சுவையின்மை :

மூன்று தாதுக்களும் கேடு அடைவதால் உண்டாகும் இந்நோயில் முன்சொன்ன மூன்று குணங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து காணும். ஒக்காளம் மிகவும் அதிகமாகத் தோன்றும்.

5) மனச் சுவையின்மை :

இந்நோயில் மனக்கலக்கம், பீதி, துயரம், கோபம் போன்ற காரணங்களால் மனநிலை மாறி, எப்போதும் வாயில் நீர் ஊறி, உண்ணும் உணவில் வெறுப்பு, ஒருவிதமான சுவையும் இல்லாமல் இருக்கும்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - பித்தம் (Biliousness)

            உணவு மாறுபாடு, கல்லீரல், மண்ணீரல் கோளாறு, அதிக புணர்ச்சி, தூக்கமின்மை, அதிக அலைச்சல் - ஓய்வின்மை, உஷ்ணம் கூடுமளவில் நடப்பது, பித்தம் தன்னிலையில் இருந்து கூடுவது - குறைவது, புல்லிப்பு, காரம், உப்புள்ள பொருட்களை அதிகமாக உண்ணுதல், மனக்கவலை,அதிகமாக கோபம் கொள்ளுதல், சரியாக வேகாதப் பொருட்களை உண்ணுதல் போன்ற காரணங்களால் பித்த நோய் உண்டாகிறது. மேலும் குறிப்பாக ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் பித்தம் மிகுந்து, மார்கழி, தை மாதங்களில் தணிந்து, பிறகு மீண்டும் சித்திரை, வைகாசி மாதங்களில் அதிகரித்து உடல் முழுதும் பரவும். பொதுவாக பித்த நோய்கள் 40 என்று சித்தர் நூல்கள் கூறினாலும் ஒருசில நூல்கள் 42 என்றும் கூறுகிறது.

            வாய்நீர் ஊறல், ஆயில் கசப்புச் சுவை தோன்றுதல், தாகம், விக்கல், ஒக்காளம், உடல் அனலாய் கொதித்தல், வியர்த்தல், கற்றாழை நாற்றம், தலைசுற்றல், மயக்கம், குருதி வன்மை கெடுதல், பித்தமாக வாந்தி எடுத்தல்,s திணவெடுத்தல், சொறி, சிரங்கு உண்டாதல், தோல் வறண்டு காணுதல், கண்ணொளி குன்றல், முகம் வெளுத்தல் அல்லது மஞ்சளாதல், சிறுநீர்க்கட்டு, எரிச்சல், அடிக்கடி கழிதல் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.


பித்த நோயின் வகைகள் :

1) ஆவுரு பித்தம் :

இந்நோயில் உடல் வெதும்புதல், நீர் வேட்கை, இருமல், சளி, உடல் பருத்தல், வெப்பமாதல், வாய் புளிப்பு, மலமும் சிறுநீரும் மஞ்சளாதல், வாய் அதிகமாக பேசாமல் அங்கும் இங்கும் பார்த்தல், கூத்தாடுதல்,ஆரவாரித்துக் கூவுதல், அடிக்கடி எழுந்தோடல், மனஎழுச்சி (Mania) , தூக்கமின்மை போன்ற நோய்கள் காணும்.

2) ஆமிலப் பித்தம் :

இந்நோயில் உடல் கறுத்தல், ஆவேசம் கொண்டதுபோல தலையைத் திருப்புதல், உண்ட உணவு செரியாமல் மறுநாள் அப்படியே வாந்தியாதல், மேலும் அவை புளிப்பும் கசப்புமாக இருத்தல், கைகால் சோர்ந்துபோதல், விக்கல், வயிறு உப்பல் போன்ற குணங்கள் இருக்கும்.

3) உன்மாத (வெறிப்) பித்தம் :

இந்நோயில் உடல் மிடுக்குடன் இருத்தல், அதிகப்பசி, தலைகனத்தல், ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல், பிறருடன் பேசாது  ஊமைப் போல இருத்தல், உறக்கமின்மை, வாய்நீர் வடிதல், மனக்கலக்கம் ஏற்படல் போன்ற குணங்கள் காணும்.

4) தமந்தப் பித்தம் :

இந்நோயில் கள் உண்டவனைப் போல தன்னை மறந்து கிடத்தல், உடல் துடித்தல், நாவறட்சி, நாவடி நரம்பு மஞ்சள் நிறமாதல், பலமுறை அழைத்தாலும் பிணத்தைப் போல பேசாதிருத்தல், அடிக்கடி நீர்வேட்கை,மிகுந்த உணவு உண்ணுதல், மௌனமாக இருத்தல் போன்ற குணங்கள் தோன்றும்.

5) வாதப் பித்தம் :

இந்நோயில் கண் புகைந்து இரைச்சலுண்டாகி கண்ணை மறைத்து, மேலும் கண்ணை மின்மினிப்பூச்சி போல சுழலச் செய்யும், கண்ணீர் வடிந்து கலங்கச் செய்யும். மேலும் உடல் முழுதும்,வியர்வை, மயக்கம், தயக்கம், வாந்தி, உணவு வேண்டாமை போன்ற குணங்கள் தோன்றும்.

6) வன்னிப் பித்தம் :

இந்நோயில் வயிறு நொந்து கனல் போல எழுந்து மண்டை வரையிலும் சென்று சீதமும், இரத்தமும் கலந்து கழிதல், சிலவேளைகளில் கறுத்துக் காணுதல், உடல் வெளுத்து மயக்கமும், தயக்கமும் உண்டாதல், உணவில் வெறுப்பு, நாக்கு வெந்து வாய் புளிப்புச் சுவையுடன் இருத்தல் போன்ற குணங்கள் தோன்றும்.

7) சிலேத்துமப் பித்தம் :

இந்நோயில் பித்தத்துடன் கபமும் சேர்ந்து உடல் வெளுத்து, குளிர் உண்டாகி உடல் நோதல், சினம் உண்டாதல், மயக்கம், அறிவழிதல், இருமல், அதிக பசி, அடிக்கடி தும்மல், தலை கனத்தல், கண்கள் பச்சை நிறமாதல் போன்ற குணங்கள் தோன்றும்.

8) சுரோணிதப் பித்தம் :

இந்நோயில் சுரோணிதம் அதிகம் வெதும்பி உடல் முழுதும் குடைந்து கீல்களில் நோய் உண்டாகும். மேலும் உடம்பில் முள் சொருகியது போல குத்தல், நீர்வேட்கை, உடல் நைதல், தலைநோய் அதிகமாதல், மனச்சோர்வு, வாந்தி, கோழை கக்கல் போன்ற குணங்கள் தோன்றும்.

9) விகாரப் பித்தம் :

இந்நோயில் தூக்கமின்மை, வாய்க்கசப்பு,பேசுவதை விரும்பாமை, கண் சிவந்து கலங்கிக் கானல்,உடல் வெளுத்து கடுத்துத் தீய்தல், வாந்தியாதல், மயக்கம், கலக்கம், வாய்நீர் ஊறல், உணவு கொள்ளாது பட்டினியாக இருத்தல் போன்ற குணங்கள் காணும். இதே குணங்கள் மனஅழுத்தச் சிதைவு நோயில் (Depressive Psychosis) காணும் குணங்களை ஒத்திருக்கும்.

10) விரணப் பித்தம் :

இந்நோயில் உடல் முழுதும் திமிர் உண்டாகி, உடல் கனத்து திணவு உண்டாகி புண்ணாதல், வாயில் கசப்பு சுவை தோன்றல், நாடி படபடத்து துடித்தல், ஆண்குறி சிவத்தல், வாய்நீர் ஊறல், திடுக்கிட்டு துயில் எழுதல் போன்ற குணங்கள் காணும்.

11) உரத்தப் பித்தம் :

இந்நோயில்அதிக கோபம் உண்டாதல், அடிக்கடி சண்டையிடல், அதிக கூச்சலிட்டு இரைச்சலை உண்டாக்கல், வயிறு அடிக்கடி கழிதல், நன்மை, தீமை அறிய முடியாமை, கண் சிவத்தல், தூக்கமின்மை, உடல் நாளுக்கு நாள் பருத்துக் கொண்டு வருதல் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.

12) இரத்தப் பித்தம் :

இந்நோயில் மிகுந்த இருமலை உண்டாக்கி, இரத்தம் கோழையோடு மிகுதியாக வெளிப்படுதல், உடல் மிகுதியாக நாளுக்கு நாள் இளைத்துக் கொண்டே வருதல், அடிவயிற்றை சுருக்கி வற்றச் செய்யும்.

13) காசப் பித்தம் :

இந்நோயில் இருமல் அதிகரித்து வயிறு புரட்டல், விக்கல், வாந்தி, உடல் முற்றும் வலி, உடல் வெப்பத்தால் வெதும்பல், குரல் கம்மல், வாய்நீர் ஊறல், இனிப்புப் பொருள்களில் விருப்பம்,மனத்துயரம், நெஞ்சு கனமாக இருப்பது போலத் தோன்றுதல் போன்ற குணங்கள் காணும்.

14) சுவாசப் பித்தம் :

இந்நோயில் இரைப்பு இருமலின் குணங்களாகிய மூச்சிரைப்பு, வயிறு ஊதிக் கொள்ளுதல், உடல் முழுதும் வலி, வாய்நீர் ஊறல், மயக்கம், கண்பார்வை மறைத்தல், மார்பில் தாங்க முடியாத வலியோடு இருமல், வயிறு பசி இல்லாமை ஆகிய குணங்கள் தோன்றும்.

15) செம்பித்தம் :

இந்நோயில் செம்பின் களிம்பைப் போல சுவையை உண்டாக்கி வாந்தியை உண்டாக்கும். வாந்தியும் செந்நிறமாக இருக்கும். மலம் கட்டி அதுவும் செந்நிறமாக இறங்கும். உடல் வியர்த்து மயக்கம் உண்டாகும். அந்த வியர்வையும் கூட செந்நிறமாக வெளியாகும். அடிக்கடி திடுக்கிட்டு பயப்படச் செய்யும். உடலை இளஞ்சூரியனைப் போல சிவக்கச் செய்யும்.

16) கரும் பித்தம் :

இந்நோயில் சோர்வு, தலையும் உடலும் நடுங்கல், தலைவலி உண்டாகி கண் உறங்கச் செய்தல், கடைக்கண் சிவந்து மின்மினி போலத் தோன்றுதல், பித்தம் மிகுந்து உடல் கனத்து வருதல், நாக்கில் சுவை இல்லாதிருத்தல், பசி இன்மை, கருநிறத்தில்  வாந்தியாதல் போன்ற குணங்களை கொண்டிருக்கும்.

17) கரப்பான் பித்தம் :

இந்நோயில் உடல் முழுதும் சொறி உண்டாகி, வலி மிகுந்து கட்டிகளாக எழும்பும். அத்துடன் அடிக்கடி கழித்தல், வயிறு இரைதல், இருமல், இழுத்துப் பிடித்துக் கொள்ளுதல், கால்கள் துவண்டு போதல், இடுப்பில் வலியும் திமிரும் உண்டாதல், உடல் கறுத்து கன்றிப்போதல் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.

18) அசீரணப் பித்தம் :

இந்நோயில் மந்தம், பசியின்மை, உடல் கறுத்துக் குளிர்தல், மலக்கட்டு, கண் கரித்து நீர் பாய்தல், அதிக தலைவலி, வயிறு இரைதல், அடிவயிறு இழுத்துப் பிடித்தது போல நோதல், உணவில் விருப்பமின்மை, கைகால்கள் ஓய்ந்துபோதல், புளித்த தேங்காய் பாலைப் போல வாய்நீர் ஊறல் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.

19) அருசிப் பித்தம் :

இந்நோயில் உணவை மறுத்தல், குடலைப் பிரட்டி வாந்தியாதல், சுவையின்மை, மனக்கலக்கம், மயக்கம், தலைசுற்றல்,  அடிநாக்கு தடித்து நாவில் உணர்ச்சியற்று இருத்தல், உறக்கமின்மை, வாய் மற்றும் உடல் எரிச்சல் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.

20) எரிப் பித்தம் :

இந்நோயில் அடித்தொடை, இருபாதங்கள், கண், உள்ளங்கால், உள்ளங்கை இவைகளில் எரிச்சல் உண்டாகும். இரு காதும், மூக்கும் வறண்டு போகும். முதுகு, கை, கால் இவைகளில் மிகுந்த விறுவிறுப்பும், எரிச்சலும் உண்டாகும்.

21) அழல் பித்தம் :

இந்நோயில் இளமையில் மயிர் நரைத்துப் போதல், உடல் வெளுத்தல், கடைக்கண் சிவத்தல், பல கலைகளையும் அறிந்த ஞானி போல பலவற்றைப் பேசச் செய்தல், பெண் இச்சையில் ஈடுபடுதல் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.

22) துடிப்பித்தம் :

இந்நோயில் உடம்பெல்லாம் துடிக்கும். பாண்டு நோய் வந்து உடல் பச்சை நிறம் போல காட்சியளிக்கும் (அலிமுகப்பாண்டு), வாய் சுவை அறியாமல் உணவு உண்ண விருப்பம் இன்மை, சிறிது தூரம் ஓடினாலும் பெருமூச்சு வாங்குதல், பெண்களின் மேல் வெறுப்பு,அடிக்கடி சண்டையிடல் போன்ற குணங்கள் காணும்.

23) விடப் பித்தம் :

இந்நோயில் உடல் சோர்ந்து வீழும். அடுத்தவரிடம் தன்நோயின் கடுமை பற்றி புலம்பத் தோன்றும், உடல் முழுவது வலி காணும். மேலும் இந்நோயில் விசத்தன்மையானது உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கும். இந்நோய் தீராது.

24) அதிசாரப் பித்தம் :

இந்நோயில் வயிறு இரைதல், அடிவயிறு நொந்து பேதியாதல், வயிறு ஊதல், விலாவில் குத்தல், குடைச்சல், பொருத்துகளில் வலி, கல்லீரல் - மண்ணீரல்களில் எரிச்சலும்,குத்தலும் உண்டாகி, அதிக தாகம், மயக்கம், மனச்சலிப்பு, சுவையின்மை தோன்றும்.

25) மூலப் பித்தம் :

இந்நோய் வயிறு இரைந்து, உண்ட உணவின் சாரத்தை அப்படியே கழியச் செய்யும். மனம் சலித்து கோபம் கொள்ளல், மனத் தடுமாற்றம், ஆசனவாயில் முளை வெளிவருதல், அடித்தொடையில் கடுப்பு, உடல் வெளுத்தல், உடல் ஊதல், தூக்கம் அதிகமாகி சோம்பல் அதிகரித்தல், கண் கரித்தல் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.

26) முதிர் பித்தம் :

இந்நோயில் உடல் முழுதும் அம்மையால் உண்டாகும் கொப்புளங்களைப் போல சிறிசிறு கொப்புளங்கள் உடல் முழுதும் உண்டாகி புண்ணாகும். உடம்பில் புழுதியை அள்ளி பூசியது போல மஞ்சளாகும். மலமும், சிறுநீரும் அளவில் குறைந்து சுருங்கி வெளியாகும். நாடி மெலிந்து நடக்கும்.

27) கண்டப் பித்தம் :

இந்நோயில் உடல் வெப்பம் அதிகமாகி குரல்வளையை தாக்கி வீங்கச் செய்யும். அதிக கசப்பில் வாந்தியாகும்போது தொண்டையும் ,கழுத்தும் புண்போல நோதல், தொண்டை குழகுழத்து, நா வறண்டு, பாதம் கனத்தும், காதில் கடல் இரைதல் போலும், செம்பட்டை மயிரும், நரம்புகள் இழுத்துக் கொண்டு வலிப்பு போலும் அடிக்கடி காணும்.

28) ஓடுப் பித்தம் :

இந்நோயில் பார்ப்பவர்கள் மனம் இரங்குமாறு வெறியனைப் போல பேசிக்கொண்டும், பிறரை இகழ்ச்சியாக பேசிக் கொண்டும், இங்கும் அங்குமாக ஓடித் திரிதல், அடிக்கடி பற்களை கடித்தல், நெருப்பைப் போல கண்கள் சிவத்தல், கண்கள் அடிக்கடி சிமிட்டல், பிறரிடம் கோபமாக கூச்சலிடல், கொக்கரித்தல், கூத்தாடல், உற்றுப் பார்த்தல், ஆண்மையோடு பிறரை எதிர்த்தல் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.

29) மூடு பித்தம் :

இந்நோயில் தன்கையில் கிடைத்த செல்வத்தை புதைத்து வைத்தல், மற்றவர்களை இழிவாக பேசுதல், தனக்குத்தானே பேசுதல், கைகால்கள் சும்மா இராமல் ஏதாவது செய்துகொண்டே இருத்தல், உணவில் விருப்பமின்மை, நாள்பட்ட மனச்சிதைவு (Chronic Schizophernia) போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.

30) நடுக்குப் பித்தம் :

இந்நோயில் தலை, மண்டை, நெற்றி, பிடரி, முதுகுத்தண்டு, கழுத்து இவைகளில் மிகுதியாக வெப்பம் உண்டாகி நடுங்கும். மேலும் கசப்பாக வாந்தியாதல், சிணுக்கிருமல், தூக்கமின்மை, வாய்நீர் ஊறி மார்பில் வடிதல் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.

31) கபாலப் பித்தம் :

இந்நோயில் தலை நடுக்கல், குளிர் உண்டாகி உடம்பெங்கும் நோதல், அம்பைக் கொண்டு பாய்ச்சுதல் போல தலைக் குத்தல், உடல் மன்சள் நிறமாதல், மூக்குத்தண்டு நோதல், முகம் வீங்கிக் காணல், மயக்கம் உண்டாதல், மேலும் படுக்கையில் தாங்காமல் அடிக்கடி எழுந்திருத்தல் போன்ற குணங்கள் காணும்.

32) சர்த்திப் பித்தம் :

இந்நோயில் உடம்பில் திமிருண்டாதல், ஈரலில் வலி, வாயில் கசப்பு தட்டி வாந்தி உண்டாதல், தலையை தூக்க முடியாமல் மயக்கம் உண்டாதல், உடலில் அதிக வெப்பம், சுவையின்மை, ஆண்மைக் குறைவு, அடிக்கடி நீர்வேட்கை, செரியாமை போன்ற குணங்கள் காணும்.

33) தாகப் பித்தம் :

இந்நோயில் அடிவயிற்றில் துன்பம் உண்டாகி உடம்பெல்லாம் நெருப்புபோல அழற்சி உண்டாகும். இதனால் நீர்வேர்த்கை மிகுந்து நீரை நீர் வேட்கை, அதிகமாக பருகச் செய்யும். மேலும் குளிர்ச்சி தரும் பொருட்களிலும், புளிப்பு தரும் பொருட்களிலும் விருப்பம் உண்டாகும். கழுத்தில் வியர்க்கும். கழுத்தின் அடியிலும், நாவின் அடியிலும் இழுத்துப் பிடிப்பது போன்ற உணர்வுகள் தோன்றும்.

34) விக்கல் பித்தம் :

இந்நோயில் நீர்வேட்கையும், வாந்தியும் உண்டாகி விக்களும் எழுந்து தவிப்பை உண்டாக்கும். உடல் குளிர்ச்சி அடைந்து, தலைபுரட்டல்,  படுக்கையில் தங்காமை, பாலைப் போல வாயிலிருந்து நுரை தள்ளுதல், உடல் அனல் போல வெதும்பி தளர்ச்சி மற்றும் சோகம் அடைந்து, கைகால்கள் ஓய்தல் போன்ற குறிகுணங்கள் உண்டாகும்.

35) சயப் (க்ஷய) பித்தம் :

இந்நோயில் இளைப்பும், இருமலும் உண்டாகும். மேலும் வெளியே தெரியாத வண்ணம் சுரம் (உள்சுரம்), உடல் வாடல், உடல் பஞ்சுபோல வெளுத்தல், தொண்டையில் கோழை சேர்ந்து குருதி கக்கல், சளி கட்டியாக வெளிப்படுதல், நெஞ்செரிச்சல், தூக்கமின்மை போன்ற குணங்கள் தோன்றும்.

36) திமிர்ப் பித்தம் :

இந்நோயில் பித்தம் அதிகரித்து மயக்கம் உண்டாகும். மேலும் வயிற்றிலே முள் சொருகியது போல குத்தல், தினமும் காலையில் வாந்தி,தூக்கத்திலும் நினைவு மாறாமல் இருத்தல், உடல் சோர்தல், தனது கருத்தே சரியென்று அதிலேயே பிடிவாதமாய் இருத்தல், உடம்பெங்கும் கனத்து திமிர் உண்டாதல், உடலில் அழுக்குப் படித்தல், வேகமாக நடக்க முடியாமை போன்ற குணங்கள் உண்டாகும்.

37) வளிப் பித்தம் :

இந்நோயில் நடக்க முடியாமை, அடிவயிற்றில் இழுத்துப் பிடித்தது போல வலி, நா வறட்சி, தலை கனத்தல்,  சந்துகள் தோறும் நோதல், ஈரலில் வலி, பச்சை நிறமாக மலம் கழிதல், உடல் படபடத்து நோதல், வயிற்றில் மிகவும் அதிக எரிச்சல், மார்பு அடைத்தல் போன்ற குணங்கள் உண்டாகும்.

38) சீதப் பித்தம் :

இந்நோயில் உடல் முழுதும், வியர்த்து தண்ணி போல வடிதல், மயக்கம்,உடல் கனத்துப் பளுவாதல், புறங்கழுத்தில் வெடுக்கென்ற வலி, வயிறு பொருமி ஊதல், மிகுதியும் இருமல் உண்டாதல், மனம் நோதல், வாய்நீர் உப்புக்கரித்தல், சிறுநீர் சிவந்து இருத்தல் போன்ற குணங்கள் தோன்றும்.

39) கிருமிப் பித்தம் :

இந்நோயில் சீதத்தினால் வயிற்றில் திமிர் உண்டாகி, உடல் முழுதும் திணவும் வழியும் உண்டாகும். வாத நோயில் காணப்படுவது போல மலமும், சிறுநீரும் கட்டும். மேலும் கைகால்கள் கனத்து வாழைத்தண்டு போலச் சில்லிட்டு மலத்தில் கிருமியும் கலந்து கழியும்

40) அசாத்தியப் பித்தம் :

இந்நோயில் போதைப் பொருட்களை உண்டவர் போல உணர்ச்சியற்று, நினைவிழந்து காணப்படுவர். உடல் வெப்பம் அதிகரித்து நீர்வேட்கை அதிகரிக்கும். கண்கள் சிவந்து வாய் வறட்சி அடைதல், பிறரோடு வாதிட்டு பல வார்த்தைகளைப் பேசுதல் போன்ற குணங்கள் உண்டாகும்.

41) மார்க்கப் பித்தம் :

இந்நோயில் தான் கற்றவற்றை எல்லாம் பேசுதல், உட்காருதல், உடனே எழுந்து ஓடல், தான் உடுத்த துணியைக் கிழித்தல், புலம்பல், வாய்க்கு வந்தவாறு பாடுதல், தலையிலும் புறங்கழுத்திலும் வெடுக்கென்ற வலி போன்ற குணங்கள் தோன்றும். மேலும் உடலி வலிமை குறைந்து, மனநிலை அழிந்து, பிறரைப் பழித்தல் போன்ற செயல்களையும் செய்ய வைக்கும்.

42) மருந்தீடு பித்தம் :

இந்நோய் ஈடு மருந்தால் உடலின் பித்தம் கேடடைந்து பிறக்கிறது. இந்நோயில் யாரிடமும் பேசாமல் ஓரிடத்தில் அமர்ந்து இருத்தல், உடல் ஊதிக் காணல், நெஞ்சு வறண்டு போதல், ஊக்கமின்மை, உடல் அசதி, உணவும் தூக்கமும் இல்லாமல் எங்கும் சுற்றிக் கொண்டு திரிதல், அடிக்கடி sதிடுக்கிட்டு புத்தி தடுமாறல், வயிற்றில் கட்டி போல திரண்டு அடிக்குடலில் வலி உண்டாதல் போன்ற குணங்கள் தோன்றும்.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - பெருவயிறு / மகோதரம் (Dropsy of Belly)

        இதுவும் வாதநாடியின் மீறலாலும்,  வாதநாடி பிறழ்ந்து போவதாலும் உண்டாகும் என்று அறியப்படுகிறது. இந்நோய் நாளுக்கு நாள் பெருத்துக் கொண்டே வந்து அதனுள் நீர் சுரந்து வருவதும், வயிற்றின் உள்ளுருப்புகளாகிய ஈரல், குடல், கருப்பையில் கட்டி ஆகியவற்றில் ஏதாவது ஒன்று பெருத்து வருதலால் உண்டாகிறது என்று அறியப்படுகிறது. இந்நோயில் 32 வகைகள் உள்ளது.


நோய் உண்டாகக் காரணங்கள் :

  1. உமி, கல், மண், மலர், முள் கலந்த உணவைத் தொடர்ந்து உண்ணுதல்.
  2. சுனைநீர், தேங்கிய நீர், வண்டு மொய்த்த நீர், தேரை தங்கிய நீர், கள், சாராயம் இவற்றை அடிக்கடி அருந்தல், செரியாமை.
  3. மருந்தீடு, மேகநோய், செம்பின் களிம்பு.
  4. ரச, கந்தக பாசாண மருந்துகளை உடலின் வலிமை அறியாமல் உண்ணுதல்.
  5. வயிற்றில் கட்டி, கல்லீரல், மண்ணீரல், சிறுநீரக, தமரகம் (இதயம்) போன்ற நோய்களாலும்,
  6. வயிற்றில் கட்டி உண்டாகி அதில் நீர், சீழ், இரத்தம் மாமிசம், சதை ஆகியவை சேர்ந்து அதிகரித்து காணுவதாலும் உண்டாகும்.


பெருவயிறு நோயின் வகைகள் :

1) வளி பெருவயிறு :

இந்நோயில் கண்கள் கருத்து, சுரம், அதிதாகம், கழிச்சல், அதிக வியர்வை, தோல் சுரசுரப்பு போன்ற குணங்கள் தோன்றி உடல் முழுவது மஞ்சள் பூக்கும்.

2) அழல் பெருவயிறு :

இந்நோயில் உடல் வெளுத்து மெலிந்து வற்றி பலமிழந்து, உணவில் விருப்பமின்மை, அடிவயிற்றில் வீக்கம், இரைச்சல், உப்புசம், புளியேப்பம், மன சஞ்சலம் போன்ற குணங்கள் தோன்றி முகம் பிணத்தின் முகம்போலக் களையிழந்து காணும்.

3) ஐய பெருவயிறு :

இந்நோயில் உடல் பஞ்சு போல வெளுத்து நடுக்கம், குளிர் காய்ச்சல், உணவில் ருசியின்மை, உறக்கமின்மை, வயிற்றில் இரைச்சல், உப்புசம், இருமல், கோழைக்கக்கல், அதிக சினம் போன்ற குணங்கள் தோன்றி சிறுநீர், மலம் கடுத்து இறங்கும்.

4) வளிஐய பெருவயிறு :

இந்நோயில் உடல் வெளுத்து நொந்து கடுப்புடன், வயிறு வீங்கி நரம்புகள் புடைத்து விம்மி மேலெழுந்து காணும். வாயில் துர்நாற்றம், அடிவயிற்றில் அதிக இரைச்சல் உண்டாகி மலம் கட்டி, விரைகள் வீங்கிப் பெரிதாகும்.

5) அழல்ஐய பெருவயிறு :

இந்நோயில் நாபி முதல் மார்பு வரை வயிறு பிதுங்கிக் காணும். வயிற்றில் உள்ள காற்று வெளியேறாது உள்ளே நின்று, மார்பில் வலி, மலம், சிறுநீர் கட்டும். உடல், கை, கால்கள் வீங்கி, மூளை பாதித்துக் கண் ஒளி மங்கும்.

6) முக்குற்ற பெருவயிறு :

இந்நோயில் உடல் முழுதும் பெருத்து, வீங்கி, கண்கள் பஞ்சு போல வெளுத்துக் கண்ணீர் வடியும். கைகால்கள் வற்றி மெலிந்து காணும். வாதநாடி படபடத்து நடக்கும். தலைசுற்றல், மயக்கம் காணும். உடலில் மஞ்சள் பூத்து இருக்கும்.

7) கல் பெருவயிறு :

இந்நோயில் மேல்வயிறு கல்போலக் கடினமாகி, இருமல், இளைப்பு, மலம், சிறுநீர் கட்டும். உணவு செல்லாது, முகம் கறுத்து இறுகி, வாயிற்று நரம்பு புடைத்துப் பச்சை நரம்புகள் தெரியும்.

8) வில் பெருவயிறு :

இந்நோயில் வில் போன்று வயிறு குவிந்து வளைந்து அழுத்தமாக இருக்கும். மேல்வயிறு கடுத்து, உப்பி, இரையும். விரை வீங்கும். சிறுநீரும், மலமும் தடைபட்டு தாங்க முடியாத வலியுடன் இருக்கும். அதிகதாகம், மனக் கலக்கம், மயக்கம் காணும்.

9) வழுவைப் பெருவயிறு :

இந்நோயில் வயிற்றில் நீர் கோர்த்து வயிறு தொளதொளத்து காணும். மேலும் வயிற்றில் மாமிசத்தை அடைத்தது போலக் காணும். பசியை கெடுத்து, உணவில் வெறுப்பை தந்து, படுக்கையில் தங்காது துன்பம் தரும்.

10) நழுவைப் பெருவயிறு :

இந்நோயில் அடிவயிற்றில் பந்தைபோல உருண்டு திரண்டு ஒரு கட்டி காணும். அதை அழுத்த இடம் விட்டு இடம் நகரும். மேல்வயிற்றில் அனலையும், எரிச்சலையும் உண்டாக்கி மேல்மூச்சு வங்கி, சரியாக நடக்க முடியாமல் போகும். தாபமும், தளர்ச்சியும், தாங்க முடியாத உடல் எரிச்சல், தளர்ச்சி, நா வறட்சி, நெஞ்சு புண்ணாகும்.

11) நீராம்பல் பெருவயிறு :

இந்நோயில் நாவறட்சி, இருமல், அடிவயிற்றில் விம்மல், மூச்சு விடுவதற்கு சிரமம், கழிச்சல், உடல் தளர்ச்சி, உருவம் மாறும். கடைக்கண் வெளுத்து, புறங்கால் வீங்கி, கைக்கால்கள் நீட்டவும், மடக்கவும் முடியாமல் இருக்கும்.

12) ஊராம்பல் பெருவயிறு :

இந்நோயில் மேல்வயிறு பொருமி அதிக துன்பம் தரும். உடல் வெம்மையால் உடல் வற்றும். உடல் குன்றி, மனத்துயரமும், தலை கனத்து மயக்கம், அடிக்கடி சினம், கலக்கம் போன்ற குணங்கள் தோன்றும்.

13) வெப்புப்பாவை பெருவயிறு :

வயிற்றில் காற்று சேர்ந்து உப்பி காணும். அடிக்கடி சினம், கசப்பு, புளிப்பு சுவைகளில் வெறுப்பு, நாவில் உப்புச் சுவை, உடல் முழுவதும் கனத்தல், வயிறு புரண்டு வெதும்பல், விலாப்பக்கங்களில் கட்டி, அடிக்கடி உடல் அதிர்ந்து காணுதல் போன்ற குணங்கள் காணும்.

14) குலைமுட்டி பெருவயிறு :

இந்நோயில் அம்மிக் குழவிப் போல அடிவயிற்றில் கட்டித் தோன்றி வலிக்கும். உணவு செல்லாது, அபானத்தை இறுக்கி, மலம் கட்டும். உடல் வற்றிக் கருகி, தலை, முகம், கை, கால் வீக்கம், மூச்சு வாங்கி குரல் கம்மல் போன்ற குணங்கள் தோன்றும்.

15) கீழ்க்கவிசை பெருவயிறு :

இந்நோயில் அடிவயிற்றில் வில்லைப் போலக் கட்டி உருவாகி வயிறு வீங்கி, மேல்வயிறு கனத்து, மூட்டுகளில் குடைச்சல், வாய் பிதற்றல், மனதில் தோன்றியபடி எல்லாம் பேசுதல், மலம், சிறுநீர் சுருங்கி அதிக துன்பம் உண்டாகும்.

16) மேல்க்கவிசை பெருவயிறு :

இந்நோயில் வயிற்றில் உள்ள ஊண் திரட்சிகள் எல்லாம் திரண்டு மேல்வயிற்றை வில்போல வளையச் செய்யும். வயிற்றின் நரம்பு, தோல் சுருங்கி, படபடப்பு, பெருமூச்சு உண்டாகும். மார்பில் அடைப்பு, குத்தல் வலி காணும். வாய்க் குமட்டி, உமிழ்நீர் மிகுதியாக வடியும். உணவில் வெறுப்பும் உண்டாகும்.

17) பக்கக்கவிசை பெருவயிறு :

இந்நோயில் பக்கங்களில் கவிசை (கட்டி) போலக் காணும். வயிறு கனத்து கல்போலக் காணும். அடிவயிற்றில் குமுறல், அதிக தாகம், உடல் எரிச்சல், வயிறு பொருமி உப்பல், புளியேப்பம், நெஞ்சில் எரிச்சல் போன்ற குணங்கள் கண்டு மலமும் நீரும் கட்டி மிகுந்த துன்பம் விளைவிக்கும்.

18) பழுக்கவிசை பெருவயிறு :

இந்நோயில் உடலில் அமைந்த பழுவெலும்பு முள்ளைப் போல வயிற்றில் எழும்பி, வயிறு முழுமையும் கனத்து, உப்புசமும், மேல்மூச்சும், அதிக சோம்பல், உறக்கத்தை உண்டாக்கும். உணவில் வெறுப்பு, வயிற்றில் அடிக்கடி காற்று சேர்ந்து வீங்கி, உண்ட உணவு செரியாமல், உடல் ஊதி மூச்சுத் திணறல் போன்ற குணங்களை உண்டாக்கும்.

19) மாப்பெருவயிறு :

இந்நோயில் மந்தம் உண்டாகி, உணவு கொள்ள முடியாமலும், உண்ட உணவு செரியாமலும் செய்து, உடலின் குருதி வன்மை குறைந்து உடல் உடலை வற்றச் செய்யும். வயிற்றின் நரம்புகள் புடைத்து வெளியாகி, வயிறு முழுதும் நாளுக்கு நாள் வீங்கிக் கொண்டே வரும். வீக்கம் எளிதில் வற்றாது மூச்சுத் தின்றாலும் உண்டாகும். மலம் கட்டும். அடிக்கடி மயக்கம் உண்டாகும்.

20) சூல்ப் பெருவயிறு :

இந்நோய் பெண்கள் சூல்க் கொண்டபோது (கருத்தரித்தபோது) வரும்.இதனால் அதிக மனவருத்தம் உண்டாகி, உணவு செல்லாது, உடல் முழுவதும் அழன்று, மயக்கம் வரும். அதிக நீர் தாகம், கைகால் மூட்டுகளில் வீக்கம், ருசியின்மை, சுரம், உடல் உளைச்சல் போன்ற குணங்கள் தோன்றும்.

21) வல்லைப் பெருவயிறு :

இந்நோயில் வயிற்ருக்கும் மார்பு எலும்புக்கும் நடுவில் உள்ளங்கை அளவில் கட்டி உருவாக்கிக் கல்லைக் கொண்டு அடைத்தது போலக் கடினமாகக் காணும். இதனால் உணவு செல்லாமை, சுடுநீரின்மேல் இச்சை, கைகால்கள் வெளுத்துச் சத்து இல்லாமல் வற்றுதல் போன்ற குணங்கள் தோன்றும்.

22) நச்சுப் பெருவயிறு :

உடல் மெலிந்து விதைகள் வீங்கித் தளர்ந்து, உடம்பில் நடுக்கலும், திமிர்தலும், மனத்துயரமும், துடுக்காகவும், படபடத்தும் பேசச் செய்யும்.

23) பாண்டுப் பெருவயிறு :

இந்நோயில் உடலின் குருதி வன்மை குறைந்து, உடல் முழுதும் வீங்கி, முகத்தில் நிறம் மாறுபாடு அடைந்து, நாடி சரியாக நடக்காது. மயிர் சிவந்து, இரத்தம் இல்லாமல் உடல் மெலிந்து நடக்கவும் முடியாது போகும். மேலும் முகம் வீங்கி, வயிறு பொருமி, பெருமூச்சு, புறங்கால் வீங்குதல் போன்ற குணங்கள் தோன்றும்.

24) சோபைப் பெருவயிறு :

இந்நோயில் மேல்வயிறு அழுத்தமாகவும், அடிவயிறு குழைந்து உப்பியும் காணும். கைகால்கள், விரைகள் வீங்கி, மேல்மூச்சு, இருமல், தாகம், உடம்பெல்லாம் குளிர்தல், மலம், சிறுநீர் கட்டுதல் போன்ற குணங்கள் காணும்.

25) காமாலைப் பெருவயிறு :

இந்நோயில் காமாலைப் போல உடல் முழுதும் மஞ்சள் நிறம் கண்டு, உடலில் நடுக்கமும், குளிர்ச்சியும், உடலும் புறங்காலும் வீங்கிக் காணும். மேலும் அடிவயிறு சுருங்கி உளையும். முகம், மூக்கு, மார்பு இந்த இடங்களில் வியர்வையும் உண்டாகி, சுரமும், கோழையும் தோன்றி, தலை வலித்து, மனச்சலிப்பு கண்டு, சரியான உறக்கம் இல்லாமல் போதல் போன்ற குணங்கள் காணும்.

26) குன்மப் பெருவயிறு :

இந்நோயில் உண்ட உணவு செரியாமல் வயிற்றில் குடலை புரட்டிக் குத்தல், வலித்தல், வாந்தி, அசீரண பேதி, விலா, இடுப்பு, வயிறு போன்ற இடங்கள் வீங்கிக் காணும். சிறுநீர் பசுவின் நீரைப் போல இறங்கும்.

27) உதரப் பெருவயிறு :

நாவறட்சி, கண் சிவத்தல், வயிற்றில் காற்று கூடி வயிறு உப்பல், தாகம், மலம் சரியாகக் கழியாமல் இருத்தல், உணவு கொள்ளாமை, அடிவயிற்றிலிருந்து மார்பு, கழுத்து வரையிலும் ஒரே வீக்கமாகக் காணும்.

28) கூர்மப் பெருவயிறு :

இந்நோயில் கண்களில் பசை உலர்ந்து வறண்டு, இரு கண்களும் சிவந்து சுருங்கி காணும். மேலும் இருமல், இளைப்பு, தாகம், வயிற்றில் இரைச்சலுடன் குமுறலும் காணும். மேலும் வயிற்றில் ஆமைபோலக் கட்டி உண்டாகும். உணவு செல்லாது.

29) பீலிகைப் பெருவயிறு :

இந்நோயில் உடலைத் தொட்டுப் பார்க்க ஆமைஓடு போலச் சொரசொரத்துக் காணும். அடிக்கடி மலமும், சிறுநீரும் கழியும். உடல் முழுவது வீங்காமல் ஒருசில் இடங்களில் மட்டும் வீங்கும். அபானவாயு அதிகரிக்கும். உணவை அதிகமாக உண்ணச் செய்யும். அதிக சிறுநீர் கழிந்தாலும் மயக்கம் உண்டாகாது. கண்களில் இரத்தம் காணும்.

30) சுரப் பெருவயிறு :

இந்நோயில் வயிறும், புறங்காலும், கணுக்காலும் வீங்கும். மேலும் மார்பு, பிடரி இவற்றில் பச்சை நரம்பு புடைத்துத் தோன்றி, வயிறு மிகப் பொருமும். சுரமும், அசதியும், உடல் முழுவதும் எரிச்சலும், இதனால் கண்கள் வீங்கியும் காணும்.

31) நீர்ப் பெருவயிறு :

இந்நோயில் உடல் முழுதும் நீர்க் கோர்த்து வீங்கும். உடல் மஞ்சள் நிறத்தில் தோன்றும். வயிறு உப்புசத்துடன் உழன்று காணும். மேலும் ஆண்குறியில் தளர்ச்சியும், முதுகு மற்றும் வயிற்றில் நீரும் கோர்த்து உடல்தாதுக்கள் ஒவ்வொன்றாகக் குறைந்து, ஐம்பொறிகளையும் கலங்கச் செய்யும்.

32) மாங்கிசப் பெருவயிறு :

இந்நோயில் வயிற்றில் சதைகள் அளவிற்கு மிஞ்சி வளர்ந்து, வயிறு பொருமி, அடிவயிற்றில் கல்லைப் போல் அழுத்தமும் காணும். மேலும் உடலில் வெப்பம் அதிகரித்து உடல் வற்றி உலர்ந்து, அடிக்கடி தண்ணீரைப் பருகச் செய்யும். சொற்கள் குழறி, அடிக்கடி ஏப்பமும், சிறுநீரிலும், மலத்திலும் இற்றுப்போன சதைகளும் வெளிவரும்.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - நீரினை அருக்கல் நோய்கள்

            சிறுநீர் தொடர்பான நோய்களை சித்த மருத்துவம் இரண்டு வகையாக பிரிக்கிறது. அவை நீரினை பெருக்கல் நோய், நீரினை அருக்கல் நோய். நீரினை பெருக்கல் நோய் என்பது மதுமேகம் என்னும் நீரிழிவு நோயாகும். இதைப்பற்றி முன்பே பார்த்துவிட்டோம். இங்கு நீரினை அருக்கல் என்னும் நோயைப்பற்றி பார்க்கலாம். இதுவும் வளியாகிய வாதம் கேடடைவதால் உண்டாகிறது.

            நீரினை அருக்கல் நோய் என்பது பொதுவாக மூத்திரக் கிரிச்சரங்கள் என்ற பெயரில் அழைக்கபடும். இந்த நோய்க்கண்டால் சிறுநீர் மிகவும் குறைவாக வெளியேறும். மேலும் சீறுநீர் கழிக்கும்போது எரிச்சல், கடுப்பு, நீருடன் சிறுமணல் அல்லது கல் போன்ற பொருட்கள் வெளியாதல், வெள்ளைநிற திரவம் வெளிப்படுதல் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும். சிறுநீருடன் வெள்ளைநிற திரவம் வெளியாவதைப் பற்றி பலநூல்களில் தனியாகவே கூறியதால் வெள்ளை அல்லது பிரமியம் என்னும் தலைப்பில் முன்பே கண்டோம்.

            இங்கு சிறுநீரினை அருக்கல் என்னும் நோய்கள் பொதுவாக ஐந்து வகையாகப் பிரிக்கப்படும். அவை கல்லடைப்பு, நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, சொட்டுநீர், நீரடைப்பு ஆகும். இனி இவற்றைப்பற்றி விரிவாக காண்போம்.


I. கல்லடைப்பு (Gravel) :

இந்நோயில் சிறுநீர் கழிக்கும்போது திடீரென்று நீரடைத்தல், குறியின் முனை நோதல், நீர்த்தாரை எரிதல், இடுப்பு மற்றும் முதுகுத்தண்டின் அருகில் வலி, சிறுமணலை போன்ற கற்கள் வெளியேறுதல் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.


நோய் உண்டாகக் காரணம் :

  1. தேங்கிய நீர் மற்றும் அழுக்கடைந்த நீரை அருந்துதல்.
  2. கல், மண், மயிர் கலந்த உணவை உண்ணுதல்.
  3. உடலில் வாயுவை அதிகரிக்கும் உணவுகளை உண்ணுதல்.
  4. உடலை மந்தப்படுத்தும் உணவுகளை உண்ணுதல்.


கல்லடைப்பின் வகைகள் :

1) வாதக் கல்லடைப்பு :

சிறுநீர் இறங்கும்போது அடிவயிற்றில் சுருக்கென்ற குத்தல், ஆண்குறியில் தாங்க முடியாத வலி, இதனால் அழுகை, பெருமூச்சு,வயிறு உப்பல், வெளியாகும் நீரில் மெல்லிய சவ்வு படலம் வெளியாதல் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.

2) பித்தக் கல்லடைப்பு :

நீர்த்தாரையில் இரும்பைக் காய்ச்சி சுட்டதைப்போல எரிச்சல், சிறுநீருடன் குருதி வெளியாதல், நீர்த்தாரையில் குடைச்சல், குத்தல், கூச்சம் போன்ற உணர்வுகள் உண்டாதல், சிறுநீர் கழியும்போது செந்நிற கற்கள் வெளியாகி, உடல் முழுவது அனல் போல கொதிக்கும்.

3) கபக் கல்லடைப்பு :

நாபியில் குத்தல், கைகால் மூட்டுகள், இடுப்பு இவற்றில் குடைச்சலும், இசிவும் காணும். ஆண்குறி விறுவிறுத்துக் கடுத்து, சிறுநீர் வெளியாகும்போது சிறு கற்கள் வெளிப்படும்.

4) முக்குற்ற கல்லடைப்பு :

நீர்த்தாரையின் அடியில் தாங்க முடியாத வலியும், துன்பமும் உண்டாகி, சிறுநீர் விட்டு விட்டுப் பாயும். நீர் கழிக்கும்போது சிறுமணல், நொறுங்கிய கற்கள் வெளியாகும். திடீரென்று சிறுநீர் வெளியாகாமல் தடைபடும். குதம், குய்யத்தில் தாங்க முடியாத வலி, குறிமுனையில் கற்கள் தடைபட்டு வலியும் வீக்கமும் உண்டாகி சிறுநீருடன் குருதியும் வெளிப்படும்.


II. நீர்ச்சுருக்கு / கிரிச்சரம் (Retention of Urine) :

இந்நோயில் நீர்த்தாரையில் குத்தல், குடைச்சல், எரிச்சல், வலி ஆகிய குணங்களை உண்டாக்கி, முகத்தை வீங்கச் செய்து, சொட்டு சொட்டாக சிறுநீர் பிரியும்.


நோய் உண்டாகக் காரணங்கள் :

  1. வெப்பம் மிகுந்த இடங்களில் திரிதல்.
  2. பழைய உணவுகளை உண்ணுதல்.
  3. பகலிலும் பெண் போகம்.
  4. அதிக பகல் தூக்கம்.
  5. லாகிரி வஸ்துகளை அதிகம் பயன்படுத்தல்.


நீர்ச்சுருக்கின் வகைகள் :

1) வாதக் கிரிச்சரம் :

இந்நோயில் மேகம் என்னும் துன்பம் உண்டாகி நீர்த்தாரையில் வெள்ளைநிற திரவம் தங்கி சிறுநீர் வெளியாவதை தடுத்து தேகம் முழுவது கடுப்பு உண்டாக்கும். சிறுநீர் இறங்கும்போது கெட்டுப்போன மாமிசம்போலக் கறுப்பாக இறங்கும்.

2) பித்தக் கிரிச்சரம் :

இந்நோயில் சிறுநீர் மஞ்சள் அல்லது / மற்றும் சிவந்த நிறத்தில் இறங்கும். கைகால்கள் தளர்ந்து அசதியாக இருக்கும். சிறுநீர் சுருங்கி கடுப்புடன் வெளியேறும். மேலும் ஆண்குறி, விதை, குதம் இவற்றில் வாயுவின் செயல் மீறிக்காணும். வயிறு விம்மி, உப்பி இரைச்சலுடன் காணும். வாய் உலர்ந்து மிரட்சி காணும்.

3) கபக் கிரிச்சரம் :

இந்நோயில் குதத்திலும், விரையிலும் அதிக வலியும், ஆண்குறியில் ஒருவித கூச்சமும், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வும் உண்டாகி சிறுநீர் எரிச்சலுடன் இறங்கும். உடல் வெளுத்து, கண்கள் பச்சை நிறமாகி, கிறுகிறுப்பும், மயக்கமும் காணும். உடல் முழுவதும் கடுப்பும், வலியும் உண்டாகி சொறிதலையும் செய்யும்.

4) மேகக் கிரிச்சரம் :

சிறுநீர்க் கழிக்கும்போது அடிக்கடி வெள்ளைநிற நூல்போல சேர்ந்து அதிக துர்நாற்றத்துடன் கழியும். நீர்த்தாரையின் அடியில் புறாவின் எச்சம்போல இருக்கும். ஆண்குறி, குதம் இவை வேக்காடும், எரிச்சலும் கொண்டிருக்கும்.


III. நீர்க்கட்டு :

இந்நோயில் நாள்கணக்கில் சிறுநீர் கழியாமல் இருந்தாலும் சிறுநீர்ப்பை நிறையாது. அல்லது சிறுநீர்ப்பையில் சிறுநீர் இருந்தாலும் சிறுநீர் இறங்காது.


நீர்க்கட்டு உண்டாகக் காரணங்கள் :

  1. குண்டிக்காயில் (Kidney) சிறுகற்கள் உண்டாகி துவாரங்களை அடைத்தல்.
  2. பிறப்பிலேயே நீர்த்தாரையில் அடைப்பு.
  3. நீர்த்தாரையில் கட்டிகள் உருவாதல்.
  4. குண்டிக்காயில் நீரைப் பிரிக்கும் வாயுக்கள் அதன் தொழிலை இழப்பது.
  5. குண்டிக்காயின் நீர்த்தாரையில் குருதிக்கட்டி உண்டாதல்.
  6. அடிபட்டு நசுங்குதல்.
  7. நஞ்சு உட்கொள்ளுதல்.
  8. மிகுந்த பேதி.
  9. அதிக வியர்வை.


நீர்க்கட்டின் குணங்கள் :

இந்நோயில் நீர்க் குண்டிகாயுடன் தொடர்புடைய சிறுபுளைகள் கேடடைந்து அதனால் சிறுநீர் இறங்காமை, மயக்கம், தலைசுற்றல் போன்ற குணங்களைக் காட்டி 10 நாட்களுக்குள் படுக்கையில் கிடத்தி அரட்டல், புரட்டல், கைகால் சில்லிடல், நாவறட்சி, குறுக்கில் வலி, கண்மணி சுருங்கல் போன்ற குணங்களை உண்டாக்கும். மேலும் சிறுநீர் செந்நிறமாக இறங்கும். உடலில் பிசுபிசுத்த வியர்வை, உண்டாகி, கடுமையான வாந்தி, பேதி, மூச்சுத்திணறல், சோர்வு உண்டாகும்.


IV. சொட்டு நீர் :

தனக்கே தெரியாமல் சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறும். இதை குழந்தைகளுக்கு வரும் சொட்டு நீர், பெரியவர்களுக்கு வரும் சொட்டு நீர் என்று இருவகையாகப் பிரிக்கலாம். இதுவும் இரண்டு இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.


சொட்டுநீர் வகைகள் மற்றும் குணங்கள் :

குழந்தைகளுக்கு வரும் சொட்டுநீர் :

சிறுகுழந்தைகளுக்கு பெரும்பாலும் அறிவின்மையால் தானாக சிறுநீர் வரும். மேலும் சிறு ஒலிகளுக்கும் அஞ்சும் இயல்பையுடைய குழந்தைகளுக்கு அவர்கள் அஞ்சும் நிலை உண்டானால் தானாகவே நீரி வரும். சில வேளைகளில் சிறுநீர் போகவேண்டிய நிலை வந்த போதும் சோம்பலால் அவை நீரை அடக்குவதாலும் பிறகு சிறுநீர் பிரியும். இது முதல் வகை.


மேலும் வயிற்றில் புழு, இளைப்பு நோய், நீர்ப்புழை பிறப்பிலேயே சரியான அளவில் இல்லாமல் சுருங்கி இருத்தல் போன்ற காரணங்களாலும் சிறுநீர் பிரியும். இது மற்றொரு வகை.


பெரியவர்களுக்கு வரும் சொட்டுநீர் :

நோயினாலும், முதுமையினாலும் அடிக்கடி சிறுநீர் வெளிப்படுவது போன்ற உணர்ச்சியாலும் அதை அடக்க முடியாமல், அடிக்கடி நீரைச் சிறு அளவில் சொட்டு சொட்டாக பிரியும். மேலும் இருமல், சிரித்தல், அழுதல், பயம் போன்ற உணர்வினால் தன்னை அறியாமல் நீர் சொட்டும். இது முதல் வகை.


நீர்ப் பெருக்கல், நீர் அருக்கல், நரம்புத்தளர்ச்சி, வெள்ளை, பாரிச வாயு, சிறுநீர்ப்பை வீக்கம், வலிமை இழத்தல் போன்ற காரணங்களால் சிறுநீர் சொட்டு சொட்டாக பிரியும். இது இரண்டாவது வகை.


V. நீரடைப்பு :

இந்நோயில் சிறுநீர் குறைந்த அளவில் வெளியேறுதல், சிறுநீர்ப்பை, சிறுநீர்த்தாரை போன்ற இடங்களில் எரிச்சல், வயிறு விம்மி வலித்தல் போன்ற குணங்கள் உண்டாகும்.


நீரடைப்பு குணங்கள் :

  1. மூக்கில் நீர் பாய்தல்.
  2. கண் இரப்பை சற்று வீங்கி கண்ணீர் வடிதல்.
  3. மார்பு நொந்து மூச்சு தடுமாறல்.
  4. வாந்தி, தலைநோய், மயக்கம், உறக்கம்.
  5. சுரம், உடல் வெளுத்து ஊதல்.
  6. கண் ஊதி மூடிக் கொள்ளுதல்.
  7. வயிற்றில் நீர்க் கோர்த்து ஊதி, சிறுநீரில் குருதி கலந்து கறுத்து வெளிப்படும்.
  8. நீர்த்தாரையில் எரிச்சல், நமைச்சல், வலி காணும்.
  9. சிறுநீர் கழியும்போது தாங்கமுடியாத வலி, எரிச்சல் காணும்.
  10. இளைப்பு, பெருமூச்சு, ஆயாசம், மார்பு நோய், முக வீக்கம் காணும்.
  11. சிறுசுரம், இடுப்பு நோய், ஆண்குறி வீக்கம்,அடிவயிறு வலி காணும்.
  12. சில வேளைகளில் சிறுநீர் இறங்கும் முன்பும், பின்பும் பச்சை நிற திரவம் வெளியாகும்.

ரோக நிதானம் - மேகவெள்ளை அல்லது பிரமியம் (Genorrhoea)

            வாதம் கேடு அடைவதால் உண்டாகும் நோய்களில் மேகவெள்ளை அல்லது பிரமியம் என்னும் நோயும் ஒன்றாகும். சிறுநீர் இறங்குவதற்கு முன்போ அல்லது பின்போ வெண்ணிறத்தில் சீழ் போல இறங்குவதுவும், நீர்த்தாரையில் எரிச்சலும், கடுப்பும் உண்டாக்குவதும் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும். இந்நோய் கண்டவர்கள் சிறுநீர் கழிக்கும்போது சீழ் போன்ற திரவம் கலந்து இறங்கும் அல்லது சிறுநீர் கழித்தவுடன் நீர்த்தாரையில் நூல்போல வெண்ணிற திரவம் இருக்கும். மேலும் சிறுநீர்த்தாரையில் எரிச்சல், நமைச்சல் உண்டாகும். இது 21 வகையாக பிரிக்கப்படுகிறது.


பிரமியம் உண்டாகக் காரணங்கள் :

  1. அளவுகடந்த கலவியில் ஈடுபட்டு, அதோடு பட்டினி கிடந்தால் உண்டாகும்.
  2. யோகத்தில் நிலைத்து மூலக்கனலை எழுப்பும்போது உண்டாகும்.
  3. அதிக காரமான உணவை தொடர்ந்து உண்பதால் உண்டாகும்.
  4. அதிக உவர்ப்பு, துவர்ப்பு கொண்ட உணவை தொடர்ந்து உண்பது.
  5. தன்னால் தாங்க இயலாத சூட்டினை தாங்கிக் கொள்வதால் உண்டாகும்.
  6. அதிக சூட்டினை உடலில் உண்டுபண்ணும் தொழிலை செய்வது.

பிரமிய வகைகள் :

1) வாதப் பிரமியம் :

ஆண்குறியின் அடித்தண்டிலும் விதைகள் கனத்தும் வலி, அடிவயிறு, பக்கங்களில் பாரமாய் தோன்றி வலியும் உண்டாகும். வயிற்றில் இழுத்துப் பிடித்தது போன்ற வலியும் இருக்கும். சிறுநீர் சீழ் கலந்து இறங்கும். உடல் வற்றும்.

2) பித்தப் பிரமியம் :

உடல் வற்றி சோர்வு, மூட்டுக்களிலும், கைகால்கள் ஓய்ந்து வலிக்கும். குதம், குய்யம் கடுக்கும். உடல் கறுத்து எரிச்சலுடன் காணும். சிறுநீர் கழியும் போது மஞ்சள் நிறத்துடன் தாங்க முடியாத வலியுடன் இறங்கும்.

3) கபப் பிரமியம் :

ஆண்குறி கடுத்து வலிக்கும். கண்களும், உடலும் வெளுத்து, உடலில் அனல் மிகுந்து நீர்ச்சுருக்கு உண்டாகும். சிறுநீர் வெண்ணிறமாக சீழ் கலந்து இறங்கும்.

4) வாதப் பித்தப் பிரமியம் :

உடல் முழுவதும் வலித்து, வயிற்றில் கட்டி தோன்றி மலம் வெளியாகாமல் இறுகிக் கொள்ளும். சிறுநீர் கழிக்கும்போது சுருக்கென்ற வலியுடன் இறங்கும். ஆண்குறியின் அடியில் ஊசியால் குத்துவதைப் போல வலி இருக்கும்.

5) பித்தக் கபப் பிரமியம் :

வாய் மிகவும் கசப்பாக இருக்கும். அடிவயிறு பொருமி ஊதி இழுத்துப் பிடிப்பது போல வலி இருக்கும். மஞ்சள் நிறமும் சீழும் கலந்து சிறுநீர் இறங்கும். கீல்களில் வலி உண்டாகும். பசியின்மை, பகல் தூக்கம், ஆண்குறியில் சுருக்கென்ற வலி இருக்கும்.

6) தொந்தப் பிரமியம் :

உடலில் திணவு உண்டாகி, உடல் முழுதும் புழுக்கள் ஊர்வது போன்ற உணர்வு உண்டாகும். அடிவயிற்றில் சுரப்புண்டாகி அடிக்கடி சிறுநீர் கடுத்து சீழுடன் இறங்கும். சிறுநீரை தெளிய வைத்தால் அடியில் தூசு போல படியும்.

7) கட்டிப் பிரமியம் :

ஆண்குறியிலும், நீர்த்தாரையிலும் திணவும் எரிச்சலும் உண்டாகும். மேலும் ஆண்குறியில் பருக்கள் தோன்றி கட்டியாக மாறி சீழ் வடியும். ஆண்குறியின் கீழ்பகுதியில் கட்டி உண்டாகி உடைந்து நீர்ப்புழையுடன் சேர்ந்து துளை உண்டாகி அதன் வழியாக விதையின் மேல் நீர்க் கசியும். மேலும் இதனால் உண்டாகும் நாள்பட்ட கட்டிகள் உடலில் ஊறி உடலை வற்றச் செய்து உடல் வலிமையை குறைக்கும்.

8) சலப் பிரமியம் :

ஆண்குறியில் வலியும், சிறுநீர்த்தாரையில் வெண்ணிறக் கசிவும் இருக்கும். அடிவயிற்றில் பிடுங்கலுடன் வலி இருக்கும். மலத்தில் சீதம் கலந்து போகும். தொடை இடுக்குகளில் கட்டியும், உடல் முழுவதும் வழியும் இருக்கும்.

9) நாறு தந்திப் பிரமியம் :

அடிவயிறு புண் போல நொந்துக் காணும்.ஆண்குறியின் அடித்தண்டு விறுவிறுத்து பூரிக்கும். சிறுநீர் இறங்கும் முன்னர் ஆண்குறியின் துளையிலிருந்து கம்பிபோல வெள்ளை திரவம் வரும். இந்த திரவம் எப்போதும் கசிந்து துணியில் நனைந்து காணும். கைகால் எரிச்சல் இருக்கும்.

10) சீதப் பிரமியம் :

சீழ் போல வெள்ளை விழும். அரையாப்பு, பவுத்திரக் கட்டிகள் காணும். நாபிப் பகுதி புண்ணாகும். கணுக்கால் மூட்டில் தாங்க முடியாத வலி உண்டாகும். அடிக்கடி சிறுநீர் கடுத்து இறங்கும். சுரம் கண்டு அதிக குளிர் எடுக்கும். உடல் முழுவதும் நொந்து மயக்கம் உண்டாகும்.

11) ஒழுக்குப் பிரமியம் :

இந்நோயில் சீழும், குருதியும் கலந்த நீர்ப்போல வெள்ளை எந்நேரமும் ஒழுக்கிக் கொண்டே இருக்கும். உடல் முழுதும் சிறுசிறு பருக்கள் போல் கட்டிகள் உண்டாகி, முளைகள் தோன்றி உடைந்து புண்ணாகும். வயிற்றில் தீப்போல அனலை உண்டுபண்ணி அதிகப் பசி எடுக்கும். உடல் முழுதும் குடைந்து படுக்கையில் இருக்கச் செய்யும்.

12) அரித்திராப் பிரமியம் :

மஞ்சள் நிறத்தில் வெள்ளை கழியும். நீர்த்தாரையில் எரிச்சலும், கடுப்பும் காணும். முகம் மஞ்சள் நிறமடைந்து நாவில் கசப்பு காணும். மனம் அடிக்கடி திடுக்கிடும்.

13) கிரிச்சரப் பிரமியம் :

குத்தலுடன் மஞ்சள் நிறமான நீர் இறங்கும். சிறுநீர் வராமல் கட்டிக் கொள்ளும்.ஊண், உறக்கம் இருக்காது. உடல் முழுதும் உளைந்து, மனதில் சஞ்சலம் தோன்றும்.

14) கரப்பான் பிரமியம் :

வயிறு உளைந்து, நொந்து சீதத்துடன் மலம் கழியும். சிறுநீர் கடுத்து இறங்கும்.உடல் வெப்பம் அதிகமாகி சொறி, கரப்பான் போன்ற நோய்கள் காணும்.s கைகால்கள் ஓய்ந்து, ஆண்குறி புண் போல நொந்து குத்திச் சிறுநீர் கழிக்கும்போது சுண்ணாம்பு கல்லைக் கரைத்ததுபோல நீர் இறங்கும்.

15) கல் பிரமியம் :

குறியிலிருந்து கள்ளைப்போல வெள்ளை கசியும். உடம்பில் கற்றாழை நாற்றம் வீசும். வயிற்றில் கல்லைப்போல் சிறுநீர்க் கட்டிக்கொண்டு வயிறு விம்மி நீர்க் கழியும். பசி இல்லாமல், உந்தி முதல் விரை வரை விறுவிறுத்து உப்புசமாக காணும்.

16) தந்துப் பிரமியம் :

சிறுநீர் கழியும்போது சிலந்தி நூல்போல வெள்ளையும், இரத்தமும் கலந்து லியுடன் காணப்படும். விலாபுறங்களில் வலித்து, சிறுநீர்த் துளித்துளியாக இறங்கும்.

17) நீச்சுப் பிரமியம் :

சிறுநீர் இறுகி கள்ளைப் போல வெளுத்து சீழுடன் இறங்கும். ஆண்குறி விரைக்கும்போது அடித்தண்டு வீங்கி இறுக்கிப் பிடித்தது போல விறுவிறுத்து வலிக்கும். நரம்புகள் சுருங்கி,அடிவயிற்றில் குத்தல் காணும்.

18) வலிப் பிரமியம் :

ஆண்குறியின் அடிநரம்பு, குதம், குய்யம் ஆகிய இடங்களில் வலி, புறங்காலில் திமிர் காணும். உடல் முழுதும் கனன்று, மயக்கமும், நாவில் கசப்பும் காணும்.குறி வீங்கி நீர் இறங்கும்போது அதில் இற்றுப்போன சதைத் துணுக்குகளும், வெள்ளையும் சேர்ந்து இறங்கும்.

19) மதுப் பிரமியம் :

ஆண்குறி மிகவும் நொந்து நீர் வண்டலாய் தென் போல இறங்கும். சிறுநீரில் எறும்பு மொய்க்கும். சிறுநீர்ப் பாதையின் உள்பகுதியில் இரணமாகி, உடல் முழுதும் நாற்றம் எடுக்கும். நாக்கு வறண்டு, சுவையற்று இருக்கும். மயக்கம் உண்டாகும்.

20) விரணப் பிரமியம் :

உடல் முழுதும் புண் உண்டாகி அதிக துன்பம் தரும். மேலும் மயக்கம் உண்டாகும். ஆண்குறி பருத்து வீங்கி சீழும், இரத்தமும் கலந்து நீர் இறங்கும். மூட்டுகள் வீங்கி நொந்து வலிக்கும். உடல் தும்பி விறுவிறுத்துப் போகும்.

21) இரத்தப் பிரமியம் :

உடல் தளர்வுற்று சோர்வு, கிறுகிறுப்பு, மயக்கம் காணும். அதிக வலியுடனும், கடுப்புடனும் சிறுநீர் இறங்கும். சிறுநீருடன் இரத்தம் கலந்து அதிக துர்நாற்றத்துடன் இறங்கும். முகம் மிகவும் கலங்கிக் காணப்படும்.

சனி, 15 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - பிளவைகள்

            நீரிழிவு நோய் உடலில் ஊறி, உடல் வன்மையை குறைத்து, ஆங்காங்கு சிறு பருக்கள் அல்லது பெருங்கட்டிகளை உருவாக்கும். சில வேளைகளில் பருக்கள அல்லது கட்டிகள் உருவாகாமல் சொறிந்த இடத்திலாவது, அடிபட்ட இடத்திலாவது புண் உண்டாகி துன்பம் உண்டாக்கும். இது 10 வகைப்படும்.

பிளவை நோயின் வகைகள் :

1) கடுகுப் பிளவை :

கடுகைப் போன்ற வடிவில் சிறிசிறு கட்டிகளாய் ஒவ்வொன்றாய், உடல் முழுவதும் பரவி வலியை உண்டாக்கும்.

2) கடலைப் பிளவை :

கடலை அளவில் உடல் முழுதும் சிறிது உடல் முழுதும் பரவித் தாங்க முடியாத வலியை உண்டாக்கும்.

3) நிலப்பூசணி பிளவை :

நிலப்பூசனியின் அளவில் கட்டி உண்டாகி அதில் தாங்க முடியாத வலியையும் உண்டாகும்.

4) கட்டிப் பிளவை :

தோலின் மேல்புறம் அல்லது சதையின் மேல்புறத்தில் கட்டிபோலப் பெருத்து வட்டமாகவோ, நீளமாகவோ வளர்ந்து, சில நேரங்களில் உடைந்து சீழ் வடியும். சில நேரங்களில் உடையாமல் அழுந்திப் போகும். மேலும் ஒரு கட்டி குணமாகும் முன்னரே இன்னொரு கட்டி உண்டாகி உடலில் துன்பத்தை உண்டாக்கும்.

5) மடக்குப் பிளவை :

இது பெரும்பாலும் சதைப்பற்றுள்ள பிட்டம், தொடை போன்ற இடங்களில் உண்டாகும். இது தோன்றும்போதே அந்த இடங்களில் கனத்து வீங்கியும், அந்த இடத்தைச் சுற்றி தோல் தடித்து சிவந்தும், நடுவில் குழி விழுந்தும் காணும். இது தாங்க முடியாத வலியையும் உண்டாக்கும்.

6) ஆமையோட்டுப் பிளவை :

ஆமையோட்டைக் கவிழ்த்தது போலக் கட்டி நாளுக்கு நாள் பெருத்துக் கொண்டே வந்து அதில் சிறுசிறு கண்கள் தோன்றி அதிலிருந்து சீழ் வடியும். பல்வேறு கெடுதிகளை உண்டாக்கும்.

7) பேய்ச்சுரைப் பிளவை :

இது உண்டாகும் இடத்தில் நெருப்பால் சுட்டது போல எரிச்சல் உண்டாகி, பிறகு அங்குக் கருஞ்சிவப்பு நிறத்தில் கட்டி உண்டாகும். இதன் அடிப்பகுதி கனத்து வீங்கி வலிக்கும். இதனுடன் சுரம், மயக்கம், சோர்வு, கழிச்சல் உண்டாகும்.

8) கூன் பிளவை :

இது வயிற்றிலாவது, முதுகிலாவது உண்டாகி பெருத்துத் திரண்டு, மேல்பக்கம் பூசினது போலவும், உள்பக்கம் அழுந்தினது போலவும் அடர் கருப்பு நிறத்திலும் இருக்கும். வியர்வை, தாங்கமுடியாத வலி, சுரம் முதலிய குணங்கள் தோன்றும். மேலும் கட்டியிலிருந்து நாற்றத்துடன் சீழ் வடிந்து கூன் விழுந்ததைப் போல நிமிரவும் முடியாமல், குனியவும் முடியாமல் துன்பம் தரும்.

9) வலைக்கண் பிளவை :

இது உண்டாகும்போதே அந்த இடத்தில் எரிச்சல், குத்தல், குடைச்சல் போன்ற குணங்களைக் காட்டும். மேலும் கட்டி வந்த இடத்தில் தடித்து சிவந்து வீங்கி இருக்கும். பின்பு நாளுக்கு நாள் பெருத்து வலையின் கண்கள்போலச் சிறுசிறு கண்கள் உண்டாகி, சீழ் வடிந்து உடல் முழுவது பரவித் துன்புறுத்தும்.

10) கூட்டுப் பிளவை :

சிறுசிறு கட்டிகள் ஒரே கூட்டமாய் தோன்றி அவைகள் வளர வளரச் சிறுசிறு கட்டிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய கட்டியாக மாறித் தாங்க முடியாத வலியும், எரிச்சலும், சீழும் உண்டாக்கும்.


            இதுவரைக் கண்ட 10 வகையான பிளவைக் கட்டிகள் போக மேலும் 5 விதமான பிளவைக் கட்டிகளைப் பற்றிச் சில நூல்களில் உள்ளது. அவை மார்புப் பிளவை, பக்கப் பிளவை, இராஜ பிளவை, கண்டமாலை, பேய்ச்சொறி.


11) மார்புப் பிளவை :

மார்பின் தண்டுபோலத் திரண்டு காணும்.

12) பக்கப் பிளவை :

முள்ளந்தண்டின் அருகில் உரைபோலத் திரண்டு பல கண்களும், புரியும், சீழும் உண்டாகி, சுரம், கழிச்சலை உண்டாக்கும்.

13) இராஜ பிளவை :

நடுமுதுகின் முள்ளந்தண்டின் மேல் மாங்காய் அல்லது தாமைரைக்காய் அளவில் வீங்கி, கண் உண்டாகி, புரையும், சுரமும், சோகமும், கவலையும் காணும்.

14) கண்டமாலை :

கண்டத்தைச் சுற்றி அரித்துத் தடித்துப் புண்ணாகி சீழ்க்கட்டி புரையோடும்.

15) பேய்ச்சொறி :

உடலில் அடிக்கடி திணவு கண்டு, காசுபோலத் தடித்துச் சிவந்து மறைந்து விடுவதும், அதிக நாட்கள் சென்றால் இருமலும், கபமும் காணவும் செய்யும்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - மேக நோய் / நீரிழிவு (Diabetes)

            வளிநாடியும், அழல் நாடியும் கூடி நடந்தால் மேகம் உண்டாகும். அல்லது வளிநாடியின் இடது பக்கத்தில் ஐய நாடி கூடி நடந்தாலும் மேகம் உண்டாகும். எனவே மேக நோயில் முதலில் வாதம் கேடடைந்து பின்னர் பித்தத்தையும், கபத்தையும் கேடடையச் செய்யும். இது 20 வகைப்படும். இவற்றில் வாதத்தின் தொடர்பால் வருவது 4 என்றும், பித்தத்தின் தொடர்பால் வருவது 6 என்றும், கபத்தின் தொடர்பால் வருவது 10 என்றும் கூறுவர். இந்த 20 வகையான மேக நோய்களுடன், மருந்தீட்டினால் உண்டாகும் மேக நோயையும் சேர்த்து 21 என்றும் கூறுவர்.


மேக நோய் உண்டாகக் காரணங்கள் :

1) அளவு கடந்த இனிப்புச் சுவையுள்ள போர்ட்களை உண்ணுதல்.

2) எப்போதும் மனம் வருந்தியது போல இருத்தல்.

3) அதிகநேரம் அமர்ந்து இருத்தல்.

4) அதிக கலவியில் ஈடுபடுதல்.

5) சோம்பித் திரிதல்.


மேகத்தால் உண்டாகும் துன்பங்கள் - 10 :

1) கீழ்வயிற்றில் சங்கடம்.

2) நீர் இறங்கியவுடன் சோர்வு.

3) வாயு மிகுந்து துன்பம் உண்டாதல்.

4) சுக்கில நாசம்.

5) அதிக தாகம், இளைப்பு.

6) நீரில் மேகம் காணுதல்.

7) உடலில் கட்டிகள் தோன்றல்.

8) பேதி அதிகரித்தல்.

9) சரீரம் கனத்து, சுவாசம் அதிகரித்தல்.

10) மனக்கலக்கம், நினைவுகுன்றி உயிர் பிரிதல்


மேக நோயின் வகைகள் :

வாதத்தால் உண்டாகும் மேகம் - 4 :

            வாதத்தின் பாதிப்பால் உண்டாகும் மேகத்தில் பொதுவாகக் கைகால் - கண் - உடல் அழற்சி, பல், நாக்கு, நடுத்தொண்டை கறுப்படைதல், அரட்டல், புரட்டல், மயக்கம், அதிக உணவு - நீர் வேண்டுதல், துர்நாற்றமுடன் அபானவாயு, நாடிபேதம், நாவறட்சி, தூக்கமின்மை,  இருமல், இரைப்பு, வயிற்றுவலி, நடுக்கம், இருதயத்துடிப்பு, நிற்க இயலாமை, நிணம் - கட்டிச்சளி - நீளநரம்பு - முதிர்ந்த சுக்கிலம் போன்ற குணங்கள் தோன்றி, சிறுநீர் சிதறிய கள் போல வழுவழுத்து இறங்கும். ஈ மொய்க்கும்.

1) நெய்மண நீர் :

இதில் கழியும் சிறுநீரானது நெய்யின் மணத்தையும், பிசுபிசுப்பையும் கொண்டிருக்கும். இதைத் துணியில் நனைத்துக் கொளுத்த எரியும். இறங்கும் நீர் மிகுதியாகக் காணும். உடல்வாடிக் கொண்டே வரும். மூர்ச்சை, சோர்வு காணும். நோய்கண்ட 7 நாட்களில் கொல்லும்.

2) பசுமண நீர் :

இதில் கழியும் சிறுநீர் பசுவின் சிறுநீர் போன்ற மணத்தை ஒத்திருக்கும். ஒரு நாழிகைக்கு ஒரு படியளவு சிறுநீர் இறங்கும். இதுவும் துணியில் நனைத்துக் கொளுத்த எரியும். உடல் மெலிந்து சோர்வுண்டாகும். முகத்தின் ஒளி குறைந்து சோர்வு, இளைப்பு காணும். நோய்கண்ட 15 நாட்களில் கொல்லும்.

3) சீழ் (பிரமிய) நீர் :

இதில் சிறுநீர் கவிச்சு மணம் வீசும். மேலும் சிறுநீரானது கொழுப்புப் போலக் கனத்து மாமிச நாற்றமுடனும் - தேன் போன்ற மணத்துடனும் இறங்கும். இது நோய்கண்ட 6 மாதத்தில் தீங்கு இழைக்கும்.

4) சதை நீர் :

இதில் சிறுநீர்த்தாரை, சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் உள்ள சதை மற்றும் சவ்வு இற்று சிறுநீருடன் கலந்து ஆட்டுக்குட்டியின் கறியைக் கழுவிய நீர்போலவும், ஆட்டின் கொழுப்பு போலவும், புளித்த கரும்புச்சாரின் மணம் போலவும் இறங்கும். இது 6 மாதத்தில் தீங்கு இழைக்கும்.


பித்தத்தால் உண்டாகும் மேகம் - 6 :

            பித்ததத்தின் பாதிப்பால் உண்டாகும் மேகத்தில் பொதுவாக உடல் அழற்சி, கடுப்பு - கவிச்சு நாற்றம் - மஞ்சள் நிறத்தில் நீர் இறங்குதல் - எரிச்சல் - உடல் வற்றல் போன்ற குணங்கள் இருக்கும். சோர்வு, மயக்கம், தயக்கம், அரட்டல், புரட்டல், நாவறட்சி, விக்கல், வாந்தி, வாய்ப்புண்ணாகி நாற்றம், சுரம், ஆண்குறி குத்தல், வெடித்தல், நாவில் புளிப்புச்சுவை - துவர்ப்பு -பேதி, மலச்சிக்கல்சிறுநீர் சாம்பல் இறைச்சி கழுவிய நீர் - மஞ்சள் - கரி போன்ற நிறத்திலும், புளிப்புச் சுவையுடனும் கழிதல் போன்ற குணங்கள் காணும். இந்தச் சிறுநீரில் சீழ், கற்றாழை, தேன் போன்ற மணம் வீசும்.

5) யானைக் கொழுப்பு மணநீர் :

யானையின் மதநீர் போல அதிவிரைவாய் இறங்கும். இந்தச் சிறுநீர் படிந்த இடத்தில் சிறிது நேரத்தில் உவர்மண்போல அடியில் படிந்திருக்கும். 8 மாதத்தில் தீங்கிழைக்கும்.

6) கற்றாழை மணநீர் :

கற்றாழையின் மணம் மற்றும் நாற்றத்துடன் சிறுநீர் இறங்கும். அதிக துர்நாற்றமுடன் இருக்கும். இது 7 ஆண்டில் தீங்கிழைக்கும்.

7) சுண்ண மணநீர் :

சுண்ணாம்பு போலக் காரமும், நாற்றமும் கொண்டு சிறுநீர் இறங்கும். அந்த இடத்தில் ஈயும், எறும்பும் அரிக்கும். இது 2 ஆண்டில் தீங்கிழைக்கும்.

8) இனிப்பு  (மதுமேகம்) மேகநீர் :

இதில் விரையும், தண்டும் கடுத்து, மஞ்சளாய் சிறுநீர் இறங்கும். சிறுநீர் கழிந்த இடத்தில் சிறிது நேரத்தில் வண்டல் போலப் படியும். சிறுநீர் தேன் போன்ற மனத்தில் இருக்கும். உடல் - கண்  வெளுக்கும். இது 5 ஆண்டில் தீங்கிழைக்கும்.

9) பளிங்கு நீர் :

இதில் தாண்டும், விரையும் கடுத்து சீழ் போன்ற நாற்றமுடனும், தாழை விழுதியின் சாற்றைப் போலவும் நிறமும், மணமும் கொண்டு கழியும். இதுவும் 5 ஆண்டில் தீங்கிழைக்கும்.

10) முயல் குருதிநீர் :

இதில் தாண்டும், வ்விரையும் கடுத்து குருதி போலவும், உப்பு நாற்றமுடனும், புலால் மனத்துடனும் வீசும். இது 9 மாதத்தில் தீங்கிழைக்கும்.


கபத்தால் உண்டாகும் மேகம் - 10:

உடல் கருத்தல் - வெளுத்தல் - திணவு, உணவு - நீர் வேட்கை, இருமல், உளைச்சல், உடல் சோர்வு, கோழை, தூக்கம், செரியாமை, வாந்தி, காணும். சிறுநீர் அடிக்கரும்புச்சாறு - தேன்பாகு - சர்க்கரை - கரைத்த மாவு - பன்னீர் - தயிர் - பால் போலக் கடுத்து இறங்கும். ஈயும், எறும்பும் மொய்க்கும்.

11) ஐய நீர் :

இதில் சிறுநீரில் கொழுப்பு நிறைந்து நிணத்தின் வாசனையுடன் இறங்கி ஆடை கட்டும். ஆண்குறியும், விரையும் வலிக்கும். இது 7 ஆண்டில் தீங்கிழைக்கும்.

12) தூமை  (தூய்மை) நீர் :

இதில் நல்ல தண்ணீர் போலச் சிறுநீர் இறங்கும். இது 10மாதத்தில் தீங்கிழைக்கும்.

13) மூளை (மச்சை) நீர் :

இதில் சிறுநீரானது எலும்பின் உள்ளே இருக்கும் மச்சையை நீரில் கரைத்தது போலக் கழியும். சிறுநீரானது நிணத்தின் நாற்றத்தை கொண்டிருக்கும். இது 5 ஆண்டில் தீங்கிழைக்கும்.

14) இளநீர் மேகம் :

இதில் சிறுநீர் இளநீர் போலத் தெளிவாக இறங்கும். சிறுநீரின் மணம் இளநீர் அல்லது தேங்காய் எண்ணையின் மணத்தைக் கொண்டிருக்கும். மேலும் அதிக தாகம், கவலை உண்டாகி, உடல் இளைக்கும். இது 7 ஆண்டில் தீங்கிழைக்கும்.

15) கள் நீர் :

இதில் சிறுநீர் வெளுத்து, நுரைத்து கள்ளைப் போன்ற நிறமும், மணமும் கொண்டிருக்கும். மயக்கம் உண்டாகும். இது 7 ஆண்டில் தீங்கிழைக்கும்.

16) சுக்கில மேகம் :

இதில் சிறுநீர் குழகுழத்து விந்து போலவும், தாழையின் சாறு போலவும் காணும். இதனால் உடல் கருக்கும். இது 3 ஆண்டில் தீங்கிழைக்கும்.

17) கழுநீர் மேகம் :

இதில் சிறுநீர் அடைத்துச் சிக்கி கழுநீர் போல இறங்கும். சிறுநீர் கழிந்த இடத்தின் அடியில் சங்கைச் சுட்ட சுண்ணாம்பு போலப் படிந்திருக்கும். உடல் நாற்றமடிக்கும். இது ஒரு ஆண்டில் தீங்கிழைக்கும்.

18) தேன் நீர் :

இதில் நீர் தேன் போன்ற மணத்துடன் இறங்கும். சிறுநீர் கழிந்த இடத்தில் மெழுகு போல அடியில் தாங்கும். ஈயும், எறும்பும் மொய்க்கும். இது 5 மாதத்தில் தீங்கிழைக்கும்.

19) இலவண (உப்பு) நீர் :

இதில் சிறுநீர் சுண்ணாம்பு கரைத்தது போலக் கலங்கியும், வெளுத்தும் இறங்கும். இதன் மணம் சுண்ணாம்பு நீரினை ஒத்திருக்கும். சிறுநீர் கழிந்த இடத்தில் சுண்ணாம்பு போலப் படிந்திருக்கும். இது 15 வருடத்தில் தீங்கிழைக்கும்.

20) கவிச்சி நீர் :

இதில் சிறுநீர் இறைச்சி கழிவிய நீரைப் போன்ற நிறத்திலும், மணத்திலும் இறங்கும். நீர் இறங்கும் போதெல்லாம் ஆண்குறியை புரட்டி நீரடைத்தது போல வலிக்கும். இது 3 ஆண்டில் தீங்கிழைக்கும்.

21) மருந்தீடு மேகம் :

இதில் சுடலைச் சாம்பல் மற்றும் கரைத்த சுண்ணாம்பு இவை இரண்டையும் கலந்த நிறத்திலும், மனத்திலும் சிறுநீர் இறங்கும். சில நேரங்களில் சிகைக்காயின் மனத்திலும் இருக்கும்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - குன்மம் (Dyspepsia)

            வாத பந்தமலாது குன்மம் வராது என்பது தேரையர் வாக்கு. எனவே இதுவும் வாத மீறலால் உண்டாகும் நோய் என்று அறியலாம். இது வயிற்றில் காற்று கூடி உருண்டையை போல திரண்டு இங்கும் அங்குமாக உலவித் துன்புறுத்தும். இது 8 வகைப்படும்.

குன்மம் உண்டாக காரணம் :

  1. அதிக சூடுள்ள உணவையும், கல், மண், தூசு, மயிர் கலந்த உணவை உண்ணுதல்.
  2. சுனைநீர், சுண்ணாம்பு கலந்த நீர், தேங்கிய நீரை அருந்தல்.
  3. மந்தம் தரும் பொருட்களை உண்ணுதல்.
  4. அதிக கோபம்.
  5. பட்டினி இருத்தல்.
  6. மனச்சலிப்பு,
  7. துக்கம்.

குன்ம நோயின் வகைகள் :

1) வளி (வாத) குன்மம் :

உடல் கனத்து கடுத்தல், கைகால் சந்துகளில் உளைத்து ஓய்தல், தலைவலி, மலச்சிக்கல், நடை குறைதல், தூக்கம், பலவீனம், அற்ப உணவு, வாந்தி, கிறுகிறுப்பு, ஈரலும், நெஞ்சும் வற்றல், ஒரு பக்கத்தைப் பற்றி வயிறு எரிந்து உளைதல், குடலைப் புரட்டி வலித்தல்,இரவில் தொல்லைகள் கூடுதல் முதலியன தோன்றும்.

2) அழல் (பித்த) குன்மம் :

உடல்சூடு, கண், முகம், சிறுநீர் மஞ்சளாதல், கைகால் ஓய்தல், மனக்கோளாறு, வெய்யிலில் மயக்கம், வாந்தி வருதல், வயிறு மந்தம் மற்றும் வலி, நெஞ்செரிச்சல், கோழை, ஒக்காளம், வியர்வை, வாய் கசப்பு, உணவில் வெறுப்பு, மலத்தில் பித்தம் ஏறிக் கடுத்து இறங்கல், மேல்மூச்சு முதலிய குணங்கள் தோன்றும்.

3) ஐயக் (கபம்) குன்மம் :

உடல் வற்றி கருத்தல், பலவீனம், உணவில் வெறுப்பு, வாயில் நீர் ஊறல், நாவு வழுவழுத்து இனித்தல், கபம் சீழாய் விழுதல், விக்கல், தும்மல், இருமல், இளைப்பு, கொட்டாவி,தலைக்கனம், வயிற்றில் இரைச்சல், நீர் - மலம் கட்டி, பயம், நடுக்கல், நெஞ்சில் புகை கம்மியது முதலிய குணங்கள் தோன்றும்.

4) சன்னிக் (முக்குற்றம்) குன்மம் :

உடல் உஷ்ணம் -குளிர்ச்சி, தயக்கம், மயக்கம், திடுக்கிடல், குளிர், உணவில் வெறுப்பு,அடிவயிற்றில் இரைச்சல், உப்புசம், கிழிச்சல், வாய் நீர் ஊறல், புகைச்சல், அதிக சுவாசம், வாய்த் துவர்ப்பு முதலிய குணங்கள் தோன்றும்.

5) வலி குன்மம் :

உடல் வற்றிக் கருத்தல் - கடுத்தல், வயிற்றில் முள்ளைச் சொருகியது போல பலவாறு வலித்தல், உப்புசம், அற்ப உணவு, நெஞ்செரிச்சல், எதிரெடுத்தல், முதுகுத்தண்டு வலி, இடுப்பு நோய், கடும் சுரம், பொய்ப்பசி, விலாச் செருகல், தூக்கம் முதலிய குணங்கள் தோன்றும்.

6) சக்தி குன்மம் :

உடல் வெளுத்து வற்றல், திமிர், நடைக் குறைதல், பலவீனம், வாயு கூடி வயிறு பொருமல், உணவைத் தள்ளல், செரியாமை,வாந்தி, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், மலம் கருகல், ஆயாசம், ஏக்கம், மயக்கம், தயக்கம், வாந்தி, வயிற்றில் அற்பவலி, சிறு நரம்புகள் புடைத்தல் போன்ற குணங்கள் தோன்றும்.

7) எரி குன்மம் :

உடல் இளைத்தல், எரிச்சல், குடலைப் புரட்டி குமட்டல், வாய் நீர் ஊறல், வயிறு சதா  இரைதல் - பொருமல், ஏப்பம், தலை கனத்தல், கிறுகிறுப்பு,மயிர்க்கால் வழி வியர்த்தல்,பேதி, உணவு செரியாமை, அடிவயிற்றிலும்,நெஞ்சிலும் எரிதல் முதலிய குணங்கள் தோன்றும்.

8) சூலை குன்மம் :

உடல் வெதுவெதுப்புடன் குளிரல், எலும்பு பொருத்துகள் உளைந்து குத்தல், மேல்வயிறு வலித்து எரிதல், வாய் நீர் ஊறல், ஏப்பம், செரியாமை, உணவு செல்லாமை,வயிறு உப்பலுடன் அசதி, நடைக்குறைவு,கை கால் எரிவு, அடிவயிற்றில் குடல் புரண்டு வில்போல இழுத்தல் முதலிய குணங்கள் தோன்றும்.

9) இரத்த குன்மம் :

இது பெண்களுக்கு வரக்கூடியது. பூப்பு தோஷங்கள் காரணமாக கர்ப்பம் போன்ற குறிகுணங்கள் தோன்றும். 10 மாதங்கள் சென்ற பின்பே சிகிச்சை செய்ய வேண்டும்.

புதன், 12 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - சூலை (Rheumatism - Ghout)

             “நெடுவாத சார்பது வின்றிச் சூலை வராது” என்பது தேரன் வாக்கு. எனவே வாதம் மீறினால் சூலை நோய் கொள்ளும் என்பதை இதிலிருந்து அறியலாம். உணவு வகைகளில் வாதத்தை மீறச் செய்யும் பொருட்களை நெடுநாட்கள் உண்பதாலும், வாதத்தை மீறச் செய்யும் செயல்களை அதிகமாக ஈடுபடுவதாலும் இந்நோய் பிறக்கும். உறுப்புகளில் வாதம் மீறும்போது அந்தந்த பகுதிகளில் குத்தல், குடைச்சல், புரட்டல், வலி என்னும் குணங்களை உண்டாக்குவது சூலை ஆகும்.

                இந்நோயினால் உண்டாகும் வலியானது சூலம் என்னும் ஆயுதத்தால் குத்துவதைப் போன்ற வலியை உண்டாக்குவதால் இது சூலை எனப்பட்டது. ஒருசில நூல்களில் சூலை என்னும் தலைப்பில் மூட்டுவாத நோய்களையும் கூறுவதால் அதைப் பற்றி முன்பே கண்டோம். இனி சூலை நோயின் வகைகள் மற்றும் அவற்றின் குணங்களை காண்போம்.

சூலை நூலை உண்டாகும் வழிகள் :

  1. சூடான பொருட்களை உண்பது.
  2. துவர்ப்பு சுவை கொண்ட பொருட்களை உண்பது.
  3. அதிக கோபத்துடன் சண்டை இடுதல்.
  4. மனச்சலிப்பு கொள்வது.
  5. அதிக ஓட்டம்.
  6. புகை பிடித்தல்.
  7. அதிக கலவி.
சூலை நோயின் வகைகள் :

1) மேகச்சூலை :

கைக்கால்கள் மிகவும் கடுத்து குடைதல், சிறுநீரும், மலமும் கட்டி, கைக்கால்களில் வியர்வை, குளிர், உடல் முழுவதும் எரிச்சல் உண்டாகி உடல் சிவந்து காணுதல், மன உளைச்சலால் உடல் இளைத்தல், அதிக தாகம், மயக்கம், பிரம்மை காணுதல்.

2) முறிச்சூலை :

ஆண் குறியில் அழற்சி உண்டாகி அது அடி முதுகையும், குடலின் அடியையும் பற்றிப் பரவி உப்புசம், வலியை உண்டாக்கும். தலைவலி, நாபியில் வலி, சுரம், கண்கள் சிவந்து நீர் ததும்பி காணுதல், அதிக கலக்கம் காணும்.

3) வளிச்சூலை :

கைக்கால்களில் உளைச்சல் கண்டு, அங்குத் தடிப்பு, திமிர் காணும். அதிக குளிர், அதிக தூக்கம், சிறுநீர் சிவந்து பிரியும், உடல் முழுவதும் குடைந்து நோகும், உடல் கனத்து, உடலை இழுத்து பிடிக்கும்.

4) அழல்சூலை :

உடல் வற்றிக் கடுப்பு உண்டாகும். கைகால் கனத்து உளையும். தூக்கம் கேட்டு, உடலின் தாதுக்கள் குறைந்து, வலிமையற்றுக் காணும். தோலில் மினுமினுப்பு, அறிவு தெளிவற்றுக் கலங்கி, மயக்கம் காணும்.

5) ஐயச்சூலை :

தொண்டையில் வலி, நெஞ்சில் கோழை கட்டுதல், அடிவயிற்றில் வலி, உடல் முழுவதும் அழன்று புண்போல நோகும். உடல் முழுதும் வியர்த்து உடலும், நகமும் வெளுக்கும். வாயில் அடிக்கடி நீர் ஊறும். உடல் பஞ்சு போலாகும்.

6) ஆமச்சூலை :

அடிக்கடி அசீரணம், அதிக புளிப்பு, கசப்பு, இனிப்புப் பொருட்களை உண்ணுதல், அடிக்கடி பட்டினி, தூய்மையற்ற நீரை பருகுதல் போன்ற செயல்களால் வயிற்றில் உள்ள கபம் (ஆமம்) கூடி மந்தம் உண்டாகும். இதனால் வயிறு மற்றும் விலா புறங்களிலும் வலித்துக் கடுத்து குத்தல் உண்டாகும்.

7) உக்காரச்சூலை :

இதில் ஒரே நேரத்தில் விலா, நெஞ்சு, எலும்பு, உந்தி, கீழ்வாய் என்னும் இடங்களில் அதிகமான கெட்ட சதை வளர்ந்து திரண்ட கட்டிகளைப் போலப் பெருத்து, சிறுநீர்த் தாரையை  நெருக்கிச் சிறுநீர் சிறுநீர் கழியும் பொது மிகுந்த துன்பத்தைத் தரும். மேலும் சிறுநீரில் மணலைப் போலச் சிறு துணுக்குகளும் இறங்கும்.உடல் கடுத்து, தளர்ந்து, அறிவு மயங்கி அடிக்கடி மயக்கம் உண்டாகும்.

8) குன்மச்சூலை :

இதில் சிறுநீரும், மலமும் கட்டும், வயிறு பொருமி இரைச்சலுடன் காணும். வயிற்றைப் பிடித்துத் தாங்க முடியாத வலியும் காணும். மூர்ச்சை உண்டாகும். வாயில் நீர் ஊறல், ஏப்பம் ஆகியவை அடிக்கடி உண்டாகும். உடலின் ஊண் மிகவும் வெதும்பி அழற்சியுற்று உடல் உலர்ந்து காணும்.  நாவின் சுவை மாறும்.

9) உலர்த்துச்சூலை :

இதில் உடலில் உள்ள அழல் (நெருப்பு / பித்தம்) கெட்டு வெப்பம் மிகுந்து உடலில் வறட்சியும், வழியும் கண்டு வீங்கிக் காணும். வாதம் மீறிய காரணத்தால் குடல் வாயு தூண்டப்பட்டு குன்மம் என்னும் வயிற்று வழியும் மிகுந்து காணும்.

10) நிதம்பச்சூலை :

பெண்கள் பிள்ளை பெற்ற பிறகு உண்டாகும் கருவாயின் கோளாறுகளால் அங்குப் புண்ணாகி, இரத்தமும் சீழும் பிடித்து, சதை வளர்ந்து, அது தேங்காயின் முளை போலத் தோன்றி, கருவாயின் வாயை அடைத்து அதிக வலியை உண்டாகும். சிறிது அசைந்தாலும் அந்த முளையிலிருந்து நீர் வரும். உடல் வாடி வெளுத்து, கால், கை, முகம் முதலியன வீங்கும்.

11) கறைச்சூலை :

தோலைப் பற்றி வளையம்போலத் திரண்டு நொந்து காணும். நரம்பில் தங்கி வலியைத் தரும். கீழ்முதுகில் வாயுமீறி பற்றிக் கொண்டு கடுமையாக வலித்து நோயை உண்டாக்கும்.கைகால்களில் அதிக வலியும், உடல் கறுத்தும், கருத்து அழிந்தும் காணும்.

12) சுரச்சூலை :

இரு பக்கங்களிலும் சூலை நோய் தோன்றி நோய் உண்டாகும்.வாய் வழியாக இரத்தம் வெளியாகும்.உடலில் சுரமும் உளைச்சலும் காணும். தேகம் முழுதும் வலி உண்டாகி துன்புறும்.வயிற்றில் அதிக வலியும், நெஞ்செரிச்சலும், செரியாமை,வாய்நீர் ஊறல், வாந்தி முதலியன காணும்.

13) பக்கச்சூலை :

தலைவலி, மார்பின் அடிப்பகுதியில் தாங்க முடியாத குத்தல், உடல் புண்போல நோதல், பக்கங்களில் கனத்து, விலா இடைவெளிகள் தெரியாதபடி வீங்கிக் காணும். கண் புகைதல், கைக்கால் ஓய்தல், மூச்சுவிட முடியாமை, திமிர் கொள்ளல், உருமாறி போதல் போன்ற குணங்கள் காணும்.

14) கற்பச்சூலை :

இது ஈடு மருந்தின் கேட்டாலும், சூனியத்தாலும், வெப்பம் மிகுந்து உடல் வெதும்பியாதாலும், மகப்பேற்றில் குருதி சிக்கலால் உண்டான குருதி பெருக்கு சூலகத்தில் ஊறி, அளவில் பெருத்து வயிறு பெருத்து, வயிற்றுள் புரண்டு, கீழ்வாயில் தாங்க முடியாத வலியைத் தந்து, மயக்கத்தை விளைவிக்கக் கூடியதாய் இருக்கும்.

15) தூரச்சூலை :

உணவு மறுத்து, வாய்நீர் ஊறி, நெஞ்சு எரிச்சல் உண்டாகி ஈரல், பக்கம், தலை, வயிறு ஊதும். மலமும், சிறுநீரும் வெளிப்படாமல் தங்கும். வயிறு திரண்டு, புரண்டு, அடிக்கடி ஏதோ ஒன்று வந்து அமர்ந்து ஒதுங்கி எழும்புவது போலவும், அதுவே கீழ்வயிற்றில் மீள்வது போலவும் தோன்றி, இரத்தத்தை வெளிப்படாமல் சிக்குமாறு செய்யும்.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - மூட்டு வாதம்

            வாத நோய்களில் மிகவும் முக்கியமானது மூட்டுகளில் வாயு சேர்ந்து உண்டாகும் மூட்டு வாத நோய்கள். இதன் காரணமாகவே பல்வேறு நூல்களில் இவை தனியாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நோய் பெரும்பாலும் வாதம் மீறிக் கீல்களை பாதிப்பதால் “கீல்வாதம்” என்றும், மூட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்துவதால் “மூட்டுவாதம்” என்றும், மேக நோய்க்குத் தொடர்புடன் வருவதால் “மேகசூலை” என்றும், எலும்பு மூட்டுகளை முடக்குவதால் “முடக்குவாதம்” என்றும், வயிற்றில் மந்தம் உண்டாக்கி கபம் பெருகி வருவதால் “ஆமவாதம்” என்றும் அழைக்கப்படும்.

            இவை பெரும்பாலும் 10 வகைப்படும். ஆயினும் சில நூல்களில் வேறு விதமாகவும் கூறப்படுகிறது. இந்த மூட்டு வாதநோய்கள் பெரும்பாலும் பல்வேறு நூல்களில் சூலை நோயின்  கீழ் இவை வகைப்படுத்தப்படுகிறது.

மூட்டு வாத நோயின் வகைகள் :

1) வளி சூலை :

உடல் கனத்து திமிராய் விறுவிறுத்து பிடரியையும், பாதத்தையும் பற்றி இழுத்து, கைக்கால் விரல்கள், மொளி முதலிய மூட்டுகள் வீங்கி, கறுத்து உளைந்து, நடக்க இயலாமல் செய்யும். மலம் கட்டும். குளிர் காலத்தில் இதன் பாதிப்புகள் அதிகமாகும்.

2) வளி வாயு சூலை :

பிடரி, கழுத்து, மூட்டுகள், முள்ளந்தண்டு, நெஞ்சு, விலா மூட்டுகள் உளைந்து, குத்தி வலித்து, காலை நேரத்தில் வயிறு இரையும்.

3) வளி நீர் சூலை :

உடல் புண்போல உளைந்து, கைகால் விரல்கள் வீங்கித் திமிராய் விறுவிறுத்து, உடல் வியர்த்துக் குளிர்ந்து, முகம், தலை வெதும்பி ஐயமும் பித்தமும் மீறி ஓடும்.

4) வளி சுரோணித சூலை :

நரம்பு வழி நீர் சென்று உடலில் பாய்ந்து அசைவுகள் வீங்கி வலிக்கும்.

5) வளி பித்த சூலை :

கை, கால் பொருத்துகளில் கரடு கட்டி, உடல் முழுதும் துடித்துப் புண்ணாகும்.

6) சன்னி வளி சூலை :

கை, கால் மூட்டுகளில் கரடு கட்டி, உடல் வீங்கி, அயர்ந்து நரம்பு தோன்றி, நாக்குழறி, செவி மந்தமாகும்.

7) அழல் சூலை :

உடம்பு உஷ்ணத்தால் வறண்டு கடுத்து, அசதியால் நடுங்கி, தலை வலித்து, வாய் கசந்து, கண், மூக்கு நீர் மஞ்சளாகி, கைகால் பொருத்துகள் உளைந்து விறுவிறுத்து கரடு கட்டும்.

8) ஐய சூலை :

கைக்கால், நெஞ்சு இவைகளில் குத்தல் வழியும், நெஞ்சு வறண்டு இருமிக் கபம் கட்டும்.

9) சுக்கில பிரமேக சூலை :

தேகத்தில் சூடு அதிகரித்து, நீர் தாரையில் சுக்கிலம், சீழ், இரத்தம் போல் இறங்கி உடலில் குத்தலும், வலியும், கைக்கால் மூட்டுகளில் வீக்கமும் காணும்.

10) கிரந்தி சூலை :

கிரந்தி நோயால் கைக்கால் பொருத்துகளில் நீர் கட்டி வீங்கிக் கடுத்து, கரடு கட்டி, வெடித்து சீழும், சலமும் வடிந்து, இந்திரியம் முறிந்து, நீர் கடுத்து இறங்கும்.

11) மாங்கிச சூலை :

மூட்டு முதலான அசைவு உண்டாகும் இடங்களில் வீக்கம் ஏற்பட்டு, வெடித்து, நொந்து, புலால் நாறி, தேகம் வற்றும்.

12) நீர்ச் சூலை :

புறங்காலில் திணவு உண்டாகி வீங்கிப் பொருத்துகள் உளைந்து குத்தி, வாயில் கொப்புளம்போலத் திரண்டு உடையும்.

13) விடநீர் சூலை :

கிரந்தி நோயால் விடநீர் நரம்பு வழியாகத் தேகத்தில் பரவி, அக்கினி போல எரிச்சலும் குத்தலும் கண்டு, விரல் முதலான இடங்கள் வீங்கி, மூட்டுகளில் கரடு கட்டி வெடித்து எலும்புகள் தெரித்து விழும்.

14) எலும்பு சூலை :

முழங்கால், முழங்கை முதலிய இடங்களில் மூட்டுகளில் கரடு கட்டி குத்தி உளைந்து கடுத்து வழித்துச் சீழும், சலமும் சிந்தி, எலும்பு தெரித்து விழுந்து கைகால் முடங்கித் தாது கெடும்.

15) விடப்பித்த சூலை :

விழிகள், உதடு, நா, பல் கறுத்து, உடல் வீங்கி, பொருத்துகள் உளைந்து நொந்து கரடு கட்டும்.

16) பாண்டு சூலை :

உடல் வற்றி, நரம்பெல்லாம் மிகுந்து, நெஞ்சில் குத்தி, சுரம் மாறாமல் இருந்து கைக்கால் கனத்து மூட்டுகளில் கரடு கட்டி இருமல் எடுக்கும்.

17) வாதப் பாண்டு சூலை :

முகம், வயிறு, அரை, தொடை, புறங்கால் முதலியன பதைத்து அயர்ந்து, விறுவிறுத்து, அசைவுகளில் கரடு கட்டும்.

18) பித்தப் பாண்டு சூலை :

வயிறும், தொடையும் வீங்கிப் பொருத்துகளில் குத்தல் எடுத்துக் கிறுகிறுத்து, கண், முகம், நீர், மலம் முதலியன கறுக்கும். அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

19) விடப் பாண்டு சூலை :

உடலின் ஒரு பக்கம் வீங்கி உளைந்து கடுப்பெடுத்து, கண் வெளுத்துத் தாகம் மிகுந்து சோம்பலும், பெருமூச்சும் காணும்.

20) சுரச் சூலை :

உடலில் சுரம் மிகுந்து, கைகால்கள் ஓய்ந்து, இடுப்பிலும், மூட்டுக்களிலும் குத்தல் உண்டாகி, விரல்கள் எல்லாம் விறுவிறுத்து வலிக்கும்.

21) அத்தி சுரச் சூலை :

தேகம் மிகக் கொதித்து பாவைப் போல வற்றி, நகக்கண்ணில் குத்தல் எடுத்து, புத்தி மயக்கம் கண்டு பொருத்துகள் வீங்கி வலிக்கும்.

22) சுரமுறு சூலை :

சுரம், தலைவலி, உடலில் வீக்கம், பலவீனம் உண்டாகி மூட்டுகள் வீங்கிக் கரடு கட்டும்.

23) ஆண்ட வாயு சூலை :

முகம், வயிறு, முதுகு, இடுப்பு, தொடை, புறங்கால் முதலியன நொந்து அயர்ந்து விறுவிறுத்து அசைவுகளில் கரடு கட்டும்.

24) மூலப்பாண்டு சூலை :

தேகம் வறண்டு வெளுத்துத் திமிர் ஏறி வீங்கி, கைகால் உளைந்து, பொருத்துகளில் கரடு கட்டி, மலம் சிறுத்து, தூக்கம், அசதி, ஆயாசம் காணும்.

25) வளிப்பாண்டு சூலை :

முகம், வயிறு, முதுகு, இடுப்பு, தொடை, புறங்கால் முதலியன நொந்து அயர்ந்து விறுவிறுத்து, அசைவுகளில் கரடு கட்டும்.

26) அந்தரவாயு சூலை :

குறுக்கு, பிடரி நொந்து சுரம் காய்ந்து, ஒருபக்க விரையில் வாயு இறங்கி மேல் ஏறும்.