திங்கள், 29 அக்டோபர், 2018

சுத்தி முறைகள் (கடைச்சரக்குகள்)

1) சுக்கு - ஓர் எடை சுக்குக்கு 2 எடை சுண்ணக்கல் சேர்த்து தாளித்து, ஒரு சாமம் சென்றபின் கழுவி உலர்ததி மேல்தோலை சீவி கழிக்க வேண்டும்.

2) மிளகு - புளித்த மோரில் ஒரு சாமம் ஊறபோட்டு எடுத்துலர்த்தி கொள்ளவும்.

3) திப்பிலி - கொடிவேலி இலைச்சாற்றில் ஒரு நாழிகை ஊறப் போட்டு பின்னர் இரவியில் உலர்த்தவும்.

4) திப்பிலி மூலம் - கணுக்களை போக்கி உலரவைத்து எடுத்துக் கொள்ளவும்.

5) ஆனைத்திப்பிலி - காடியில் ஒரு சாமம் ஊறவைத்து ரவியில் உலர்த்தி எடுக்கவும்.

6) செவ்வியம் - மேல் தோல் சீவிச் சிறு சிறு துண்டுகளாக்கி இரவியில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும்.

(மரமஞ்சள், மஞ்சள், அதிவிடயம், சிறுதேக்கு, சாதிக்காய், அரத்தை இவைகளையும் இதேபோல் சுத்தி செய்து கொளளவும்)

7) சித்திரமூலம் - உள்நரம்பை நீக்கி மேல்பட்டையை மாத்திரம் இடித்துச் சூரணம் செய்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பால்விட்டு, ஏடுகட்டி, அதன் மேல் சூரணத்தை பரப்பி, மேல்சட்டி மூடி, ஒரு சாமம் சிறு தீயாக எரித்து சூரணத்தை வடித்துலர்த்தி, மறுபடியும் கல்வத்தில் இட்டரைத்து வைத்து கொள்ளவும்.

8) ஓமம் - இதனை சுண்ணநீரில் நனைத்து உலர்த்திக் கொள்ளவும்.

9) புளி - கொட்டை, ஓடு இவைகளை நீக்கி 3 நாள் ரவியில் உலர்த்தவும்.

10) கொறுக்காப்புளி - சலம் தெளித்து பிசறி, நிழலில் ஒரு  நாள் ஆறப்போட்டு எடுத்துக் கொள்ளவும்.

11) சீரகம் - மண் முதலியவையன்றி ஆய்ந்து புடைத்து ரவியிலுலர்த்தி வைத்து கொள்ளவும்.

12) கருஞ்சீரகம் - நன்றாய் ஆய்ந்து இரவியிலுலர்த்தி பொன்மேனியாக வறுத்துக் கொள்ளவும்.

13) சதகுப்பை, வாய்விளங்கம், தாளிசபத்திரி, சிறுநாகப்பூ, ஏலம், கிராம்பு, சடாமஞ்சில், சாதிபத்திரி, காட்டுசதகுப்பை - இவைகளில் வேறொன்றும் இன்றி ஆய்ந்து ரவியில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும்.

14) வெந்தயம் - நீராகாரத் தெளிவில் அரை நாழிகை ஊறப்போட்டு உலர்த்தி கொள்ளவும்.

15) கொத்தமல்லி - வெந்நீரிலேனும், பழரசத்திலேனும் கிழிகட்டி எரித்து இரவியில் உலர்த்தி எடுக்கவும்.

16) வசம்பு - நெருப்பில் சுட்டு கரியாக்கி கொள்ளவும்.

17) கடுக்காய் - அரிசி கழுவிய நீரில் ஊறப்போட்டு மஞ்சள் நீரைப் போக்கி கொட்டையை நீக்கி உலர்த்தவும்.

18) நெல்லிவற்றல் - பால்விட்டு வேகவைத்து கொட்டையை நீக்கி உலர்த்தவும்.

19) தான்றிக்காய் - தாழை விழுது சாற்றில் 1 சாமம் ஊறவிட்டு விதையை நீக்கி ரவியில் உலர்த்தவும்.

20) கடுகு, வெண்கடுகு - நன்றாக ஆய்ந்து 2 நாள் கடு வெயிலில் உலர்த்தவும்.

21) கடுகுரோகிணி - வேப்பிலை சாறு அல்லது நொச்சியிலை சாற்றில் ஒரு சாமம் ஊறவைத்து ரவியில் உலர்த்தவும்.

22) மந்திட்டி, கிச்சிலி கிழங்கு - கடும் வெய்யிலில் உலர்த்தி இடித்துக் கொள்ளவும்.

23) கற்கடகசிங்கி - வாதுமை எண்ணையில் வறுத்து எடுத்து கொள்ளவும்.

24) அதிமதுரம் - சுத்தமான நீரில் அலம்பி மேல்தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக்கி உலரத்தவும்.

25) கார்போக அரிசி - திருநீற்று பச்சிலை சாற்றில் நனைத்து உலரத்தவும்.

26) வாலுழுவை, சிறுவாழுவை - சோற்றுக் கற்றாழை சாற்றில் கழுவி இரவியில் உலர்த்துக.

27)பெருங்காயம் - இதனை கரிநெருப்பில் பொரித்தெடுத்தோ அல்லது தாமரை இலைச்சாற்றில் ஒரு நாழிகை ஊறவைத்து எடுத்தோ உபயோகிக்கலாம்.

28) சேங்கொட்டை - இதனுடைய மூக்கை வெட்டி கழுநீரிலும் எருமை பாலிலும் ஒவ்வொரு சாமம் ஊறவைத்து நீரில் அலம்பி இரவியில் உலர்த்தவும்.

29) கருங்குட்டம், கெந்தமாஞ்சில் - கடுரவியில் ஒரு நாழிகை உலர்த்தி எடுக்கவும்.

30) அரக்கு - இதனை நறுக்கி உள்ளிருக்கும் குச்சிகளை நீக்கி உபயோகிக்கவும்.

31) தாமலபத்திரி - பெருநரம்புகளை நீக்கஇ ரவியில் உலர்த்தவும்.

32) கோஷ்டம் - நன்றாக ஆய்ந்து ரவியில் உலர்த்தவும்.

33) தேன்மெழுகு - உருக்கி தளளிய வைத்து வடிகட்டி கொள்ளவும்.

34) குங்கிலியம் - திரிபலாதி கஷாயத்தில் தோலாந்திரமாக கட்டி 2 சாமம் எரித்தெடுக்க எல்லா வித குங்கிலியங்களும் சுத்தியாகும்.

35) குந்திரிக்கம் - சாராயத்தில் ஒரு நாள் ஊறவைத்தஉ எடுக்கவும்.

36) கூகைநீர் - 7 முறை சலம் விட்டு கரைத்து கழுவி தெளிந்தபின் வடிகட்டி இரவியில் உலர்த்தவும்.

37) கஸ்தூரி, கோரோசனை - இவைகளுக்கு சுத்தியில்லை. ஆயினும் வைப்பு சரக்கறிந்து சேர்க்கவும்.

38) குங்குமப்பூ - இதனை கடுதாசியின் மேற்பரப்பி, நெருப்பனலில் காட்டி நொருங்கும் பதத்தில் எடுத்துக் கொள்க.

39) சந்தனம், செஞ்சந்தனம், கறுப்பு அகரு - வைர பாகத்தை எடுத்துக் கொண்டு மற்ற பாகத்தை நீக்கவும்.

40) தூநீயாங்கிசம் (பிசின்) - இதனை கடுரவியிலுலர்த்தி கொள்ளவும்.

41) செவ்வள்ளி - இரவிலுலர்த்தி கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக