சித்த மருத்துவமானது பொது மருத்துவம், பால மருத்துவம், பெண் மருத்துவம், சூல் மருத்துவம், இரண மருத்துவம், காயகல்பம், நச்சு மருத்துவம், வர்ம மருத்துவம் என எட்டு வகைப்படும்.
1) பொது மருத்துவம்:
இதில் மனிதர்களுக்குத் தலை முதல் கால்வரை ஏற்படும் 4448 நோய்களின் தன்மைகள், அதன் வகைகள், விளைவுகள், நோயினை தீர்க்கும் வழிமுறைகள், பத்திய முறைகள், நோய் வராமல் தடுக்கும் முறைகளைபக் கூறுகிறது.
2) பால மருத்துவம்:
இதில் குழந்தைகளுக்கு உண்டாகும் இழுப்பு, சுரம், பேதி, தொப்புள் இரணம், திடுக்கிடல். மூச்சுத் திணறல் போன்ற நோய்களுக்கும், இன்ன பிற நோய்களுக்கும் உண்டான மருத்துவ முறைகளைப் பற்றிக் கூறுகிறது.
3) பெண் மருத்துவம்:
இதில் பெண்களுக்கு ஏற்படும் சூதகச் சிக்கல், சூதக வலி, பெரும்பாடு, உதிரப் பெருக்கு, காலம் தாழ்ந்து வரும் மாதவிடாய் போன்ற நோய்களுக்கான மருந்து முறைகளைப் பற்றிக் கூறுகிறது.
4) சூல் மருத்துவம்:
இது பெண்களுக்குக் கருவாயில் உண்டாகும் அழற்சி, வலி, நழுவல், விரணம், வெளித் தள்ளல், இரத்தத் தேக்கம், பேறு காலத்தில் உண்டாகும் பொய்வலி, வலிப்பு, நஞ்சுக் கொடிவிழாமை, மூட்டுக் கிழிதல், பால் வெறி, பால் சுரம் முதலிய நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைகளைப் பற்றிக் கூறுகிறது.
5) நச்சு மருத்துவம்:
இது சகல விதமான நச்சுக்கடிகளின் குறி குணங்கள், அதற்கான சிகிச்சைகள் பற்றியும், மற்ற வகை விஷங்களான தாவர, தாதுப் பொருட்களின் விஷங்களின் குணங்கள், தன்மைகள் அவற்றிற்கு செய்யும் மருத்துவ சிகிச்சை முறைகள்பற்றிக் கூறுகிறது.
6) இரண மருத்துவம்:
இது கத்தி, கத்திரி, குறடு, சத்திரம், முள் வாங்கி, பரகரை வாங்கி, ஆழிக்போல், வட்டிகை, முச்சலாகை, பஞ்சமுகம், பிறைக் கோல், குறும்பி வாங்கி, கொம்பு, குடோரி, காயக்கோல், அட்டக் கோல், ஊசி, செப்புக் குழாய், தெண்டுச் சலாகை, செப்புச்சிலாகை, ஈயச் சலாகை, நயனகத்தி, முச்சலாகை, முனிமொழி, ஒட்டுக்கோல், வெண்கலக் குழல் போன்ற கருவிகளைக் கொண்டு சதையை அறுத்துச் செய்யும் அறுவை மருத்துவத்தை பற்றிக் கூறுகிறது.
7) வர்ம மருத்துவம்:
இது நரம்பு முடிச்சுகள், பூட்டுகள் போன்ற இடங்களில் உண்டாகும் அடி, இடி, குத்து, வெட்டு. நழுவுதல், பிடிப்பு போன்ற நோய்களுக்கு உண்டான இளக்கு முறைகள், மருத்துவ முறைகள், உள் மற்றும் வெளி மருந்துகள் இவற்றைப் பற்றிக் கூறுகிறது.
8) காயகல்பம்:
இதில் நோய் நொடியின்றி பலவருடங்கள் வாழ்வதற்கு ஏற்ற மூலிகைகள், பற்பங்கள், கியாழம், கிருதம், செந்தூரம், குழம்புகள், தீநீர், மாத்திரை, சூரணம், கல்பம் இவற்றைப் பற்றிக் கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக