வியாழன், 8 ஏப்ரல், 2021

ரோக நிதானம் - சுரம்

        உடலின் இயற்கைச்சூடு அளவுக்கு மிஞ்சி உடல் முழுவதுமோ அல்லது ஒருசில பாகங்களிலோ அதிக வெப்பமாக இருத்தல், கண் எரிச்சல், வாய்க் குமட்டல், வாந்தி, தலைப்பாரம், தலைவலி, உடல்வலி எனும் குணங்களைக் கொண்டிருக்கும். இது சுரம் 64-வகைப்படும் எனவும் இன்னும் சில நூல்களில் 276 வகைகள் என்றும் கூறப்பட்டுள்ளது.

சுரம் வரக் காரணங்கள் :
        இரைப்பையில் குளிர்ச்சி அதிகமாகி அதனால் கபம் பெருகி வயிற்றில் இருக்கும் அனல் அதிகரித்து, அது நரம்பின் வழியாக உடல் முழுவதும் பரவி இந்நோய் உண்டாகிறது. மேலும் உண்ணும் உணவின் அளவு, காலம், பக்குவம் முதலியவற்றின் பேதத்தாலும், நீரின் குற்றத்தாலும், பருவகால வேறுபாடாலும், மழையில் நனைதல், வெய்யிலில் காய்தல், பகலில் தூங்குதல், இரவில் கண் விழித்திருத்தல், பதினான்கு வேகங்களை அடக்கல், மந்தம், மலக்கட்டு, வாத, பித்த கபத்தை மிகுதிப்படுத்தும் உணவுகளை உண்ணுதல், அதிக வெப்பம், அதிக குளிர்ச்சி, அதிக புணர்ச்சி, அதிகமாக எண்ணெய் நீராடல், எண்ணெய் நீராடிய பிறகு புணர்ச்சி, அடிபடல், விஷம் கலந்த உணவு, சீதோஷ்ண நிலை மாற்றம் முதலிய காரணங்களாலும் உண்டாகிறது.

சுரத்தின் பொதுக் குணங்கள் :
        உடல் வலி, நாவறட்சி, கொட்டாவி, உணவில் வெறுப்பு, அருவருப்பு, மயக்கம், வாய் கசத்தல், பிதற்றல், கூசுதல், கிறுகிறுப்பு, உடல் குத்தல், கடுத்தல், குடைச்சல், ஒக்காளம், வாந்தி, குமட்டல், சளிக்கட்டு, பேதி அல்லது மலக்கட்டு, மூக்கில் நீர் வடிதல், சிறுநீர் மஞ்சள் அல்லது சிவந்த நிறத்தில் இழிதல், குரல் கம்மல், பசியின்மை அல்லது பொய்ப்பசி, மயிர்க் கூச்செறிதல் எனும் குணங்களைக் கொண்டிருக்கும்.

சுரத்தின் பத்து அவஸ்தை :
        அற்ப ஞாபகம், இறந்தவர்களை கண்ணில் கண்டு பேசுதல், போலிருத்தல், சித்தபிரமை, மேல்மூச்சு, விழி விழித்தபடியே இருத்தல், குரல் மாறல், உடல் முழுவதும் அதிக எரிச்சல், தன் கையினால் முகத்தைத் தடவிக் கொள்ளுதல், சரீர முழுவதுஞ் சீதளவியர்வை காணல், தேகத்தை விட்டு ஆவி நீக்குதல்.

        இப்பத்து அவஸ்தைக்குள் முதல் மூன்று அவஸ்தை வரையிலும் வைத்தியம் செய்யலாமென்று சில நூல்களிலும், ஒன்பதாவது அவஸ்தை வரையிலும் அதாவது பிராணன் நீங்குகிற வரையிலும் வைத்தியம் செய்யலாமென்று சில நூல்களிலும் கூறப்பட்டுள்ளது.

அசாத்தியசுர இலக்கணம் :
        சுரநோயாளிகளுக்கு உடலில் நடுக்கலுடன் மிக்க நோய், மேல்மூச்சு, மூர்ச்சை, அடிக்கடி களைப்பு, இளைப்பு, மார்பு நோய், கண்ணில் நோயுடன் குத்தல், முகம் குங்குமம் போல் சிவத்தல், கழுத்து குறுகுதல் அல்லது நீளுதல், இரவில் எரிச்சல், பகலில் குளிர்ச்சி, நா கறுத்தல் அல்லது சிவத்தல், ஆசனம் வெளிப்படல், ஈனத்தொளி, சிலேஷ்ம நாடி அதி வேகமாய் நடத்தல், சுவாசம் சில்லிடல், மார்பு, உந்தி, மூக்கு உள்ளங்கைகள் ஆகிய இவ்விடங்களில் குளிர்ச்சி, சிரசு மாத்திரம் அக்கினி போல் சுடல், தன்படுக்கையை விட்டு ஓடுதல், அடிக்கடி முகத்தை தன் கையால் தடவுதல், தன் படுக்கைய அடிக்கடி தட்டுதல் முதலிய சந்நிபாத அகோர குணங்கள் இருக்குமானால் அசாத்தியமாம்.

சாத்திய சுர இலக்கணம் :
        சுரரோகிகட்கு, கண்பார்வை, தேகம், பஞ்சேந்திரியங்கள், இவைகள் சுகபாகமாயிருத்தல் சாந்தி, இளைப்பின்மை, உள்ளங்கை, உள்ளங்கால்கள் சூடாகயிருத்தல், எழுந்தாலும், உட்கார்ந்தாலும் உடல் கனத்தலின்றி இயற்கையாக இருத்தல் என்னுங் குணங்கள் இருக்குமானால் சாத்திய சுரமென்றரிக.

விட்ட சுர இலக்கணம் :
        உடல் கனமின்றி லேசாகவும் இயற்கையாக இருத்தல், பஞ்சேந்திரியங்களின் சுபாவ இயக்கம், மனசாந்தி, சிரசில் நமைச்சல், தும்மல், வியர்வை, பசி என்னும் குணங்கள் இருக்குமானால் சுரரோகம் விட்டதென்றரிக.

சப்த தோஷ பேதம் :
        சுரம், பிறந்த ஒன்பது நாள் வரையிலும் தருண சுரமெனப்படும். அந்த சமயத்தில், பரிமள போஜனத்தினால் குளிர்ந்த சலம், புளிப்பு, கசப்பு, காரம், துவர்ப்பு, நெய், நல்லெண்ணெய், வெல்லம், சயித்திய பண்டம், புது வஸ்திரம், சிவந்த வஸ்திரம், பரமள திரவியங்கள், காற்று வீடு, தாம்பூலம், சீதள உபச்சாரம், சந்தனம், மாதர்களை விருப்பத்துடன் பார்த்தல், சையோகம், புத்தகம் வாசித்தல், அதிதூரநடை, கோபம், அழுதல், தேகம் என்பவைகள் அணுகில் வாதாதிகள் நாபியைப்பற்றி, குடிலப்படுத்தி முகம், நாசி, நா என்னும் இவைகளை வெறிந்த பார்வையை உண்டாக்க தோஷம் பிரபலப்படும். அவை எழு வகைப்படும்.

1. அபத்திய தோஷம் :
சோம்பல், மூர்ச்சை, பிரமை, தாகம், அதிக பிரலாபம், மார்பு நோய் எனும் குணங்கள் காணும்.

2. சங்க தோஷம் :
சர்வாங்க நோய், நடுக்கல், மார்பெரிச்சல், பொய் பேசல், அடிக்கடி தன்படுக்கையை விட்டு எழுந்திருத்தல், பிரமை, உள்ளங்கை குளிர்ச்சி எனும் குணங்கள் காணும்.

3. விஷம தோஷம் :
சுரம், எர்ச்சல், அதிதாகம், குடித்தலோடு தீவிரமாக நடக்குதல், வயிறெரிச்சல், வியர்வை அழலை எனும் குணங்கள் காணும்.

4.விஷம சீத தோஷம் :
ஒரு தினத்திலேயே இரண்டு-மூன்று-நாலு தரங்கள் குளிரோடு சுரத்தை உண்டாக்குவதன்றி, தாகம், புறண்டல், தலைநோய், நாக்கு தடித்து முட்போலிருத்தல், பிரலாபம், சித்தபிரமை, புரளல் எனும் குணங்கள் காணும்.

5. பீத ஜிம்மக தோஷம் :
நாக்கு மஞ்சள் நிறமாக வெடித்து ஈரமில்லாமல் முட்போலிருத்தல், சுரம், பிரமை, வியர்வை, மூர்ச்சை, தொண்டை கம்மல், வெருட்சி, நடுக்கல் எனும் குணங்கள் காணும்.

6. ரக்த ஜிம்மக தோஷம் :
நாக்கு சிவந்து முட்போன்று கொஞ்சம் நீண்டிருக்குதல், சுரம், தாகம், எரிச்சல் எனும் குணங்கள் காணும்.

7. கிருஷ்ண ஜிம்மக தோஷம் :
நாக்குக் கறுத்து வறண்டு முட்போலிருத்தல், அடிக்கடி எழுந்திருத்தல், சித்தபிரமை, வயிறுப்புசம், தினவு, வியர்வை, தாகம், சோபம், அழலை, துடிப்பு, கை கால் அசதி, சரீரம் கறுத்தல் எனும் குணங்கள் காணும்.


சுர வகை :
சுரமானது வாதசுரம், பித்தசுரம், கபசுரம், வாத பித்த சுரம், வாத கப சுரம், பித்த கப சுரம், சந்நிபாத சுரம் என ஏழு வகைப்படும் என்றும், தோஷங்களின் செயலின்றி அடிபடுதல் முதலிய புற காரணங்களினால் ஏற்படும் ஆகந்துசுரம் என்ற ஓர் வகையையும் இத்துடன் சேர்த்து சுரம் எண் வகைப்படும் எனச் சிலரும் கூறுவதுண்டு.

1) வாத சுரம் :
உறுப்புகளில் குத்தல், கண்களிலிருந்து சலம் வடி தல், மார்பு துடித்தல், உடலில் வெப்பம், சில சமயம் குளிர், மலச்சிக்கல், மூத்திரம் உஷ்ணமாய் வறண்டு இருத்தல், கீல்களில் வலி, வயிற்றுப்புசம், முகம் மினுமினுத்துக் காணல், வாந்தி, இடுப்பில், வலிவின்மை, கைகால் அசதி, வாயினித்தல், புளிப்புச் சுவையுள்ளப் பொருட்களில் இச்சை முதலிய குணங்கள் உண்டாகும்.

2) பித்த சுரம் :
பிதற்றல், மேல்மூச்சு, தலைநோய், அதிக தாகம், வயிற்றுவலி, கோழை, அருசி, வாய்கசப்பு, தேகம் மிகச்சூடாயிருத்தல், மூத்திறம் செந்நிறமாய் கடுத்துவிழல், மயக்கம், நடுக்கம், கண்சிவந்து காணல், உடலில் எரிச்சல், வாந்தி முதலிய குணங்களை உண்டக்கும்.

3) சிலேத்தும சுரம் :
கண்களில் நீர் வடிதல், கண்டத்தில் கோழை கட்டல், பெருமூச்சு, விக்கல், இருமல், தாகம், அரோசகம், நடுக்கல், வாயில் உப்புச்சுவைத் தோன்றல், மூத்திரம் அதிகமாய் போதல், தலைநோய், இரைப்பு, சந்திகளில் நோய், உணர்வு விருப்பமின்மை, முகம், நா, உடல் வெளுத்துக் காணல், அற்ப வியர்வை முதலிய உண்டாகும்.

4) வாத பித்த சுரம் :
கண், மார்பு, கண்டம், இவைகளில், எரிச்சல், தலைவலி, வாந்தி, பெருமூச்சு, நாகம், நாவளரல், அருசி, நீலம் சாம்பல் நிறமாயிருத்தல், வயிற்றுப் பொருமல் உடல் உளைச்சல் முதலிய குணங்கள் உண்டாகும்.

5) வாத சிலேத்தும சுரம் :
உடலில் பிசுபிசுப்பு, வாயில் உப்புச் சுவை, தலைவலி, தேகம் முழுவதும் குத்தல், குடைச்சல், கண்களில் நீர் வடிதல், வாந்தி, நாசியில் சலம் வடிதல், பெருமூச்சு, அதிதாகம், தூக்கமின்மை, பசியின்மை, மூத்திரம் நுரையுடன் வீழல், இருமல் கீரல்களில் வேதனை, சயித்தியம், முதலிய குணங்கள் உண்டாகும்.

6) பித்த சிலேத்தும சுரம் :
உடலானது ஸ்தம்பித்து மரத்தல், மார்பிலும், பிடரியிலும் வலி, தலை பாரம், அற்ப்ப இருமல், நடுக்கல், வாய் கசப்பாயும், உப்புச் சுவையாயும், அருசியும் இருத்தல், பித்தம் கால்களில் எரிச்சல், கண்டத்தில் கோழை கட்டுதல், தூக்கமின்மை, வாந்தி, மூத்திரம் வெண்மையாகவும், சிவப்பாகவும் முதலிய குணங்கள் உண்டாகும்.

7) ஆகந்துக சுரம் :
நரம் உண்ணும் அன்னபானாதிகளாலன்றி வேறு புறகாரணங்களினால் உண்டாகும் சுரங்களுக்குப் பொதுவாக ஆகந்துக சுரமெனப் பெயர். இது நான்கு வகைப்படும். அவையாவன,

8) அபிகாத சுரம் :
காயங்களினாலும் இரணங்களினாலும் நெருப்பினிடத்தே நடத்தும் தொழில்களினாலும், அதிக நடை அடிக உழைப்பு இவைகளினாலும் உண்டாகும்.

9) சாபச்சுரம் :
இது பெரியவர்களின் சாபத்தினால் உண்டாவதால் அதிக உக்கிரமாகவும் சந்நிபாத சுரகுணங்களை உண்டாக்கும். தேவ ஆராதனை, பூசை, அன்னதானம், பெரியவர்களின் ஆசி முதலியவைகளால் நீங்கும்.

10) அபிசார சுரம் :
இது உச்சாடண மாரண ஹோமங்களினால் ஆச்சரியமான கொப்புளங்கள் தேக முழுதும் தோணும். சந்நிபாதசுர குணங்களிருக்கும்.

11) அபிஷங்க சுரம் :
இது சேர்க்கையால் வரும் சுரம். இது ஏழு வகைப்படும். அவை,

12) பூதாவேச சுரம் :
அதிக சுரம், காரணமின்றி நகைத்தல், அழுதல், கண்ணை  உருட்டி விழித்தல், தேகம் கறுத்தல், பிரலாபம், அதிதிண்டி, சகல பதார்த்தங்கள் மீது விருப்பம், ஆடல் பாடல், உரோமச் சிலிர்ப்பு, நித்திரை, எரிச்சல், நளிர், தலைநோய், கண் சிவத்தல், வாந்தி, விக்கல், சுவாசம், பலவீனம், ஏப்பம், கொட்டாவி, பிரமை, மன வேதனை, தொண்டை முதல் பாதம் வரையிலும் வியர்வை, சர்வாங்க சீதளம், ஈனத் தொனி, திரிதோஷங்களின் விருத்தி எனும் குணங்கள் காணும்.

13) அவுஷத கந்தக சுரம் :
இரசம், கந்தகம், பாஷாணம், சேங்கொட்டை முதலிய மருந்துகளின் புகை அல்லது நஞ்சினால் சுரம் உண்டாகி மூர்ச்சை, தலைநோய், தேகவீக்கம், தும்மல், அதிக தாகம் எனும் குணங்கள்  காணும்.

14) விஷசுரம் :
இது விடங்களினால் ஏற்பட்டு மூர்ச்சை, பேதி, எரிச்சல், முகம் கறுத்தல், மார்புநோய், அதிகசுரம் திரிதோஷக் கோபம் எனும் குணங்கள் காணும்.

15) கோப சுரம் :
இது தலைநோய், உடம்பு பதைத்தல், அதிக சுரம், பித்த கோபம், எனும் குணங்கள் காணும்.

16) பய சுரம் :
சுரம், அடிக்கடி பயப்படல், புலம்பல், வியர்வை, எரிச்சல், கண்கள் சிவத்தல், பலயீனம், சிரசிலும், கண்ணிலும் நோய், நித்திரை பங்கம், தலை சுழலல், கவாசம், சூலை, உரோமச் சிலிர்ப்பு, சயித்தியம், மார்பிலும், இடுப்பிலும், தடித்தல், பற்கடித்தல் எனும் குணங்கள் காணும்.

17) துக்க சுரம் :
வாயில் வந்தபடி யெல்லாம் பிதற்றல், அதிக சுரம், அழுதல் எனும் குணங்கள் காணும்.

18) காம சுரம் :
மிகு சுரம், புத்தி, வெட்கம், நித்திரைகளின் கெடுதி, மோகம், ஆண்குறி, தொப்புளின் கீழ் ஸ்தானம், புருவம் நெற்றி இவைகளில் எரிச்சல், சையோத்தில் இச்சை, புன் சிரிப்பு, அதிகதாகம் கண்சிவந்தல், என்னும் குணங்களையுடையது.

இந்த ஏழுகைச் சுரமும் சரீரசுரம், மானுளிகசுரம், என இருவகையில் அடங்கும். மற்றும் சுரங்களை சரீராதி சுர பேதங்கள் என 12 வகையாகக் கூறப்பட்டுள்ளன.

19) சரீராதி சுர பேதங்கள் :
சரீரத்தில் தபித்தலை உண்டாக்கி சுரம் வரும்.

20) சரீர சுரம் :
முதலில் மனதை தப்பிக்கச் செய்து பிறகு சுரம் காணும்.

21) சௌமிய சுரம் :
இது முதலில் காந்தமாகப் பிறகு சுரத்தின் குறி குணங்களை யெல்லாம் உண்டாக்கும்.

22) தீஷக சுரம் :
இது ஆரம்பத்திலேயே அதிக உக்கிரமாக கண்டு நாளடைவில் காய்ச்சலுக்கு உண்டான குணங்களை பெற்றிருக்கும்.

23) உள்சுரம் :
இது முதலில் வயிற்றில் அதிக சங்கடம், மல பந்தம், முதலிய உள் வேதனைகளை உண்டாக்கி பிறகு சுரக் குணங்களை உண்டாக்கும்.

24) வெளிச்சுரம் :
சப்த தாதுக்களை பாதிக்காமல் சர்மத்தின் மேல் திடீரெனக் கண்டு சிலநேரத்தில் தோஷமென்றும் இல்லாமல் போய் விடும்.

25) பிராகிருத சுரம் :
ஆவணி புரட்டாசி மாதங்களில் பித்தசுரம் போலும், சித்திரை, வைகாசி மாதங்களில் கபசுரம் போலும் காணும்.

26) வைகிருத சுரம் :
மாசி, பங்குனி மாதங்களில் வாதசுரம் போலும் ஆனி ஆடி மாதங்களில் பித்தசுரம் போலும், மார்கழி, தை மாதத்தில் சிலேத்தும சுரம் போலும் காணும்.

27) சாத்தியச் சுரம் :
மேற்கூறிய பிராகிருத சுரங்கள், வைகிருத சுரங்கள் உண்டான போது அவைகளின் குணங்களும், மிகுதாகமும், மிகுநித்திரையும், சந்நிபாத சுர லக்ஷணங்களும் இல்லாமல் இருக்கும்..

28) அசாத்திய சுரம் :
சப்த தாதுக்களில் பிரவேசித்து நெடுநாளாக நீங்காமல் சந்நிபாத சுர லக்ஷண முழுதும் உண்டாக்கிய சுரமும், காலை மாலை கடுமையுடன் உண்டாக்கிய சுரமும், தேக பலத்தையும் மாமிசத்தையும் குறைத்து கோழை விழும்படி உண்டாக்கிய சுரமும் அசாத்திய சுரமாம்.

29) சாமச்சுரம் :
சுரங்களுக்கிருக்கிற இரைப்பு, மூர்ச்சை, பிரமை, ஒக்காளம், தாகம், பேதி, கொட்டாவி, விக்கல், சரீர வேதனை, மலபந்தம் என்னும் இப் பத்து அவஸ்தைகளுடன் இளைப்பு, அடிக்கடி நீரிறங்கல், மலபந்தம், அக்கினி மந்தம், அசீரண பேதி, அதிக சீதம் விழுதல் வயிற்று நோய், நடுக்கம், தாகம், கைகால் குளிர்ச்சி, கபாதிக்கம், நித்திரை பங்கம், கண்களில் ஜலம் வடிதல் எனும் குணங்கள் காணும்.

30) நிராம சுரம் :
ஆமாசயக் கெடுதியால் புசிக்கும் அன்னம் சீரணியாமல் இந்நோய் ஏற்பட்டு சுவாசம், இருமல், அசீரணம், வாத கபங்கள் கூடிய சுரம், துர்ப்பலம், சிரோபாரம், தேகஞ் சுருங்கல், கண்டத்திலும் நெற்றியிலும் வியர்வை, கண் சிவத்தல், நாவறளல் எனும் குணங்கள் காணும்.

31) வாதாதி சுரம் :
தோஷமானது சப்த தாதுக்களைப் பற்றி உண்டாகி சுரம் விடுகிற தருணத்தில் மீண்டும் முன்போல் சுரக்குணங்கள் எல்லாம் பிறக்கும். இதற்கு முக்கியமான சுரம் என்று பெயர்.

32) தெய்வ பிரகோப சுரம் :
தெய்வங்களின் குற்றத்தினால் உண்டாகி சிரோபாரம், வியர்வை, சர்வாங்க சீதளம், ஏப்பம், விக்கல், சடத்துவம், சூலை எனும் குணங்கள் காணும்.

33) காந்தருவ சுரம் :
சர்வாங்கமும், சுருங்கல், கண்களில் மஞ்சள் நிறத்துடன் சலம் வடிதல், பலவீனம், அற்பசூலை, கீல்கள் அசையக் கூடாமை, பிரமை, கோபம், பசியில்லாமை, பெருமூச்சி, சயித்தியம், அடிக்கடி மூர்ச்சை, சர்வாங்க வீக்கம், கனவில் விந்து நஷ்டம், ஏப்பம், விக்கல், அடிக்கடி நீரிறங்கல் எனும் குணங்கள் காணும்.

34) தாந்திரிக சுரம் :
தேகம் சுழன்று வருவது போன்ற உணர்ச்சியுடன் வலி, பலவீனம், நெற்றியிலும், கழுத்திலும் வியர்வை, நாடி மெதுவாக அல்லது அதிவேகமாக நடத்தல் எனும் குணங்கள் காணும்.

35) மூர்ச்சை சுரம் :
மூர்ச்சை, பலவீனம், தலைபுரட்டல், மிகுவார்த்தை, ஒருவேளை பேசாமல் இருத்தல், வாதாதிக்கம், கனத்தொனி, வாயிற் கசப்பு, கைகால் குளிர்ச்சி, இரத்தமூத்திரம் எனும் குணங்கள் காணும்.

36) பிரலாப சுரம் :
பிரலாபம், சர்வாங்க வெளிறல், வாழைத் தண்டைப் போல் சீதளம், நகங்களில் உதிரமில்லாமை, நாக்கு மஞ்சள் நிறத்துடன் முட்போலிருத்தல், நெஞ்சுநோய், நெற்றியிலும், கழுத்திலும் வியர்வை எனும் குணங்கள் காணும்.

37) சீத சுரம் :
கபாதிக்கம், வாந்தி, விக்கல், வியர்வை, பலவீனம், இருமல், இரைப்பு, மார்புநோய், தலைசுற்றல், நாடி உள்ளடங்கல், நாக்கு சிவப்போடு முட்போல் இருத்தல் எனும் குணங்கள் காணும்.

38) வியர்வை சுரம் :
மிகுவியர்வை, சுரக்குறிகள், தலையிலும் காதிலும் நோய், சோர்வு, கைகால்களில் மஞ்சள் நிறம், தலையில் சதா வேதனை, நாடியானது சூட்சுமத்திலும் வேகமான நடை, ஒரு வேளை தாமத நடை எனும் குணங்கள் காணும்.

39) கிருமிச்சுரம் :
வயிற்றில் மிகுசூலை, உப்பிசம், ஏப்பம், வாந்தி, சுரக்குறிகள், வாயினாலும் அபானத்தினாலும் அளவற்ற பூச்சிகள் விழுதல், அக்கினிமந்தம், நித்திரை பங்கம், மனோதுக்கம்எனும் குணங்கள் காணும்.

40) அரித்திர சுரம் :
சர்வாங்கத்திலும் மஞ்சள் நிறத்துடன் தடிப்பு, முகத்தில் எண்ணெய் தடவினது போல் பிசிபிசிப்பு, கீல்களில் வீக்கம், நெஞ்சு உலர்தல், சந்நிபாத சுரக் குறிகள் எனும் குணங்கள் காணும்.

41) உதய சுரம் :
சுரமானது உதயகாலத்தில் உண்டாவதுடன் கருக்கல்லில் இருத்தல், சந்நிபாதசுர குணங்கள் முதலியவற்றை உண்டாக்கும்.

42) மத்தியான சுரம் :
சுரமானது மத்தியானத்தில் உண்டாகி பித்த சுர குணங்களுடன் தினவு, அதிகவார்த்தை, அதிமூத்திரம், நடுக்கல், அதிசீதளம் எனும் குணங்கள் காணும்.

43) மாலை  சுரம் :
சுரமானது மாலை காலத்தில் பிறந்து சந்நிபாத சுர குணங்களை உடையது.

44) நிசி சுரம் :
சுரமானது நடு இரவில் உண்டாகி சகல சுரங்களின் குணங்களை உடையது.

45) சோஷை சுரம் :
சோஷை, தபித்தல், மூர்ச்சை, அதி வேதனை, கண்களில் புகை கம்மலுடன் சலம் வடிதல், தேகஞ் சில்லீடல், வயிற்றில் பொருமலுடன் நோய், சுட்கித்தல், அடிக்கடி மிக மூத்திரம், உரோமச் சிலிர்ப்பு, அக்கினிமந்தம், சுவாசம், படுக்கை பொருந்தாமை, வாந்தி, வாயும் நாவும் உலர்ந்து சிவத்தல் எனும் குணங்கள் காணும்.

46) தாபச்சுரம் :
அதிக எரிச்சல், மிகு சீதளம், சலம் அருந்தினும் உலரல், மிக தாகம், மார்பெரிச்சல், நித்திரை பங்கம், பிரலாபம், பலவீனம், சுவாசம், அதி வேதனை எனும் குணங்கள் காணும்.

47) விரண சுரம் :
விரணங்களில் பிறந்து அதிசூலையுடன் சர்வாங்க நோயையும், சுர குணங்களை உடையது.

48) ஆதபச்சுரம் :
சித்திரை-வைகாசி-ஆனி-ஆடி இந்த நான்கு மாதங்களில் காலை இரண்டு சாமம் வரைக்கும் நிற்காமல் வழி நடப்பதினால் பிறந்து சாதாரண சுர குணங்களை உடையது.

49) ஈனத்தொனி சுரம் :
இது ஈனத்தொனியுடன் சந்நி பாத சுர குணங்களைப் பெற்றிருக்கும்.

50) அக்கினி மந்த சுரம் :
7-10 நாள் பசிதாகம் இன்மை, துர்ப்பலம், உடலின் நிறம் குறைந்து எரிச்சல், சுட்கல், மலபந்தம், சிலவேளை தாகம், தலைவலி, இருமல், இரைப்பு, அன்னத்தில் வெறுப்பு, அரோசகம், ஏப்பம், வாந்தி, விக்கல், வாய் கசத்தல், இந்திரிய நஷ்டம், முகம் வாடல், கைகால் வலி எனும் குணங்கள் காணும்.

51) ஏப்ப சுரம் :
ஏப்பம், வாந்தி, மார்பெரிச்சல், தலைவலி, நெஞ்சுலர்தல், தேகத்தை திருப்பல் போலுருத்தல், பிரமை, நமச்சலுடன் நடுக்கல், மலபந்தம் எனும் குணங்கள் காணும்.

52) வாந்தி சுரம் :
புளித்த ரத்த வாந்தி, எரிச்சல், மார்பில் தீபட்டது போல் எரிச்சல், கண்டத்திலும், நெற்றியிலும் வியர்வை, பேதியில் சீதளம் விழுதல், மிகுதாகம், துர்ப்பலம், கை கால் குளிர்ச்சி, உடம்பெல்லாம் துவைத்தது போலிருத்தல், நிறக்குறைவு எனும் குணங்கள் காணும்.

53) கொட்டாவி சுரம் :
மிகு கொட்டாவி, கைப்பு, புளிப்பான வாந்தி, தலையிலும், காதிலும் கோயுடன் இரைச்சல், இருந்திருக்க தேகம் நடுக்கல் நெஞ்சிற் கபாதிக்கம் எனும் குணங்கள் காணும்.

54) விக்கல் சுரம் :
அதிக விக்கலுடன் சுரத்தின் குணங்களை உடையது.

55) அநித்திரை சுரம் :
நித்திரையின்மை, மிகு கூச்சல், அடித்தொடை சதையும், முழங்கால் சதையும் வலித்தல், ஈனத்தொளியான வார்த்தை, சதா இருமல், மூர்ச்சை எனும் குணங்கள் காணும்.

56) காச சுரம் :
சதா இருமல்,சிவந்தும், நுரைத்தும், வெளுத்தும் நானா விதமாகிய கோழை விழுதல், வியர்வை, மூர்ச்சை, ஏப்பம், பிரமை, தாகம், வாந்தி, தலையிலும், கண்ணிலும்,எரிச்சல், பேதி,வயிற்று வலி கொட்டாவி, விக்கல் எனும் குணங்கள் காணும்.

57) கட்க சுரம் :
அதிக வெப்பம், தேகம் உலரல், சிரசிலும், கண்ணிலும் நோய், வியர்வை, பல்நோய், சவம் போல், கிடத்தல், உரோக சிலிர்ப்பு, அதிநித்திரை, கோபம் எனும் குணங்கள் காணும்.

56) புராண சுரம் :
இது சுர குணங்களுண்டாகி அதிக நாளாக விடாமல் இருக்கும்.

57) பஷாந்திர சுரம் :
பஷத்துக் கொருதரம் பிறந்து சீதத்துடன் வெப்பம், தாகம், புத்தியில் ஒன்றும் தோன்றாமை, அசீரணம், அரோசகம், துர்ப்பலம், சரீரம் வெளிறல் எனும் குணங்கள் காணும்.

58) மாத சுரம் :
இது மாதத்திற்கொரு முறை, பிறந்து சகல சுரங்களின் குணத்தையும் கொண்டிருக்கும்.

59) வருஷ சுரம் :
இது வருடத்திற்கொரு முறை பிறந்து சகல சுரங்களின் குணத்தையும் கொண்டிருக்கும்.

60) கட்டி சுரம் :
சர்வாங்கத்திலும், கடுகை போல் சிறியதாகவும் பெரியதாகவும், கட்டிகள் எழும்புதல், எரிச்சல், தாகம், உடற்சோர்வு, வியர்வை, நா உலர்ந்து முள்ளைப் போலிருத்தல், நித்திரை பங்கம், வாந்தி எனும் குணங்கள் காணும்.

61) அம்மை சுரம் :
சிறுபயறு பிரமாணம் தேக முழுவதும் அம்மை அல்லது கொப்புளங்கள் எழும்பல், தாகம், அதி வேதனை, தேகம் எரிச்சலுடன் பதறல், சிலவேளை மார்பெரிச்சல், எழுந்திருக்கக் கூடாமை, பலவீனம், படுக்கை பொருத்தாமை, சுவாசம், வயிறு நோய் பேதி, நிறக்குறைவு, நித்திரை பங்கம், கண் சிவத்தல், நாடி சூட்சுமமாக நடத்தல் எனும் குணங்கள் காணும்.

62) நடுக்கல் சுரம் :
நடுக்கல், கூச்சல், வாயிலும் நாவிலும் கொப்புள மெழும்புதல், சுரங்களின் குணங்கள் முதலியன உண்டாயிருக்கும்.

63) வீக்கச் சுரம் :
கீல்களில் வீக்கம், கைகால் கொதிப்பு, மார்படைப்பு, வயிற்றிலுப்புசத்துடன் நோய், மலபநதம் சுரகுணங்கள் எனும் குணங்கள் காணும்.

64) ஆநாக சுரம் :
மலத் துவாரத்தில் சூலை, மலபந்தம், சிரோபாரம், சீதளம், அக்கினி மந்தம், தாகம், நெஞ்சு வரளல், துர்ப்பலம், தேகம் கனத்து வெளிறல், கண் சிவத்தல், உரோமச் சிலிர்ப்பு, அடிக்கடி நீரிறங்கள், நாடியிடத்தை விட்டு அலைந்து மிருதுவாகவும் வேகமாகவும் நடத்தல் எனும் குணங்கள் காணும்.

65) திரிகால சுரம் :
காலை பகல் மாலையென்னும் முக்காலத்திலும் பிறந்து பிதற்றல் பற்கடித்தல், ஆடல்பாடல், விகார குணம், உடம்பு பதறல், அற்ப நித்திரை, நாக்கு முள்ளு போலிருத்தல், முகம் சிவத்தல் காதடைப்பு, அதிசாரம், காசம், ஒக்காளம், பேதி கொட்டாவி எனும் குணங்கள் காணும்.

66) மாறல்சுரம் :
காலநிலை மாற்றத்தாலும், தட்பவெப்ப மாற்றத்தாலும் உண்டாகும் நஞ்சு சுரங்கள் ஐந்து வகைப்படும். இவற்றை விஷசுரம், விடாசுரம், முறைசுரம், குளிர்சுரம், சீதசுரம், விட்டு விட்டு வரும் சுரம் என்றும் கூறுவர்.

67) சுந்தத சுரம் :
இது இரச தாதுவைப் பற்றி உண்டாகும் விடாசுரம்.

68) சுத்த சுரம் :
இது குருதியைப் பற்றி உண்டாகும் புறம்பாகக் காயும் சுரம்.

69) தினமுறை சுரம் :
இது ஊனைப் பற்றி உண்டாகும். இதில் இரண்டாம் முறைச் சுரமும் உள்ளது.

70) மூன்றாம் முறைசுரம் :
இது கொழுப்பைப் பற்றி உண்டாகும் சுரம்.

71) நான்காம் முறைசுரம் :
இது எலும்பு மற்றும் மூளையைப் பற்றி உண்டாகும் சுரம்.

2 கருத்துகள்:

  1. வணக்கங்கள்
    இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து மற்ற பதிவுகளையும் படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்கவும். நன்றி.

      நீக்கு